Tuesday, December 26, 2006

திட்டங்களும் நடைமுறை மாற்றங்களும்

ஒரு நிறுவனத்தின் தீர்மானிக்க முடியாத காரணி பணி புரியும் ஊழியர்கள்தாம். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலில், பிற்சேர்க்கை பிரிவில் கதையின் பாத்திரங்கள் அமைதியான வாழ்க்கையில் தத்தமது வேலைகளைப் பார்க்கிறார்கள். அவர்களுள் மேரியை கைப்பிடித்துக் கொண்ட நிக்கோலஸ், அவளது சொத்தாக வந்த நிலங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபடுகிறான்.

'அவனுக்கு நவீன பயிரிடும் முறைகளில் நம்பிக்கை இல்லை. இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் அப்போது செய்யப்படுவதாகக் கூறப்பட்ட பரிசோதனைகளில் அவன் கருத்தைத் திருப்புவதேயில்லை. அவனது ஆர்வம் எல்லாம் ரஷ்யக் குடியானவனின் மீதுதான்'

அப்போதிருந்த சமூக அமைப்பின் கீழ், ஒவ்வொரு பண்ணையிலும் பல குடியானவர்கள் கூட்டாக வாழ்ந்து வருவார்கள். பண்ணையாரின் நிலத்தைத் தவிர்த்து ஒவ்வொரு விவசாயியும் சொந்தமாகவும் பயிரிட்டு வருகிறான்.

'நிக்கோலஸ் தனது நிலத்தை விட தனக்குக் கீழ் வசிக்கும் குடியானவர்களின் நிலத்து வேலைகளில் அதிக கவனம் செலுத்துவான். அவர்களது பயிர் சரியான நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்குள் போய்ச் சேருகிறதா என்பதில் தனது பயிர் வேலைகள் அளவுக்கு அக்கறை காட்டுவான். அந்த வட்டாரத்திலேயே அவனது விவசாய வேலைகளைப் போல துரிதமாக செம்மையாக நடந்து முடியும் பண்ணை வேறு எதுவுமே கிடையாது என்று சொல்லலாம்'

'அவர்தான் பண்ணையார். குடியானவனின் பயிரைத் தன்னுடைய பயிரைப் போலப் பார்த்துக் கொள்வார். ஆனால், அவரிடம் யாரும் வாலாட்டவும் முடியாது, ஒட்ட நறுக்கி விடுவார். சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர் உண்மையான பண்ணையார் - இப்படிப் பேசிக் கொள்வார்கள் நிக்கோலஸுக்குப் பணி புரியும் குடியானவர்கள். நிக்கோலஸின் காலத்துக்குப் பிறகும் குடியானவர்கள் மத்தியில் இந்தப் புகழ் வெகு காலம் பேசப்பட்டு வந்தது. அவனது காலத்தில் பக்கத்து பண்ணையின் குடியானவர்ள் தம்மை விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு அவனிடம் வந்து வேண்டிக் கொள்வார்கள்'

மற்ற காரணிகளை அளந்து வகைப்படுத்தி வீணாக்கலைக் குறைத்து சிறப்பாக பயன்படுத்த வழி செய்து கொள்ளலாம். அடிமை முறையின் கீழ் வேலை பார்க்கும் போது கூட ஒவ்வொருவருக்கும் சுயவிருப்பம் என்ற காரணி வேறு எவராலும் பாதிக்கப்படாத தூரத்தில் இருக்கிறது. குறிப்பிட்ட சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வேலை பார்க்க வந்து விட்டாலும், என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்ற கடைசி முடிவை திட்டமாக அளந்து மட்டுப்படுத்தி விட முடியாது.

ஒரு வணிக நிறுவனத்தின் குறிக்கோள் என்ன? பணம் ஈட்டுதல். உள்ளே எடுத்துக் கொள்ளும் பொருட்களின் மதிப்பைக் கூட்டி கூடுதல் விலைக்கு வெளியே விற்று செலவுகள் எல்லாம் போக மீதியை ஆதாயமாக கொள்ளுதல் நிறுவனத்தின் அடிப்படைச் செயல்பாடு.

ஒரு புது வீட்டுக்குப் போனதும், காலையில் பால் போட ஏற்பாடு, செய்தித் தாள் போட சொல்லி விடுவது, வீட்டு வேலைகளைச் செய்ய வேலைக்கார அம்மாவை அமர்த்துவது, சமையல் வாயு இணைப்புப் பெற்றுக் கொள்வது, பக்கத்தில் துணி தேய்க்க கடை எங்கு இருக்கிறது என்று துப்பு துலக்குவது, பொருட்கள் வாங்க வசதியான கடை எது என்று கண்டறிவது என்று பல சிறு வேலைகள் காத்திருக்கும். இந்த நேரத்தில், மாற்றங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு சமாளிக்கும் பக்குவம் இல்லா விட்டால் எல்லாவற்றையும் திறம்பட முடிக்க முடியாது.

குடும்பத்தின் தலைவி இதை எல்லாம் முடிவு செய்தவுடன், காலையில் பால் வாங்குவதற்கு அட்டையுடன் ஒரு தெரு தள்ளி இருக்கும் பால் மையத்தில் காலையில் ஐந்தரை மணிக்குப் போய் வாங்கி வருவதை வயதான மாமனார், அல்லது பதின்ம வயது மகன் ஏற்றுக் கொள்கிறார்கள். மாதம் தோறும் அட்டையைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்வது குடும்பத்தலைவரின் வேலை.

இந்த ஏற்பாட்டின் படி பாலை தினமும் வாங்கி வரும் சிறுவனுக்கு, 'எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்' என்று திட்டத்தைச் செயல்படுத்த முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. திட்டம் குலைந்து ஒரு நாள் பால் வண்டி வராமலேயே போய் விட்டால் அவன் மண்டையைக் குழப்பிக் கொள்ளப் போவதில்லை. நேராக அம்மாவிடம் போய், இன்றைக்கு பால் வரவில்லை என்று சொல்லி விட வேண்டியதுதான். மாற்று ஏற்பாடு என்ன என்று யோசித்து உத்தரவு கொடுக்க வேண்டியது அவர் தலைவலி.

அம்மாவின் மனதில் 'அப்பாடா எல்லாம் ஏற்பாடு செய்தாகி விட்டது, இனிமேல் நிம்மதியாக வேறு வேலைகளைப் பார்க்கலாம்' என்று முழு விடுப்பு கிடைக்கவே செய்யாது. எந்த நேரத்திலும் திட்டக் குலைவுகளுக்குத் தயாராக இருக்கும் மனநிலையும் அதைச் சமாளிக்கும் பக்குவமும் வேண்டும். இதனால் தொடர்ச்சியான மன அழுத்தமும் இருந்து வரும்.

இதே நிலைதான் ஒரு நிறுவனத்தை மேலாளுவதிலும். புதுக் கணினிகளை வாங்கிக் கொள்ளலாம். உயர்தர இயந்திரங்களை வாங்கி அமைத்து விடலாம். பணி புரியும் ஊழியர்களுக்கான வழிமுறைகளை வகுத்த விடலாம். ஆனாலும் ஒவ்வொரு நாளும் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, தொடர்புடைய எல்லா மனிதர்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப தமது திட்டங்களையும் வழிகாட்டலையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய தேவை நிறுவனத்தின் தலைமைக்கு.

ஒரு இயந்திரத்தை நிறுவிக் கட்டுப்பாடுகளை அமைத்து விட்டால் யாராவது இடையூறு செய்யும் வரை அது ஓடிக் கொண்டே இருக்கும். உயிரற்ற காரணிகள் எல்லாவற்றுக்கும் விதிமுறைகளின் கீழ் ஒரே மாதிரியாகச் செயல்பட வழி வகுத்துக் கொடுத்து விடலாம். தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய ஊழியர்களை நேரடியாகக் கையாளும் போதோ, இயந்திரம், மூலப் பொருட்களில் மனித முயற்சியால் செய்ய வேண்டிய அமைப்புகளை திட்டமிடும் போதோ 'இப்படித்தான் நடக்கும்' என்று உறுதியாக நம்ப முடியாமல் யாராலும் தீர்மானிக்க முடியாத ஒரு காரணி வந்து சேர்கிறது.

வெற்றிகரமாக நடக்கும் நிறுவனங்களை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய காரணி அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களின் மனநிலைதான். எங்கெல்லாம் பணி புரியும் சூழல் மகிழ்ச்சியாக, இயல்பாக, ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் இருக்கிறதோ, இயல்பான போக்கை ஊக்குவித்து, அதற்குத் தடையானவற்றை நீக்கி விட்ட சூழல் நிகழ்கிறதோ, அங்கிருந்து வெளிவரும் பொருட்கள்/சேவை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்.

மேலாண்மை படித்த உயர் மேலாளர்கள் உட்கார்ந்து மூன்றாண்டு, ஓராண்டு, அடுத்த மாதத் திட்டங்களை எண்களை நிரப்பித் தயாரித்தாலும், கணினியில் நிரல் எழுதக் கூடிய மென்பொருள் உருவாக்கும் பொறியாளர், வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ளும் சேவைப் பிரிவு ஊழியர். புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொள்ள முயலும் விற்பனைப் பிரிவு அலுவலர் இவர்களதான் எவ்வளவு பெரிய திட்டத்தையும் நடத்திக் காட்ட வேண்டியவர்கள்.

ஒரு நிறுவன அமைப்பின் முழு நோக்கமும் களப்பணியை ஆற்றும் மக்களுக்கு எப்படி வசதிகள் செய்து கொடுத்து அவர்கள் சந்திக்கும் தடைகளை நீக்கி ஒவ்வொரு நாளும் சரியான மனநிலையுடன், எரிச்சல்கள் இல்லாமல் தான் செய்ய வேண்டிய வேலையை செய்ய உதவுகிறோம் என்பதிலேயே இருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நிறுவனத்தில் மதிய உணவு எல்லோருக்கும் அலுவலகத்திலேயே வழங்க ஏற்பாடு செய்தோம். அப்போது புதிதாக மாறியிருந்த அலுவலகத்தின் அருகில் சாப்பிடும் விடுதிகள் எதுவும் இல்லை. 'ஒவ்வொருவராக இரண்டு மூன்று கிலோமீட்டர் போய்ச் சாப்பிட்டு வருவதை விட மொத்தமாக வாங்கி வந்து விடலாம். ஒதுங்கிய இடத்தில் அலுவலகத்தை மாற்றியதால் மிச்சமாகும் வாடகைப் பணத்தை இந்த வகையில் செலவிடலாம்' என்று முடிவெடுத்தோம்.

ஆரம்பத்தில் பதினொன்றரை மணிக்கே ஒருவர் எத்தனை பேருக்கு சாப்பாடு வேண்டும் என்று முடிவு செய்து, ஒரு மணி போலக் கடைக்குச் சென்று சாப்பாடு வாங்கி வந்து விடுவார். பத்து பேர் அலையா விட்டாலும் ஒருவருக்கு அந்தக் கவலையும் தினசரித் திட்டமிடலும் இருந்தது. கணினியில் உட்கார்ந்து மும்முரமாக நிரல் எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர் மதியச் சாப்பாட்டைப் பற்றியும் திட்டமிட்டுக் கொண்டிருந்தால் அவரது கவனம் சிதறி விடும். ஒன்றரை மணிக்கு பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிட உணவு கிடைக்கும் என்ற உறுதி இருந்தால் பெரும் மனக் கவலை அவர் கையை விட்டுப் போய் விடுகிறது.

காலையில் வேலைக்குப் போகும் மகன்/மகளுக்குச் மதிய உணவும் சமைத்து பாத்திரத்தில் அடைத்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் நிறுவனத்திலேயே தரமான சாப்பாடு கிடைக்கிறது என்று தெரிந்தால் வேலைக்குக் கிளம்பும் போது மனத்தை உழப்பக் கூடிய ஒரு பெரிய காரணி இல்லாமல் போய் விடுகிறது.

'சாப்பாடு கட்டியாச்சாம்மா, தினசரி இதாலே நேரமாகிறது.'
'இன்னைக்கு கேஸ் தீர்ந்து போச்சு, வெளியே சாப்பாட்டைப் பார்த்துக்கோ'
'இன்னைக்கு கொஞ்சம் முடியலை, இருப்பதை வச்சு சமாளிச்சுக்கோ'

என்று மனதுக்குக் கடுப்பேற்றும் நிகழ்ச்சிகள் முற்றிலும் தடுக்கப்பட்டு விடும். வேலைக்குப் போவதால்தானே மதிய உணவு கட்டிக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. அந்தப் பணியால் பலன் பெறும் நிறுவனமே அதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டால் வேலை செய்பவர்களுக்கு வேலையில் முழுக் கவனமும் இருக்கும்.

இதையே எடுத்துக் கொண்டு பார்த்தால் தரமான கணினி வசதிகள், சிக்கலற்ற உள்ளுறை மற்றும் இணைய இணைப்புக்கள், தேவைப் படும் போது குடிக்க பானங்கள் என்று ஒவ்வொரு தேவைகளையும் நிறைவேற்றி விட்டால் அந்த நிறுவனத்தில் நடைபெறும் பணியின் தரம் உயர்வாக இருக்கும்.

2 comments:

Sridhar V said...

//அந்தப் பணியால் பலன் பெறும் நிறுவனமே அதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டால் வேலை செய்பவர்களுக்கு வேலையில் முழுக் கவனமும் இருக்கும்//

அது மட்டுமல்ல... ஊழியருக்கான subsidaries-க்கு வரி விலக்கு உண்டு என்பதும் ஒரு காரணம் என்று நினைக்கின்றேன்.

Just curious - இதை ஏன் நீங்கள் 'மேலாண்மை' தலைப்பில் சேர்க்கவில்லை?

நல்ல கட்டுரைக்கு மிக்க நன்றி!

மா சிவகுமார் said...

வணக்கம் ஸ்ரீதர்,

//ஊழியருக்கான subsidaries-க்கு வரி விலக்கு உண்டு என்பதும் ஒரு காரணம் என்று நினைக்கின்றேன்.//

இரண்டு ஆண்டுகளாக, FBT மற்ற ஊதியத்தின் மீதான வரி என்று இதன் மீதும் வசூலித்து விடுகிறார்கள் :-)

//இதை ஏன் நீங்கள் 'மேலாண்மை' தலைப்பில் சேர்க்கவில்லை?//

தமிழ் மணத்தில் சேர்க்கும் போது இனிமேல் கவனமாக இருக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்