Saturday, December 19, 2009

கட்டுப்பாடுகளும் சுதந்திரமும்

நீக்கப்பட்டது (மிகவும் எதிர்மறையான கருத்துக்கள்!!)

Friday, August 7, 2009

பங்குச் சந்தையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய

நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததே இல்லை. என்னுடைய கருத்துக்கள் எல்லாம் படித்தறிவில் வந்தவைதான். அதை மனதில் வைத்துக் கொண்டு புரிந்து கொள்ளுங்கள் :-)

1. முதலீடு செய்ய விரும்பும் நிறுவனத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளுங்கள். யார் அதை ஆரம்பித்தார்கள், தற்போதைய உரிமையாளர்கள் யார் யார், நிர்வாகிப்பது யார், அந்தத் துறை எப்படி வளர்கிறது, துறையில் இந்த நிறுவனத்துக்கு எவ்வளவு சந்தைப் பங்கு என்று புரிந்து கொள்ளுங்கள்.

புரியாத நிறுவனத்தில் பங்கின் விலை ஏற்ற இறக்கங்களை வைத்து மட்டும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆண்டு தோறும், காலாண்டுகள் தோறும் வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளை படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். Balance Sheet‌ ல் இருக்கும் ஒவ்வொரு விபரமும் புரிவது வரை அந்த நிறுவனத்தைப் பற்று உங்களுக்குத் தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

2. குடும்பத் தேவைகள், எதிர்கால சேமிப்பு, குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள் இவை எல்லாவற்றுக்கும் பணம் ஒதுக்கியது போக எஞ்சிய பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒதுக்குங்கள்.

3. ஒரே நிறுவனத்தின் பங்குகளை வாங்காமல், மேலே சொன்ன மாதிரி ஆய்வு செய்து 4-5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விட்டு தீர்மானித்த அளவில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளில் பணம் சம்பாதிக்க முயற்சிக்காமல், நீண்ட காலம் வைத்திருந்து முதலீட்டை வளர்க்க முயற்சிக்கலாம். 4,5ல் ஒன்று இறங்கினாலும் மற்றவை ஏறும்படி இருக்க வேண்டும்.

4. ஏதாவது நிறுவனம் முழுவதுமாக சறுகிப் போகிறது என்று தோன்றினால் (சமீபத்திய சத்தியம்) அதை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு வேறு நிறுவனத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

Friday, May 22, 2009

களை எடுத்தல்

மென்பொருள் பயன்பாட்டில் வேறு யாரோ உருவாக்கிய நிரலில் பிழை திருத்துவது சிக்கலான வேலை. சரியான ஆவணம் இருந்தால் வேலை எளிதாக இருக்கும்.

ஒரு அனுபவம்.

ஒவ்வொரு செய்கையிலும் என்னென்ன நடக்கிறது, எந்த அட்டவணையில் தரவு உள்ளிடப் படுகிறது, உள்ளிட்டதும் என்ன விபரம் புதிதாக உருவாகிறது (primary key), குறிப்பிட்ட அட்டவணையில் என்னென்ன விபரங்கள் இன்னொரு அட்டவணையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது (foreign key) என்று புரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் மூன்றே மூன்று நிரல் கோப்புகளில் ஆறு அட்டவணைகளில் தரவு சேமிக்கப்படுகிறது.

இதை என்ன வடிவத்தில் ஆவணப்படுத்துவது என்று உருக்கொடுக்க வேண்டும். முதலில் தாளில் எழுத ஆரம்பித்தேன். அதை எங்கு சேமிப்பது, எப்படி பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் இருக்கும் சிக்கல். அடுத்தபடியாக ஒரு உரைக்கோப்பில் அட்டவணை விபரங்களை நகல் செய்து ஒட்டிக் கொண்டேன். அதைப் பார்த்தால் விபரம் எதுவும் தெளிவாக தெரிந்து விடப் போவதில்லை

ஒரு விரிதாளில் ஒவ்வொரு அட்டவணைக்கும் ஒரு வரி, அதனுடன் இணையும் அட்டவணைகள், இணைக்கும் விபரம் இவற்றைக் குறிப்பிட்டு க் கொள்ளலாம் என்று ஆரம்பித்தால், கொஞ்சம் தெளிவு ஏற்பட ஆரம்பித்தாலும் புதிதாகப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளும்படி இல்லை. ஒரு கதை படிப்பது போல அமைய வேண்டும். அடுத்த விரிதாளில் நடவடிக்களை, சேமிக்கப்படும் அட்டவணை விபரம், நிரல் கோப்பு, சுட்டியின் பெயர் என்று ஒரு வடிவம் கொடுத்தேன். இரண்டாவது நெடுவரிசையில்தான் முக்கியமான விபரங்கள் எல்லாம் இருக்கும்.

முதல் வரியில் அட்டவணையின் பெயர், இரண்டாவது வரியில் அதில் சேமிக்கப்படும் விபரம் சுருக்கமாக, மூன்றாவது வரியில் அது உருவாக்கும் keyன் பெயர் -> என்ற குறியீட்டுடன், அடுத்தடுத்த வரிகளில் அது இணைத்துக் கொள்ளும் அட்டவணை மற்றும் key பெயர்கள். key பெயர் <- அட்டவணை பெயர் என்ற வடிவம் கொடுத்தேன். மிகவும் நிறைவாக தெளிவாக வந்து விட்டது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர வேலையின் முடிவு அரைப்பக்க அளவில் சுருக்கமாக அமைந்து விடும்.

எதையும் சுருக்கமாகச் சொல்வதற்குத்தான் அதிக முயற்சி தேவைப்படுகிறது. வளவளவென்று நீளமாக எழுதிக் கொண்டே போவதற்கு திட்டமிடலோ, கட்டுப்பாடோ தேவையில்லை. அதன் வெளிப்பாடும் பார்ப்பவர்களுக்கு பலனுள்ளதாக இருக்காது. இன்னொரு நெடுவரிசையில் இந்த நடவடிக்கைகளால் வேறு எந்த அட்டவணையில் தரவு தானாக உள்ளிடப் படுகிறது, அதைச் செய்யும் இயக்கியின் பெயர் என்ன என்ற விபரத்தையும் குறித்துக் கொண்டேன்.

பயனர் கொடுத்த விபரங்களை வைத்து தரவுகளை சரி பார்த்தல். எல்லாமே சரியாகத்தான் இருந்தது. கடைசிக் கட்டத்தில் விபரங்களை எடுத்துக் கணக்கிட்டு காண்பிக்கும் இடத்தில் உதைப்பது போலத் தெரிந்தது. ஒவ்வொன்றாக தரவுத்தள வினாக்கள் எழுதி எழுதி இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு முனைகளிலிமிருந்து வினா எழுப்பி வரும் விடைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சரியாகத்தான் இருந்தது. கணக்கிடுதலின் கூறுகளை தனியாகப் பிரித்துப் பார்த்தால் சரியாக வந்தது. சேர்த்து கணக்குப் போடும் கூட்டுத் தொகையில் தேவையில்லாத தொகுப்புகள் நடக்கின்றன என்று புரிந்தது.

ஒவ்வொரு தரவாக எடுத்து கணக்குப் போடாமல், எல்லாவற்றையும் ஒரே தொகுப்பாக கணக்குப் போடும்படி இயக்கியில் எழுதியிருந்தார்கள். அதை சரிபார்ப்பதற்கு இன்னொரு தம் பிடிக்க வேண்டும். எல்லா சிக்கல்களையும் அவிழ்ப்பதற்கு அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது எளிமையான வழி.

கிரிக்கெட்டில் ஓடி வரும் பந்தைப் பிடிக்க ஒற்றைக் காலை மடக்கி பந்தை நோக்கி இருக்குமாறு ஒற்றைக்காலில் மண்டியிட்டு அந்தக் காலுக்கு முன்பு கையை வைத்து எதிர் கொள்ள வேண்டும். இரண்டு கால்களுக்கு நடுவில் குனிந்து கைகளை குவித்து நின்றால் கை தவறினால், கையைத் தாண்டிக் கொண்டு போனால், திரும்பி ஓட வேண்டியிருக்கும். முதல் முறையில் கை தவறினால் காலில் பட்டு நின்று விடும். முதல் முறையில் முதுகெலும்புக்கும் அழுத்தம் குறைவாக இருக்கும். எழுந்து ஓடுவதற்கும் சரியான கோணத்தில் இருப்போம்.

அந்த அடிப்படைகளை மறந்து மேல் நிலைகளில் யோசித்துக் கொண்டே இருந்தால் சிக்கல் அவிழாது. மின் கருவிகளில் பழுது, கணினியில் சிக்கல் என்று பார்க்கப் போகும் போது முதலில் மின்சார இணைப்பு சரியாக இருக்கிறதா என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். சுவிட்சு போடப் பட்டிருக்கிறதா என்று பார்ப்பது அதில் முதல் படி.

இணைய இணைப்பு இயங்கவில்லை என்றால், முதலில் நமது கணினியில் வலையமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு அருகில் இருக்கும் கணினியுடன் தொடர்பு கொள்ள முடிகிறதா என்று தட்டிப் (ping செய்து) பார்க்க வேண்டும். அது சரி என்றால் நமது கணினி வலையமைப்பு சரியாக இயங்குகிறது.

அடுத்ததாக உள்ளுறை வலையமைப்பிலேயே இன்னொரு தொகுப்பில் இருக்கும் ஒரு கணினியைத் தட்டிப் பார்க்க வேண்டும். நமது பகுதிக்கும் மற்ற தொகுப்புகளுக்கும் இணைப்பு சரியாக இருக்கிறது. மூன்றாவதாக இணைய இணைப்பைத் தரும் கருவியை தட்டிப் பார்க்க வேண்டும். அது ஒரு வேளை இயங்காமல் அல்லது இணைப்பில் இல்லாமல் போயிருக்கலாம்.

அதுவும் சரியாக இருந்தால், இணையத்தில் இருக்கும் ஒரு இணைய எண்முகவரியை (IP address) தட்டிப் பார்க்க வேண்டும். ஒரு வேளை கணினி பெயர்களை இணைக்கும் வழங்கியில் குறை இருந்தால் பெயர் முகவரி இயங்காமல் இருக்கலாம். அதுவும் சரியாக இருந்தால், இணையத்தில் பிரபலமான பெரிய நிறுவனத் தளம் ஒன்றை முயற்சிக்க வேண்டும் (google.com). அதுவும் இணைகிறது என்றால் நாம் போக வேண்டிய தளத்தை தட்டிப் பார்க்கலாம்.

இப்படி ஒவ்வொன்றாக சரி செய்து கொண்டே வந்தால்தான் தீர்வு கிடைக்கும். ஆரம்பத்திலேயே நாம் போகும் தளத்தில் கணினி கோளாறு, அந்தத் தளம் இயங்கவில்லை என்று முடிவு செய்து விட்டால் சிக்கல் தீராது. விண்டோசு இயங்குதளத்தில் பல சிக்கல்களுக்கு கணினியை அணைத்து விட்டு மீண்டும் இயக்குவது என்று முயற்சிப்பார்கள். சிக்கல் சரியாகி விட்டால் மகிழ்ச்சி. என்ன சிக்கல், எப்படி சரியானது என்று புரியாமலேயே இருந்து விடும். அடுத்த தடவை இது மாதிரி பிரச்சனை ஏற்பட்டால் அணைத்து விட்டு இயக்கிக் கொள்ளலாம் என்று மட்டும் கற்றுக் கொள்வோம்.

Saturday, May 16, 2009

நிறுவனத் தொழில் முனைவு

(Intrepreneurship)

பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அல்லது உரிமையாளர் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். மற்றவர்கள் எல்லோரும் அவர் சொல்வதை சிரம் மேல் ஏற்று செயல்படுவார்கள். அவர் எல்லா முடிவுகளையும் எடுப்பார், மற்றவர்கள் அவர் சொல்வதைப் பின்பற்றி நடந்தால் போதும்.

பெரிய நிறுவனங்களில் இது போன்ற வழிபாட்டு முறைகள் குறைவு என்றாலும், கணிசமான அளவில் இருக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் போதும் சரி, லெதர்லிங்க் ஆரம்பித்த பிறகும் சரி, உயர் பதவி இருப்பவர்களை வழிபட வேண்டும் என்று நினைத்ததில்லை. அவர்களுக்கு நம்மை விட அனுபவர் அதிகம், வயதில் மூத்தவர்கள் அதனால் மதிப்பு உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை.

அப்படி நடந்து கொள்பவர்களைப் பார்த்தால் எனக்கு இரக்கம்தான் வரும். அப்படி மனிதர்களை சிறுமைப்படுத்தும் முறை என்னால் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. லெதர்லிங்கில் முதலிலிருந்தே என்னால் அப்படி ஒரு பாகுபாடு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இனிமேலும் இருக்கக் கூடாது.

நிறுவனத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலாளர்தான். தனக்குத் தாமே திட்டம் வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட அனுபவம், திறமை வளர்ந்த பிறகு பெரிய பெரிய பெயர்களில் பதவிகளைக் கூட வகுத்துக் கொண்டோம். அதைப்பார்த்து கேள்விகள் கேட்டவர்களும் உண்டு. ஒவ்வொருவரும் முனைப்புடன் தனது பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஒருவர் பணி ஒன்றைச் செய்யும் போது மேலாளர் சொல்லி விட்டார் என்பதற்காகச் செய்யக் கூடாது. இதைச் செய்தால் வாடிக்கையாளருக்கு உண்மையான பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். 'எனக்கு எதுவும் தெரியாது, தினமும் காலையில் வந்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வேன், மாதா மாதம் சம்பளம் வந்தால் போதும்' என்று இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட பொறுப்பை யாரும் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

அரசு ஊழியர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கடமைகள், ஊதிய விகிதங்கள் இருக்கும். அவர்கள் என்ன சம்பள உயர்வு கிடைக்கும், எப்பொழுது ஊதியக் குழு அமைக்கப்படும், சேமிப்பிலிருந்து எவ்வளவு முன்பணம் பெறலாம் என்றுதான் திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வரவைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலையைப் பற்றி யோசிப்பதற்குத் தேவையே இல்லை. அது அட்டவணைப்படி நடந்து கொண்டிருக்கும்.

அதிலும் சிலர் முனைப்பெடுத்து பெரிய பதவிகளுக்கு உயர்வதை குறிக்கோளாக வைத்து செயல்படுவார்கள். ஒரே நேரத்தில் ஆசிரியராகச் சேர்ந்தவர்களில் ஒருவர் பள்ளிப் பணியிலேயே ஓய்வு பெற்று விடுவார். இன்னொருவர் கல்வித்துறையில் உயர் பதவிகளுக்குப் போய்ச் சேருவார்.

தலை சிறந்த மருத்துவர், தட்டச்சு செய்பவரை வேலைக்கு வைத்திருக்கலாம். 'அவர் முதலாளி, எனக்கு படி அளப்பவர் என்று அவர் சொல்வதை எல்லாம் தட்டச்சு செய்வது என் கடமை' ஒரு பாணி. 'நோயாளிகளுக்குச் சிறந்த சேவை அளிப்பது நமது கூட்டுக் குறிக்கோள். அவர் மருத்து நிபுணர், மருத்துவம் தொடர்பான எல்லாவற்றுக்கும் அவர் பொறுப்பு. ஆவணப்படுத்துவது எல்லாம் நம்முடைய பொறுப்பு' என்ற நோக்குடன் செயல்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்போசிஸ் நிறுவனத்தைப் பாருங்கள். நாராயண மூர்த்தி தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பிறகு நந்தன் நீலகேணி பொறுப்பேற்றார். அவரும் ஓய்வு பெற்று இப்போது கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். வேலைகளை பகிர்ந்து கொண்டு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் அணி அல்லது அமைச்சரவை இயங்கும் முறை அதை அடிப்படையாகக் கொண்டதுதான். அணித் தலைவர் அல்லது முதல் அமைச்சர் என்பவர் சமமான திறமை, பொறுப்பு இருக்கும் குழுவில் முதலில் இருப்பவர் (First among equals). ஒவ்வொருவரும் தமது பணித் துறையில் முழுமையாக செயல்படுவதுதான் நடைமுறை சாத்தியம், ஆரோக்கிய வளர்ச்சிக்குத் தேவை.

'நான் இது வரைதான் செய்வேன் அதற்குப் பிறகு எனக்குப் பொறுப்பு இல்லை' என்று சொல்வது சரிப்படாது

Friday, May 15, 2009

விற்பனை உத்திகள்

ஜோயல் ஆன் சாஃப்ட் வேர் ஜோயல் ஏதோ தொழில்நுட்பக் கருத்தரங்கு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடத்தப் போகிறாராம். அதில் கலந்து கொள்ள கட்டணம் $99 டாலர்கள் தலைக்கு. எல்லா நகரங்களிலும் பேசப் போகிறவர் ஜோயல். அவர் பேசப் போவது அவர்கள் நிறுவனம் தயாரித்து விற்கும் FogBugz என்ற மென்பொருள் பயன்படுத்துவதைக் குறித்து. அதைத் தவிர மற்ற பேச்சாளர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் குறித்துப் பேசுவார்கள்.

http://joelonsoftware.com/items/2009/05/12.html

10 ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதிய புகழை வைத்துக் கொண்டு அரித்துக் கொட்டுகிறார். அவரது மென்பொருளைப் பற்றிக் கேட்பதற்கு கட்டணம் கட்டி வரும்படி மற்றவர்களை தூண்டும் அளவுக்கு செல்வாக்கு ஈட்டியிருக்கிறார். இவர் எழுதுவது எல்லாம் பலனுள்ள தகவல்களை தரும். இவர் பேசும் போது அவரது நிறுவன மென்பொருளை அடிப்படையாக வைத்திருந்தாலும், அதிலிருந்து உருப்படியாக பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் $99 டாலர் கட்டி அவர்களது கருத்தரங்குக்கு வரும்படி மக்களை வரவேற்கிறார்.

அதுவும் எப்படி, முதலில் கருத்தரங்கு எந்த மாதிரி இருக்கும். எப்படிப்பட்ட பேச்சுக்கள் இருக்கும். எந்த மாதிரி பேச்சாளர்கள் வருவார்கள் என்று சொல்லி விட்டு, அதை ஏற்பாடு செய்ய எவ்வளவு செலவாகும் என்று ஒரு கணக்கு. ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணம் என்றால் இந்தப் பொருளாதாரச் சுணக்கத்தில் யாரும் வரப் போவதில்லை. அதனால் உங்களுக்காக $99 டாலரில் இதை ஏற்பாடு செய்கிறோம்.

கொஞ்சம் கீழே சாப்பாடு குறித்து சொல்கிறார். இந்த $99 டாலரில் சாப்பாடும், பானங்களும் அடங்கும். படிப்பவரின் மனதத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் சம்பாதித்து வைத்திருக்கும் நல்லெண்ணத்தை அடிப்படையாக தொடங்கி, முதலில் பலன்கள். அதன் பிறகு அதற்கு ஆகக் கூடிய செலவுகள் என்று ஒரு பெரிய தொகை, அதைத் தொடர்ந்து குறைந்த செலவிலேயே எப்படி கலந்து கொள்ளலாம் என்று குறிப்பு, தொடர்ந்து அந்த கட்டணத்துக்கே இன்னும் என்ன கிடைக்கிறது என்ற விபரங்கள். இறுதியாக 300 பேருக்கான இடங்கள் சீக்கிரம் நிரம்பி விடும். முந்துங்கள் என்று சொல்லும் வாக்கியங்கள்.

ஒரு விற்பனை ஆவணம் இப்படித்தான் இருக்க வேண்டும். நமது தகுதியை முதலில் குறிப்பிட வேண்டும். நாம் சொல்வதை ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நிறுவி விட்டு, என்னென்ன ஆதாயங்கள் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். அந்த ஆதாயத்தைப் பெறுவதற்கு பொதுவாக என்னென்ன செலவாகும் என்று சொல்ல வேண்டும். நாம் அதே பணிகளை அந்த செலவில் நான்கில் ஒரு பங்கில் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதைத் தொடர்ந்து நமது சேவையில் கூடுதல் என்னென்ன நன்மைகள். இறுதியாக கொஞ்சம் பிகு செய்து கொள்ள வேண்டும். படிப்பவர் இதை வாங்கா விட்டால் நாம் எதையோ தவற விட்டு விடுவோம் என்று நினைக்கும் படி இருக்க வேண்டும்.

Saturday, April 18, 2009

குளோவியூ

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6044.html

Tuesday, April 14, 2009

உலகப் பொருளாதார நெருக்கடி - 1

இப்போது நாமெல்லாம் சிக்கிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணி என்ன?

கதையை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் தெரியும்.

பணம் என்பது எப்படி ஆரம்பித்தது?

பண்ட மாற்று முறையில் 'நான் உழைத்து செய்த பொருளை உனக்குத் தருகிறேன், நீ உழைத்து செய்த பொருளை எனக்குத் தா' என்று பரிமாறிக் கொண்டார்கள்.

நான் நெசவு செய்து துணி வைத்திருக்கிறேன். நாளைய சாப்பாட்டுக்கு நெல் வாங்கி வர வேண்டும். விவசாயம் செய்யும் நண்பரின் வீட்டுக்குப் போய் துணியைக் கொடுத்து விட்டு தேவையான நெல்லை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அவருக்கு இப்போது துணி தேவையில்லை என்றால் எனக்கு நெல் கிடைக்காது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கண்டுபிடித்ததுதான் பணம். துணி விற்று செலாவணியாக பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருளை திரட்டிக் கொள்வேன். நெல் வாங்குவதற்கு அதைக் கொடுத்தால் போதும்.

பண்ட மாற்றும் பரிமாற்றங்களுக்காக பணம் பயன்படுதலும்

தங்கம் பணமாக புழங்க ஆரம்பிக்கிறது. தேவைக்கு மேல் தங்கம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொண்டு வைப்பது போல, ஊரின் பொற்கொல்லரிடம் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அவரிடம் கொண்டு தங்கத்தைக் கொடுத்து ஒரு சீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர் நாணயமானவர். எந்த நேரத்தில் போய் சீட்டைக் காட்டிக் கேட்டாலும் தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அப்படி பாதுகாப்பாக பணத்தை வைத்திருப்பதற்கு கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்கிறார்.

தங்க நகையாக இல்லாமல் நாணயமாக வரும் தங்கத்தை தனித்தனியாக வைத்திருக்கத் தேவையில்லை. எல்லா பணத்தையும் சேர்த்து வைத்து கணக்கை மட்டும் இன்னாருக்கு இவ்வளவு தர வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டால் போதும்.

இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பொற்கொல்லர் கொஞ்ச நாள் போக ஒன்றை கவனிக்கிறார்.

வங்கித் தொழிலின் அடிப்படை

நாட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு அச்சடித்து வெளியிடும் நோட்டுகள் மட்டும் காரணம் இல்லை. பெரும்பாலான பண உருவாக்கம் வர்த்தக வங்கிகள் வைப்புத் தொகை சேகரித்து கடன் கொடுப்பதால் உருவாகிறது.

வங்கிகள் இப்படித்தான் பணப் புழக்கத்தை அதிகரிக்கின்றன.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி. அங்கும் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை பாதுகாப்பான அரசாங்க பத்திரங்கள் வாங்கி வைக்க பயன்படுத்த வேண்டும். மீதிப் பகுதியை கடன் கொடுக்க பயன்படுத்தலாம். கடனட்டைகள் மூலமாக வழங்கப்படும் கடன்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வந்து விடும்.

இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கண்கட்டி விட்டு தமது ஆதாயத்தை உயர்த்த முற்படுபவர்கள் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

விளையாட்டுப் பார்வை அரங்கில் எல்லோரும் உட்கார்ந்திருந்தால் வசதியாக மறைக்காமல் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஒரே ஒருவர் எழுந்து நின்றார் அவருக்கு மட்டும் ஆதாயம். விளையாட்டு நன்றாக தெரியும். அவரைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், கடைசியில் எல்லோரும் நின்று கொண்டே பார்த்தும் எல்லோரும் இருந்து பார்க்கும் அளவுக்குத்தான் விளையாட்டுத் தெரியும். கூடவே கால் வலிதான் மிஞ்சும்.

அது போல கண்காணிப்பு நிறுவனங்களின் நெறிமுறைகளை ஒரு வங்கி தவிர்க்க முயன்று வெற்றி பெற்று விட்டால் அந்த வங்கியின் ஆதாய வீதம் மளமளவென்று ஏறும். அதில் வேலை பார்க்கும் மேலாளர்களுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அவர்களுடன் போட்டி போட்டு ஒவ்வொருவராக அந்த வழிகளை கண்டு கொண்டு தாமும் சுற்றிப் போக ஆரம்பிப்பார்கள். கடைசியில் மொத்த அமைப்பும் குலைந்து போவதுதான் நடக்கும்.

Sunday, April 12, 2009

கூட்டுறவும் முதலாளித்துவமும்

ஒரு நிறுவனத்தில் விற்பனை மதிப்பிலிருந்து எல்லா இடுபொருட்களின் விலையை கழித்தால் கிடைப்பது நிறுவனம் கூட்டிய மதிப்பு. அந்த மதிப்பில் ஒரு பகுதி வேலை செய்தவர்களுக்கு ஊதியமாகவும், ஒரு பகுதி அரசாங்கம் செய்து கொடுத்த வசதிகளுக்கு வரியாகவும், கடைசி பகுதி முதலீடு செய்தவர்களுக்கு ஆதாயமாகவும் போக வேண்டும்.

ஒரு வகை நிறுவனம்
10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் பத்தாயிரம் (1%) ரூபாய் சம்பள செலவு, மீதியில் அரசு நிர்ணயித்த வீதத்தில் வரி கட்டி கிட்டத்தட்ட 6 முதல் 7 லட்ச ரூபாய் ஆதாயமாக எடுத்துப் போவது முதலாளித்துவ நடைமுறை. மதிப்பு கூடுதல் பாதியாக குறைந்து 5 லட்சம் ஆகி விட்டாலும் சம்பளம் கொடுக்கப்படும், அரசுக்கு வரி தொகை குறையும், முதலாளியின் ஆதாயமும் குறையும். இப்படி குறைந்து போகும் மதிப்பு கூடுதலை சரிகட்ட எதிர்பார்த்த அளவு செயல்படாத ஊழியர்களை பணி நிறுத்தம் செய்து விடுவார்கள். சம்பளச் செலவு 7000 முதல் 8000 ஆக குறைந்து போகலாம்.

கூடுதல் மதிப்பு 3 லட்சம் அல்லது 2 லட்சம் என்று ஆகி விடும் நிலைமை வருவதற்கு முன்னால் நிறுவனமே இழுத்து மூடப்பட்டு விடும்.

இப்படி இருக்கும் நிறுவனம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி கடவுளாக மதிக்கப்படுவார். அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அவரது ஒரு சொல்லின் மூலம் பணி புரியும் ஊழியரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடலாம்.
  2. 'உன்னிடம் சொன்ன வேலையை செய், கேள்விகள் கேட்பதை மறந்து விடு. மாதா மாதம் சம்பளம் கிடைக்கிறது அல்லவா. முதலாளிக்குத் தெரியும் என்ன நடக்கிறது என்று'. வேலை செய்பவர்களின் மனத் திறமையில் பெரும்பகுதி அடைபட்டுப் போய் விடும்.
  3. ஒன்றாம் தேதி ஆனால் சம்பளப் பணம் கையில் வந்து விட வேண்டும்.
  4. 'விருப்பம் இருக்கும் வரை வேலை செய். இன்னொரு நிறுவனத்தில் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் தருகிறார்கள் என்றால் விட்டு விட்டுப் போய் விடு'.
இன்னொரு வகை நிறுவனம்

10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் ஒன்பதரை லட்ச ரூபாய் (95%) சம்பளம், அரசுக்கு வரி கட்டுவதற்கு எதுவும் மிஞ்சாமல், முதலீட்டுக்கு ஆதாயமும் கிடைக்காமல் போகிறது.

மதிப்பு கூடுதல் 15 லட்சமாக அதிகரிக்கும் போது சம்பளம் கொடுப்பதும் 14 லட்சமாக அதிகரிக்கிறது. இப்படியே அதிகரித்து மதிப்பு கூடுதல் 1.5 கோடி ரூபாய் ஆகும் போது சம்பளம் 1.3 கோடி கொடுத்து மீதி இருப்பதில் வரியும் ஆதாயமும் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கு நிலவரம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி மனிதராக மதிக்கப்படுவார். அவரை போல நல்லவர் கிடையாதுங்க. எல்லோருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கிறார். உடன் பணி புரிபவர்களை இயந்திரங்கள் போல நடத்தாமல் அவர்களையும் தொழிலை புரிந்து அதில் தமது பணியை செய்ய ஊக்குவிக்கிறார்.
  2. 'நிறுவனத்தில் என்ன வருமானம் வருகிறது, என்ன செலவாகிறது என்று உனக்குத் தெரியும். வருமானம் வருவது குறைந்தால் நம் எல்லோருக்கும் பாதிப்பு உண்டு வருமானம் வருவது அதிகமானால் எல்லோருக்கும் நல்லது'. வேலை செய்பவர்களின் மனத் திறமைக்கு சவால்.
  3. சம்பளம் கிடைப்பது நிறுவனத்தின் மாதாந்திர வெற்றி தோல்வியைப் பொறுத்தது. எல்லோரும் நிறை குறைகளை விவாதித்து குறைகளை களைந்து சரியான வழி வகுத்து நிறுவனம் முன்னேற முயற்சிப்பார்கள்.
  4. ஒவ்வொரு ஊழியரும் ஒரு தொழில் முனைவராக செயல்பட்டு நிறுவனத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்துவார்கள். கூடுதல் வருமானம் தேவைப்பட்டால் நிறுவனத்தின் வருமானத்தை இப்படி பெருக்கினால் நான் அதில் X சதவீதத்தை ஊதியமாக கேட்டுப் பெறலாம். எதற்கு வேறு இடத்தைப் பார்க்கப் போக வேண்டும்.
இவ்வகை நிறுவனம் செயல்பட சாத்தியங்கள் உண்டா?

தொழில் முனைவு

எங்கள் கல்லூரி வகுப்புத் தோழன் படித்து முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தோல் பிரிவில் வேலைக்கு சேர்ந்தான். அவனது அப்பா ஒரு தொழிலதிபர். கட்டிடத் துறையில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

ஓரிரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு, 'எதுக்கு இன்னொருத்தருக்காக நாம இவ்வளவு உழைக்கணும். நாமே சொந்தமா தொழில் செய்யலாம்' என்று நண்பனுக்குத் தோன்றி விட்டது.

தோல் துறையில் பட்டம் பெற்ற எல்லோருக்குமே, 'ஒரு இடத்தில் ஆர்டர் வாங்கி, அதை வைத்து மூலப் பொருட்களை கடனுக்கு வாங்கி, தோல் செய்து கொடுத்து, வரும் பணத்திலிருந்து வாங்கியவற்றுக்குப் பணத்தை அடைத்து மீதியை நமது ஆதாயமாக வைத்துக் கொள்ளலாம்' என்ற அடிப்படையிலான ஜாப்வொர்க் எனப்படும் முறையின் மீது ஒரு நப்பாசை உண்டு.

அதற்கு பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை.
  • என்ன மாதிரியான தோல் செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு தேவை. அது இருக்கிறது.
  • 'எங்கு உள்ளீடு தோல் வாங்க வேண்டும், எங்கு வேதிப் பொருட்கள் வாங்க வேண்டும் எப்படி கடனுக்கு வாங்க வேண்டும்' என் அனுபவம் தேவை. அது ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்ததில் தெரிந்து போயிருக்கும்.
'அப்பா இவ்வளவு பணக்காரராக இருக்கும் போது நாம் எதற்கு அந்த வழியில் கஷ்டப்பட வேண்டும்' என்று நினைத்து பணித் திட்டம் ஒன்று தயாரித்து இத்தனை கோடி முதலீடு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டானாம்.

'இப்போ உனக்கு மாசச் சம்பளம் எவ்வளவு?'

'மாசம் 15,000 ரூபாய்'

'கையில் சேமிப்பு எவ்வளவு இருக்கு? இரண்டு வருஷம் சம்பளம் வாங்கியிருக்கிறாய் அல்லவா!'

'ஐம்பதாயிரம் ரூபாய்'

'அப்படியா!!!. சரி அதற்குக் கூட நான் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். அந்த 1 லட்ச ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு மாதா மாதம் 15,000 ரூபாய் ஆதாயம் சம்பாதித்துக் காட்டு. அதன் பிறகு கோடிக் கணக்கான முதலீட்டைப் பற்றி யோசிக்கலாம்'.

அப்படி ஆரம்பித்தது அவனது தொழில் முனைவு. இன்றைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை நடத்தி வருகிறான். அப்பாவின் காலத்துக்குப் பிறகும் அவர் கற்றுக் கொடுத்த ஆரம்ப பாடங்களை பின்பற்றி வளர்ந்து கொண்டிருக்கிறான்.

Tuesday, April 7, 2009

கற்றதும் பெற்றதும்

எழுத்தில் தெரிந்தோ தெரியாமலோ பல விஷயங்களை சுஜாதாவிடமிருந்துதான் பெற்றிருக்கிறோம். இப்போது அவரது புகழ் பெற்ற தலைப்புகளில் ஒன்றை கொஞ்சம் இரவலாக வாங்கிக் கொள்வோம். (இந்த இடுகைக்கு மட்டும்)

1. 'நான் படிச்ச ஸ்கூலில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். நிறுவனத்தில் எப்படி வேலைகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். எங்க ஸ்கூல் முதல்வர் ஒவ்வொரு வாரமும் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களின் குறிப்பேட்டில் கையெழுத்து போடுவார். குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் பொருளடக்க அட்டவணை இருக்கும். வரிசை எண், பாடத்தின் பெயர், ஆசிரியர் கையொப்பம், கடைசி நெடுவரியாக முதல்வர் கையெழுத்து போடும் இடம் இருக்கும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் குறிப்பேட்டை பார்த்து கையெழுத்து போடுவாங்க அவங்க!'

இது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மாணவர்கள் மீது. முதல்வர் அம்மா எல்லா பாடங்களையும் படிக்கிறாரோ இல்லையோ, நமது குறிப்பேட்டை அவர் ஒவ்வொரு வாரமும் புரட்டுகிறார் என்ற எண்ணமே மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரியதொரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்பேடுகளில் சில பத்துகளை படித்துப் பார்த்து குறிப்பிட்ட மாணவர், ஆசிரியரிடம் அதைப்பற்றி கேள்வி கேட்கவும் செய்து விட்டால் இது இன்னும் சக்தி வாய்ந்ததாகி இருக்கும்.

நிறுவனத்தை நடத்தும் போது எல்லா இடங்களிலும் தலைமையின் பார்வை விழுந்து கொண்டே இருக்க வேண்டும். என்னதான் வேலையை பகிர்ந்து கொடுத்தாலும் தொடர்ந்த கண்காணிப்பு இருந்தால்தான் விழிப்புணர்வு உருவாகும்.

2. 'ஒரு நிறுவனத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 40% திறனுடன் வேலை பார்த்தால் நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைத்து விடும். அப்படி கிடைக்கவில்லை என்றார் 40% திறன் கூட வெளியாகவில்லை என்று பொருள்'

புகழ் பெற்ற நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் குழுமத்தின் நிறுவனம் ஒன்றுக்குப் போய் விட்டு வந்தோம். அங்கு பணி புரிபவர்கள் தமது வேலைகளை செய்து வருகிறார்கள். அலுவலகத்துக்குக் கிளம்பி வருவது, காபி குடிப்பது, மதியம் சாப்பிடுவது, மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு ஓடுவது என்று வேலையைத் தவிர்த்து புற உணர்வுகள் அவர்களில் நிரம்பி இருக்கின்றன.

வேலை வேலை என்று 24 மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சிறு நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறது. நிறைய பணம் சம்பாதித்துக் கொடுக்கிறது. எப்படி நடக்கிறது?

அமைப்பு முறைகள்தான். தனிநபர்களின் திறமைகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். வெற்றிகரமான நிறுவனங்களில் நன்கு சிந்தித்துத் திட்டமிடப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு செயலையும் எப்படி செய்ய வேண்டும் என்று வகுத்திருக்கிறார்கள். அதை அப்படி செய்வதற்கு போதிய பயிற்சி அளிக்கிறார்கள். அவை அப்படித்தான் நடைபெறுகின்றனவா என்று சரிபார்ப்பதற்கும் மேலாளர்களுக்கு பொறுப்பு. அதை மாதா மாதம் கண்காணிப்பதற்கு உள்ளுறை தணிக்கைக் குழு. ஆண்டு தோறும் பரிசீலிப்பதற்கு வெளியிலிருந்து வரும் தணிக்கைக் குழு.

இது இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நமது வழிமுறைகள் வகுக்கப்பட்ட காலமும் புறச்சூழல்களும் மாறும் போது வழிமுறைகள் மறு வடிவமைக்கப்பட வேண்டும். அதற்காக புதிது புதிதான முன்முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஐஎஸ்ஓ தரக்கட்டுப்பாட்டு முறை செயல்படுத்த ஆரம்பிப்பார்கள். அதை சாதித்தவுடன் அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று வடிவமைத்த தர மேம்பாட்டு முறை ஒன்றை பின்பற்ற முடிவு செய்வார்கள். இன்னொரு கட்டத்தில் புதிய கணினி வழி செயல்படும் முறையில் முதலீடு செய்வார்கள்.

தனி வாழ்க்கையிலும் சரி, நிறுவனத்திலும் சரி - எதுவுமே இரண்டு முறை உருவாக்கப்பட்டு நடக்க வேண்டும். வீடு கட்ட வேண்டுமானால் முதலில் தாளில் வடிவமைப்பை வரைந்து, திட்டம் போட்ட பிறகுதான் அடிக்கல் நாட்ட வேண்டும். கட்ட கட்ட யோசித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மனச் சோம்பலுக்கு அடையாளம்.

செய்ய வேண்டியதைக் குறித்து முழுமையாக சிந்தித்து முடித்து விடுவது எல்லோராலும் செய்ய முடிவது. ஆனால் பலரால் செய்யப்படாதது. அப்படி செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் வெற்றியும் தோல்வியும்.

Sunday, February 8, 2009

பணசாட்சியும் மனசாட்சியும்

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் உழைத்த பிறகு பணத்தைக் கேட்டால், 'வேலை எதுவுமே செய்யவில்லை, எங்களுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை, இதுவரை கொடுத்த பணத்தைக் கூட ஒருபகுதி திரும்பிக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களது பெயரை உங்கள் வாடிக்கையாளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, சட்டப்படி தீர்வு செய்யுங்கள்' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

கோபமும் ஆத்திரமும் பொங்கி வந்தாலும் அதை எல்லாம் உள்ளுக்குள் திட்டித் தீர்த்து விட்டு, பொறுமையாக பணிவாக நமது நிலைமையை விளக்கி பதில் போட்டிருந்தோம். ஆரம்பத்திலிருந்த நடந்த தகவல் பரிமாற்றங்கள், மென்பொருள் உருவாக்கப் பணிகள், அவர்கள் நிறுவனத்துக்குப் போய் செய்த பணிகள் போன்ற விபரங்களை நமது தகவல் பயன்பாட்டிலிருந்தும், மின்னஞ்சல்களிலிருந்தும் தொகுத்து அனுப்பி விட்டிருந்தோம்.

'அதே பணத்துக்கு அதிக வேலை வாங்க முயற்சிக்கிறார்களா அல்லது மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்களா' என்று பல குழப்பங்கள். 'எல்லா விபரங்களையும் திரட்டி விட்டோம். அவர்களுக்கு நமது கட்சியை எடுத்துச் சொல்வோம்.' என்று ஒரு உத்தேசமான கருத்தொற்றுமை உருவாக்கியிருந்தோம்.

இந்த நிறுவனத்துக்கான பணி ஆரம்பித்த போது, அது வரை மென்பொருளில் பார்த்த குறைகளை எல்லாம் ஒரு மூச்சாக நிவர்த்தி செய்து விடுவோம் என்று அடிப்படை வடிவமைப்பில் நான்கைந்து பெரிய மாற்றங்களை செய்து முடித்திருந்தோம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை விட இவர்களுக்கு மிக உறுதியான அடிப்படையிலான பயன்பாடு கொடுத்திருந்தோம். நம்மைப் பொறுத்த வரை நமது பயன்பாட்டில் ஏற்பட்ட மேம்பாடு அவர்கள் கொடுத்த வாய்ப்பினால் கிடைத்தது. ஒரு ஆண்டு உழைத்ததற்கு பணம் கிடைக்கா விட்டாலும் கூட, இந்த மேம்பாட்டைப் பயன்படுத்து நிறைய ஈட்டிக் கொள்ளலாம்.

நாம் ஒரு ஆண்டு உழைத்தும் அவர்களுக்கு எதிர்பார்த்த, தேவையான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்களைப் பொறுத்த வரை நாம் அவர்களுக்காக செய்த வேலை வீண்தான். அதற்கு பணம் வாங்கியது, இன்னும் பணம் கேட்பது என்பது நியாயமாகாது. கொடுத்த பணத்தில் ஒரு பகுதி என்று இல்லாமல், மொத்தத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவோம். திருப்புவதற்கான காலக்கெடுவை மட்டும் வாங்கிக் கொள்வோம்.

'ஆரம்பத்தில் எந்த சுணக்கமும் இல்லாமல் கொடுத்து வந்த நீங்கள் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகு பணம் கொடுப்பதில் தயக்கம் காட்டும் போது நாங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு உங்களிடம் பேசி திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வழி தேடியிருக்க வேண்டும். அதைச் செய்ய நாங்கள் தவறி விட்டோம்.'

'இப்போது, இது வரை கொடுத்த பணத்துக்கான பலன் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள். வாடிக்கையாளரிடமிருந்து வாங்கிய தொகையை விட ஒரு ரூபாயாவது ஆதாயம் ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.'

'எங்கள் பக்கம் பேசிய தொகைக்கு நாங்கள் பணி செய்து விட்டதாக நாங்கள் நினைத்தாலும், அந்தப் பணிக்கான பலன்கள் உங்களை வந்து சேரவில்லை என்னும் போது அந்தப் பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுவதுதான் முறையானது என்று நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.'

'நிறுவனத்தை நடத்தும் நாங்கள் யாருமே அதீத லாபம் ஈட்டி வாழ வேண்டும் என்ற குறிக்கோளில் பணி புரியவில்லை. தோல் துறை நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப கருவிகள் குறைவான செலவில், நிறைவான பலனில் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், பணிபுரியும் எல்லோருக்கும் அளவான வாழ்க்கை நடத்தத் தேவையான பொருள் மட்டும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.'

'நாங்கள் உழைத்த நாட்கள், செய்த பணிகளின் செலவு எங்கள் பக்க நிலவரம். அந்தப் பணியின் பலன் தொடவில்லை என்பது உங்கள் பக்க உண்மை. இந்த நிலையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம்'

1. 'உங்களுக்கு பல முறை உணர்த்தியும் எங்களுக்கு வேலை நடக்கவில்லை. கொடுத்த பணம் முழுவதையும் திருப்பி விடுங்கள்.' என்று நீங்கள் தீர்ப்பு சொன்னால், மிகவும் வருத்தத்துடன், நாங்கள் ஒரு ஆண்டுகளுக்கு மேல் செய்த முயற்சிகளுக்கும், நீங்களும் உங்கள் ஊழியர்களும் உழைத்த மணிகளுக்கும் பலனில்லை என்ற வருத்தத்துடன், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் இறங்குவோம்.

உடனடியாக முழுப் பணத்தையும் திருப்பி விடும் செழிப்பு இல்லாத எங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்குள் திருப்பி விடும்படி அனுமதியுங்கள். அதற்கிடையில் இந்தப் பணியையோ, வேறு பணிகளையோ எங்களுக்குக் கொடுத்து ஆதரித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

2. 'எங்கள் பக்கமும் தவறுகள் சில இருக்கின்றன. உங்கள் பக்கமும் பல தவறுகள் இருக்கின்றன. இது வரை போனது போகட்டும், நீங்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுகிறேன். இனிமேல் செய்யும் வேலைக்கும் இன்ன தொகையை ஒதுக்கி விடுகிறேன். மார்ச்சு 31க்குள் முடித்துக் கொடுத்து விடுங்கள்' என்று தீர்ப்பளித்தால் என்றென்றும் மறக்காத நன்றிக் கடனோடு உங்கள் சேவையில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இப்படி ஒரு மனத் தயாரிப்பு வந்து விட்டது. இல்லை பேரம் பேசுவதற்காகத்தான் கூப்பிடுகிறார்கள் என்றால் இது வரை செய்த வேலைக்கான தொகையைத் தந்து விட்டு இனிமேல் செய்வதற்கான கட்டணத்தையும் தருவதற்கு ஒத்துக் கொண்டால் தொடர்வோம். இரண்டுக்கும் நடுவில் இதே பணத்துக்கு இன்னும் வேலை செய்யுங்கள் என்பது மட்டும் வேண்டாம்.

வாசற் காவலரிடம் பேரைச் சொல்லி வந்த வேலையைச் சொன்னேன். உள்ளே நிறுவனத் தலைவரின் நேரடி உதவியாளரிடம் பேசினார். வழக்கமாக அவரே உள்ளே விடச் சொல்லி விடுவார். இப்போது இன்னொரு முறை உள்பேசியைச் சுழற்றி வரவேற்பறை மேலாளரிடம் பேசினார்.

வரவேற்பறைக்குப் போனால் உடனேயே மேலே போகச் சொல்லி விட்டார். அதற்குள் பேசி முடிவு செய்து விட்டார்கள். 'பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம்' என்று நிறுவனத் தலைவர் சொன்னதைச் சரிபார்க்கும் விதமாக கணினித் திரைகளை எட்டிப் பார்க்க முயற்சிக்கவில்லை. அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். நிறுவனத் தலைவர் அறையில் விளக்கு எரியவில்லை. இன்னும் வந்திருக்கவில்லை.

நேரடி உதவியாளர் வரவேற்று உள் அறையில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச வேண்டியதை முன்கூட்டியே வெளியில் சிதற விட்டு விடக் கூடாது என்று நானும் பொதுவான மற்ற செய்திகளையே பேசிக் கொண்டிருந்தேன். தோல் கண்காட்சியில் நாங்கள் பங்கேற்றது, தோல் துறையின் நிலைமை, உலகப் பொருளாதாரச் சுணக்கம். நமது நிறுவனச் செய்திகள் என்று வளர்ந்து கொண்டே போனது. அவர் ஒரு கட்டத்தில் விட்டுச் சென்றதும் கணினியை இயக்கி எழுத ஆரம்பித்தேன். காத்திருந்து மனதைக் கனக்கச் செய்து கொள்ள வேண்டாம்.

நிறுவனத் தலைவர் 11 மணிக்கெல்லாம் வந்து விட்டார். உள்ளே போய் பேசி விட்டு வந்த உதவியாளர், முன்னதாக நான் அனுப்பியிருந்த மின்னஞ்சல் நகல்களை எடுத்துக் கொண்டு வந்து, 'இதற்கு விளக்கம் கேட்கிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளச் சொன்னார். அதன் பிறகு அவரைப் பார்க்கலாம்'

அப்போ சரி என்று ஆரம்பித்தேன். நினைத்து வைத்திருந்த முடிவை விளக்கினேன். 'எங்களுக்கு பண நெருக்கடி நிறைய உண்டு. கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இருப்பது கொடும்பாவம் என்று கூட நான் வசை கேட்கிறேன். அந்த பாவங்களுடன் எங்கள் மென்பொருளைப் பயன்படுத்த முடியாத வாடிக்கையாளரிடம் பணம் வாங்கினேன் என்ற பாவமும் சேர வேண்டாம். நீங்கள் வர்த்தக நிறுவனமோ தரகு நிறுவனமோ கிடையாது. ஒவ்வொரு ரூபாயும் தொழிலாளர்களின் உழைப்பின் பலன். அதைச் செலவழிப்பதில் சரியாக காரண கற்பிதம் இல்லா விட்டால், உங்கள் நிறுவனத் தலைவரின் முடிவு இப்படித்தான் இருக்கும்' என்றேன்.

அவரது பதில் எதிர்நிலையாக இருந்தது. 'இனிமேல் செய்ய வேண்டிய வேலைக்கு இவ்வளவு பணம் கேட்கிறீர்களே, அதை மட்டும் மறுபரிசீலனை செய்து கொள்ளச் சொன்னார்' என்று சொல்ல ஆரம்பித்தார். கணினித் துறை மேலாளர், 'நாங்களும் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம் சார், எப்படி ஒரு பொருளை விளக்குவது, எழுதி அனுப்புவது என்றெல்லாம் நிறைய தெரிந்து கொண்டேன்' என்று உணர்ச்சி பூர்வமாகவே சொன்னார்.

இந்த நேரத்தில் தோல் கண்காட்சிக்காக உருவாக்கியிருந்த காட்சிப்பட விளக்கங்களை காண்பிக்க ஆரம்பித்தேன். நமது நிறுவனச் செயல்பாட்டு முறை பற்றிய காட்சி முதலில். அதைத் தொடர்ந்து உலகளாவிய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் அளவு, போக்கு பற்றிய விபரங்கள். பொறுமையாகப் பார்த்தார்கள். இதன் நகல் அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார் கணினித் துறை மேலாளர்.

இதை எல்லாம் பேசி முடித்தவுடன், 'போய்ப் பார்க்கலாம்' என்று உள்ளே அழைத்தார் உதவியாளர். கதவைத் திறந்து வணக்கம் சொன்னதும், 'வாங்க சிவா' என்று அன்பாக வரவேற்றார் நிறுவனத் தலைவர்.

வழக்கம் போல, 'சொல்லுங்க' என்று நிறுத்தினார். வருபவர்களை பேச விட்டு அவர்கள் எப்படி வருகிறார்கள் என்று பார்த்து விட்டு தமது சீட்டுகளை இறக்குவது பல வெற்றிகரமான நிறுவனத் தலைவர்களிடம் பார்த்திருக்கிறேன். நினைத்து வைத்திருந்த கருத்துக்களைச் சொன்னேன். 'எங்களைப் பொறுத்த வரை வேலை செய்து விட்டோம் என்று நினைத்தாலும், நீங்கள் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும் போது, உங்கள் முடிவு எதுவானாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் கொடுத்த வாய்ப்பின் மூலம் எங்கள் மென்பொருளை பல நிலைகள் மேம்படுத்திக் கொள்ள முடிந்ததே எங்களுக்கு பெரிய ஆதாயம்தான்'

'பணியைத் தொடருவதற்கு உங்களுக்கு விருப்பமே இல்லாதது போல எனக்குப்படுகிறது. அவ்வளவு தொகை எல்லாம் என்னால் கூடுதல் கொடுக்க முடியாது. எங்களது குழுமத் தலைவரிடம் போய் இது போல கூடுதல் கேட்கிறார்கள் என்று சொன்னால் வேலையை முழுமையாக நிறுத்தி விடத்தான் சொல்வார். அவரிடம் போவதற்குப் பதிலாக நானே நிறுத்தி விடுகிறேன். உங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறோம். அதை இழப்பாக வைத்துக் கொள்கிறோம்.'

'நிச்சயமாக நாங்கள் அப்படி இல்லை. உங்கள் நிறுவனத்துடன் பணி செய்வது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எனக்குத் தெரியும். கல்லூரியில் படிக்கும் போதே உங்கள் நிறுவனத்தைப் பார்த்து மதிப்பு கொண்டவன் நான். எங்களது சின்னக் குழுவை நடத்திச் செல்வதற்கு குறைந்த பட்ச பண ஆதரவை மட்டும் நீங்கள் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் ஆகச் சிறந்த சேவையை உங்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம்'

'நீங்கள் கேட்கும் அளவுக்கு என்னால் தர முடியாது' என்று ஒரு தொகையேச் சொல்லி, 'இந்தத் தொகைக்கு உங்களால் செய்ய முடியும் என்றால் என் உதவியாளரிடம் விவாதித்து, திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக எல்லா பணிகளையும் முடித்திருக்க வேண்டும். மீண்டும் இது போல உட்கார்ந்து பேசுவதற்கு நான் தயாராக இல்லை. தற்போது உங்களுக்குத் தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை பத்து நாட்களுக்குள் தரச் சொல்கிறேன்'

'அப்படியே செய்கிறேன்' என்று வெளியில் வந்தேன். வாராக்கடனாக பெருந்தொகையை இழந்து, இது வரை செய்த பணிகளின் பலனையும் முற்றிலும் இழந்து தவிப்போமோ என்று கலங்கிக் கொண்டிருந்தது, சுமுகமாக முடிந்து மேல் பணிகளுக்கும் வழி ஏற்பட்டு விட்டது. வெளியில் உதவியாளரிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டேன். 'உங்கள் குழுவினரிடமும் பேசி விட்டுத் திட்டம் அனுப்புங்கள்' என்று சொல்லி விடை கொடுத்தார்.

கடமையும் தருமமும்

'தவறாமல் முதல் தேதி சம்பளம் கொடுத்து விட வேண்டும், எப்படியாவது கொடுத்து விட வேண்டும்'

3. அதற்கு இறுதிப் பொறுப்பு நிறுவனத் தலைவர்தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
2. மூத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வர கொண்டு வர வேண்டிய கடமை இருக்கிறது.
1. நிறுவனத்துக்கு வரும் பணத்தை சம்பளம் கொடுப்பதற்குத்தான் முதல் உரிமை தருகிறோம்.

'சம்பளம் கூட்டிக் கொடுப்பது குறித்துப் பேசிய போது ஏற்கனவே இருக்கும் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றும் முறைகளை வகுத்துக் கொள்ளச் சொன்னேன். நீ கேட்க வில்லை'

'நீ மட்டும் அதைச் சொல்லவில்லை. அதனால் ஆதாயம் அடைபவர்கள் கூட அதை குழப்பத்தோடுதான் பார்த்தார்கள். 10000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் இன்றைக்கு 25,000 சம்பளத்தில் இருக்கிறார். அதே நிறுவனத்தில் அவருக்கு 15000 என்று உயர்வு கிடைத்திருந்தால் கூட ஆண்டு முழுமைக்கும் 1.8 லட்சம் கிடைத்திருக்கும்.'

'குறைந்த சம்பளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தால், திறமை படைத்தவர்கள் வேலை கற்றுத் தேர்ந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு இரண்டு பேர் என்று விலகிப் போய் விடுகிறார்கள். அப்புறம் நாம் ஆரம்பத்திலிருந்து புதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்து எழுந்து நிற்க வேண்டியிருக்கிறது.'

'தொடக்கத்திலேயே பெரு முதலீடு கொண்டு வந்து திறமையானவர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு உயர் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் முறையில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி வரவுக்கு மேல் சம்பளம் கொடுப்பதும் ஒரு முதலீடு போலத்தான். நேரடியாக பணம் போட்டவர்கள், தமது உழைப்பை தந்தவர்கள் என்று பலரும் இதில் முதலீடு செய்திருக்கிறோம்.'

'வளர்ச்சிக்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஏணி மாதிரி அல்லது மாடிப்படி மாதிரி. ஏணி மாதிரியில் வளர்ச்சி ஒரே சாய்வுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும். வேகமாக வளரலாம், எப்போதும் அழுத்தத்துடனேயே இருக்க வேண்டி வரும், கீழே விழுந்தால் ஒரே அடியாக தரையில்தால் விழ வேண்டியிருக்கும்'

'மாடிப்படி முறைமையில் ஒரு படியில் ஏறியதும் கொஞ்ச தூரம் அதே தளத்தில் நடந்து விட்டு அடுத்த படியில் ஏற முயற்சிக்க வேண்டும். கிட்டத்தட்ட மலையேறும் படி போல் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் ஏறும் வீதம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு படியில் ஏற முயற்சிக்கும் போது தவறி விட்டால் ஏணியிலிருந்து விழுவதைப் போல தரைக்கு வந்து விடாமல், கீழ்ப் படியில்தான் போய் விழுவோம். இன்னொரு முறை முயற்சித்து ஏறிக் கொள்ளலாம்'

'நாம் மலைப்படி முறையைப் பின்பற்றாமல் ஏணி முறைமையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனங்களுக்கு நிவதி செய்து கொடுத்து சம்பாதிப்பது என்பது நமது குறிக்கோள் கிடையாது. நிறுவனங்களை இணைக்கும் மென்பொருள் சேவைதான் நமது நீண்ட கால குறிக்கோள். மலைப்படி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தால் படியிலேயே இளைப்பாற ஆரம்பித்து விடும் அபாயம் இருக்கிறது. நாம் ஏறிக் கொண்டேதான் இருக்க வேண்டும்'

'நிறுவனத் தலைவரின் வழிகாட்டலில்தான் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தமது நேரத்தைத் திறமையை தலைவரின் வழிகாட்டலில் செலவிடுகிறார்கள். அந்த வழிகாட்டல் சரியான திசையில் இருக்க வேண்டும், அதிலிருந்து சரியான பணபலன்கள் கிடைக்க வேண்டும் என்ற பொறுப்பு நிறுவனத் தலைவருக்குத்தான்.'

'நிறுவனத்தின் வருமானத்தை எடுத்துக் கொண்டு போய் பிற இடங்களில் சேமித்து வைத்திருப்பது இங்கு நடக்கவில்லை'

'பிற வழிகளில் சம்பாதித்து சேமித்து வைத்ததை எல்லாம் முதலீடாகப் போட்டிருக்கிறோம். நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி கடனாகவும், முதலீடாகவும் போட்டிருக்கிறோம். கடனட்டையில் கடன் வாங்கிக் கூட செலவழித்திருக்கிறோம்'

'எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து விட வேண்டும், எப்படியானாலும் ஆதாயம் அதிகப்படுத்தி விட வேண்டும் என்று சத்யமின் ராமலிங்க ராஜூ தனக்குத் தெரிந்த வழிகளில் தகிடுதத்தங்கள் செய்து கொண்டிருந்தார். எச் சி எல்லின் சிவ்நாடார் பணம் வாங்கி வர வேண்டிய விற்பனையாளர்கள் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவாராம், போட்டியாளர்களை விட தான் குறைந்து விடக் கூடாது என்று கொடுக்க வேண்டிய பணத்தை தாமதப்படுத்துகிறார்.'

'அதுதான் நமது தொழில் செய்யும் சூழல். அவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் பின்பற்றும் அதே வழிகளில் நாமும் பணம் ஈட்டுவது குறித்து நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.'

'தர வேண்டிய பணத்தைக் கொடுத்து விடும் விவாதம் வந்த போது நினைவுப் பிறளல் அல்லது வேறு ஏதோ காரணத்தினால், அதிகமான பணத்தைக் கொடுத்து விட இருந்தார். அதை சரி செய்ய வேண்டுமா என்று ஒரு கணம் தயங்கி குறைந்த பணம்தான் தர வேண்டும் என்று சொல்லி விட்டேன். அந்தக் கணத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?'

'நான் அவரது தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாகவோ, ஓரிரு நாட்களிலோ உண்மை வெளியில் வந்து உறவு பின்னப்பட்டிருக்கும் என்ற நடைமுறை ஒரு புறம் இருக்க, நம்முடைய தர்மப்படி எதிராளியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, உண்மையை பேச வேண்டும் என்பது நடைமுறை சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதுதானே!'

'பெரிய குழுமம், காலணி தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலை, கோடிக் கணக்கில் வருமானம், சொத்துக்கள், ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் என்ற நிறுவனங்களை விட 20 பேர் வேலை செய்யும் நமது நிறுவனத்தின் கடை கலகலப்பாக, வருபவர்களும் உள்ளிருப்பவர்களும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது'

'பொருள் ஈட்டுதல் என்றால் பணத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாறுவது மட்டும் இல்லை. உண்மையான வளத்தை உருவாக்குதல் என்ற பொருளில் பார்த்தால் நமது குழுவினருக்கு வாழ்வில் உண்மையான வளத்தை உருவாக்குகிறோம்.'

பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். மாதம் பெரும் தொகை சம்பளம் வாங்குகிறார். போன தடவை சென்னைக்கு வந்திருந்த போது 'நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்கிறார்கள். என் அருகில் வேலை பார்ப்பவருக்கு வேலை இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். ஒரு நாள் காலையில் அவருக்கு சொன்னார்கள். மதியத்துக்குள் கணக்கு எல்லாம் முடக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்'

'வேறு இடத்தில் வேலை கிடைக்காது என்று இல்லை, ஆனால் இது போல பேக்கேஜ் கிடைக்காது'

'இதைச் சொன்ன போது அவரது கண்ணில் தெரிந்த பயம், முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் எந்த மனிதருக்கும் வரக்கூடாத ஒன்று. மாதம் பெரும் தொகை வாங்கிச் செலவழிக்கும் நிலையை இழந்து விடுவோமோ என்ற பயம் மனிதரை இழிந்து போகச் செய்யும் பயம். முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அவலம் இது. அந்த அவலத்துக்குள் நாங்களும் போக மாட்டோம். '

அகில உலக தோல் கண்காட்சி

ஞாயிற்றுக் கிழமை கண்காட்சிக்குப் போக வேண்டும். 8 மணி வாக்கில் அலுவலகம். இட்லி சாப்பிட்டு விட்டு கண்காட்சியில் செய்ய வேண்டிய பணி விபரங்களைத் திட்டமிட்டு விட்டுப் புறப்பட்டோம்.

மூன்று நாட்களும் அலுவலகத்திலிருந்து கண்காட்சிக்குப் போய் வருவதற்காக வண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். சரியாக ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நுழைவாயிலில் ஆயுதங்கள் சோதனை செய்யும் ஆட்களும் கருவிகளும் வைத்திருந்தார்கள். நீண்ட காத்திருப்போர் வரிசை. அதிகம் நேரம் தாழ்த்தாமல் உள்ளே போய் விட்டோம்.

நமது அரங்கில் சுவரில் ஒட்டும் வண்டக் காட்சிகள் செய்து முடித்திருந்தார்கள். விளக்கக் காட்சிப் படம் காண்பிப்பதற்கான திரை கொண்டு வந்து பொருத்திக் கொண்டிருந்தார்கள். மேசைகளை மாற்றி அமைத்து இருக்கும் ஒன்பது சதுர மீட்டர் இடத்தில் எப்படி நாற்காலிகளையும், மேசைகளையும் பொருத்துவது என்று அமைத்து முடித்தோம். எனது மடிக்கணினியை இணைத்து இயக்கினால் திரையில் கணினி பணிமேசை தெரிய ஆரம்பித்து விட்டது.

வருபவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை பதிவு செய்ய இன்னொரு மடிக்கணினியை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அரங்க வரவேற்புப் பணியை ஒப்படைக்கத் திட்டமிட்டு செய்து கொண்டிருந்தார். போக்குவரத்து, உணவு ஏற்பாடு, அரங்க நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்டிருந்தார். காட்சிப் படங்களுக்கான கோப்புகள், நேரங்கள், பார்வையாளர்களை வர வைப்பது என்று பொறுப்பு ஏற்றிருந்தார். குளோவியூ, வணிக வாய்ப்புகள்.

காலையிலேயே வந்து அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். 11.30க்கு முதல் காட்சிப்படம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். நமது நல்ல நேரமும் முயற்சிகளும் சேர்ந்து முக்கியமான இடத்தில் கடைக்கு நேரெதிரில் நமக்கு வாய்த்திருந்தது. இதே பகுதியில் பெரிய நிறுவனங்களின் கடைகளும் அமைந்திருந்தன. எதிர் கடைக்கு வந்ததும், அவரை அழைத்து 11.30க்கு காட்சிப்படத்துக்கு உட்கார வைத்தோம்.

காலையில் போய் அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தவர்களும் சில நிமிடங்களுக்குப் பிறகு சேர்ந்து கொண்டார்கள்.

மென்பொருள் உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்கள், வாடிக்கையாளரின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு செயல்படும் முறை, அதில் இருக்கும் நுணுக்கங்கள், தொடர்ச்சியான முதலீட்டுத் தேவை என்று சொன்ன கருத்துக்கள் நன்கு ஈர்த்தன. குறிப்பாக படங்களும், சித்திர துணுக்குகளும் அவரது கவனத்தை கவர்ந்தன. அவருக்குக் காட்டும் அறிக்கைகளிலும் அப்படி விபரங்களைப் புகுத்த வேண்டும்.

அடுத்த நாள் சொன்னது போல அவர் மங்களகரமாக ஆரம்பித்து வைத்த நிகழ்வுகள் நன்கு போக ஆரம்பித்தன. கணினித் துறை மேலாளர் என்று ஒருவர் வந்தார். அவருக்கு நம்மிடம் இருக்கும் மென்பொருள் வசதிகளைக் காட்டி விட்டு காட்சிப்படத்தையும் விளக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் நாங்கள் சாப்பிட்டு விட்டுத் திரும்பி விட்டோம். அது வரை உட்கார்ந்திருந்து எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டு போனார்.

மதியத்துக்கு மேல் இன்னொரு நிறுவனத்திலிருந்து ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த மேலாளர்கள் வந்தார்கள். அவர்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். மதிய காட்சி விளக்கத்துக்கு இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து வந்தேன். அதைத் தொடர்ந்து கடைக்குப் போய் அழைத்து வந்தேன். பார்த்து கைகுலுக்கி விட்டு வந்தேன். அவருடன் இருக்கும் பிணக்கைக் குறித்துப் பேச முடியாமல் விட்டு விட்டேன். அப்போது பேசியிருந்தால் நல்ல பலனளித்திருக்கும்.

நிறைய நண்பர்களும் வந்தார்கள். நமது கடை எப்போதுமே கலகலவென்று ஆட்கள் கூட்டம் கூடியவாறு காட்சியளித்தது. எதிர் கடையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கும். இரண்டாவது நாள் வந்தவர், மூன்றாவது நாள் வந்தவர், இரண்டாவது நாள் எட்டிப் பார்த்தவர் என்று எல்லோருக்குமே நம்மைப் பற்றிய மதிப்பீடு அதிகரித்திருக்கும். இரண்டாவது நாள் மதியம் நான் யாருக்கோ விளக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கும் போது கடந்து போனாள். ஆர்வம் பொங்கும் கண்களால் கடையைத் துளாவி விட்டுப் போனாள்.

முதல் நாள் மாலையில் கடையை மூடி அலுவலகம் திரும்பும் போது நிறைவாக இருந்தது. சூட்டோடு சூட்டாக முதல் நாள் நிகழ்வுகளைக் குறித்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

இரண்டாவது நாள் திங்கள் கிழமை. அலுவலகத்துக்குப் போய் என்னென்ன வாடிக்கையாளரை எப்படி அணுகலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். நான் சொன்னது போல மின்னஞ்சல்களை அனுப்பி விட்டுப் போயிருந்திருக்கலாம். அந்த வாய்ப்பைத் தவற விட்டோம். மற்ற நிறுவனங்களை அவர்களது கடைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போய் யாரையும் உருப்படியாகச் சந்திக்க முடியவில்லை. 11.30க்கு நம்ம ஆட்களுக்கே ஆரம்பித்தோம்.

என்னுடைய விளக்கப்படத்தில் பெயர் போட்ட திரைக்காட்சி இருந்தது. காலையில் அதை மாற்றியிருந்தது சரியாக சேமிக்கப்படாமல் சொதப்பியிருந்தேன். அதிலேயே எனக்குப் பாதி உயிர் போய் விட்டது.

அதற்குள் மதிய உணவு வேளை வந்து விட்டது. சாப்பிட்டு விட்டு வந்த பிறகு மேலும் நிறைய பேர் வர ஆரம்பித்தார்கள். காலையில் அழைத்து வந்து காட்டியிருந்ததைத் தொடர்ந்து அவரது நிறுவனத்தின் ஒரு இளம்பெண் வந்தார். அவருக்கும் வேதிப் பொருள் வாங்கி விற்பது குறித்த மென்பொருள் காண்பித்தோம்.

மூத்த துறை வல்லுனர் ஒருவர் வந்து பார்த்து விட்டு விற்பனையில் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களித்து விட்டுப் போனார்.

மூன்றாவது நாள் அலுவலகத்துக்கு நடந்து போய்ச் சேரும் போது எட்டரை மணி. யாராவது ஒருவர் போனால் போதுமா என்று கேட்டால் மறுத்து இரண்டு பேரும் போக வேண்டும் என்று சொன்னார். நல்லதாகத்தான் போனது. அலுவலகத்தில் எல்லாவற்றையும் பணி இயல்புக்கு கொண்டு வந்து விட்டார். 10 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்தோம். பார்வையாளர்கள் யாருமே வரவில்லை. காலையில் நண்பன் வந்தான். அவனை அதட்டி மிரட்டி உதவி கேட்டேன். அவனா செய்வான்!

சாப்பிடப் போயிருக்கும் போது வந்திருந்தவரைப் பிடித்து காட்சிப் படத்தைக் காண்பித்தேன். அப்போதும் அதன் பிறகும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். முதல் நாளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒருவர் தோல் பொருட்கள் தொழில் செய்பவர் வந்தது போல, கிண்டியில் தோல் பொருட்கள் செய்யும் தொழில் செய்பவர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார். முகவர் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியினர் வரவும் அவர்களுக்கு பேசினேன். அத்தோடு கிட்டத்தட்ட நிகழ்ச்சிகள் முடிந்து போயின.

பக்கத்து கடைகளில் பொருட்களை நீக்கி பொதிந்து கொண்டிருந்தார்கள். ஆணி அடிக்கும் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. நாங்களும் கடையை ஒதுக்கி விட்டுப் புறப்பட்டோம். நான் முன்னிருக்கையில் உட்கார்ந்து அலுவலகம் வந்து சேர்ந்தோம்.

இப்போதைய வாடிக்கையாளர்களுக்கு 'இரண்டு மூன்று பேர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடும் வேலை இல்லை. பெரிய குழுவாக, நிறுவனமாக செயல்படுகிறார்கள்' என்பதைத் தெரிய வைத்தது. விட்டுச் சென்று விட்டவர்களுக்கும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவான துறை நண்பர்களுக்கு நாம் இருப்பதை உரக்க அறிய வைத்தது. 60க்கும் மேற்பட்ட வருகையாளர்களில் 20 வரை திடமான வாய்ப்புகளுக்கான கதவு திறந்திருக்கிறது.

அடுத்த 10 நாட்களில் எல்லா வாய்ப்புகளையும் பின்தொடர்ந்து போய் திட்டப் பணிகளாக உருவாக்க வேண்டும்.

Saturday, January 17, 2009

multitasking - பல்செயல் வன்மை

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல வேலைகளை செய்வதை multitasking என்று குறிப்பிடுகிறார்கள். கணினித் திரையில் ஒரு தத்தலில் மின்னஞ்சல், இன்னொன்றில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆவணம், இன்னொன்றில் எழுதிக் கொண்டிருக்கும் நிரல், நான்காவதில் நிரலை சரிபார்க்கும் செயலி, ஐந்தாவதில் நண்பர் ஒருவருடன் இணைய அரட்டை என்று வைத்துக் கொண்டு இதிலிருந்து அதற்கு தாவுவது சிலருக்கு வாடிக்கை. எனக்கு அந்தப் பழக்கம் நிறையவே உண்டு.

சாப்பிடும் போது புத்தகம் படித்துக் கொள்வேன். பல் தேய்க்கும் போது, கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது நாளிதழ் படித்துக் கொண்டிருப்பேன். பேருந்தில் பயணம் செய்யும் போது படித்துக் கொண்டிருப்பேன். வீட்டை ஒதுங்க வைக்கும் போது, துணி துவைக்கும் போது ஏதாவது பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வேலையிலும் கையை வைத்துக் கொண்டிருப்பேன்.

multitasking செய்வதை ஒரு பெருமையாக வைத்திருப்பார்கள் மூளையால் வேலை செய்பவர்கள். சதாவதானி, தசாவதானி என்று ஒரே நேரத்தில் முறையே 100, 10 செயல்களை செய்யக் கூடியவர்களும் உண்டு. நான்கைந்து செயல்களுக்கு தாவிக் கொண்டிருப்பது பலருக்கு பழக்கமாக இருக்கிறது.

அதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்து பழக ஆரம்பித்தேன். பல் தேய்க்கும் போது பல் தேய்ப்பு மட்டும்தான். எண்ணக் கோர்வை வேறு எங்காவது போனால் அதை நூல் பிடித்து திருப்பி நிகழ்காலத்துக்குக் கொண்டு வர வேண்டும். சாப்பிடும் போது சாப்பாட்டில் மட்டும்தான் கவனம். சமைக்கும் போது சமையலில் மட்டும்தான் கவனம். கையில் புத்தகமோ நாளிதழோ இருக்காது.

நாளிதழ், புத்தகம் படிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி சரியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும். தூங்கப் போகும் போது புத்தகம் எடுத்துப் போகக் கூடாது. அலுவலகத்துக்கு நடந்து செல்லும் போது வேறு எதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. கண்ணில் படும் ஏதாவது காட்சியினால் எண்ணங்கள் தூண்டப்பட்டு கடந்த காலை நினைவுகளுக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டாலும் அதை உணர்ந்ததும் என்ன வரிசையில் அப்படிப் போனோம் என்று தடம் பிடித்து நடக்கும் பாதையை அவதானிப்பது மட்டும் செய்ய வேண்டும்.

தியானம் என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. வாழும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தில் இருப்பதாக மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுதான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பாடம். பள்ளிப் பருவத்தில் வீட்டில் 'அறிந்ததனின்றும் விடுதலை' என்று அட்டையில் பிசாசு போல கிருஷ்ணமூர்த்தி இருக்கும் புகைப்படம் போட்டு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று கிடந்தது. எது கிடைத்தாலும் முக்கி முக்கி படித்து முடித்து விடும் என்னால் கூட அதில் புகுந்து படித்து விட முடியவில்லை. அதன் பிறகு கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில மூலத்தில் சில நூல்களை பிடித்து கொஞ்ச கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். மிகவும் தூக்கம் வரவழைத்து விடக் கூடிய நடை. மிகவும் ஆழமான தத்துவம். அதைப் புரிந்து கொண்டு விட்டால் அவரது மற்ற நூல்களைப் படிக்கத் தேவையில்லை.

நிகழ்காலத்தில் மட்டும் வாழ வேண்டும். கடந்த காலம் என்று பிணத்தையும், எதிர்காலம் என்ற மாயையும் சுமந்து கொண்டிருந்தால் மனம் துன்புறத்தான் செய்யும். Just Be. அதை புத்தகம் புத்தகமாக, பிரசங்கம் பிரசங்கமாக விளக்கியிருப்பார். அவரது விளக்கங்களில் மனம் மாறினாலும், முற்றிலும் நிகழ்காலத்தில் வாழ்வது என்பது உடனேயே செய்து விடக் கூடியது இல்லை.

நன்கு நடந்து பழக வேண்டும் என்று மனிதர்களுக்குச் சொல்வது எளிது. குழந்தை ஒன்று முதலில் தவழ்ந்து, அதன் பிறகு தத்தி நடந்து, அதன் பிறகுதான் நடக்க முடியும். ஆரம்பத்திலேயே Just Be என்றால் எதுவும் வேலைக்காகாது.

ஓஷோ என்ற ரஜ்னீஷ் சாமியார் கிருஷ்ணமூர்த்தியை கிண்டலடிப்பார். அவரது பாடங்கள் படிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் எளிதானவை. 'சாப்பிடும் போது திட உணவுகளை திரவம் போலவும், திரவ உணவுகளை திட உணவு போலவும் வாயில் ஆக்கி சாப்பிட வேண்டும் என்பார். திட உணவை நன்கு சவைத்து, திரவமாக்கி விழுங்க வேண்டும். திரவ உணவை திட உணவை சவைப்பது போல வாயில் சுழற்றி விழுங்க வேண்டும். அப்போதுதான் உணவின் சுவையையும் குணத்தையும் நன்கு உணர்ந்து சாப்பிட முடியும்.' இது போல சின்னச்சின்ன எளிதில் புரியக் கூடிய வழிகளை நூற்றுக் கணக்கில் சொல்லிக் கொண்டே போவதில் ஓஷோவின் பாடங்கள் எளிதில் பின்பற்றும்படி இருக்கும்.

Saturday, January 3, 2009

வாழ்த்துக்களும் பரிசுகளும்

'உங்களது வழிகாட்டலுக்கும் நெறிப்படுத்தலுக்கும், ஆதரவுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் நிறுவனத்தின் வெற்றி நடையில் நாங்களும் பங்களிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றிகள்.

வரும் புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் இன்னும் ஒரு வெற்றிப்படியாக அமையட்டும்'

வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தின் சாரம். இப்படி ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவருக்கும் என் மனதில் பட்ட, நான் முழுமையாக நம்பிய நல்ல பண்புகளைக் குறிப்பிட்டு புத்தாண்டு செய்தி அனுப்பியிருந்தேன்.

ஒரு வாழ்த்துச் செய்தியை உருவாக்கி வைத்துக் கொண்டு குறுஞ்செய்தி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ மொத்தமாக எல்லோருக்கும் அனுப்பி வைப்பது சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடுதான்.

வாழ்த்துச் செய்தி அனுப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்:
  1. வாழ்த்து அட்டையில் கையால் எழுதிய செய்தியை சேர்த்து கையொப்பம் இட்டு அனுப்பலாம்.
  2. குறுஞ்செய்தி அனுப்பும் போது ஒவ்வொருவருக்கும் அவருக்குப் பொருத்தமான வகையில் எழுதி கையெழுத்துடன் அனுப்ப வேண்டும்.
  3. மின்னஞ்சலிலும் சுருக்கமாக, பெறுபவருக்கு மட்டும் போய்ச் சேருவதாக அவருடனான உறவைக் குறிப்பிட்ட அனுப்ப வேண்டும். (CCல் முழ நீளத்துக்கு முகவரிகள் இருந்தாலோ, நமது முகவரி தெரியாத BCC முறையிலோ வந்த மின்னஞ்சல்களை எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்).
  4. தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லி சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கலாம். நேரம் காலம் தெரியாமல் அழைத்து அவர்களை தொல்லைப் படுத்தி விடக் கூடாது என்று கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  5. மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அல்லது தொழில் முறை தொடர்புகள் என்றால் நேரில் போய் வாழ்த்தி சாப்பிட்டு விட்டு வரலாம். அல்லது முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களுக்கு அழைப்பு விடுத்து புத்தாண்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம்.
விருந்துக்கு ஏற்பாடு செய்யும் போதும் நமக்குத் தெரிந்த எல்லோரையும் ஒரே நாளில் அழைப்பது எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். திருமணம், பிறந்த நாள் என்று ஏதாவது வீட்டு நிகழ்ச்சிக்கு நம்மைச் சேர்ந்த எல்லோரையும் அழைப்பது சரியாக இருக்கும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவார்கள், வாழ்த்தி விட்டு, சாப்பிட்டு விட்டுப் போவார்கள்.

நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ந்திருக்கும் வகையில் ஏற்பாடு செய்யும் விருந்துகளில் நம்மை மட்டும் மையமாக வைத்து ஆட்களை அழைப்பது கொஞ்சம் அநாகரீகமாகப் படுகிறது. வருபவர்கள் யார் யார், ஒவ்வொருவரும் மற்ற விருந்தினர்களை சந்திப்பதை எப்படி விரும்புவார்கள் என்று தீவிரமாக யோசித்துதான் விருந்தினர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும். ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற எல்லோரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும்.

பல பேரை அழைத்து விட்டு, அழைத்தவர் தனித்தனியே வரவேற்று, அறிமுகம் செய்து வைக்க நேரமில்லாமல், விருந்தினர்கள் தமக்குத் தாமே அறிமுகம் செய்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது வீட்டு விருந்தில் பொருத்தமாகப்படுவதில்லை.

முக்கியமான ஒன்று பரிசுப் பொருட்கள். பரிசுப் பொருட்கள் திரட்டுவதற்காகவே விருந்து வைப்பவர்கள் விருந்துகளையே தவிர்த்து விட வேண்டும். வருபவர்கள் கொண்டு வரும் பரிசுப் பொருட்கள் மீது நமக்கு எள்ளவும் ஆர்வம் இருப்பதாக உணர்ந்தால், பரிசுப் பொருட்கள் வேண்டாம் என்று முன் கூட்டியே கண்டிப்பாக அறிவித்து விடுவது மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளை, பிறந்த நாள் கொண்டாடினால் நிறைய விளையாட்டுப் பொருட்கள் பரிசாக கிடைக்கும் என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது ஒவ்வாத பண்புகளை விதைத்து விடும்.

விருந்து அளிப்பது நாலு பேருடன் சேர்ந்து பேசி மகிழ்ந்திருப்பதற்கு, குழந்தைகள் கூடி விளையாடுவதற்கு, நல்ல உணவுப் பொருட்களை பகிர்ந்து உண்டு களிப்பதற்கு என்ற நோக்கத்துடன் மட்டும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி நடத்தும் போது வருபவர்கள் வெறுங்கையோடு போக வேண்டாம் என்று ஏதாவது பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அப்போதும் கூட பரிசுப் பொருட்களை மொத்தமாக திரட்டி சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு வினியோகித்து விடுவது நல்லது.