Monday, December 22, 2008

பிஎஸ்ஜி ஏழு ஆண்டுகள் (4)

2008ல், குறிப்பிட்ட/குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவைகளை அளிக்கும் முறை முழு வடிவம் பெற்றது.

நிறுவனத்தின் செயல்முறையில் ஒரு பெரிய திருப்பம் வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அது நடைமுறைக்கு முழுமையாக வருவதற்கு பல மாதங்கள் பிடிக்கின்றன.

முதல் கட்டமாக இது வரை என்ன செய்து கொண்டிருந்தோம், அதில் என்னென்ன குறைபாடுகள் தெரிகின்றன, என்னென்ன சாதித்திருக்கிறோம், எப்படிப்பட்ட திருப்பம் வேண்டும், அதனால் என்னென்ன சாதக பாதகங்கள் ஏற்படும், திருப்பத்தை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று மனதளவில் சிந்தித்து அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

அந்த திருப்பத்தைக் குறித்த விபரங்களை ஆவணப்படுத்திக் கொள்வது அடுத்த படி. நிறுவனத்தில் பணி புரிபவர்கள், முதலீடு செய்தவர்கள், வாடிக்கையாளர்கள் என்று தொடர்புடைய எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில் திருப்பத்தை மாற்றங்களை தெரிவிக்க வேண்டும். திட்டமிட்டு குறிப்பாக விபரம் அறிவிக்கா விட்டால், நாட்கள் போகப் போக படிப்படியாக எல்லோருக்கும் மாற்றம் போய்ச் சேர்ந்தே தீர வேண்டும். அதைத் திட்டமிட்டுக் கொண்டால் வேகமாக முறையாக நடந்து விடும்.

நிறுவனத்துக்குள் செயல் அமைப்புகள், செயல் முறைகள் இரண்டுமே மாற்றப்பட்ட வழிக்கு ஏற்றவாறு தகவமைைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரே நாளில் செய்து விட முடியாது.

இரு சக்கர வண்டி ஓட்டும் போது திசை திருப்புவது என்றால் முன்னும் பின்னும் பார்த்து விட்டு எளிதாகத் திரும்பி விடலாம். நான்கு சக்கர வண்டிகளான கார் அல்லது பேருந்து ஓட்டும் போது திரும்புவதற்கு வேறு வண்டிகள் வருகிறதா என்று பார்ப்பது தவிர, திரும்பும் பகுதிகளில் நமது வண்டி உரசாமல் போகுமா என்று கவனிக்க வேண்டும். கேரளத்தில் நடக்கும் படகுப் போட்டிகளில் படகைத் திருப்ப வேண்டுமானால், துடுப்பு போடும் எல்லோருக்கும் சொல்லி, எல்லோரும் மனது வைத்தால்தான் திருப்பம் நடக்கும்.

ஒரு நிறுவனத்தின் திருப்பங்கள் கடைசியில் சொன்னப் படகுத் திருப்பம் போல. நிறுவனத்தில் பணி புரிபவர்கள், வெளியிலிருந்து வழிநடத்துபவர்கள், வாடிக்கையாளர்கள், சேவை வழங்குபவர்கள் என்று ஒவ்வொருவரும் திசை திரும்பப் போவதைத் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு, தமது பகுதியில் அந்தத் திருப்பத்துக்கான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். எல்லோரும் மனது வைக்காவிட்டால், பாதி பேர் திரும்ப முயல, மீதிப் பேர் வேறு கோணத்தில் போக முயற்சிக்க, கடைசியில் போக நினைத்த இலக்கை விட்டு வேறு இடத்துக்குப் போய் நிற்போம்.

2008இலும், நிறுவனத்தின் பங்குகளை திறமையான, நிறுவனத்துக்கு வழி காட்டக் கூடியவர்களுக்கு விற்பதைத் தொடர்ந்தோம். ஆகசுடு 1ம் தேதி 16 பங்குதாரர்கள். எல்லோருமே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டக் கூடியவர்கள். பெரிய நிறுவனங்களில் பணி புரிபவர்கள், சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள்.

இன்றைய தேதியில் முழு நேரம் பணி புரிபவர்கள் 22 பேர். கூடவே பட்டப் படிப்பு இறுதியாண்டுக்கான திட்டப்பணி செய்யும் மாணவர்கள் 5 பேர், முதுகலைப் படிப்புக்கான திட்டப்பணி செய்யும் ஒருவர் பயிற்சிப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

1. நமது மென்பொருள் பயன்பாட்டைப் பயன்படுத்தி நிறுவனத்தின் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் 5. இவர்களுடன் மாத பராமரிப்பு மற்றும் பயன்படுத்தும் சேவைகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நடந்து கொண்டிருக்கிறது.

மாதா மாதம் பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான வேலைகளை முடித்துக் கொடுத்து பணம் வாங்க வேண்டியிருக்கும். அவர்களைச் சார்ந்து நாமும், நம்மைச் சார்ந்து அவர்களும் தொழில் செய்யும் உறவு முறை இருக்கிறது. அவர்களது தேவைகள், நிறை குறைகள் நமக்கும், நமது நிறை குறைகள் அவர்களுக்கும் நன்றாகவே புரிந்திருக்கிறது.

2. நமது மென்பொருள் பயன்பாட்டை வாங்கி, நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் 2. மீதியிருக்கும் பணிகளை முடித்து மென்பொருளை அன்றாடப் பணிகளுக்கான பயன்பாட்டில் கொண்டுவரும் இலக்கு. திட்டப் பணி ஆரம்பித்து பல மாதங்கள், ஆண்டுகள் ஆனதால், அவர்களுக்கும் பல குறைகள், வேலை இழுத்துக் கொண்டே போகிறதே என்று நமக்கும் பொருள் இழப்பு.

இரண்டு பக்கமும் புரிந்துணர்வுடன் வேலை பார்த்து போட்ட பணத்துக்கும் செய்த வேலைக்கும் முறையான பலன் கிடைக்கச் செய்ய வேண்டும். தெளிவான வேலைத்திட்டம் வகுத்துக் கொண்டு குறுகிய காலத்துக்குள் நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

3. கடந்த ஏழு ஆண்டுகளில் நமது மென்பொருளை வாங்கி, நமது ஈடுபாட்டுடன் மென்பொருளில் மாற்றங்கள், பயன்படுத்துவதற்கு பயிற்சி, நடைமுறைப்படுத்துவதற்கு உதவிச் சேவை என்று பல கட்டங்களைத் தாண்டி அன்றாட வேலைகளுக்கு மென்பொருளைப் பயன்படுத்தினாலும், மாதந் தோறும் நமது சேவைப் பணியை பயன்படுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் 9 நிறுவனங்கள் இருக்கின்றன.

தொடர்ந்து மென்பொருளையும், அதன் அடிப்படை பயன்பாடுகளையும் பராமரித்து மேம்படுத்தாமல் விட்டு விட்டதால், நடைமுறைப் பயன்பாடும் சிறிது சிறிதாக முறை இழந்து நலிந்து போயிருக்கும். இவர்களைத் தொடர்பு கொண்டு இப்போது இருக்கும் நிலவரம், இது வரை முதலீடு செய்த பணம், இதனால் கிடைத்திருக்கும் பலன்கள், இனிமேல் எப்படி மேம்படுத்தலாம்/தொடரலாம் என்ற திட்டம், அத்தகைய மேம்பாடு மூலம் வரக் கூடிய ஆதாயங்கள், அதற்கு ஆகும் செலவுகள் என்று ஆவணப்படுத்தி விளக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு முறை நம்முடன் பணி புரிந்ததால் நமது நிறை குறைகள் நன்றாக தெரிந்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவர்கள். மாதாந்தர சேவை வேண்டாம் என்று முடிவு எடுத்ததற்கான காரணங்களை கண்டு கொண்டு, சரியான முறையில் அணுகினால் மீண்டும் வாடிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.

4. மென்பொருளை வாங்கி, பகுதி அல்லது முழுமையாக பணம் கொடுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பிறகு முழுமை பெறாமல் போய் விட்ட வாடிக்கையாளர் உறவு 10. இவர்களுக்கு நமது மற்றும் நமது சேவைகளின் குறைகள் மட்டும் நன்கு மனதில் பதிந்திருக்கும். திரும்பப் போய் கதவைத் தட்டி, அவர்களுடன் உட்கார்ந்து பேசி மீண்டும் சேவைகளை ஆரம்பிப்பது இருப்பதில் சிரமமான வேலை. இதற்கு திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டு விடாமல் முயற்சி செய்தால் 10 பேரில் பாதி வாடிக்கையாளர்களாவது மீண்டும் தொடர முன் வரலாம்.

5. தற்போது தொழிலை விட்டு விட்ட நிறுவனங்கள் இரண்டு.

6. இவற்றைத் தவிர, விற்பனை முயற்சிகளின் மூலம் தொடர்பு கொண்டு அவர்களது தேவைகளை அலசி ஆராய்ந்து, திட்டப் பணி ஆவணப்படுத்திக் கொடுத்து இறுதியில் பணி ஆரம்பிக்காமலேயே இருக்கும் நிறுவனங்கள் ஏழெட்டு இருக்கின்றன. இவர்களுக்கு கொஞ்சம் நம்மீது பரிவு இருக்கும்.

7. 2006ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் செய்த சந்தைப்படுத்தல் முயற்சிகளின் மூலமாக தமிழ்நாட்டின் தோல் துறை நிறுவனங்களில் பலவற்றுக்கு நமது நிறுவனத்தைப் பற்றிய விபரங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். சிலருக்கு பெயர் மட்டும் தெரிந்திருக்கலாம், சிலருக்கு சேவை விபரங்களும் தெரிந்திருக்கலாம். அடுத்த கட்டமாக ஒவ்வொருவராக அணுக முயற்சிக்கலாம்.

அடுத்த ஏழு ஆண்டுகளில் நமது நிறுவனம் எப்படி வளர்ந்திருக்க வேண்டும்.

2015ல் நமது மென்பொருளின் அடிப்படையில் அன்றாடப் பணிகளைச் செய்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20ஆக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் மென்பொருள் வசதிகளுடன் இன்னும் முக்கியமான கணக்குப் பிரிவு, மனித வளப்பிரிவு, எந்திரங்கள் பராமரிப்புப் பிரிவு போன்றவற்றையும் சேவை வரையறைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாதம் ரூபாய் 5 லட்சத்துக்குக் குறையாமல் சேவை வழங்கி சம்பாதித்தால், மாத வருமானம் இந்தப் பிரிவிலிருந்து 1 கோடி ரூபாய்களாக இருக்கும்.

நிறுவனம் ஆரம்பித்த போது இருந்த குறிக்கோளான, நிறுவனங்களை இணைக்கும் சேவையை பெருக்குவதில் முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். வாடிக்கையாளர் தொடர்பு, விற்பனையாளர்கள் உறவை மேலாள்வது என்று ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுடனுன் விற்பனையாளர்களுடனும் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.

தொடங்கும் போது இந்தத் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான மென்பொருள் சேவை அளிப்பதாக திட்டமிட்டிருந்தாலும், இணையத் தொடர்பு வளர்ச்சி போதுமானதாக இல்லாததாலும், துறையில் கணினி மயமாக்கல் போதுமானதாக இல்லாததாலும், ஒரு நிறுவனத்துக்குள்ளே பயன்படுத்தும்படியான மென்பொருள் சேவைகள் அளித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது சின்ன நகரங்களில் கூட அகலப்பட்டை இணைய இணைப்பு கிடைக்கிறது, துறையில் இருக்கும் நிறுவனங்களும் தகவல் தொடர்பு மற்றும் கணினி பற்றிய பயன்பாடுகளின் தேவையை உணர்ந்து முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

2009 முதல் தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருள் உற்பத்தியாளர்கள், தோல் பொருள் விற்பவர்கள், தோல் பொருள் வடிவமைப்பவர்கள், எந்திரங்கள் வேதிப் பொருட்கள் செய்து கொடுப்பவர்கள் என்று 5 பிரிவினரை இணைக்கும்படியான மென்பொருள் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பம் முதலே மென்பொருளின் வடிவமைப்பில் இத்தகைய இணைக்கும் தேவையை கருத்தில் கொண்டிருப்பதால், அத்தகைய தொழில் நுட்பப் பயன்பாடுகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பதால் இந்தத் திசையில் திரும்புவது தொழில் நுட்பரீதியாக சாத்தியமானதாகவே இருக்கும்.

அதற்கான பணிகளையும் ஆரம்பித்து விட்டிருக்கிறோம்.

திட்ட விபரங்களை நிறுவனத்தில் முழு நேரம் பணி புரியும் குழுவினர், தற்போதைய வாடிக்கையாளர்கள், இனிமேல் சேவையை வழங்கத் திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள், நெறிப்படுத்தும் இயக்குனர் குழுவினர், முதலீட்டாளர்கள் எல்லோரிடமும் விவாதித்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் புதிய சேவைகளில் பணம் ஈட்டுவதாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். மூன்று மாதங்களில் இதற்கான அடித்தளம் அமைத்து, தேவையான மூலப் பொருட்களை, வளங்களை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிப்ரவரி முதல் வாரத்தில் வரவிருக்கும் இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியை மையமாகக் கொண்டு சந்தைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தோல் துறையில் பணி புரிபவர்கள், மாணவர்கள் பயன்படுத்தும் தனிநபர் பயன்பாடுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். இது எல்லாவற்றுக்கும் தெளிவான திட்டமிடலும், செய்த திட்டத்தை எல்லோரிடமும் விளக்கி, அவர்களது கருத்துக்களை உள்ளடக்கி மேம்படுத்துவதும், திட்டப்படி பணிகளை நிறைவேற்றலும், நிறைவேற்றிய பணிகளை வாடிக்கையாளருக்குப் பயன்படும்படியாக பொதிந்து கொடுத்து, பணம் ஈட்டுவதும் தேவையான பணிகள்.

Saturday, December 20, 2008

பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (3) - ஆழிப் பேரலை

2004 டிசம்பரில் சுனாமி வந்த அன்று ஞாயிற்றுக் கிழமை. அந்த நேரத்தில் வாரத்துக்கு 7 நாட்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஏபிஎன் அம்ரோ வங்கியின் சென்னையிலிருந்து சேவை அளிக்கும் பிரிவில் பணி புரிபவர்களுக்கு சீன மொழி வகுப்பு. அதை முடித்ததும் மாலையில் வாணியம்பாடியில் வகுப்பு. திங்கள் கிழமை காலையில் வாணியம்பாடியில் அடுத்த வகுப்பு. ஞாயிறு நேரத்தில் வாணியம்பாடி போய்க் கொண்டிருக்கும் பேருந்தில். வேலூர் பேருந்து நிலையத்தில் சுனாமி சிறப்பு செய்தி மலராக தினமலர் எல்லோருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். (சனி ஞாயிறு குழப்பம் சரி செய்யப்பட்டது - நன்றி முகம்மது இஸ்மாயில்)

2005ல் நுழைந்ததும் வாடிக்கையாளர் எண்ணிக்கை நன்றாகவே கூடியிருந்தது. வருமானம் இன்னும் இழுபறியாகவே இருந்தது. குழந்தை நடக்க ஆரம்பித்து விட்டிருந்தது, ஆனால் இன்னமும் கால்களில் பலமில்லை. அவ்வப்போது தடுமாற்றம்தான்.

நண்பர்கள் சிலருக்கு நிலைமையை விளக்கி, 'நான் தனியாக சமாளிக்க முடியவில்லை. சந்தையில் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. நீங்களும் சேர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்' என்று மின்னஞ்சல் அனுப்பி வேண்டினேன். ஒரு நண்பர் ஆர்வம் காட்டினார். நெய்வேலியிலிருந்து பல முறை அலுவலகத்துக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தார்.

அவரது முயற்சியில் குழுவினரின் எண்ணிக்கை வேறு திசையிலிருந்து வளர ஆரம்பித்தது. ஆரம்ப குழு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு பணிக்குப் பிறகு இரண்டு பேரும் விலகி விட்டிருந்தார்கள். சந்தைப்படுத்தலில் நல்ல அனுபவம் படைத்த அந்த நண்பர் புதிய வாடிக்கையாளர்களை அணுகுதல், புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருதால் என்று கவனத்தைத் திருப்பினார். கூடவே அவரது நண்பர்கள் மூலம் முதலீடு பெறவும் முயற்சி செய்தார்.

பெங்களூரில் ஒரு தோல் ஆடை நிறுவனம், சென்னை, ராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருச்சியில் செயல்படும் நிறுவனம் என்று வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது. வாணியம்பாடியில் முதல் வாடிக்கையாளரின் மூலம் அடுத்த இரண்டு வாய்ப்புகள் வந்தன. ராணிப்பேட்டை, வாணியம்பாடி, சென்னை பல்லாவரம் என்று கூட்டங்கள் ஏற்பாடு செய்தோம். சுறுசுறுப்பாக வளர்ச்சிக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

அலுவலகம் அந்த அத்துவானக் காட்டில் இருப்பது சரிப்படாது என்று வேறு இடம் தேடினார். வளசரவாக்கத்தில், பெரிய ஒரு வீட்டில் மாறிக் கொண்டோம். குழுவினரின் எண்ணிக்கையும், செலவுகளும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே இருந்தது. வாடிக்கையாளர், வருமான வளர்ச்சியை விட செலவுகள் ஒரு படி முன்னதாகவே போய்க் கொண்டிருந்தன.

நண்பரின் கல்லூரித் தோழர் சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்தார். அவரும் அவரது அண்ணனும் முதலீடு செய்வார்கள் என்று பேச ஆரம்பித்தோம். பல முறை சந்தித்து, விபரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பங்குகளை வாங்கிக் கொண்டு பணம் தருவதாக ஒத்துக் கொண்டார்கள்.

2005ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கின் போது, வீட்டின் முன்பு தண்ணீர் நிரம்பியது. அடுத்த மழையில் ஆலப்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு, வளசரவாக்கம் அலுவலகத்தின் அருகில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது. தண்ணீர் அலுவலகத்துக்குள் வரும் இரவில் கண் மூடாமல், தண்ணீரைக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் எல்லாப் பொருட்களையும் முதல் மாடியில் இருந்த வீட்டு உரிமையாளரின் பகுதிக்கு மாற்றி வைத்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அலுவலகம் செயல்படாமல் எல்லோரும் வாடிக்கையாளர் இடங்களிலேயே பணியாற்றினோம்.

வீட்டில் சிக்கல் முற்றி, சண்டை பெருத்து டிசம்பர் மாதத்தில் நான் அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டிருந்தேன். நண்பன் நங்கநல்லூரில் தனது வீட்டில் தங்கிக் கொள்ளச் சொல்ல அங்கு மாறிக் கொண்டேன். நிறுவனத்தில் பணிக்குக் குறைவே இல்லை இப்போது. சீனமொழித் தொடர்பான சேவைகளை நிறுத்தி விட்டேன். தமிழ்க்கணினி வேலைகளிலிருந்தும் 2005லேயே ஒதுங்கியிருந்தேன்.

பணம் வருவது இழுபறியாகவே இருந்தது. 2006 ஜனவரியில் தோல் நிறுவனத்தில் நல்லபடியாக வேலை போகும் நம்பிக்கையில் அதே நிறுவனத்தின் காலணி மென்பொருளும் செய்யச் சொன்னார்கள். அவரிடமே கடன்/முன்பணமாக கணிசமாகக் கேட்டு வாங்கிக் கொண்டோம். முதலீடாக கணிசமான தொகைகளும் உள்ளே வந்தன.

புதிய கணினிகள், மேசைகள், நாற்காலிகள், சரியான நேரத்துக்கு சம்பளம் என்று வருவதும் போவதும் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் இன்னும் அதிகமாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் எல்லோருக்கும். முதலீட்டாளர்களும் செலவுகளைக் குறைப்பதை விட, வருமானத்தைப் பெருக்குவதைப் பார்க்க வேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

புதிய காலணி நிறுவன வேலைக்கு தரவுத்தளத்தை புது வடிவத்தில் செய்வது என்று ஆரம்பித்தோம். அந்த வேலையில் பல மாதங்கள் இழுத்தடிப்பு நடந்து விட்டது. வாணியம்பாடியில் ஒரு வாடிக்கையாளரின் பயன்பாட்டைப் பார்த்து புர்கினா பாசோவைச் சேர்ந்த தோல் நிறுவனத்தின் நம்ம ஊர் பிரதிநிதி தொடர்பு கொண்டார். புர்கினா நிறுவனத்தின் உரிமையாளர் சென்னைக்கு வரும் போது அவரைச் சந்தித்து விற்பனை ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தோம். அவர்கள் பணியை ஏற்றுக் கொண்டோம்.

ஏற்கனவே பயன்படுத்தும் நிறுவனங்களைப் பார்த்து நம்மை அணுகும் வாடிக்கையாளர்கள் ஒன்றிரண்டாக சேர்ந்து கொண்டே இருந்தது.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கி வளரும் வழியில் சமாளிக்க முடியாது என்ற வழிகாட்டல் வந்தது. தவறான பாதையில் நடந்து கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்வது எனக்கு கொஞ்சம் எளிதாகவே வந்து விடுகிறது. நண்பருக்கு அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வது முடியவில்லை. 2006ம் ஆண்டின் இறுதியில் அவர் விலகிக் கொள்வதாகச் சொல்லி அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தோம்.

வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 15ஐத் தாண்டியிருந்தது. வாடிக்கையாளர் பட்டியலும் 20ஐத் தாண்டி விட்டிருந்தது. தனியார் பங்கு நிறுவனமாக வழிகாட்டுபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்திருந்தது. பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் மேலும் மேலும் அதிக சேவை வழங்கி, ஆதாயம் உருவாக்கி, நமது வருவாயையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று வழிமுறைக்கு நகர்ந்தோம். குழந்தை பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை வாடிக்கையாளர்கள் நம் மீது அவ்வளவாக அழுத்தம் செலுத்தவில்லை. லட்சக் கணக்கில் பணம் பெற ஆரம்பித்ததும், அவர்களின் வேலைத் தேவைகளும் இன்னும் இறுகலாயின. வேலை செய்யும் முறை, ஆவணப்படுத்தும் முறைகள், தகவல் தெரிவிக்கும் முறைகள், சந்திப்புகள், விவாதங்கள் என்று மேலும் மேலும் மேம்படுத்த வேண்டியிருந்தது.

2005ம் ஆண்டின் இறுதியிலிருந்து தமிழ் வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் கிடைத்து 2006ம் ஆண்டில் முழுவீச்சில் எழுத, பங்கு பெற ஆரம்பித்திருந்தேன். அதன் மூலம் கிடைத்த அறிமுகம் ஒரு நண்பர். அவர், இன்னொரு இயக்குனர் பேரும் பெங்களூரிலிருந்து தீவிரமாக வழிகாட்டலைத் தர ஆரம்பித்திருந்தார்கள். வெற்றிகரமான மென்பொருள் நிறுவனங்களில் பின்பற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள்.

2006ம் ஆண்டில், கல்லூரி இறுதியாண்டு திட்டப்பணி செய்ய குழுவாக வந்த மாணவர்கள், நிரல் கோப்புகளில் மாற்றங்களை கையாள சிவிஎஸ்சிலிருந்து சப்வெர்சனுக்கு மாறியது, வாடிக்கையாளர் தேவைகளுக்காக செய்யும் பணிகளை பதிந்து வைத்துக் கொள்ள மென்பொருள் கருவி பயன்படுத்துதல் என்று பல மேம்பாடுகள்.

நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகளில் விட்டுப் போகிறவர்கள், சில மாதங்களிலேயே விட்டுப் போகிறவர்கள் என்ற நடைமுறை பெரும் அவதியாக இருந்தது. பேசியதில் சம்பளத்தின் அளவை ஏற்றுங்கள் என்று ஒரு வழி காட்டினார். 2007 ஜூலை, தொடர்ந்து அக்டோபர் என்று சம்பள விகிதங்களை இரு முறை இரட்டிப்பாக்க முடிவு செய்தோம். வருமானமே போதாத நிலையில் அதிக சம்பளமா! என்று யாரும் கேட்டு விடவில்லை.

குழுவை வலுப்படுத்த, வலுவான குழு தொடர்ந்து பணி புரிய அது அடிப்படைத் தேவை. நண்பர்களிடம் கடன் வாங்கி சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தோம். வாடிக்கையாளர்களிடம் வரும் பணத்தை வைத்து கடனைத் திருப்பலாம் என்று திட்டம். இதற்கிடையில் முதலீடு செய்ய விரும்புவதாகச் சொல்ல, அடுத்த சுற்று பங்குகளை வினியோகிக்க ஏற்பாடு செய்தோம்.

கடன் கொடுத்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு கடன் தொகை, வட்டித் தொகை இரண்டையும் சேர்த்து ஈடாக பங்குகள் கொடுப்பது என்று திட்டம் தீட்டி அவர்களிடமும் பேசியதில் யாரும் மறுப்பு சொல்லவில்லை. அப்படிக் கேட்கும் நம்பிக்கையையும் நிறுவனத்தின் வளர்ச்சி அளித்தது. 2007ம் ஆண்டில் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு உறுதியான சேவை வழங்கி அதிகப் பணம் பெறும் திசையில் முயற்சிகளைத் திருப்பினோம். அலுவலகத்தில் வேலை செய்யும் வசதிகளும் திடப்பட்டிருந்தன. சம்பள விகிதங்கள் ஓரளவு மதிப்பாக இருக்க, பணம் போதவில்லை என்று வேலையை விட்டு விட்டுப் போகிறவர்கள் நின்று போயிருந்தார்கள்.

2007ம் ஆண்டின் மத்தியில் தோல் துறையில் பணி புரிந்து கொண்டிருந்த நண்பர் நிறுவனத்தில் சேருவதாகப் பேசி சேர்ந்து விட்டார். அவரது அனுபவமும், நுணுக்கமும், நடைமுறை வழிகாட்டல்களும், வாடிக்கையாளருக்கு அளிக்கும் சேவையில் பல மடங்கு உயர்வு கொண்டு வந்தது. பல மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த நடைமுறைப்படுத்தும் பணிகளில், சரியான இடங்களில் கட்டுப்பாடுகளை புகுத்தி எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைத்தார்.

இப்போது இன்னும் உயர் நிலையில் வரவை விட செலவு அதிகமாகப் போய்க் கொண்டிருந்தது. நண்பரின் கையிருப்புகளை கடனாக நிறுவனத்தில் கொண்டு வந்தார். முதலீடு செய்தவர்களிடமும், மற்ற நண்பர்களிடமும் அவ்வப்போது கைம்மாற்றாக வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.

Friday, December 19, 2008

பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (2)

குழந்தை கண்களைத் திறக்காமல் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் தூங்கிக் கொண்டே இருக்கும் நாட்கள் போய், அடுத்த நிலையில் தவழ வேண்டும். 2002ம் ஆண்டு டிசம்பர் வாக்கில் சேமிப்புகள் கரைந்து விட்டன. சேமிப்புகள் என்றால் சீனாவில் வேலை செய்யும் போது வங்கியில் போட்டு வைத்த வைப்புத் தொகைகள், அப்பா அம்மா ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தில் கொடுத்த பங்கு என்று எல்லாவற்றையும் செலவழித்து விட்டேன் (டோம்). இப்போது ஒரு திருப்புச் சந்தியில்.

'வங்கியில் கேட்டுப் பார்க்கலாமே' என்று நண்பன் சொல்ல, நிறுவனத்தின் கணக்கு வைத்திருந்த சௌராசுடிரா வங்கி மேலாளரை சந்திக்க முயற்சித்தேன். 'நம்ம கிளையில் நகை வைக்க பாதுகாப்புப் பெட்டகம் பற்றி விசாரிச்சாங்களே அவங்க கணவன்தான்' என்று அறிமுகப்படுத்தினார் உதவி மேலாளர். ஒரு ஆவணத்தில் அடுத்த மாதங்களில் வருமானம், செலவின உத்தேசங்களை போட்டு எடுத்துப் போயிருந்தேன். அதற்கு முன்பாக தொழில் விபரங்கள், எப்படி வாடிக்கையாளர்களை கவரப் போகிறோம் என்றெல்லாம் குறிப்புகள்.

அவர் நேராக எண்களுக்குள் மட்டும் புகுந்தார். ஐந்து லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தேன். 'கடன் கொடுப்பதற்கு 3 காரணிகளைப் பார்ப்பேன். கடன் கேட்பவரின் திருப்பிக் கொடுக்கும் திறமை, தொழிலின் வருமான வாய்ப்புகள், மூன்றாவதுதான் சொத்துப் பாதுகாப்பு. அப்படிப் பார்த்ததில் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று மரியாதையாக தெளிவாக அனுப்பி வைத்து விட்டார். ஏதாவது பிணைச் சொத்து இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள் என்று அவதூறு சொல்வதற்கு வழி இல்லை.

அடுத்த நிலையில் உறவினர்கள், நண்பர்களிடம் கேட்பது என்று முடிவு. நண்பன் ஒரு 30000 ரூபாய் கொடுத்து தொடங்கி வைத்தான். அப்பா/அம்மா, அத்தான்/அக்கா, அண்ணன் என்று சில லட்சங்கள் திரட்டி விட்டேன். கணினிகள், மடிக்கணினிகள் வாங்கியது, 2003ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்து தோல் கண்காட்சியில் பங்கு பெற்றது எல்லாம் அந்தப் பணங்களைப் பயன்படுத்திதான்.

அந்தக் கண்காட்சியின் போது ஒரு இடத்தை எடுத்து படம் காட்டும் கருவியில் எப்படி நிறுவனம் தோல் துறைக்குச் சேவை அளிக்கும் என்று விளக்கிக் கொண்டிருந்தேன். நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். எதுவும் வாடிக்கையாளராக கிடைத்து விடவில்லைதான். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்பு, ஸ்லாஷ்டாட் போல விவாதக் களம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தரவுத்தளம் வடிவமைத்து நிரல் எழுதி இணைய வழங்கியில் போட்டு விட்டேன். தினமும் தோல் துறை தொடர்பான செய்திகளை இணைய சுட்டியுடன் போட்டு அது தொடர்பான கருத்துக்களை போடும் வசதி செய்து கொடுத்திருந்தேன். அதை மாணவர்களிடமும், துறையில் பணிபுரிபவர்களிடமும் பரப்புவதற்கான முயற்சிகளையும் கண்காட்சியின் போது செய்ய முடிந்தது.

2003ம் ஆண்டில் வாடிக்கையாளர் பட்டியல் கிடைத்திருந்தது. ஏதோ வருமானமும் மாதா மாதம் கிடைக்க ஆரம்பித்திருந்தது. எல்லாமே இணைய வழங்கியில் பயன்படுத்தும் பயனர்கள்தாம். ராணிப்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ளே புகவே முடியவில்லை. இணைய இணைப்பு பரிதாபமாக இருந்தது. வருமானத்துக்காக சீன மொழி கற்றுக் கொடுத்தல், சீன மொழியில் நிறுவன ஆவணங்களை செய்து கொடுத்தல் என்று உப தொழில் செய்து வந்தேன். அதில் மாணவர்களும், தொடர்புகளும் கிடைத்தன. பெரும்பாலும் தோல் துறையைச் சார்ந்தவர்களே வாடிக்கையாளராகக் கிடைத்தார்கள்.

ஆண்டின் நடுப்பகுதியில் திரட்டிய காசு கரைந்து மீண்டும் நெருக்கடி. அண்ணா நகரில் வணிக நிதி உதவி நிறுவனம் என்ற விளம்பரத்தைப் பார்த்து தொலைபேசினால் வரச் சொன்னார்கள். ஏதோ ஒரு ஒத்திசைவில், கோயமுத்தூரில் இருந்து ஏதாவது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து தொழிலில் இறங்க விருப்பம் தெரிவித்தவருடன் சேர்த்து விட்டார்கள். அவரும் நாகர்கோவில் காரர்.

அவரை அழைத்து வந்து வீட்டில் காட்டினேன். அவருக்கும் ஏதாவது வேலையில் இருந்து விட வேண்டும் என்று அழுத்தம். வீட்டில் திருமணம் செய்து வைக்க அவசரப்படுத்துகிறார்கள். அவரது அப்பாவிடம் பணம் வாங்கி முதலீடு செய்யப் போகிறார். 5 முதல் 10 லட்சம் போடலாம் என்று சொன்னார். அவரது அப்பா சென்னை அசோகா விடுதியில் வந்து தங்கியிருக்கையில் போய்ப் பார்க்கப் போனோம். 5 லட்ச ரூபாய் தருவதாக ஒத்துக் கொண்டார். நிறுவனத்தில் பங்கு அளிக்காமல், கடனாக வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். ஏதோ ஒரு காரணத்தால் அவரை பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ள மனது வரவில்லை.

நாகர் கோவில் போய் அப்பாவையும் கூட்டிக் கொண்டு போய் 5 லட்ச ரூபாய் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்தோம். 'நிறுவனத்தை வீட்டிலிருந்து நடத்தக் கூடாது, தனியார் பங்கு நிறுவனமாக மாற்ற வேண்டும்' என்று திட்டமிட்டுக் கொண்டோம். கடனுக்கு பணம் திரும்பக் கொடுப்பது ஒரு ஆண்டுக்குப் பிறகு ஆரம்பிக்க வேண்டும்.

அரும்பாக்கத்தில் கடைத்தெருவில் ஒரு அலுவலகம் பிடித்து, தரையில் மர உரிப்பு ஒட்டி, ஜன்னலில் வெனிசியன் திரை எல்லாம் போட்டு புதிய நாற்காலிகள் மேசைகள் வாங்கி போய் விட்டோம். வீட்டின் வாடகையைக் குறைக்க குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அருகிலேயே 2000 ரூபாய் குறைவில் மாறிப் போய் விட்டோம். செலவழிப்பது பெரிதும் குறைந்து போயிருந்தது. அடுத்தவர் பணத்தைக் கடன் வாங்கி நமது விருப்பப்படி செலவழிக்க முடியுமா? குழந்தைகளின் படிப்புக்கும், உணவுத் தேவைகளுக்கு மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்று முடிந்தது. அதனால் உரசல்கள் தீவிரமடைந்தன.

வாங்கிய 5 லட்ச ரூபாயில் மீதியிருந்த பணத்தில் 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கேற்பு, 2003ம் ஆண்டு டிசம்பரில் சீனா போய் வருவது என்று திட்டமிட்டுக் கொண்டோம். 2004ம் ஆண்டில் சீன மொழி மாற்றுச் சேவைகள் வருமானத்தைத் தந்து கொண்டிருக்க, தமிழ்க் கணினி என்று திட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

சீனாவுக்குக் கிட்டத்தட்ட 70000 ரூபாய்கள் செலவழித்துப் போய் வந்தேன். ஒரே ஒரு வாடிக்கையாளரை உருப்படியாகப் பார்க்க முடிந்தது. தொடர்பு கொண்ட மற்றவர்கள் யாரும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவ்வளவு காசு செலவழித்ததற்கு ஒரே பலன், நாம் திட்டமிடும் சேவைக்கு வாடிக்கையாளர்களிடையே ஆர்வமிருக்கும் என்று தெரிய வந்ததுதான்.

நண்பர்கள் இரண்டு பேருடன் போய் வந்தேன். திரும்பும் வழியில் இணையத்தில் 'பயன்பாட்டை வைத்திருந்தால் யாரும் சேர மாட்டார்கள். வாடிக்கையாளரது கணினியிலேயே மென்பொருள் இருக்கும் படி சேவை வழங்கு. நானும் அதை வாங்கிக் கொள்கிறேன். மாதா மாதம் பணத்தையும் தவறாமல் வாங்கிக் கொள்.' என்று நண்பன் சொல்ல, கடைசியில் கசப்பான அந்த நடைமுறையை புரிந்து கொண்டு, அப்படியே சேவை வழங்கும் படி மாறிக் கொண்டோம்.

நண்பனின் நிறுவனம், அதைத் தொடர்ந்து முதல் வாடிக்கையாளர் என்று வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் தெரிந்த ஒருவரின் நண்பரின் நிறுவன அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் மாதக் கட்டணத்துக்கு வேலை செய்ய பேசிக் கொண்டோம். அந்த ஆண்டு முழுவதும் இந்த நிறுவனங்களுக்குப் பணி புரிந்து தோல், வேதிப் பொருட்கள், வாங்குதல், சரக்குக் கையாளுதல், உற்பத்தி விபரங்கள், போன்ற பகுதிகள் உருவாகி வந்தன. ராணிப்பேட்டை, பாண்டிச்சேரி, கூடுவாஞ்சேரி என்று நாலாபுறமும் போய் வர வேண்டும். அலுவலகத்திலேயே ஒரு சீன மொழி வகுப்பு, சென்னை அசோக் நகரில் ஒரு வகுப்பு என்று அந்தப் பக்கமும் வளர்ந்தது.

2004ம் ஆண்டு கோடையில் நண்பனுடன் இரு சக்கர வண்டியில் கடற்கரைச் சாலையில் தமிழகத்தின் தென் கோடியைத் தொட்டுத் திரும்பி வந்தோம். அந்த நண்பனிடம் பணம் வாங்கி கடனை வட்டியுடன் திருப்பி விட்டேன். நண்பன் பணம் வந்த போது வந்தால் போதும் என்று கொடுத்திருந்தான். அந்தப் பணத்தில் மீதியும் வைத்து வரும் சொற்ப வருமானத்தையும் வைத்து கொஞ்ச நாள் ஓடியது. வீட்டுச் செலவுகளில் குறையே ஏற்பட முடியாமல் இருந்தது. எதை எதையோ புரட்டி நிறுவனத்தையும் வீட்டுச் செலவுகளையும் சமாளிக்க முயன்று கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ஒவ்வொருவராக அணியினரின் எண்ணிக்கையும் பெருகி விட்டிருந்தது. ஏழெட்டு பேராகி விட்டிருந்தோம். இரண்டு ஆண்டு அனுபவம் பெற்று விட்டிருந்தார்கள். வேறு வேலை பார்ப்பதாகச் சொன்னார். அந்த ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கு பெறுவதற்கு வழியே தெரியவில்லை.

அரும்பாக்கம் அலுவலகத்தை விட்டு மிகக் குறைந்த வாடகையில் போரூருக்கு அருகில் மதனந்தபுரம் என்ற கிராமத்தில் ஒரு கடையின் மாடியில் நகர்ந்தோம். 10000 ரூபாய் முன்பணம் கொடுப்பதற்குக் கூட அப்பா பணம் அனுப்பித்தான் நடந்தது. எல்லாமே இறுகிப் போய் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. வாணியம்பாடியில் ஒரு குழுவினருக்கு சீனமொழி கற்றுக் கொடுக்கப் போய்க் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு காலணி நிறுவனத்துக்கு சீன மொழி மாற்றம் செய்து கொடுத்ததன் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருந்தது.

இடையில் ஐஎஸ்ஓ தணிக்கைக் குழுவினரில் துறை வல்லுனராக ஓரிரு நிறுவனங்களின் அறிமுகம் கிடைத்தது.

டிசம்பர் மாதத்தில் நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம், ராணிப்பேட்டையின் பெரிய வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத் தலைவரைப் பார்க்கப் போன போது, முன்பணமாகத் தாருங்கள் என்று கேட்டு விட, 5000ம்தான் கொடுப்பேன் என்று காசோலை ஒன்றைக் கொடுத்து விட்டார். திக்குமுக்காடிப் போன உணர்வு. எல்லாம் தொலைந்து போய் நம்பிக்கை அற்றுப் போயிருந்த நிலையில், மழையின்றி வாடி உலர்ந்து போன செடியின் மீது மழைத்துளி விழுந்தது போல இருந்தது அந்த 5000 ரூபாய் காசோலை.

2004 ஜனவரியில் காலணி நிறுவனத்திலும் பணியை ஆரம்பிக்கச் சொல்லி விட்டார்கள். சீன மொழிக் கற்றுக் கொடுத்த வாணியம்பாடி நிறுவனத்திலும் வேலை ஆரம்பித்து விட்டோம். வாடிக்கையாளர் பட்டியல் வளர்ந்து விட்டது.

பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (1)

இந்தக் குழந்தைக்கு வயது ஏழு ஆகி விட்டது. 2001ம் ஆண்டில் டிசம்பரில்தான் இந்தப் பணித்திட்டத்தில் தீவிரமாக இறங்கி நடைமுறைப்படுத்துவதை ஆரம்பித்தேன்.

இப்படி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் கருக் கொண்டது 2001ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரியில் இருக்கலாம். பிஎல்சி நிறுவனத்தின் சார்பாக செய்து வந்த பணிகள் ஓய்ந்து கொண்டிருந்த சமயம். நிரல் உருவாக்கத்திலும், தமிழ் டாட் நெட் தொடர்ந்த எறும்புகள் குழுமத்திலும் ஆர்வமாக பணி செய்து கொண்டிருந்த சமயம்.

2001 டிசம்பரில் ஆரம்பிக்கும் போது, பெற்றெடுக்க உதவியாக இருந்தது கல்லூரி நண்பன். சீனாவிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இடம் பிடித்து வாழ்க்கையை அமைப்பதற்கு ஓரிரு மாதம் பிடித்தது. செயிண்ட் தாமசு மலைக்கருகில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அருகிலேயே இருந்த அவனுக்கு தொலைபேசி விபரம் சொன்னேன். இங்கே தங்கினால் நிறைய செலவாகும். இன்னொரு நண்பனின் வீட்டில் இப்போது இடம் இருக்கிறது, என்று அவன்தான் ஆலோசனை சொன்னான்.

அடையாறில் வீட்டில் இருந்து கொண்டே வாடகைக்கு வீடு தேடினேன். இந்து பத்திரிகையில் அகர வரிசையில் முதலில் வருவது அண்ணா நகர். வழக்கமான தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளை விட்டு விட்டு தேடினேன். அண்ணா நகரில் இரண்டு வீடுகள் அடையாளம் கண்டு கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை பார்க்கக் கிளம்பினோம். முதல் வீடு புத்தம் புதிதாக வீட்டுக் காரர் ஆர்வமே இல்லாமல் காட்டினார். இரண்டாவது வீடு அமைந்து விட்டது.

நிறுவனம் தொடர்பாக நிரல் உருவாக்க வேண்டும். எறும்புகள் சந்திப்பு ஒன்றுக்குப் போனோம். அடையாறில் இருந்த ஒரு எறும்புகள் உறுப்பினரின் அலுவலகத்தில் நடந்தது. அங்கு ஒருவர். தோல் துறை தொடர்பான பயன்பாட்டை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அவருடன் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தோம்.

வளசரவாக்கத்தில் இருக்கும் வீடு அல்லது போரூரில் இருக்கும் அலுவலகத்துக்கு வாங்க பேசலாம் என்றார். ஒரு நல்ல நாளில் என்னை அடையாறிலிருந்து இரு சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வளசரவாக்கம் நோக்கி அழைத்துச் சென்றான். கிளம்பும் போதே தாமதமாகி விட்டிருந்தது. எனக்கு நேரம் தவறி விடுமோ என்று எரிச்சல். நான்கு முறை தொலைபேசி தாமதமாக வருவதாகச் சொல்லி விட்டேன். 'அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால்தான் இப்படி நேரம் பற்றிக் குறிப்பாக இருக்கிறார்' என்று அப்புறமாகச் சொன்னார்.

அவரது அலுவலகம் ஒரு வீட்டுக்குள் இருந்தது. புதியத் திட்டப் பணிக்காக ஒரு நிறுவனம் உருவாக்கி அதில் 50க்கு 50 என்று பொறுப்பும் உரிமையும் பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.

அவர்கள் நிரல் எழுதிக் கொடுத்து விட வேண்டும். நாங்கள் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய எண்ணங்களை விளக்கினேன். அங்கு நிரல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் விளக்கச் சொன்னார். முதலில் பயனர் மேலாண்மை பகுதியைச் செய்து விடலாம் என்று உடனேயே உறுதி அளித்தார்கள். வளசரவாக்கத்தில் இருந்த ஒரு விடுதியில் மதிய உணவும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

திட்டப்படி, தோல் செய்யும் நிறுவனங்களுக்கு தோல் தேவையை அனுப்பும் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை இணையத்தில் இணைந்து நமது பயன்பாடு மூலம் உள்ளிடுவார்கள். தோல் நிறுவனம் உள்நுழையும் போது புதிதாக வந்திருக்கும் தேவை விபரங்களைத் தெரிந்து கொள்வார்கள். அந்தத் தேவைகளை உற்பத்திக்கு எடுத்து, தயாரான பிறகு வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த விபரங்களையும் இதே பயன்பாட்டில் போட்டு வைப்பார்கள். வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் எத்தனை தேவைகள் அனுப்பியிருக்கிறோம், எவ்வளவு உற்பத்தியில் இருக்கிறது, எந்தத் தேவைக்கு எவ்வளவு தோல் அனுப்பியிருக்கிறார்கள், எவ்வளவு மீதி இருக்கிறது போன்ற விபரங்களை இணையம் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு தோல் நிறுவனத்துக்கு 10 வாடிக்கையாளர்கள் இருந்தால், தோல் நிறுவனம் எல்லா வாடிக்கையாளர்களின் தேவை விபரங்களையும் பயன்பாட்டில் உள்ளிடும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது தேவை விபரங்களை மட்டும் பார்த்துக் கொள்ள முடியும். பயனரைப் பொறுத்து விபரங்களை மட்டுப் படுத்த வேண்டும்.

ஒரு தோல் நிறுவனத்துக்கு இதை விற்று விட்டால், அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அவர் இந்தப் பயன்பாட்டில் மனம் மகிழ்ந்து தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் இதே போல லெதர்லிங்க் பயன்பாட்டின் மூலமாக தனது தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வழி செய்யுமாறு வற்புறுத்துவார். அப்படி அவரது மற்ற விற்பனையாளர்களும் லெதர்லிங்கிலிருந்து பயன்பாட்டுக்கு பதிவு செய்து, வாடிக்கையாளருக்கு விபரங்கள் பார்க்க வழி செய்வார்கள்.

ஒரு வாடிக்கையாளருக்கு பல விற்பனையாளர்கள் லெதர்லிங்க் பயன்பாடு மூலம் தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வசதி கிடைத்திருந்தால், எல்லா விற்பனையாளர்களின் விபரங்களும் ஒரே இடைமுகத்தின் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரியும் படி வசதி செய்து கொடுத்து விட வேண்டும். லெதர்லிங்குக்கான பணம் விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும். வாங்குபவர்கள் கட்டணமின்றி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிக உறுதியான திட்டம். பயன்பாட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் நல்ல வாடிக்கையாளர் சேவை அளித்து தமது தொழிலை பெருக்கிக் கொள்ளலாம். அந்தச் சேவையால் மனம் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள் தாமே முன் வந்து மற்றவர்களுக்கு நமது பயன்பாட்டை பரிந்துரை செய்வார்கள்.

அப்படிப் பரிந்துரை செய்வதற்கான வசதிகளையும் கொடுக்க வேண்டும்.

இவ்வளவு விபரங்களையும் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ ஆட்கள் கிடைத்து விட்டார்கள், வேலையை ஆரம்பித்து விடலாம் என்றுதான் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விட்டு நகருக்குள் சுற்றி வர ஒரு வண்டியும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா நகரின் 9வது பிராதானச் சாலையில் முதல் மாடியில் இருந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து குடிபுகுந்து விட்டேன். மூன்று அறைகள், ஒரு பெரிய முன்னறை, சமையலறை. ஒரு தளத்துக்கு நான்கு வீடுகள் வீதம், நான்கு தளங்கள் இருந்தன. அண்டை அயலாருடன் பழகும் இயல்பு எனக்கு கிடையாது.

அண்ணா நகரின் டிவிஎஸ் விற்பனை நிலையத்துக்குப் போய் வண்டிகளைப் பார்த்தோம். அங்கிருந்த விற்பனையாளர் சரியாகப் பேசிக் கவனிக்கவில்லை. விலையை காசோலையாகக் கொடுத்தால், காசோலை பணமாக மாறிய பிறகுதான் வண்டியை எடுத்துப் போக முடியும் என்று சொன்னதும் எனக்குக் கோபம் வந்து வெளியில் வந்து விட்டேன்.

நண்பர்கள் ஓட்டிக் கொண்டிருந்த சுசுகி சமுராய் வண்டியை வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். 2001ம் ஆண்டில் அந்த தயாரிப்பையே ஓய்த்துக் கொண்டிருந்தார்கள். புதிதாக நான்கு சுழற்சி முறையிலான டிவிஎஃச் விக்டர் அறிமுகப்படுத்த இருந்தார்கள். கடைசியில் நங்கநல்லூரில் இருந்த புளூ பைக் நிறுவனத்தில் வண்டியை வாங்க பதிவு செய்து கொண்டோம். அவர்கள் வண்டி உரிமத்துக்கு ஏற்பாடு செய்ய 2 நாட்கள் பிடிக்க, 2 நாட்களுக்குப் பிறகுதான் வண்டியை எடுத்துக் கொண்டேன். அவர்களும் உடனடியாக வண்டியைக் கொடுத்து விடவில்லைதான்.

வண்டி வாங்கியாச்சு, ஓட்டப் படிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும். கற்றுக் கொடுத்தலில் ஒரே நாளில் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வேக மாற்றிகளைக் கையாளுதல் போன்ற புதிய விபரங்களில் தேர்ச்சி பெற வேண்டும். உரிமம் பெறுவதற்காக ஆலந்தூரில் இருந்த போக்குவரத்து அலுவலகத்தில் பழகுனர் உரிமம் வாங்கிக் கொண்டேன்.

அதை வைத்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் குழுவினர் எழுதும் நிரல், மென்பொருள் நிறைவளிக்கவில்லை. அவர்களுக்கு பரிநிரல் பயன்பாடுகளைப் பயன்படுத்த விருப்பமில்லை. மைஎசுகியூஎல் வேண்டாம் என்று காரணங்களை அடுக்கினார்கள். போசுடுஎசுகியூஎல் பயன்படுத்தலாம் என்றால் அவர்களுக்கு அதில் தேர்ச்சியில்லை. போகும் போது ஏற்கனவே செய்து வைத்த சில இடைமுகங்களைக் காட்டினார்கள். நமது பயன்பாட்டுக்குத் தொடர்பில்லாமல் பொதுவாக பயனர் மேலாண்மை என்று இருந்தது. இடையில் வீட்டுக்குக் கூட்டிப் போய் மதிய உணவெல்லாம் கொடுத்தார்.

வெளி நாட்டிலிருந்து இந்தியா திரும்பி ஒரு ஆண்டு முடியும் காலமாகியிருந்தது. அவன் வேலை ஒன்றில் சேர முடிவு செய்து, மைலாப்பூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான். நான் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.

தமிழ்க் குழுக்களின் மூலம் அறிமுகமாயிருந்த பேராசிரியர் தனது உறவினரின் மென்பொருள் நிறுவனம் வேளச்சேரியில் இருப்பதாகவும், அவர்கள் பரிநிரல் பயன்படுத்தி மென்பொருள் செய்வதாகவும் சொன்னார். அவரிடம் தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு அவர்களிடம் பேசினேன். விபரங்களைக் கேட்டு விட்டு 17000 ரூபாய்கள் கொடுத்தால் முடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னார்கள்.

வேளச்சேரியில் சுடாலினின் வீட்டுக்கு அருகிலேயே புரொபசனல் அல்காரிதம்சு என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். போசுடுகிரசுஎசுகியூஎல், பிஎச்பி என்று பேசினார்கள். தலைமையில் வேலை நடக்கும் என்றார்கள். எனக்கு என்ன தேவை என்பதை எழுதிக் கொடுத்து விடுமாறு கேட்டார்கள்.

நான் எச்டிஎம்எல்லில் எந்த மாதிரி இடைமுகங்கள், அறிக்கைகள் வர வேண்டும் என்று செய்து அதற்குள் நான் வாடகைக்கு எடுத்திருந்த இணையத் தளத்தில் போட்டு வைத்தேன். லெதர்லிங்க் டாட் நெட் என்ற முகவரியை பதிவு செய்து கொடுத்திருந்தார். போகசு இந்தியா என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு 5000 ரூபாய் செலவில் இணைய வழங்கியில் இடம் வாங்கியிருந்தேன். அவர்கள் அதில் போசுடுகிரெசுஎசுகியூஎல்லும் போட்டுக் கொடுத்திருந்தார்கள்.

அந்தத் தளத்தில் போய் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியது. முதல் தவணை பணத்தைக் கொடுத்து விட்டேன். மளமளவென்று நிரல் எழுத ஆரம்பித்து விட்டார்கள். பிப்ரவரி முதல் வாரம் தோல் கண்காட்சிக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று பேசியிருந்தோம். ஒரு மாதத்தில் முடித்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தார்கள்.

ஒரு மாதத்தில் எதுவுமே முடிந்திருக்கவில்லை, முடித்திருக்கவும் முடியாது. ஏதோ சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் கொடுத்த பணத்துக்கு முழு பயன்பாட்டுக்கான அடிப்படை நிரல்கள் கிடைத்து விட்டன. கொஞ்சம் சண்டை போட்டு விட்டு நிரலை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

குழந்தை கண்களை இறுக மூடிக் கொண்டு குட்டியாக கையில் இருந்தது. வீட்டில் ஒரு அறையில் இரண்டு கணினிகள், ஒரு மடிக்கணினி என்று போட்டு வைத்திருந்தேன். வேலையைத் தொடர சித்தப்பா பையன் தம்பி நண்பனின் தம்பி சேர்த்துக் கொண்டேன். இரண்டு பேரும் கணினிவியலில் பட்டம் பெற்று வேலை இல்லாமல் இருந்தார்கள். அவரவர் வீட்டில் இருந்து வேலை செய்து கொள்ளலாம்.

இதற்குள் சமாதானக் கொடி காட்டி அவளையும் குழந்தைகளையும் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டிருந்தேன். தோல் கண்காட்சியில் அறிமுகத்தின் மூலம் ஒரு தோல் நிறுவன உரிமையாளரைச் சந்தித்து நமது பயன்பாட்டைப் பற்றி விளக்கியிருந்தேன். குரோம்பேட்டை நாகல்கேணியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து அது வரை செய்து வைத்திருந்த பயன்பாட்டைப் பற்றிச் சொன்னேன். அவர் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், பயன்படுத்திப் பார்த்தால் போதும் என்று பேசிக் கொண்டேன்.

அவருக்கு எனது சீனத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணம் இருந்திருக்கும். சீனாவில் தோல்களை விற்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்த தொழிற்சாலைகளைத் தொடர்பு கொள்ளச் சொல்லலாம் என்று விபரங்களைக் கொடுத்தேன். எனக்கு அதில் ஆர்வமில்லை. பிற்காலத்தில் வளர்த்தபடி செய்யும் திட்டம் எட்டிப் பார்க்கவே இல்லை. தோல் விற்பதில் எனது திறமை பொருந்தாது என்று ஏற்கனவே சலித்திருந்தது.

ஆரம்ப கால வாடிக்கையாளர்கள் எல்லோருமே சீனத் தொடர்பின் அடிப்படையில்தான் கிடைத்தார்கள்.

தொழில்நுட்ப முகப்பில் இணையத்தில் தீவிரமாக படிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் ஈடுபட்டிருந்தேன். ஸ்லாஷ்டாட், போசுடுகிரெசுகியூஎல், பிஎச்பி என்று ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருப்பேன். பயன்பாட்டில் செய்ய வேண்டிய மாறுதல்கள், புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் ஒவ்வொன்றையும் நானே புரிந்து கொள்ள முயற்சி செய்து வெற்றியும் கண்டு கொண்டிருந்தேன். பயன்பாட்டில் இருந்த தரவுத்தள வடிவமைப்பு, நிரல் அமைப்பு அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ராணிப்பேட்டையில் போய் பேசி விட்டு வந்திருந்தேன். அவர்களுக்கு தகவல் மேலாண்மைக்கு உதவி செய்யலாம் என்று திட்டம். ராணிப்பேட்டையில் இணைய இணைப்பு சொதப்பலாக இருந்தது. இணையத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. பாண்டிச்சேரியில் நிறுவனம் நடத்தி வரும் நண்பனிடமும் தொடர்பு கொண்டிருந்தேன். வேலை பார்க்கும் கல்லூரித் தோழியின் மூலம் அவர்களையும் சந்தித்துக் கொண்டிருந்தேன்.

வேலை தேட ஆரம்பித்திருந்தாள். நிறுவனத்துக்குப் போய் உரிமையாளரைச் சந்தித்த போது என்னைப் பற்றிச் சொல்ல என்னுடைய பயன்பாட்டைப் பார்க்க அழைத்திருந்தார். அங்கும் விற்பனைக்கான சாத்தியங்கள் தெரிந்தன.

நிரல் உருவாக்கத் தரப்பில் மனம் சலித்து வேறு வழி பார்த்து போயிருந்தார்கள். தொடர்பு கொண்டு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க அவரது கல்லூரியில் மாணவர்களான இரண்டு பேரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அப்படி வந்து சேர்ந்தார்கள் இரண்டு பேர். 5000 ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்னதும், இரண்டு பேரும் சேர்கிறோம் ஆளுக்கு 2500 கொடுத்து விடுங்கள் என்று சேர்ந்து கொண்டார்கள்.

வீட்டில் அந்த அறையிலேயே சுவற்றில் பொருத்தும்படியாக ஒரு மேசை உருவாக்கி அவர்களும் உட்கார்ந்து பணி புரியும்படியான சூழலை உருவாக்கிக் கொண்டேன். வீட்டில் சூழலோ மோசமாகவே இருந்து வந்தது. உரசல்கள், வழக்கம் போல வெடிப்புகளாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு முறை பணி புரிய வந்தவர்களும் அதைப் பார்க்க நேரிட்டது.

டாடா நிறுவனத்தில் ஓட்டுனராக இருந்தவர் தனது உறவினர் என்று ஒருவரை அனுப்பி வைத்தார். அவர் எப்படிக் கற்றுக் கொள்கிறார் என்று பார்த்து விட்டு முடிவு செய்தவாகச் சொல்லியிருந்தேன். அவரை சும்மாவே அனுப்பி வைத்து விட்டேன்.

நிரல் உருவாக்கத்தை முழுப் பொறுப்புடன் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு இடத்துக்கும் போய் அவர்களைப் பயன்படுத்த வைத்தோம். நமது பயன்பாட்டில் வாடிக்கையாளர் தேவைகளை உள்ளிடவும் ஆரம்பித்தார்கள். கொஞ்சம் காசு கூட வாங்கிக் கொண்டோம்.

கையில் இருந்த சேமிப்புகள் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. வீட்டு வாடகை, வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவது - சோபா, தரை விரிப்புக் கம்பளம், துணி துவைக்கும் எந்திரம், தொலைக்காட்சி, குளிர்பதன கருவி என்று எதையும் விட்டு வைக்காமல் வாங்கி முடித்தோம். வெளியில் சுற்றுவது, சாப்பிடுவது என்றும் குறையில்லை. இதோ ஓரிரு மாதங்களில் நிறுவனத்திலிருந்து பணமாகக் கொட்டப் போகிறது. அதனால் எந்தக் கவலையும் இல்லை.

வாடிக்கையாளர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. இணைய இணைப்பு சரியில்லாமல் பயன்படுத்துவது சரியில்லாமல் எதுவும் வெளிப்பாடு வரவில்லை. ஆனால் நடைமுறைத் தகவல்களை உள்ளிட முயற்சிக்கும் போது பயன்பாட்டில் பல மேம்பாடுகள் செய்ய வேண்டியது தெரிந்து செய்து முடித்தோம்.

தொழில் நுட்பப் புத்தகங்களையும் வாங்கிக் குவித்தேன். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை அளிக்க வேண்டுமானால் சொந்தமாக வழங்கி இருக்க வேண்டும் என்று நெட்பார் இந்தியாவில் நமது வழங்கியை வைத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். மாதா மாதம் அதற்கு 7000 ரூபாய் செலவாகி வந்தது.

அந்த 7000, வீட்டு வாடகையில் நிறுவனத்தின் பங்காக 3000, சம்பளம் 5000 என்று 15000 ரூபாய்கள் செலவாகி வந்தது. இது போக தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவுகள் என்று மாதம் 20000 தாண்டியது. வீட்டுச் செலவுகளாக வாடகையில் பங்கு 4000, சாப்பாட்டுச் செலவுகள் 5000, வெளியில் போய் வரும் செலவுகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என்று 20000 தொட்டுக் கொண்டிருந்தது. மொத்தச் சேமிப்பு சில லட்சங்கள்தான் இருந்தது. டிசம்பர் வரும் போது எல்லாமே வறண்டு போயிருந்தது.

Friday, October 31, 2008

பொருளாதாரச் சரிவு - யாருக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆட்டத்தின் விளைவுகளை முழு உலகமும் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் யாருக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படும்?

1. எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்தாலும், மக்கள் சாப்பிடத்தான் வேண்டும், உடுத்தத்தான் வேண்டும்.

உணவுப் பொருட்கள் மற்றும் ஆடை/அணிகலன்கள் துறையினருக்கு மற்ற சேவைத் துறைகளுடன் ஒப்பிடும் போது நல்ல தொழில் நடக்கும். விவசாயிகள், விவசாய இடுபொருட்கள் விற்பவர்கள், துணி உற்பத்தியாளர்கள், உடை தயாரிப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகள் பட்ட பாட்டுக்கு பரிகாரமாக நல்ல நிலைக்கு வருவார்கள்.

இந்தத் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கும் வங்கித் துறையில் ஏற்படும் சரிவால் தொழில் செய்ய கடன் தொகை கிடைக்காமல் போனால் மட்டும் சிக்கல் உண்டாகி விடும்.

2. மதிப்புக் கூடுதல் சேவையாக, உயர்தர உணவு விடுதிகள், விலை உயர்ந்த அணிகலன்கள் கொஞ்சம் இழுத்துப் பிடிக்க ஆரம்பிக்கும்.

3. தகவல் தொழில் நுட்பத் துறையில், திறமை வாய்ந்த ஊழியர்களை கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் (இன்போசிசு, டாடா, விப்ரோ) தமது தொழில் முறை, சந்தை அணுகல் உத்திகளை வெற்றிகரமாக மாற்றி அமைத்து ஏற்பட்டுள்ள நலிவை தாண்டி வர வாய்ப்புகள் அதிகம். ஆதாய வீதம், வளர்ச்சி வீதம் குறுகிய கால நோக்கில் வெகுவாக மட்டுப்பட்டு விடும்.

4. பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு அவர்களை விடக் குறைந்த விலை என்ற ஆதாயத்தின் மூலம் மட்டும் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் அவர்கள் செய்யும் அதே மாதிரியான பணிகளை பெற்று நடந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமக்கென்று தனிச் சிறப்பாக சேவை அல்லது பொருளை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

5. கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீட்டில் பளபளக்கும் அடுக்குமாடி கடைகள், உயர்தர தங்கும் விடுதிகள், துணிச்சலான புதிய முயற்சிகளுக்கு முதலீடு கிடைக்காமல் போய் விடும். கட்டிடத் துறையைச் சார்ந்து பங்குச் சந்தையில் தமது பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களுக்கு பெருத்த சரிவு ஏற்படும்.

மற்ற நிறுவனங்களைப் போல விலை உயர்வது வரை சும்மா இருப்போம் என்று இருந்து விடவும் முடியாது. ஒவ்வொரு காலாண்டும் வளர்ச்சியைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.

6. ஏற்றுமதித் துறை நிறுவனங்களுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிதி நிலைமை மோசமானால் வணிகம் நலிவடைவதை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படையில் உறுதியான உற்பத்தி திறன், உயர்ந்த தர நிர்ணயம் இருக்கும் நிறுவனங்கள் இந்த சிரமமான காலத்துக்குப் பிறகு இன்னும் சிறப்படைய முடியும். கொஞ்சம் நோஞ்சான்களான நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, October 28, 2008

யாருக்கும் வருந்த வேண்டியதில்லை!

ஒரு சின்ன புள்ளி விபரக் கணக்கு - மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் மாற்றங்கள்:
ஆதாரம்


1. 5000ஐத் தாண்டியது - ஜனவரி 2000
2. 3000 ஆக இறங்கியது - ஆகத்து 2002
3. மீண்டும் 5000 - டிசம்பர் 2003 (16 மாதங்களில்)
4. 10000ஐத் தாண்டியது - மார்ச்சு 2006 (27 மாதங்களில்)
5. 20000ஐத் தொட்டது - நவம்பர் 2007 (20 மாதங்களில்)

டிசம்பர் 2003லிருந்து 4 ஆண்டுகளில் குறியீட்டு எண் நான்கு மடங்காகியிருக்கிறது. ஆகத்து 2002லிருந்து ஐந்து ஆண்டுகளில் 7 மடங்காகியிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் "அப்படி என்ன சிறப்பாக நடந்து விட்டது" என்று கேட்டால், 'இந்திய வளர்ச்சி கதை', 'அடிப்படை வலிமை' என்று மாற்றி மாற்றி ஜல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். பங்குகளின் விலை ஏற்றத்தின் காரணமாக இன்னும் பலர் வாங்குவதில் இறங்க விலை இன்னும் ஏறியது.

அடிப்படை 'நிறுவனம் ஆண்டுக்காண்டு சாதிக்கும் விற்பனையும் அதன் மூலம் ஈட்டும் உபரித் தொகையும்தான்' அதிலிருந்து வரும் பகிர்வுத் தொகையின் அடிப்படையில்தான் பங்கு விலை இருக்க முடியும். ஒரு சில வார நோக்கில் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும், ஓரிரு ஆண்டுகள் நோக்கில் அதுதான் ஒரே அடிப்படை. அதைத் தவிர்த்த மற்ற எல்லாம் சூடான காற்றுதான்.

பங்குச் சந்தையில் வாங்கி விற்கப்படும் பங்குகளின் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையையும், ஆதாயத்தையும் இரட்டிப்பாக்கினவா? என்று கேட்டிருந்தால் கடைசி இருபது மாதங்களில் 10000 புள்ளிகள் உயர்ந்தது நடந்திருக்காது.

இது 2008ன் கதை மட்டுமல்ல. பங்குச் சந்தை ஆரம்பித்த நாட்களிலிருந்தே 19ம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஏற்றமும் இறக்கமும் வளமையாகத்தான் இருக்கின்றன.

2008ல் இப்போது நடப்பது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் உருகி ஓடுதல். இறுக்கமாக பாதுகாப்புப் பட்டியை அணிந்து கொண்டு உழைத்து மட்டும் வரும் பணத்தில் வாழ தயாராகிக் கொள்ள வேண்டியதுதான்.

Tuesday, September 23, 2008

செலாவணி பரிமாற்ற தெரிவு ஒப்பந்தம்

பணம் வருவது உறுதியாக இருந்தால் முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பணம் வருவது உறுதியில்லாமல் இருந்தால் என்ன செயவது?

ஒரு ஏற்றுமதியாளர் 3 மாதங்களுக்குள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை (10000 டாலர்) டாலர்களில் பெறுவதாக எதிர்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்றுமதிக்கான உடன்பாடு இவருக்குக் கிடைப்பது 2 மாதம் கழித்துதான் உறுதியாகும். இன்றைக்கு உடன்பாட்டுக்கான விலையை அனுப்பி வைக்க வேண்டும்.

உள்ளூர் சந்தையில் முந்திரிப் பருப்பை ரூபாய்க்கு வாங்கி டாலருக்கு விற்க வேண்டும். இன்று 1 டாலர் = 46 ரூபாய்கள் செலாவணி வீதம் என்ற கணக்கில் விலை நிர்ணயிக்கிறார். இந்த ஆர்டர் கிடைத்து ஏற்றுமதி செய்து விட்டால் வருமானம் வரும், டாலரை 46 ரூபாய் வீதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆர்டர் கிடைக்கா விட்டால், மாற்றுவதற்கு டாலர் இருக்காது.

இந்த நிலையில் Forward ஒப்பந்தம் என்ற முன்பேர ஒப்பந்தம் சரிப்படாது. ஆர்டர் கிடைக்காமல் போய், டாலரின் மதிப்பு ஏறி விட்டால், (1 டாலர் = 50 ரூபாய்) இவர் ஒப்பந்தப்படி 10000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய் என்ற வீதத்தில் விற்றே தீர வேண்டும். அதற்கு சந்தையில் 50 ரூபாய் வீதத்தில் டாலர் வாங்கி 46 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும்.

Options எனப்படும் தெரிவு ஒப்பந்தத்தில் விருப்பப்பட்டால் விற்கலாம் என்ற தெரிவு இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் 10000 டாலர்களை விற்கும் தெரிவு, ஒப்பந்ததாரருக்குக் கிடைக்கிறது. அவர் விரும்பா விட்டால் விற்காமல் இருந்து விடலாம்.

இந்த தெரிவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான கட்டணங்கள் முன்பேர ஒப்பந்தங்களை விட அதிகமாக இருக்கும்.

Monday, September 22, 2008

முன்பேர ஒப்பந்தம்

forward trading என்பதை முன்பேர வணிகம் என்று வளர் தொழில் பத்திரிகையில் கையாளுகிறார்கள். எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம் என்பதை விட முன்பேர ஒப்பந்தம் கைக்கடக்கமாக இருக்கிறது!

இது போன்று முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதால் என்ன நடக்கும். ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

மாதா மாதம் 10000 டாலர்கள் வருமானம் பெறும் ஒருவர் மாதம் 5000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் விற்பதாக முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

1. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர்=46 ரூபாய்
ஒப்பந்தத்துக்கான கட்டணத் தொகை வீணாக வங்கிக்குக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தமே இல்லாமல் இருந்தாலும் சந்தையில் டாலரை விற்று 46 ரூபாய் பெற்றிருக்கலாம்.

2. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 48 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய்க்கே டாலர்களை விற்றுத் தொலைக்க வேண்டிய கட்டாயம். ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு, 10000 ரூபாய்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்.

3. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 40 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய் கிடைத்து விடும். ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு 30000 ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு
அ. டாலர் வருமானம் வருவது உறுதியாக இருக்க வேண்டும். வருமானத்தின் அளவோ நேரமோ உறுதியின்றி இருந்தால், முன்பேர ஒப்பந்தம் ஒத்து வராது.
ஆ. நாம் எதிர்பாராத திசையில் செலாவணி வீதம் போனால், அதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாத மனநிலை வேண்டும்.

Friday, September 19, 2008

எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்

போன வாரம் ஒரு நாள். வெளி நாட்டில் வேலை பார்க்கும், தற்போது விடுமுறையில் வந்திருக்கும் உறவினர் ஒருவர் காலையில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

"என்ன! டாலர் 46 ரூபாய் ஆகி விட்டதா." உடனேயே அருகிலிருந்த அவரது மனைவியிடம், "கையிலிருக்கும் டாலரை எல்லாம் இன்னைக்கே ரூபாயா மாத்திரலாம்" என்றார்.

ஒரு டாலருக்கு 43, 44 என்று கபடி ஆடிக் கொண்டிருந்த நாணய மாற்று வீதம் ஒரு வாரத்துக்குள் 5%க்கு மேல் மாறி ஒரு டாலருக்கு 46 ரூபாய், அடுத்த நாளே 46.90 ரூபாய் என்று கூட ஆகி விட்டிருந்தது.

இந்த வரைபடத்தைப் பார்த்தால் டாலர் ரூபாய் வீதத்தின் ஊசலாட்டம் புரியும்.
http://ichart.finance.yahoo.com/1y?usdinr=x

மேலே சொன்ன உரையாடலின் பின்னணி என்ன?

'திடீரென்று டாலரின் மதிப்பு ஏறியிருக்கிறது. இதே நிலையில் இன்னும் பல நாட்கள் தாக்குப் பிடிக்காது. மீண்டும் அதன் மதிப்பு இறங்குவதற்கு முன்னே நம்ம கையில் இருப்பதை ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம்'. அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு குறையும் என்று இவர் நம்புகிறார்.

பொதுவாக, டாலரில் சம்பளம் வாங்குபவர்கள், டாலருக்கு பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் - வருங்காலத்தில் டாலரில் வருமானம் கிடைக்க இருப்பவர்கள் - இந்தக் கோணத்தில் நினைக்கத் தலைப்படுவார்கள். 'இனி மேல் ஏறா விட்டாலும் பரவாயில்லை. இப்போ இருக்கிற மதிப்பில் இருந்தாலே நமக்கு லாபம்தான்'

இதே செய்தியைப் படிக்கும் இன்னொருவர் வேறு மாதிரி நினைக்கலாம். 'என்னடா, ஒரு டாலருக்கு 46 ரூபாய் ஆகி விட்டது. இப்படியே போனால், இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு டாலருக்கு 50 ரூபாய் என்று ஆகி விடலாம்.' அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏறும் என்று அவர் நம்புகிறார்.

டாலரில் பணம் கொடுக்க வேண்டியிருப்பவர்கள் - இறக்குமதி செய்பவர்கள், வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியிருப்பவர்கள் - இப்படி கவலைப்படுவார்கள். வரும் நாட்களில் டாலரின் மதிப்பு இன்னும் ஏறி விட்டால் நமக்கு செலவு அதிகமாகி இழப்பு ஏற்படும். இதே மதிப்பில் நமக்கு டாலர் கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.

இப்படி டாலர் எதிர்கால வரவு இருப்பவர்கள் ஒரு புறமும் தேவை இருப்பவர்கள் மறுபுறமும் இருப்பவர்களை இணைப்பது எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்.

ஏற்றமதி செய்பவரைப் பொறுத்தவரை

'1 டாலருக்கு 44 ரூபாய் கணக்கில் விலை நிர்ணயித்து 10,000 டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்கிறேன். வாடிக்கையாளரிடமிருந்து டாலர் எனக்கு வந்து சேர 1 மாதம் பிடிக்கலாம்.

அப்போது 1 டாலருக்கு 46 ரூபாய் வீதத்தில் மாற்ற முடிந்தால் 4,60,000 ரூபாய்கள் கிடைக்கும். ஒரு வேளை விலை சரிந்து 42க்கோ, 40க்கோ போனால் பேரிழப்பு (4,.4 லட்சம் ரூபாய் வர வேண்டும் என்ற கணக்கு தவறிப் போய் 4.2 லட்சம் அல்லது 4 லட்சம்தான் கையில் கிடைக்கும்).

பேசாமல், ஒரு மாதம் கழித்து 46 ரூபாய்க்கு 1 டாலர் என்று விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.'

யாரிடம் இவர் ஒப்பந்தம் போடுவார்?

இறக்குமதி செய்பவர்
'10,000 டாலர் மதிப்பிலான பொருளை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். ஒரு மாதம் கழித்து பணம் கொடுக்கும் நேரம் வரும் போது டாலரிம் மதிப்பு 50 ரூபாய் என்று ஆகி விட்டால் 5 லட்சம் கொடுக்க வேண்டி வரும். இதே 46 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் 4.6 லட்ச ரூபாய்களில் வேலை முடிந்து விடும்.'

இப்படி இரண்டு பேரும் 46 ரூபாய்க்கு ஒரு மாதம் கழித்து டாலர்களை பரிமாறிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Forward Contract எனப்படும் எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படை இதுதான்.

நடைமுறையில் ஏற்றுமதியாளரும் இறக்குமதியாளரும் நேரடியாக ஒப்பந்தம் போடுவதில்லை. இடைத் தரகர்களாக வங்கிகள் இருப்பார்கள்.

Monday, August 4, 2008

முதலீடும் முன்னேற்றமும்

அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்.

கடந்த அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள் இரண்டு மடங்காகி விட்டது.

புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.

நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.

டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.

அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.

கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும். குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.

வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்று இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.

புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.

வாடிக்கையாளர் சேவை - ஒரு தவறின் கதை

வாடிக்கையாளர் நிறுவனத்தில் அவர்கள் விற்க வேண்டிய தோலுக்கான தேவை பல இடங்களிலிருந்து வரும். அவற்றை மென்பொருளில் போட்டு விடுவார்கள். அவற்றுக்கு எதிரான உற்பத்தி விபரங்கள், உற்பத்தி முடிந்த பிறகு பொருளை அனுப்பி வைக்கும் விபரங்களும் உள்ளிட்டு விடுவார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் நூற்றுக் கணக்கான ஆர்டர்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் கேட்கப்பட்ட அளவு, இதுவரை அனுப்பி வைக்கப்பட்டது, இனிமேல் அனுப்ப மீதியிருப்பது என்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். 10000 அடி தோல் கேட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர். முதலில் 4000 அடி உற்பத்தி செய்து ஒரு பொதியை அனுப்பி விட்டார்கள். இன்னும் மிஞ்சியிருப்பது 6000 அடி. அடுத்ததாக 1500 அடி அனுப்பி வைத்தால் 10000, 5500, 4500 ஆகி விடும்.

இந்த 4500 அடி அனுப்ப வேண்டும் என்றால் மூலப் பொருளை உற்பத்திக்கு எடுத்து நான்கைந்து நாள் வேலைக்குப் பிறகு தயாராகி அனுப்பலாம். எவ்வளவு உற்பத்தியில் இருந்து கொண்டிருக்கிறது, இன்னும் எவ்வளவு மூலப்பொருளிலிருந்து உற்பத்திக்குக் கொடுக்க வேண்டும் என்ற விபரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.

4500 அடி இன்னும் தேவை. 2500 அடிக்கு உற்பத்தியில் இருக்கிறது. மீதி 2000 அடிக்கு புதிதாக உற்பத்திக்கு அனுப்ப வேண்டும். இதுதான் கணக்கு.

மொத்தத் தேவை 10000
அனுப்பி விட்டது 5500
அனுப்ப வேண்டியது 4500
உற்பத்தியில் இருப்பது 2500
இன்னும் எடுக்க வேண்டியது 2000

இதுதான் கணக்கு. இதே போல நூற்றுக் கணக்கான ஆர்டர்கள். பல ஆர்டர்கள் ஒரே பொருளுக்கு இருக்கும். ஒரு ஆர்டருக்கு எதிராக உற்பத்தி செய்து விட்டு அவசரம் என்றால் இன்னொரு ஆர்டருக்கு அனுப்பி வைத்து விடுவதும் நடக்கும்.

புதிதாக ஆர்டர் வந்தால் அதை ஒரு இடத்தில் பதித்து வைத்துக் கொள்வோம். அந்த ஆர்டர் எண்ணையும், மொத்தத் தேவை அளவையும் ஆர்டர் நிலுவை விபரங்கள் என்று பதிந்து கொள்வோம்.

பொருள் அனுப்பும் போது எந்த ஆர்டருக்காக அனுப்புகிறார்கள் என்ற விபரத்தை வாங்கி அதையும் நிலுவை விபரங்களில் தனியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொருளை உற்பத்திக்கு எடுக்கும் போதும் ஆர்டருடன் இணைத்து குறிப்பிட்ட ஆர்டருக்கு எதிராக இவ்வளவு உற்பத்திக்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொரு விபரம் என்ன வேண்டும் என்றால் உற்பத்தியில் தற்போது எவ்வளவு இருக்கிறது என்பது. ஒரு ஆர்டருக்கு எடுக்கப்பட்ட பொருளை இன்னொரு ஆர்டருக்கு அனுப்பி விடுதலும் நடக்கும் என்பதால் இதையும் தனியாகக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

உற்பத்திக்கு என்று விபரங்களை உள்ளிடும் போது உற்பத்தியில் இருப்பதுடன் போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும். உற்பத்தி முடிந்து பொருளை வெளியே எடுக்கும் போது அந்த அளவில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். வெளியே எடுக்கப்பட்டது அதே ஆர்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அது அனுப்பி விட்டது கணக்கில் சேர்ந்து விடும். மாறாக வேறு ஆர்டருக்கு அனுப்பி விட்டால், புதிதாக உற்பத்தி செய்துதான் இந்த ஆர்டரை பூர்த்தி செய்ய முடியும்.

எங்கள் மென்பொருள் வடிவமைப்பில் பலவிதமான சரக்கு அறைகள் (மூலப் பொருள் அறை, பாதி பணி முடிந்த பொருள் அறை, இறுதிப் பொருள் அறை) இருக்கும். அவற்றிலிருந்து உற்பத்திக்கு மூலப் பொருளை அனுப்பலாம், உற்பத்திப் பணி முடிந்ததும் அதே அறைக்கு அல்லது வேறு அறைக்கு முடிந்த பொருளை சேர்த்து விடலாம்.

சரக்கு அறைக்குள் தரம் பிரித்தலும் நடக்கும்.

10000 அடி பச்சைத் தோல் வாங்கினால் அது ஒரு சரக்கு நுழைவாக பதிந்து விடும். அதன் குறிஎண் 1312 என்று வைத்துக் கொள்வோம். அதை 5 தரங்களாகப் பிரித்தால் 1313, 1314, 1315, 1316, 1317 என்று ஐந்து புதிய நுழைவுகளை ஏற்படுத்தி ஒவ்வொன்றிலும் அது 1312லிருந்து வந்தது என்பதையும் குறித்துக் கொள்வோம்.

இப்போது 1313, 1314, 1315 மூன்றையும் சேர்த்து 6000 அடி உற்பத்திக்கு அனுப்புகிறோம் என்றால் மூன்றையும் சேர்த்து 1318 என்று ஒரு சரக்குக் குறி உருவாகி விடும். அது மூன்று சரக்குகளிலிருந்து வந்தது என்ற விபரமும் இருக்கும். 1318 என்பது உற்பத்தியில் இருக்கும் சரக்கு.

உற்பத்திப் பணிகள் முடிந்ததும் அந்த 6000 அடியை இறுதிப் பொருள்களுக்கான சரக்கு அறைக்கு அனுப்பும் போது தரம் பிரித்தல் செய்வார்கள். அது மூன்று தரங்களாக அது பிரிந்தால் உற்பத்தியிலிருந்து வந்ததாகக் குறிக்கப்பட்டு மூன்று சரக்குக் குறியீட்டு எண்கள் இறுதிப் பொருள் அறையில் உருவாகி விடும்.

நம்ம கணக்கில் பார்த்தால் 6000 அடி உற்பத்திக்கு அனுப்பும் போது, அது எந்த ஆர்டருக்கு அனுப்பப்படுகிறதோ அதன் எதிரில் கணக்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். 6000 அடி உற்பத்தி முடிந்து வெளியே இறுதிப் பொருள் அறைக்கு எடுக்கப் படும் போது அந்த ஆர்டருக்காக உற்பத்தியில் இருக்கும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிக்கல் எங்கு ஆரம்பித்தது என்றால், தரம் பிரிப்பு விபரங்களை உள்ளிடுவதற்கான நிரல் இரண்டு வேலைகளைச் செய்யுமாறு எழுதியிருந்தோம். சரக்கு அறைக்குள் தரம் பிரித்தல் ஒரு வகை, உற்பத்தியிலிருந்து தரம் பிரித்து சரக்கு அறைக்கு அனுப்புதல் இன்னொரு வகை. குறிப்பிட்ட சரக்குக் குறியீட்டு எண் உற்பத்தியுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டும் அதன் குறிப்பில் தனி குறிப்பு சேர்த்து விட வேண்டும்.

பணம் கொடுக்கும் முறைகள் - 2

லெட்டர் ஆஃப் கிரெடிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வங்கிக் கடன் கடிதஙகளைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம். (3)

விற்பனையாளரும் வாங்குபவரும் ஒருவரை ஒருவர் எடை போட்டு, பொருட்களின் தரம், அளவு, விலை பேசி இன்ன நாளுக்குள் அனுப்பி விட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். சரியான தரம், சரியான அளவில் பொருள் வந்து சேர வேண்டும் என்ற கவலை வாங்குபவருக்கு. பொருளை தயாரிக்க அவ்வளவு செலவழிக்கிறோம். போட்ட பணம் வந்து சேர வேண்டும் என்ற கவலை விற்பவருக்கு.

வங்கிக் கடன் கடித முறையில் வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுகிறார். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனம் தில்லியிலிருந்து மின்னணு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. சென்னை நிறுவனம், ஒரு வங்கியை அணுகி இந்த விற்பனைக்கு தில்லி நிறுவனத்தின் பெயருக்கு ஒரு கடன் கடிதம் அனுப்பக் கேட்கிறது.

வங்கி சும்மா அனுப்பி விடாது

பணமும் பொதுவுடமையும்

சரி பணம் என்றால் என்ன? என் பையில் 100 ரூபாய் இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?

பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம். உலகில் பணம் என்ற கோட்பாடே இல்லை. பணம் என்பது மனிதன் உருவாக்கியதுதானே!

ஆரம்ப உலகில் காட்டில் தனியாக ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பசித்தால் போய் மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களைப் பறித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அவர் ஒரு நாள் இன்னொருவரைப் பார்க்கிறார். இரண்டாமவர் தினமும் காலையில் எழுந்து சின்ன விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறார்.

முதலாமவருக்கு தினமும் பழம் சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறது. ஆனால் வேட்டையாடுவதற்கான நுணுக்கங்களும், திறமையும் கற்றுக் கொண்டிருக்கவில்லை. இரண்டாமவருக்கு எந்த இடத்தில் நல்ல பழம் கிடைக்கும் எப்படிப் பறிப்பது என்றெல்லாம் விபரங்கள் தெரியாது.

இருவரும் தம்மிடம் இருப்பதில் ஒரு பகுதியை அடுத்தவருக்குக் கொடுக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பழங்களும் கிடைத்து விட்டன, இறைச்சியும் கிடைத்து விட்டன. இப்போது கை மாறிய பொருட்கள் பழங்கள் மற்றும் இறைச்சி.

இப்போது மூன்றாவதாக ஒருவர் வருகிறார். ஒல்லியான உருவம், ஊதினால் பறந்து விடுவது போன்ற உடல் வாகு. மென்மையான முகம். அவர் கைகளில் பூங்கொத்துகள். அவர் பூக்களின் இதழ்களைச் சாப்பிட்டுதான் வாழ்ந்து வருகிறார். மூன்றாமவர் இந்தப் பகுதிக்கு வந்தவுடன் ஏற்பட்ட நறுமணத்தை உணர்ந்த முதல் இரண்டு நண்பர்கள் கொஞ்சம் பூக்களை வாங்கி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

மூன்றாமவருக்கு அந்த நறுமணம் கமழும் பூக்கள் கிடைக்கும் இடம் தெரியும். அவரிடம் பூக்களை வாங்கிக் கொண்டு முதலாமவர் பழங்களையும் இரண்டாமவர் இறைச்சியும் கொடுக்கிறார்கள். இப்போது 3 பொருட்கள் 3 பேருக்கும் கிடைத்து விட்டன. மூன்று வகையான பரிமாற்றங்கள். பழம் - இறைச்சி, பழம் - பூ, இறைச்சி - பூ

மீண்டும் தாவி தற்காலத்துக்கு வந்து விடுவோம். இந்த மூன்று பரிமாற்றங்களுக்கும் பொதுவாக என்ன இருக்கும்? பணம். நான் பரிமாறிக் கொள்வதில் பெரும்பாலும் பணமும் இடம் பிடித்து விடுகிறது. பழம் விற்பவர் பழம் தேவைப்படுபவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார். பூ தேவைப்படுபவர் தான் விற்று சம்பாதித்த பணத்தைக் கொடுத்து பூக்களைப் பெற்றுக் கொள்கிறார்.

பணம் என்றால் என்ன?

மீண்டும் ஆரம்ப கால மூன்று நண்பர்களிடம் போவோம். அவர்கள் பணம் என்று எதையும் தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்களும் பரிமாற்றங்கள் செய்து கொண்டார்கள். அந்த மூன்று பரிமாற்றங்களையும் பொதுப்படையாக அளக்க எதை காரணியாக வைத்துக் கொள்ளலாம்? அதுதான் பணம்.

பழம் தேவைப்படுபவர் கொஞ்சம் முனைந்தால், தேடிப்பிடித்து மரத்தில் ஏறி உராய்ந்து பழங்கள் பறித்துக் கொண்டிருக்கலாம். இறைச்சி வேண்டுபவரும் ஓடும் விலங்கு ஒன்றைத் துரத்தி ஓடி பல தோல்விகளுக்குப் பிறகு ஒன்றைப் பிடிப்பதில் வெற்றி கண்டிருக்கலாம்.

அவரிடம் பழத் தோட்டம் இருந்தது, இவரிடன் முயல் பண்ணை இருந்தது என்பதால் பரிமாற்றம் ஆரம்பிக்கவில்லை.

எளிமையான அந்தக் காலத்தில் பரிமாற்றத்தின் அடிப்படை, பொருள் அல்லது சேவையை செய்வதற்குத் தேவையான அறிவு, திறமை, உழைப்பு. மிகச் சிக்கலான ஆயிரக்கணக்கான பரிமாற்றங்களின் அடிப்படையும் மனித அறிவு, திறமை, உழைப்புதான்.

'உனக்கு இருக்கும் பழம் கிடைக்கும் இடத்தைப் பற்றிய அறிவு, பழம் பறித்துக் கொண்டு வந்த உழைப்பு இவற்றை நான் வாங்கிக் கொண்டு என்னுடைய பூக்கள் பற்றிய அறிவு, அவற்றைச் சரிவரப் பறித்து கொண்டு வந்த உழைப்பை மாற்றாகக் கொடுக்கிறேன்.'

இதுதான் மார்க்சின் கோட்பாடு. எல்லா மதிப்பும் உழைப்பிலிருந்துதான் உருவாகின்றன. இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தால் அதிகமாக உழைப்பவர் அதிகமான மதிப்பைப் பெறுவார்கள். சோம்பேறிகள் செல்வந்தர்களாக இருப்பது அவர்கள் வளங்களை வளைத்துப் போட்டுக் கொள்வதால்தான். எல்லாவற்றையும் பொதுவில் வைத்து விடுவதுதான் இதற்குத் தீர்வு என்பது கம்யூனிசம்.

அப்படிச் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக் கொண்டு முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டுகிறார்கள். தொழிலாளிகள் கொடுக்கும் உழைப்பின் முழு மதிப்பையும் கொடுக்காமல் உபரியை தாமே தக்க வைத்துக் கொண்டு இன்னும் சுரண்டுவதற்கான ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

பணம் ஒரு அளவை

கேள்வி:
ஒரு வணிக நிறுவனத்தின் நோக்கம் என்ன? எதற்காக வணிக நிறுவனம் அமைப்பதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறோம்?

பதில்:
1. பணம் சம்பாதிக்கிறது! தொழில் நடத்தி நிறைய சம்பாதிக்கிறதுதான் முதல் நோக்கம்.
2. அடுத்ததா வேணும்னா அடுத்தவங்களுக்கு சேவை செய்றது என்று வைத்துக் கொள்ளலாம்.

திருத்தம்:
அப்படியா? பணம் சம்பாதிக்கிறது வேறு, சேவை செய்றது வேறு என்று நினைக்கிறீங்களா?
பணி செய்தால் சம்பளம் கிடைக்கும். பணி செய்வதற்கும் சம்பளம் கிடைப்பதற்கும் ஒரு உறவு இருக்கிறது.

இன்னொரு பக்கம் கிரிக்கெட் பார்க்கப் போனால், வேலைக்குப் போக முடியாது. கிரிக்கெட் பார்க்கப் போவதற்கும் வேலைக்குப் போவதற்கும் ஒரு உறவு இருக்கிறது.

சேவை செய்வதற்கும் பணி செய்வதற்குமான உறவு எதைப் போன்றது? ஒன்றுக்கொன்று நேரடி உறவுடையதா, அல்லது எதிர்மறை உறவுடையதா? ஒரு நிறுவனம் நல்ல சேவை கொடுக்கிறதா என்பதற்கான அளவு கோல்தானே சம்பாதிக்கும் பணம்?

நாம் நல்ல சேவை கொடுத்ததாகச் சொல்லிக் கொள்கிறோம். அது உண்மைதானா, நம்முடைய சேவையின் நன்மை என்ன என்று எப்படி அளப்பது? எப்படி மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்? அதுதான் ஈட்டும் பணம்.

இன்போசிஸ் 16000 கோடிகள் சம்பாதித்தது என்று சொன்னால், அவர்கள் சேவைகளை வாங்கிப் பலனடைந்த வாடிக்கையாளர்கள் 16000 கோடி ரூபாய்கள் இன்போசிஸ்ஸுக்குக் கொடுத்தார்கள் என்று பொருள். சேவை செய்வதன் அளவு கோல்தான் பணம்.

அதனால் நிறுவனத்தின் நோக்கம் என்று கேட்டால், பணம் சம்பாதிப்பது என்று மட்டும் சொன்னால் போதும். பணம் எப்படிச் சம்பாதிக்கலாம், சேவை அளிப்பதன் மூலம்.

அல்லது நிறுவனத்தில் நோக்கம் சேவை செய்வது என்று சொன்னால் போதும். எவ்வளவு சிறப்பாகச் சேவை செய்திருக்கிறோம் என்பதைப் பார்க்க வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை அளவிட்டுக் கொள்ள வேண்டும்.

'நான் நல்லா சேவை செய்தேன், ஆனால் பணம் வந்து சேரவில்லை' என்று சொன்னால் பொருள் இல்லை. நல்லா சேவை செய்திருந்தால் அதை வாங்கியவர் மனமுவந்து பணமும் கொடுத்திருப்பாரே!

'சில இடங்களில் சேவை நல்லா இல்லாமலேயே பணம் வாங்கி விடுகிறார்கள். டாடா உடுப்பி உணவு விடுதியை எடுத்துக் கொள்ளுங்கள். விலை இவ்வளவு அதிகம், அதற்கு ஏற்ற தரம் இல்லைதான். அங்கு போய்ச் சாப்பிடுபவர்கள் பணம் கொடுத்து விட்டுதான் வெளியில் வர வேண்டும். அவர்கள் பணம் கொடுக்கும் போது திருப்தி இல்லாமல் கொடுத்தாலும், அதை அளவிட்டால் டாடா உடுப்பி மிகச் சிறந்த சேவை அளிப்பதாக ஆகி விடுமே!'

அதுவும் சரிதான். சேவையின் சிறப்பை அளக்க பணம் ஒரு முக்கியமான அளவீடு. ஆனால், பணம் மட்டும் சரியான அளவீடாக இருக்க முடியாது. ஏனென்றால் பொருளாதார அமைப்பின் இயல்பால் எல்லோரும் சமமான நிலையில் இருந்து சேவைகளை வாங்கவும் விற்கவும் முடியாது. சில பண்டமாற்றுகளில் ஒருவரின் கை ஓங்கி இருக்கும். அவர் கொடுக்கும் சேவையை விட அதிகமான பணத்தை வாங்கி விடவோ, வாங்கிய சேவையை விட குறைவான பணத்தை கொடுத்து நகர்ந்து விடவோ முடியும்.

ஆகவே இரண்டாவதாக பார்க்க வேண்டியது, சம்பாதித்த பணம் என்ற அளவீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். இன்னும் புகுந்து பார்த்தால்தான் உண்மையான நிலவரம் வெளியில் வரும்.

பேர்வளம்

பிராண்டிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பேர்வளம் உருவாக்குவதைப் பற்றி பலராமன் என்பவர் நேற்றைக்கு ஏசிடெக் லெதர் அண்ட் ஃபுட்வியர் அலுமினி அசோசியேஷன் கூட்டத்தில் பேசினார். மிகவும் நன்கு தயாரிக்கப்பட்டு மனதில் பதியும் படி பேசினார்.

தோல் ஒரு மலிபொருள். ஆங்கிலத்தில் கமாடிடி எனப்படும் இந்த மலிபொருட்களுக்கான சந்தைகளின் இயல்புகளை விவரித்தார். மலிபொருட்களாக விற்பவர்களுக்கு ஆதாயம் குறைவாகத்தான் கிடைக்கும். நுகர்வோருக்கு அருகில் இருக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

தோலைப் பொறுத்த வரை பேர்வளம் உருவாக்கி நுகர்வோருக்கு நுகர்பொருட்களை விற்கும் நிறுவனங்கள், எதை விற்பது, எந்த விலைக்கு விற்பது என்பதைத் தீர்மானித்து பெருவாரியான ஆதாயத்தையும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரிப்பையும் பெறுகிறார்கள்.

'பேர்வளம் உருவாக்குதல் பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும், அல்லது நிறைய பணம் செலவாகும் ' என்று நினைப்பது முற்றிலும் உண்மை இல்லை. சரவணபவனில் ஆரம்பித்து சக்தி மசாலா, தவிட்டு எண்ணைய் பேர்வளம் என்று பலர் மலிபொருள் சந்தையில் பேர்வளம் உருவாக்கி பெரிதாக வளர்ந்தவர்கள்.

பேர் வளம் உருவாக்க என்ன வழிமுறை:

1. வாடிக்கையாளர் எப்படி வேலை செய்கிறார், என்னென்ன விரும்புகிறார், எப்படி வாழ்கிறார், எப்படி பிறருடன் உறவு வைத்திருக்கிறார் என்று ஆழமாக அவதானித்துப் பார்க்க வேண்டும்.

2. வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் ஆழமான விருப்பம் ஒன்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

3. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருள் அல்லது சேவை ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும்.

4. அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதை வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து நாளுக்கு நாள் புதிய புதிய நுணுக்கங்களைப் பின்பற்றி விருப்பம் நிறைவேறுதலை மேம்படுத்திக் கொண்டே போக வேண்டும்.

நம்முடைய நிறுவனத்தைப் பொறுத்த வரை, வாடிக்கையாளரின் நடவடிக்கைகள் குறித்த புரிதல்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் விபரமாகத் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் விருப்பம் அல்லது தேவை, தம்முடைய தொழில் நன்கு வளமடைய வேண்டும், அதற்குத் தேவையான தகவல்கள், முடிவுகள் சரியான நேரத்தில் சரியான நபருக்குக் கிடைக்க வேண்டும்.

தகவல்களைத் திரட்டுதல், சேமித்தல், எடுத்தல், வழங்குதல் என்ற நான்கு படிகளையும் முறைப்படி செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் மனதின் விருப்பம் அல்லது தேவையை நிறைவேற்றலாம். இது தோல் நிறுவனம் நடத்துபவர்களுக்கும், பொருள் உற்பத்தியாளர்களுக்கும், பொருள் விற்பவர்களுக்கும், பொருள் நுகர்வோருக்கும் பொருந்தும். அதுதான் நமது குறிக்கோள்.

தகவல்களை திரட்டி சேமித்து எடுத்து வழங்குதல் ஒவ்வொரு துறையிலும் மிகவும் தேவையான ஒன்று. கூகுள் இணையத்தில் இருக்கும் தகவல்களை எல்லாம் திரட்டி, சீராக சேமித்து வைத்து, தேவைப்படும் போது வசதியாக வெளியில் எடுத்து, பயனரின் விருப்பப்படி வழங்குகிறது. நாமும் அப்படி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

தகவல்களை திரட்டுதல் - நமது மென்பொருளுக்குள் தரவுகளை உள்ளிடுதல். இதில் புதிய புதிய தொழில் நுட்பங்களுடன், பயனர் எப்படி பணி புரிகிறார் என்ற புரிதலும் அவசியம்
சேமித்தல் - தொழில் நுட்பம் தொடர்பான நுணுக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
எடுத்தல் - பயனர் கேட்கும் போது கேட்ட விபரத்தை வேகமாக எடுக்க முடிதல்.
வழங்குதல் - தேடுகருவி அல்லது அறிக்கைகள், அல்லது ஆவணங்கள், அல்லது மின்னஞ்சல், அல்லது அச்சுப் பிரதி என்று பல வகையில் தகவல்களை எடுத்துக் கொடுக்க முடிய வேண்டும்.

1. தொழில் நுட்பக் குழு இப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படலாம்.
2. இந்த பேர்வளக் குறிக்கோளை குழுவினருக்கு வாடிக்கையாளருக்கு, பணம் கொடுப்பவருக்கு என்று எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

Thursday, March 13, 2008

தள்ளாடுகிறதா பொருளாதாரம்

இந்தியப் பொருளாதரத்தின் தொழில் துறை வளர்ச்சி வீதம் 2008 ஜனவரி மாதத்தில் 5.3% ஆக குறைந்தது. 2007ம் ஆண்டில் இதே மாதத்தில் வளர்ச்சி வீதம் 11.6% ஆக இருந்தது.

அதாவது 2006ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது 2007ல் 11.6% வளர்ச்சி இருந்தது. 2007லிருந்து 2008ல் வளர்ச்சி 5.3% ஆக இருந்தது (இது கூட வளர்ச்சிதான், ஆனால் வீதம் குறைவு).

சுரங்கத் துறை, பொது உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்பொருட்கள், வீட்டு பயன்பாட்டுக் கருவிகள், முதலீட்டு இயந்திரங்கள் என்று வெவ்வேறு துறைகளின் உற்பத்தி மதிப்புக்கு குறிப்பிட்ட விகிதாச்சாரம் கொடுத்து ொழில் துறை வளர்ச்சி குறியீட்டு எண் என்பதை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இந்தக் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி அல்லது தேய்வுதான் உற்பத்தித் துறை மாற்றம் என்று சொல்கிறார்கள்.

இந்த குறியீட்டு எண் 1993-94ம் ஆண்டில் 100 ஆக இருந்ததாக வரையறுத்துக் கொண்டார்கள்.

சுரங்கத் துறை என்பது நிலக்கரி, தாதுப் பொருட்கள் முதலான இயற்கை வளங்களைத் தோண்டி எடுக்கும் பணியைச் செய்வது

முதலீட்டு இயந்திரங்கள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப் படும். ஒரு மாதத்தில் இயந்திரங்களில் முதலீடு குறைகிறது என்றால் அடுத்தடுத்த மாதங்களில் மற்ற பொருட்களின் உற்பத்தி குறையும் என்று கணக்குப் போடலாம். முதலீடு அதிகமானால்தான் உற்பத்தித் திறன் அதிகமாகி உற்பத்தி அளவும் அதிகரிக்கும்.

அதனால் இயந்திரங்களின் உற்பத்திக் குறைவு அதிகமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து பிசினஸ் லைன் நாளிதழில் செய்தி

Wednesday, March 12, 2008

தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்

வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்து இரண்டு மேலாண்மை வல்லுனர்கள், தகவல் தொழில் நுட்பம் இன்றைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.

முழுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்.

அதைப் பற்றிய ஸ்லாஷ்டாட் விவாதத்தை இங்கு படிக்கலாம்.

சில குறிப்புகள்:

1. தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுனத்தின் ஆதாய வீதத்தை அதிகரிப்பதோடு தகவல் தொழில் நுட்பத்தில் செய்யும் முதலீட்டில் நல்ல வருமானத்தையும் ஈட்டலாம்.

2. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப பொருளாதாரத்தில் வெற்றியடைவதற்கு , நிறுவனத்தின் அடிப்படைத் திட்டமிடலின் போது தகவல் தொழில் நுட்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

3. நிறுவனத்தின் தொழிலை நன்கு புரிந்த தொழில் முறை மேலாளரை தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தகவல் தொழில் நுட்பத்தை ஒன்றுபடுத்த அவர் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

4. தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சந்தையிலும் பொருளாதாரத்திலும் மாற்றங்களின் வேகத்தை அதிகரித்துள்ளன. இதனால் ஏற்படும் வாய்ப்புகளையும் பாதகங்களையும் உடனுக்குடன் அடையாளம் கண்டு, சரியாக புரிந்து, எதிர் வினை ஆற்றுவது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் இன்றியமையாததாகிறது.

5. நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மேலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் செய்யக் கூடிய மேம்பட்ட தகவல் மேலாண்மை, தொழில் முறை அறிவு மேம்படல், தகவல் பாதுகாப்பு, மாற்றங்களை கையாளுதல், செய்முறைகளை ஒருங்கிணைத்தல் போன்றவை நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

6. தகவல் தொழில் நுட்பத்துக்காகத் திட்டமிடும் செலவினங்களும் முதலீடுகளும் மற்ற செலவினங்களைப் போலவே நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

சன்னுக்கு என்ன ஆச்சு?

ஐபிஎம் நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமாகத் தன்னை மறு அடையாளப்படுத்திக் கொண்டது. பயனர் கணினிப் பிரிவை லெனோவோ நிறுவனத்துக்கு விற்று விட்டது. இன்றைக்கு விற்பனையில் ஒரு பெரும் பகுதி சேவைகளிலிருந்து கிடைக்கிறது.

ஆரக்கிள் நிறுவனம் நிறுவன வள மேம்பாட்டு சேவை நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. தரவுத் தளம் மட்டும விற்கும்் நிறுனமாக இருந்து நிறுவனத்துக்குத் தேவையான எல்லா சேவைகளையும் வழங்கும் படி மற்ற சின்ன நிறுவனங்களை வாங்கி உள்வாங்கி சக்கை போடு போடுகிறது.

மைக்ரோசாப்டுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு மேசைக் கணினிகளுக்கு இயங்குதளமும் அலுவலக மென்பொருளும் விற்பதிலேயே நிறைந்து விடும். அதைச் சுற்றிச் சுற்றி மதில்கள் எழுப்புவதிலேயே முழுக்கவனமும் இருப்பது போல தெரிகிறது.

சன் மைக்ரோ சிஸ்டமஸ்் என்ன செய்கிறது?

ஜாவா தொடர்பான சேவைகளில் அதை உருவாக்கிய சன்னை முந்தி விட்டன பிற நிறுவனங்கள். சன் தனது இயங்குதளம் சோலாரிசை ஓப்பன் சோர்சாக வெளியிட்டு விட்டது. லினக்சு முதலான ஓப்பன் சோர்சு மென்பொருட்களுக்கும் ஆதரவு உண்டு.

சோலாரிஸ் கணினிகளின் விற்பனை வளர்ச்சி போதுமானதாக இல்லை. எங்கே போகிறது சன்?

Tuesday, March 11, 2008

வலைப்பதிவு மூலம் புரட்சி

இன்றைய (மார்ச்சு 11, 2008) எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் சென்னை பதிப்பில் 15ம் பக்கம் வெளியாகியுள்ள மைக்ரோசாப்டு நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் லிசா பிரம்மலின் பேட்டிக் கட்டுரையில் தெரியும் தகவல்கள்.
  • 1987ல் மைக்ரோசாப்டு நிறுவனத்தில் 4500 பேர் பணியாற்றினார்கள். இப்போது 85,000 பேர் இருக்கிறார்கள்.

  • உலகெங்கும் இருக்கும் நிறுவன ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருக்க லிசா வலைப்பதிவு ஒன்றில் எழுதுகிறார்

  • தினமும் 1 மணி நேரம் எழுதவும், 3-4 நான்கு மணி நேரம் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிக்கவும் செலவிடுகிறார்.

  • மைக்ரோசாப்டு இந்தியாவில் 5000 பேர் பணிபுரிகிறார்கள்.
கூகுளின் அடித்தாடல் ஆரம்பித்த கட்டத்தில், 2005ல் பொறுப்பேற்ற பிரம்மல், ஊழியர்களை ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்க வைக்கும் forced ranking system முறையை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்.

Monday, March 10, 2008

இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் தன்மை

இன்றைய எகனாமில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள பேட்டியின் படி

  • ஐபிஎம் - இந்தியா இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகள் நிறுவனம்.
  • ஐபிஎம் இந்தியாவில் 73,000 பேர் பணிபுரிகிறார்கள்
  • உலகளாவிய ஐபிஎம் வருமானத்தில் 55% சேவைகளிலிருந்து வருகிறது.
  • 65% வருமானம் அமெரிக்காவுக்கு வெளியிலிருக்கும் சந்தைகளிலிருந்து கிடைக்கிறது

மனித வளம், வாடிக்கையாளர் உறவு, சிறப்பான சேவைகள் இந்த மூன்றும்தான் ஐபிஎம் இந்தியாவுக்கு வழிகாட்டும் நெறிகளாக பின்பற்றப்படுகின்றனவாம்.

“யாரும் தொழில்நுட்பத்தை மட்டும் வாங்குவதில்லை. வாடிக்கையாளர்கள் தொழில் முறை ஆதாயங்களை கணக்கிட்டுப் பார்க்கிறார்கள்.”

(ஐபிஎம் இந்திய துணைத் தலைவர் ராஜேஷ் நம்பியார்).

ஐந்தாவது பக்கத்துக்குப் போகவும

Wednesday, March 5, 2008

தகவல் பரிமாற்றம்

ஒரு நிறுவனத்தில், சமூகத்தில் ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஏன்?

1. என்னிடம் குறிப்பிட்ட திறமை இருக்கிறது என்பது தெரிந்தால்தான் அடுத்தவர்களுக்குத் தேவைப்படும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள என்னை அணுகுவார்கள்.

ஒரு நிறுவனத்தின் பொருளை சேவைகளை விளம்பரம் செய்வது இந்த நோக்கத்தில்தான். பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் இருந்தால்தான் செழிக்கும்.

நிறுவனத்துக்குப் பொருந்துவது தனிமனிதர்களுக்கும் பொருந்தும். நிறுவனத்தில், வீட்டில், சமூகத்தில் நம்முடைய திறமைகளை சரிவர வெளிப்படுத்தி அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தி விட வேண்டும்.

அதற்கு வலைப்பதிவுகள், தெருமுனைக் கூட்டங்கள், கவிதைகள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், ஓவியம் வரைதல் ஏன் நல்ல மென்பொருள் உருவாக்குதல் என்று விருப்பப்பட்ட ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. நான் என் நடவடிக்கைகளை அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தும் போது அதிலிருக்கும் நிறைகுறைகளை எனக்கு தெரிவிப்பார்கள். நான் செய்வதை விடச் சிறப்பாக அவர்களுக்கு வழி தெரிந்தால் அதை நமக்குத் தெரிவிக்க முன்வருவார்கள்.

3. நமது திறமைகள், சாதனைகள், பணிகளுக்கான ஊதியம் அப்போதுதான் நமக்கு வந்து சேரும்.

'திறமையான எழுத்தாளர். உயிரோட்டமுள்ள கதைகளை எழுதினார். கடைசி வரை வறுமையில்தான் வாழ்ந்தார்' என்றால், ஒன்று அவரது திறமையை வெளிப்படுத்த ஊடகம் சமூகத்தில் இல்லை. அல்லது அவரால் அந்த ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

எந்தத் துறையிலும், ஒரு நிறுவனத்தில் பணி புரியும் போது கூட, ஊதிய உயர்வு, பணி முன்னேற்றம் போன்ற எல்லாமே நாம் செய்வது நமது மேலதிகாரிகள், கூட வேலை செய்பவர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

'நான் என் வேலையை நேர்மையாக, கருத்தோடு செய்து முடிப்பேன். பலன்கள் தானாக வந்து சேர வேண்டும்' என்று இருந்து விடாமல், அந்தப் பணியின் பலன்கள் பலருக்கும் போய்ச் சேரும்படி தகவல்களைப் பரவச் செய்ய வேண்டும்.

இதன் மறுபக்கம், மற்றவர்களின் திறமைகளை, பணிகளை, சாதனைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல்.

Tuesday, March 4, 2008

வளத்தை உருவாக்குவோம்

உடலுழைப்புடன் மூலதனம் சேரும் போது உற்பத்தித் திறன் அதிகமாகி தொழிலாளியின் வருமானம் பல மடங்காக உயரும். கணினியைப் பயன்படுத்தி, இணையத்தின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதும் அது போன்று மூலதனம் மூலம் திறனை அதிகமாக்கிக் கொள்வதுதான்.

ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் மூலதனம் இல்லாமல் செயல்பட்டால், திறன் குறைந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாகவே இருக்கும்

தமிழர்களிடையே மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது என்று பார்ப்போம்? மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.

1. அதை வங்கியில் போட்டு வைத்தால், வங்கி தேவைப்படும் தொழில் முனைவோருக்கு அல்லது கடன் வாங்கும் தனிநபருக்கு அளிக்கிறது.
2. மும்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை ஏறி, அந்த நிறுனத்தின் தேவைக்கு அதிக மூலதனம் கிடைக்கிறது.
3. தங்கம் வாங்கினால், அதை விற்கும் மும்பை வணிகர்கள், தங்கச் சுரங்க உரிமையாளர்களிடம் நமது மூலதனம் போய்ச் சேருகிறது.

குஜராத்தில் ஒரு இளைஞர் புதிய தொழில் நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு முதலீடு எங்கிருந்து கிடைக்கும்?

தமிழகத்தில் ஒருவர் புதிய நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு?

கையிலிருக்கும் சேமிப்பைப் பயன்படுத்தி 100 கிராம் தங்கம் வாங்கி வைத்து விட்டீர்கள்.

உங்கள் நட்பு, அல்லது உறவினர் ஒருவர் மளிகைக் கடை நடத்துகிறார். அவருக்கு அந்த 1 லட்சம் ரூபாய்களை மூலதனமாகக் கொடுக்க நீங்களும் அதைப் பயன்படுத்து அவரும் தயாராக இருந்தால், கடைக்குத் தேவையான நவீன கருவி ஒன்றை வாங்கி கடையில் வேலை செய்பவர்களின் திறனை அதிகரிக்கலாம். அந்த அதிகரிப்பின் மூலம் வரும் ஆதாயத்தின் மூலம் உங்கள் முதலீட்டை வட்டியுடன் திருப்பவோ, அல்லது ஆதாயத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு தோறும் தரவோ செய்யலாம்.

தமிழகத்தில் சேமிப்பை மூலதனமாக மாற்றி தொழில் முனைவோருக்கு அளிக்க வங்கிக் கட்டமைப்புகளும் இல்லை, பங்குச் சந்தைகளும் இல்லை, சமூக அமைப்புகளும் இல்லை. இருக்கும் பணத்தையும் மும்பை பங்குச் சந்தைக்கு எடுத்துச் செல்வதில் ஊடகங்கள் தீவிரமாக இருக்கின்றன.

Monday, March 3, 2008

நாய் விற்ற காசு குலைக்குமா! - கும்

வாழ்க்கையின் குறிக்கோள்களை கோடிகளிலும் லட்சங்களிலும அளக்கலாம். ஆனால் குறிக்கோள்களே கோடிகளாகவும் லட்சங்களாகவும் இருக்கக் கூடாது.

உருப்படியான குறிக்கோள்கள் இருந்து அதை எப்படி சரிவர அளந்து, அளவையை தொடர்ச்சியா அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு வகை. அளவையை மட்டும் கருத்தில் கொண்டு அதை எப்படியாவது அதிகரித்துக் கொண்டே இருப்பது இன்னொரு வகை.

அள்ளிக் கொட்டும் பாத்திரமான தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போக வேண்டும். பாத்திரத்தின் அளவு விரிந்து கொண்டே போக வேண்டும் என்பது வளரும் வேட்கை. ஆனால், அந்தப் பாத்திரத்தில் அள்ளிக் கொட்டுவது வெற்றுக் குப்பையாக இருக்க வேண்டுமா, அல்லது உணவாக்கும் தானியங்களாக இருக்க முடியுமா?

தானியங்களை விளைவிக்கும் விவசாயியிடம் சரியான அளவுப் பாத்திரம் இல்லாமல் விளைச்சலை சரிவர பங்கிடாமல் போனால் விவசாயி அழிந்து போவான். அளவுப் பாத்திரத்திலேயே கவனம் செலுத்தி எதை அள்ளிப் போடுகிறோம் என்று கவனிக்காமல் செயல்படுபவர்களின் கதி அதை விட மோசமாக அல்லவா இருக்கும்.

தினமும் மேலும் மேலும் அதிக முயற்சிகள். அதிக சுமைகளை சுமத்தல். ஆனால், மனதில் நிறைவு இருக்காது. வெற்று வாழ்க்கையாகப் போய் விடும்.

அளவைகள் மட்டும் வாழ்க்கை இல்லை. பணம் என்பது ஒரு அளவை. அது மட்டும் வாழ்க்கை இல்லை. அது எதை அளக்கிறது என்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் நாம் செய்யும் பணிகளின் மதிப்பைக் காட்டுவது பணம். மாறுகோளாக, பணம் என்பது வாழ்க்கையின் மதிப்பைக் காட்டுவதில்லை

Wednesday, February 27, 2008

முதலீடும் முன்னேற்றமும்

அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்.

கடந்த அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள் இரண்டு மடங்காகி விட்டது.

புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.

நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.

டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.

அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.

கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும். குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.

வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்று இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.


புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.

Sunday, February 24, 2008

யாருக்கு மூலதனம்?

மூலதனத்தின் சக்தி வெறும் கையால் கிணறு தோண்டுவதற்கும், மண்வெட்டி ஒன்றைப் பயன்படுத்துவதற்கும், மின்சார துளை போடும் கருவியைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுதான். முதல் முறையில் மூலதனம் எதுவுமே இல்லை, இரண்டாவது முறையில் 200 ரூபாய் மூலதனம், மூன்றாவது முறையில் 20000 ரூபாய் மூலதனம்.

மூலதனம் சேரும் போது ஒருவரது உழைப்பின் வெளிப்பாடு பல மடங்கு அதிகரித்து விடுகிறது. முதல் முறையில் ஆறு மாதங்கள் கையால் தோண்டியும் கிணறு தோண்டி முடிக்க முடியாமலே போய் விடலாம். இரண்டாவது முறையில் ஓரிரு மாதங்களில் தண்ணீர் பார்த்து விடலாம். மூன்றாவது முறையில் சில நாட்களிலேயே வேலை முடிந்து விடும்.

மூன்றாவது முறையில் வேலை செய்யும் தொழிலாளியின் உற்பத்தி திறன் அதிகமாவதால் வருமானமும் அதிகமாகி விடும். மூலதனம் உழைப்புடன் சேருவதால் ஏற்படும் பலனில் மூலதனத்தின் விலையைக் கொடுத்த பிறகு கூட தொழிலாளியின் வருமானம் பல மடங்கு அதிகமாகும் சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒரு சமூகத்தின் சேமிப்பை மூலதனமாக பயன்படுத்த, எடுத்துக் கொள்ள முடியும் ஒருவர்தான் மிகவும் சக்தி வாய்ந்தவர். அனில் அம்பானி சந்தையில் மூலதனம் திரட்ட வந்ததும் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணம் திரட்ட முடிவது அவரது கையைப் பலப்படுத்துகிறது. அந்தப் பணத்தை வைத்து அவர் நாட்டின் விளைபொருட்களை, மற்றவர்களின் உழைப்பை தனக்குத் தேவையான திசையில் திருப்பி விட முடிகிறது.

'நாம் சேர்த்த எல்லா வளமும் இந்த சமூகத்திலிருந்துதான் வந்தது, அதனால் நம்மிடம் சேரும் வளங்களை சமூகத்துக்கே திருப்பிக் கொண்டு போக வேண்டும்' என்பது டாடா குழுமத்தின் அடிப்படை கொள்கையாக இருந்து வருகிறதாம். இந்த சமூக அமைப்பும், சந்தைகளும் சட்ட திட்டங்களும் இல்லா விட்டால், ஒரு தனிநபரது கடின உழைப்பு அவரது வயிற்றை நிரப்பக் கூட போதாத அளவில்தான் இருந்து வரும்.

அதற்கு மேல் சம்பாதிக்க முடியும் பணம் அனைத்துமே சமூகக் கூட்டமைப்பின் மூலம் கிடைப்பதுதான். இந்தக் கூட்டமைப்பின் பலன்களை கூட்டமைப்புக்கே பயன்படும்படி செய்ய வேண்டும் என்று உருவாவதுதான் பொதுவுடமை தத்துவங்கள்.

Thursday, February 21, 2008

பணம் கொடுக்கும் முறைகள் -1

வாங்கல் விற்றலில் பணம் கைமாறும் முறைகள் பல வகைப்படும். வாங்குபவர், விற்பவர்களில் யாரின் கை ஓங்கி இருக்கிறது, யாரின் நம்பகத்தன்மை அதிகம் என்பதைப் பொறுத்து அவை மாறுபடும்.

பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு. வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.
  • பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து விடும் என்ற நிம்மதி விற்பவருக்கு.
  • பொருளைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி வாங்குபவருக்கு.
ஊர் விட்டு ஊர் விற்கும் போது நாடு விட்டு நாடு போகும் ஏற்றுமதி வணிகத்தில் பொருளும் பணமும் எப்படி கைமாற வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
  1. முழுத் தொகையும் முன்பணமாக அனுப்பிய பிறகு பொருள் அல்லது சேவை அனுப்பி வைக்கப்படும்
    பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சந்தைப் போட்டி அதிகம் இல்லாத பொருள் அல்லது சேவை வாங்க ஒரு புது வாடிக்கையாளர் அணுகினால் 'பணத்தைக் கட்டி விட்டுப் பொருளை எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி விடலாம்.
    இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் போது கடனட்டை மூலம் பணம் விற்கும் நிறுவனத்தின் கணக்குக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் பொருளை அனுப்பவே ஆரம்பிப்பார்கள்.
    முன்பணமாக வரைவோலை வாங்கி அனுப்பினால்தான் புத்தகங்கள் அனுப்பி வைப்பேன் என்று பதிப்பகங்கள் இருக்கின்றன.

  2. 'பொருளைத் தயாரித்து பொதிந்து வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன் (லாரியில், ரயிலில், கப்பலில், வானூர்தியில்). போக்குவரத்து நிறுவனம் கொடுத்த சீட்டைக் காண்பித்தால்தான் பொருளை விடுவிக்க முடியும். வங்கி மூலம் அந்தச் சீட்டை அனுப்பி, காசைக் கொடுத்து விட்டுப் பொருளை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்பது அடுத்த நிலை.
    இதில் வாங்குபவருக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். மூன்றாவது நிறுவனம் ஒன்றின் கையில் பொதியப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பணம் கை விட்டுப் போய் விட்டாலும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் போகிறது.
    தபால் மூலம் பொருளை அனுப்பி விட்டு தபால்காரரிடம் காசைக் கொடுத்து விடுமாறு நடக்கும் விபிபி முறையும் இது போலத்தான்.

  3. மேலே சொன்னதில் ஒரு பெரிய ஓட்டை, பொதியுள் என்ன இருக்கிறது என்று தெரிய முடியாமல் இருப்பது. விற்பனையாளர் டிரான்ஸிஸ்டர் வானொலி என்று சொல்லி அனுப்பியதைத் திறந்து பார்த்து உள்ளே செங்கற்கள் இருந்தால் வாங்கியவரின் பணம் போனது போனதாகி விடும்.
    அதனால் வாங்குபவர் தனது வங்கி மூலம் உத்தரவாதக் கடிதம் ஒன்றை அளித்துக் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விற்பவருக்கு நம்பிக்கை அளிக்கலாம்.

    வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு கடன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா ஆவண ஆதாரங்களையும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் வாங்குபவரின் வங்கி பணத்தைக் கொடுத்து விடும்.

    ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், பொதி விபரங்கள் விளக்கமாக தரப்பட வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து பணம் கைவிட்டுப் போகும் முன் கப்பலில் ஏற்றி விடப்பட்ட பொருள் தாம் எதிர்பார்ப்பது போன்ற தரம் மற்றும் அளவுடன் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு ஆவணம் கப்பலில் அல்லது வானூர்தியில், அல்லது லாரியில் ஏற்றி அனுப்பிய ஆவணம்.

    இப்படி விற்பவர் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அவற்றுக்கான ஆவணங்களை காண்பித்து விட்டால் வங்கிப் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.

    'பொருளும் போய்ப் பணமும் வரா விட்டால் என்ன செய்வது? பொருளை அவ்வளவு செலவில் வெளி நாட்டுக்கு அனுப்பிய பிறகு வாங்குபவர் பணத்தைக் கொடுத்துப் பொருளை எடுத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வது' போன்ற விற்பவரின் கேள்விகளுக்கும் பொருத்தமான விடை கடன் கடிதங்கள்.

  4. நான்காவதாக கடன் கடிதத்தில் பொருளை எடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வங்கி பணம் கொடுப்பதாக உறுதி தரும் முறை. இதில் ஆவணங்களை நிபந்தனைப் படி தயாரித்து சமர்ப்பித்த 30 அல்லது 60 நாட்களுக்குப் பிறகு வாங்கியவரின் வங்கி பணத்தை விற்பனையாளருக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளிக்கிறது.

  5. அடுத்ததாக எந்த கடிதமும் இல்லாமல், போக்கு வரத்து நிறுவனத்திடமிருந்து பொருளை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணத்தை வாங்கியவரே செலுத்தி விடுதல். இதில் விற்பவருக்கு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகம். வாங்குவது பேர் பெற்ற நிறுவனமாக இருந்தாலோ, இரண்டு நிறுவனங்களுக்கிடையே நீண்ட நல்லுறவு நிலவும் போதோ இத்தகைய பணம் கொடுக்கும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
என்னதான் நிபந்தனைகள் விதித்தாலும் வாடிக்கையாளருடனான நல்லுறவுதான் பணத்தை வாங்க முடிகிற உறுதியான வழி. மற்ற வழிகள் எல்லாம் ஒரு பேருக்கு, திருப்தியளிக்கத்தான்.

Wednesday, February 20, 2008

பணம் என்னடா பணம் - 2

எல்லோருக்கும் தேவைப்படும், எந்த நேரத்திலும் எளிதில் வாங்கவோ விற்கவோ முடியும் ஒரு பொருளை இடைப் பொருளாக வைத்துக் கொண்டால், மேலே சொன்ன இரண்டு இக்கட்டுகளையும் களைந்து பரிமாற்றங்களை எளிதாக்கி விடலாமே என்று யாருக்கோ தோன்றியிருக்கும்.

எதை வைத்துக் கொள்ளலாம்? சீக்கிரம் கெட்டுப் போகாத பொருளாக இருக்க வேண்டும். அலகுகளாக எண்ணிப் பிரிக்கும் படி இருக்க வேண்டும். கையில் எடுத்துப் போகும் படி இருக்க வேண்டும்.

ஆடு மாடுகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட தோல், ஏன் கிளிஞ்சல்கள் கூட நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டனவாம்.

ஆடு பரிமாற்ற செலாவணியாக பயன்படுத்தப்பட்டால் என்ன நடந்திருக்கும்?

விளைச்சல் முடிந்து விவசாயியின் கையில் நெல் இருக்கிறது. நெல் தேவைப்படும் உணவு விடுதிக்கு நெல்லைக் கொடுத்து 50 ஆடுகளை வாங்கிக் கொள்கிறார்.

நெசவாளரிடம் போய் துணிகள் வாங்கிக் கொண்டு 10 ஆடுகளை விலையாகக் கொடுத்து விடுகிறார்.

நெசவாளர் குடும்பத்துக்குத் தேவையான தச்சு வேலை செய்பவருக்கு 1 ஆடு கிடைக்கிறது.
தச்சர் சாப்பிட போது அந்த ஆட்டைக் கொடுத்து சாப்பாடு பெறுகிறார்.

இதே போல் தானியங்கள், தோல்கள், கிளிஞ்சல்கள் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒவ்வொன்றிலும் குளறுபடிகள்.

தானியத்தை பயன்படுத்தினால் அளப்பதற்கு கொள்ளளவிகள் தேவை. அவற்றின் தரம் அளவு நிர்ணயிப்பதில் சிக்கல்கள் வரும்.

ஆடு செத்துப் போனால் என்ன ஆகும்? அதனால் வயதான ஆட்டை பணமாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.

இதற்கும் ஒரு தீர்வு வந்தது.

பணம் என்னடா பணம்? - 1

பணம் என்றால் என்ன?

நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.

எனக்கு முடி வெட்டிக் கொள்ள வேண்டும், அதை செய்யும் கலைஞரின் உழைப்புக்கு மாறாக நான் அவருக்கு எனது உழைப்பை வழங்க வேண்டும். என்ன செய்யலாம்?

அவரது கடைக்கு நல்ல விளம்பரமாக அமையும்படி ஒரு வாசகத்தை உருவாக்கி, கணினியில் உள்ளிட்டு அழகாக அச்சடித்துக் கொடுக்கலாம். அதை கடைக்கு முன்பு கட்டிக் கொண்டால் இன்னும் பலர் கடைக்கு வருவதால் அவரது வருமானம் அதிகமாகலாம்.

இந்த முறைக்குப் பெயர் பண்ட மாற்று.

எனக்குத் தேவையான சேவை அல்லது பொருளைத் தேடிப் போகும் போது அதை கொடுக்க கூடியவரைக் கண்டு கொண்டால் மட்டும் போதாது. அவரது பணிக்கு மாறாக அவருக்குத் தேவையானதைக் கொடுக்க என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஏற்கனவே கடையில் நல்ல விளம்பரப் பலகைகள் இருந்தால் எனது கணினித் திறனின் சேவை அவருக்குத் தேவைப்படாமல் போய் விடும்.

இரண்டாவதாக, 'ஒரு முடி வெட்டுக்கு இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா' என்று நான் நினைக்கலாம். 'ஒரு முடி வெட்டுக்கு நான்கு தட்டிகள் தர வேண்டும்' என்று கடைக்காரர் சொல்லலாம். இப்படி பேரம் பேசுவதும் சிக்கலாகிப் போய் விடும். 'இதே போன்ற தட்டியை போன வாரம் ஒரு பெரிய உணவு விடுதிக்குச் செய்து கொடுத்து மாற்றாக அவர்களது விடுதி அறையில் நான்கு நாட்கள் தங்கும் வசதியைப் பெற்றதுடன்' ஒப்பிட்டால் இந்த முடி வெட்டுக்கு ஒரு தட்டி என்பது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.

பண்ட மாற்று முறை மட்டும் இருந்தால் இது போல பொருளின், சேவையின் மதிப்பு வாங்குபவர்களின் தேவை, விற்பவரின் விலை மட்டும் சார்ந்திராமல், மாற்றுப் பொருளுக்கான விலை, செலவு என்று நான்கு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

இப்படித்தான் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் பொருட்களை, சேவைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது உணர்ந்திருப்பார்கள்.

Tuesday, February 19, 2008

அமெரிக்காவுக்கு சளி பிடிச்சா....

அமெரிக்கப் பொருளாதாரத்தின் தடுமாற்றங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
  1. அமெரிக்காவில் வட்டி வீதங்கள் ஒரே மாதத்துக்குள் 1.25% குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் வங்கி வட்டி வீதங்கள் மாற்றமின்றி உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன. இதனால் தமது சேமிப்பை வங்கியில் போட்டு வைக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்குள் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ள பிற முதலீட்டாளர்கள் டாலர்களை ரூபாயாக மாற்றி இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிப்பார்கள்.

    இதனால் டாலரின் மதிப்பு குறையும்படியான தாக்கம் ஏற்படும்.

  2. அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாக மாறுவதும், வீடுகளின் விலைச் சரிவை ஒட்டி அவர்களின் சொத்து மதிப்புகள் குறைவதும் நடக்கப் போகின்றன. அடிப்படை இல்லாமல் உயர் நிலையில் இருந்த மதிப்புகளைச் சார்ந்து திரட்டிய பணத்தை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து வைத்திருந்த நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றுப் பணமாக மாற்றும் கட்டாயம் ஏற்படும்.

    அந்தப் பணத்தை டாலராக மாற்றி எடுத்துச் செல்வதால், மூலதனச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரிக்கும்படியான தாக்கம் இருக்கும்.

  3. அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் குறைந்து, தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்க ஆரம்பிக்கின்றன. வீடுகளில் முதலீடு செய்திருப்பவர்களின் கடன் வாங்கும் திறனும் குறைந்து விடும். இதனால் குடும்பங்களின் வாங்கும் திறன் குறைந்து அமெரிக்க பொருளாதாரத்தில் விற்பனைகள் குறையும். இதனால், அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதும் குறைந்து போகும்.

    இதனால் வர்த்தகக் கணக்கில் டாலரின் மதிப்பு அதிகமாகும்படியான தாக்கம் இருக்கும்.

  4. உள்நாட்டில் தேவைக் குறைவை ஈடு கட்ட, சரிந்து வரும் டாலரின் மதிப்பினால் கிடைக்கும் விலை ஆதாயத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டில் தமது பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதால் அமெரிக்காவின் ஏற்றுமதி அதிகரிக்கும்.

    இதனாலும் டாலரின் மதிப்பு அதிகமாகும்.

  5. அமெரிக்காவில் செலவினங்கள் குறைந்து, மலிவான விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். வேலைச் சந்தையில் சம்பள வீதங்கள் குறையும். அலுவலக வாடகைகள் குறையும். மூலப்பொருட்கள் விலை குறையும்.

    இதனால் அமெரிக்க ஏற்றுமதி பெருகும்.
மொத்தத்தில், சில மாதங்கள் நோக்கில் டாலரின் மதிப்பு குறையும்படியாகவும் (36 ரூபாய்கள்), ஒரு ஆண்டுக்குள் 40 ரூபாய் அளவுக்குப் போவதாகவும் இருக்கலாம்.

இந்த கணிப்பு அமெரிக்கப் பொருளாதாரக் காரணிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டது. இதே போன்று இந்தியப் பொருளாதரத்தின் வளர்ச்சி வீதம், வங்கி வட்டி வீதங்கள், ஏற்றுமதி/இறக்குமதி, உள்நாட்டு தேவை இவற்றைப் பொறுத்து இந்திய ரூபாயின் மதிப்பின் மீதான தாக்கங்களும் செலாவணி மதிப்பைத் தீர்மானிக்கும்.

இதனால் தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன மாறுதல்கள் நடக்கும்?

அமெரிக்க நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க முயற்சிக்கும் நோக்கில் தகவல் தொழில் நுட்பத்தை இன்னும் அதிகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் தனி நபர்களைப் பொறுத்த வரை மின்னணு சாதனங்களை வாங்குவது குறைந்து இது சார்ந்த தேவைகள் குறையும்.

அப்படி அதிகமாகும் தகவல் தொழில் நுட்பச் சேவை தேவைகளை வழங்குவதற்கு இந்தியாவில் செலவு குறைவு என்பது மாறியிருக்கும். அமெரிக்காவில் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளை இழக்கும், தொழில் நுட்ப தொழிலாளர்களின் சம்பளங்கள் குறைந்து திட்டப்பணிகளை இந்தியாவுக்கு அனுப்பிச் செய்யாமல் அமெரிக்காவிலேயே செய்து கொள்வது அதிகரிக்கும்.
  • இதனால், இந்தியாவில் இருந்து இயங்கும் வெளிச் சேவை நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் அளவுகள் குறையும்.
  • அமெரிக்காவில் செய்யப் போகும் திட்டப்பணிகளுக்குத் தேவைப்படும் இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் அமெரிக்காவுக்குப் போக வேண்டிய தேவைகள் அதிகமாகும்.
  • இந்தியச் சந்தையில் தகவல் தொழில் நுட்பக் கருவிகள் சேவைகள் விற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது தொடர்பான விற்பனைத் துறை மேலாளர்கள், சேவைத் துறை மேலாளர்கள் போன்ற பணிகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.
மொத்தத்தில், ஆரம்ப நிலை பணிகள், அதிகம் திறனை தேவைப்படாத பணிகளுக்கான வேலைகள் இந்தியாவில் குறைந்து விடும். உயர் திறமை பணிகளுக்கான வல்லுனர்கள் அமெரிக்கா போக அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

இதை எப்படி எதிர் கொள்ளலாம்?

சிறிய நடுத்தர அளவு மென்பொருள் நிறுவனங்கள், உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான மென்பொருள் சேவைகளில் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

கல்லூரி மாணவர்கள் தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் உருவாக்கம் தொடர்பான திறமைகளுடன் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் (கணக்கியல், உற்பத்தி, விற்பனை, மேலாண்மை) புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Wednesday, February 13, 2008

படைப்பாளிகள்

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10 செகண்டுகளுக்குள் ஓடி முடித்து ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வெல்லும் வீரர் அந்த பத்து விநாடிகள் மட்டும்தான் உழைத்தாரா?

பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் தினமும் மனம் குவித்து பயிற்சி செய்து, பொருத்தமான உணவு உண்டு, தூக்கத்தை மட்டுப்படுத்தி, மற்ற கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பதைக் குறைத்து செய்த முயற்சிகளின் விளைவுதான் இந்த பத்து விநாடிகளின் சாதனை.

ஒவ்வொரு துறையிலும் அது போன்ற உழைப்பும் சாதகமும் இருந்தால்தான் உலகை வெல்ல முடியும். ஒரு
ப சிதம்பரத்தையோ, மு கருணாநிதியையோ எளிதாக குறை கூறி விட்டுப் போய் விடுகிறோம். அவர்களுக்கு இருக்கும் பொறுப்பு எவ்வளவு பெரியது. பங்குச்சந்தையில் குறியீட்டு எண் மதிப்பு குறைந்து விட்டால் நிதியமைச்சருக்கு ஏன் பதறுகிறது என்று கேட்கிறோம்?

இன்ஃபோசிஸ் நிறுவனம் பெருமைப்படுத்தப்பட் கூலி வேலைதான் செய்கிறது என்று இடது கையால் ஒதுக்கித் தள்ள முயல்கிறோம். எத்தனை ஆண்டுகள் உழைப்பும் கருத்தும் கவனமும் உருவாக்கிய நிறுவனம் இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உலகுக்கே சேவைப் பொருளாதாரம் என்று நம் ஊரில் வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது.

ஒரு அம்பானி/டாடா உருவாக்கிய நிறுவனம் போல, பில்கேட்சின் மைக்ரோசாப்டு போல, லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகை உலுக்கும் ஆக்கங்களை எப்போது படைக்கப் போகிறோம்

இதற்குத் தேவை தனி மனித முயற்சியும் உழைப்பும், கூட்டாக சமூகத்தின் ஒருங்கிணைப்பும்.

ஜாம்ஷெட்பூர் என்ற ஒரு நகரையே உருவாக்கிக் காட்டிய டாடா போன்ற கனவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது. உலகத் தரத்தில் கட்ட வேண்டும் என்று உறுதியுடன் இருந்து, அரசு சட்டங்கள் வரும் முன்னரே தொழிலாளர்களை நிறுவனத்தின் சொத்துக்களாக மதித்து சம்பள விகிதம், பணி நேரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்திய டாடா போன்ற பெரிய படைப்பாளிகள் நம்மில் எப்போது வரப்போகிறார்கள்!

அதற்கு என்னென்ன தேவை?

Saturday, February 9, 2008

சேமிப்பும் முதலீடும்

ஒரு சமூகத்தில் சேமிப்பும் முதலீடும் சமமாக இருக்க வேண்டும். ஒருவரின் சேமிப்பு இன்னொருவருக்கு மூலதனமாக பயன்படும்.

பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் அதில் 8000 ரூபாய் செலவழிக்கிறார். செலவழித்து அவர் வாங்கிய பொருள், சேவை செய்தவர்கள் கையில் அந்தப் பணம் போகிறது. அவர்கள் வேறு வழியில் செலவழிக்கிறார்கள். இப்படி சுற்றி வந்து முதல் ஆள் 10000 ரூபாய் ஈட்டிய பணியில் விளைந்த பொருள்/சேவையும் வாங்கப்பட்டு விடும்.

எல்லாமே மனித உழைப்புதான். 10000 ரூபாய் ஒருவருக்கு சம்பளம் என்றால் அவரது பணியால் விளைந்த மதிப்பு 10000 ரூபாய்கள். தன் உழைப்பை பணமாக மாற்றிக் கொண்டு விட்டார். அந்த உழைப்பைச் செலவாணியாகப் பயன்படுத்தி சமூகத்தின் பிற உறுப்பினர்களின் உழைப்பை தனக்குப் பிடித்தவாறு திருப்பி விடும் உரிமையைப் பெறுகிறார்.

கொஞ்சம் இருங்க, இவரே 8000ம்தானே செலவழித்தார், மீதி இரண்டாயிரம் ரூபாய் என்னவாகும்? அந்த மதிப்பிலான பொருள்/சேவை தேங்கி விடாதா?

விடும்தான், ஒரு பழக்கம் இல்லாவிட்டால். சேமிப்பவர் தனது சேமிப்பை வங்கியில், அல்லது பங்குச் சந்தையில் அல்லது சொத்து வாங்க போடுகிறார். அவரைப் பொறுத்த வரை வருமானத்தில் ஒரு பகுதியை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்துக்கு ஒதுக்கி வைத்து விட்டார்.

அந்தச் சேமிப்புப் பணத்தை கடனாக இன்னொருவர் பெற்று முதலீடு செய்கிறார்். அதை எதிர்கால உற்பத்தியை பெருக்கும் மூலதனமாகப் பயன்படுத்தினால், வளர்ச்சியும் கிடைக்கும்.

அதாவது, முழுதாக உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட்டால் அது சேமிப்பு. அந்தச் சேமிப்பை இன்னொருவர் எடுத்து மூலதனமாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

எந்தத் துறையில் முதலீடு நடக்க வேண்டும்? யார் மூலம் முதலீடு நடக்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை காண்பது ஒரு அடிப்படையான சிக்கல்.

சோவியத் போன்ற திட்டமிடும் பொருளாதாரங்களில் சில அறிவாளிகளைக் கொண்ட குழு கூடி முடிவெடுக்கும். இரும்பு உற்பத்தித் துறைக்கு இவ்வளவு மூலதனம், வானூர்தி உற்பத்தி துறைக்கு இவ்வளவு மூலதனம், கல்லூரி கட்ட இவ்வளவு மூலதனம் என்று முழு பொருளாதாரத்துக்கும் இந்தச் சின்னக் குழு திட்டமிட்டு விட வேண்டும்.

நடைமுறையில் சாத்தியமில்லாத நடைமுறை அது, அந்தப் பொருளாதாரங்கள் மண்ணைக் கவ்வியதன் ஒரு முக்கிய காரணம் முழுமையாக திட்டமிடல் மூலமே பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முயன்றது.

சந்தைப் பொருளாதாரத்தில், சேமிப்பாக சேரும் பணத்தை மூலதனமாகப் பெறுவதற்கு போட்டி நடக்கும். 'எனக்கு இவ்வளவு பணம் தந்தால் ஒரு ஆண்டு கழித்து 10% அதிகமாக திரும்பத் தருகிறேன்' என்று ஒருவர் சொல்வார். அவருக்கு தான் முதலீடு செய்யப் போகும் தொழில் வளர்ந்து பலன் தரும் என்று நம்பிக்கை. இன்னொருவர் 12% தர தயாராக இருக்கலாம். யார் அதிக விலை (வட்டி) கொடுக்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு மூலதனம் கிடைக்கும்.

வட்டி வீதத்தை விட முதலீடு திரட்டுபவரின் திறமையையும் தொழில் நிலவரத்தையும் பார்க்க வேண்டும். ஒரு ஆண்டில் இரட்டித்துத் தருகிறேன் என்று சொல்லி விட்டு ஆறே மாதத்தில் ஆளே காணாமல் போய் விடுகிறவரை விட ஒரு ஆண்டுக்குப் பிறகு 10% கூட்டித் தருவதாகச் சொல்லி விட்டு அசலையும் வட்டியுடன் திருப்பி தருபவருக்குத்தான் கொடுப்போம்.

மாடு வாங்குவதற்கு நண்பரிடம் கடன் வாங்கும் விவசாயி செய்யும் முதலீடு ஆரம்பித்து, வங்கிக் கடன்கள், கடன் பத்திரச் சந்தைகள், பங்குச் சந்தைகள், தனியார் பங்கு முதலீடு, டெரிவேட்டிவ் எனப்படும் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு முறைகள் என்று எல்லாவற்றின் அடிப்படையும் 'சேமிப்பு யாருக்குப் போய்ச் சேர வேண்டும், எந்த விலையில் போய்ச் சேர வேண்டும்' என்று தீர்மானிப்பதுதான்.