Wednesday, June 30, 2010

பொருளாதார முடக்கம்??

நோபல் பரிசு பெற்ற பால் குரூக்மேனின் பத்தியிலிருந்து.

(நேற்றைய டெக்கான் குரோனிக்கிளில் வெளிவந்தது.)

பொருளாதாரச் சுணக்கத்திலிருந்து உலக நாடுகளின் பொருளாதாரம் இன்னும் குணமாகவில்லை. அதற்குள் செலவைக் குறைக்கிறேன் என்று அரசின் ஆதரவுத் திட்டங்களை நிறுத்தி விட்டால் அது இன்னொரு சுணக்கத்துக்கு வழி வகுத்து, பெரும் முடக்கத்தில் கொண்டு விடும்.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரிதாகவே இருக்கிறது. வேலை வாய்ப்புகள் உருவாகி வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் வரை அரசுகள் தமது செலவுக் கொள்கைகளைத் தொடர வேண்டும். இல்லை என்றால் பொருளாதாரக் கொள்கை மூலமாக 1930களில் ஏற்பட்டது போன்று பொருளாதார முடக்கத்தில் தள்ளப்பட்டு விடுவோம்.

1930களிலும் தொடர்ச்சியான வீழ்ச்சியாக இருக்கவில்லை. முதல் 2 ஆண்டுகளுக்கு சுணக்கம், அதன் பிறகு ஒரு ஆண்டு வளர்ச்சி, அதன் பிறகு அரசின் தவறான நடவடிக்கைகளால் மீண்டும் வீழ்ச்சி என்று போய் பொருளாதார முடக்கத்தில் அமெரிக்க பொருளாதாரம் கிட்டத்தட்ட 30% சுருங்கியது. வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடியது. ஃபிராங்கிளின் ரூஸ்வெல்டின் தைரியமான புதிய வாய்ப்பு திட்டங்கள் மூலமாக ஆரம்பித்த பொருளாதார மேம்பாடு இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட செலவுகள் மூலம் மீண்டும் வேகம் பிடித்தது.

இப்போதும் நாம் கிட்டத்தட்ட 1930களில் ஏற்பட்ட முதல் மேம்பாடுகளின் கட்டத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் அரசுக் கொள்கைகள் பாதகமாக செயல்படுத்தப்பட்டால், பொருளாதாரம் முடக்கத்துக்குப் போய் ஆயிரக் கணக்கான பேர் வேலையில்லாமல் பல ஆண்டுகள் கழிக்க நேரிடும். பலர் இனிமேல் வேலை செய்யும் வாய்ப்பையே தமது வாழ்க்கையில் இழந்து விடுவார்கள். நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு ஏற்படும்.

இதனைத் தடுக்க அரசாங்கம் தொடர்ந்து பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் செலவினங்களை செய்ய வேண்டும். இப்போது போய் வரவு செலவு சமன் செய்தல், சிக்கன நடவடிக்கைகள் என்பது அரசுகளுக்குப் பொருந்ததாது. தனி நபர்களும், தொழில் நிறுவனங்களும் அந்தப் பாதையில் போகும் போது அரசாங்கம் பற்றாக்குறை நிதித் திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்துக்கு வளர்ச்சி ஊக்கம் அளிக்க வேண்டும்.

பொருளாதார சுணக்கம் பற்றிய முந்தைய இடுகைகள்

பொருளாதாரச் சுணக்கம் - சில பகிர்வுகள்
கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்ப...
உலகப் பொருளாதார நெருக்கடி - 1

Tuesday, June 29, 2010

பணம் என்பது திறமையின் வெளிப்பாடா?

தமிழ்நாட்டில் நீண்ட தூர பேருந்துகளில் கட்டண வீதம் ஒரு கிலோமீட்டருக்கு 28 பைசா.
  • 28 ரூபாய் இருந்தால் 100 கிலோமீட்டர் போகலாம். (100 கிலோமீட்டர் x 28 பைசா = 28 ரூபாய்).

  • 5 ரூபாய் இருந்தால் 15 கிலோமீட்டர் போகலாம் (500 பைசா / 28 பைசா = 17.8). 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு போக முடியாது. (விரைவுப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகள் என்று பல தடங்களில் கட்டணம் கூடுதலாக இருக்கும்.)
கணக்கை எளிமைப் படுத்த ஒரு ரூபாய்க்கு எத்தனை கிலோமீட்டர் போகலாம் என்று குத்துமதிப்பான எண்ணை வைத்துக் கொண்டு பார்க்கலாம். 100/28 = 3.5 கிலோமீட்டர்கள்.

இரண்டு ரூபாய் கொடுத்து நாளிதழ் வாங்குகிறோம் என்றால் 7 கிலோமீட்டர் (2x3.5) நடப்பதில் அல்லது ஓடுவதில் செலவாகும் உழைப்பை அந்த நாளிதழுக்காக தருகிறோம் என்பது பொருள். அப்படிப் பார்க்கும் போது 2 ரூபாய்க்கு மதிப்பு இன்னும் தெளிவாகப் புரிகிறது.

ஒரு வேலைக்கு பத்தாயிரம் ரூபாய் கேட்கிறோம் என்றால் கிட்டத்தட்ட 35,000 கிலோமீட்டர் (10,000x3.5=35,000) நடப்பதற்கான உழைப்பை நாம் அளிக்கிறோம் என்று பொருள். அந்த உழைப்பில் இப்போது செலவளிக்கும் நேரம் ஆற்றலுடன் கூடவே அந்த வேலையைச் செய்யத் தேவையான திறமையைப் பெற மேற்கொண்ட கல்வி, விபரங்களைத் திரட்ட செலவழித்த நாட்கள் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு உழைப்பு அதில் இருக்கிறதா?

1 லட்சம் ரூபாய் மென்பொருளை விற்கிறோம் என்றால் கிட்டத்தட் (1,00,000x3.5=3,00,000) 3.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் முயற்சியும் பலனும் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கிறோமா?

இதுதான் கணக்கு.

  • பொருளாதார உலகில் எல்லாமே மனித உழைப்புதான். மற்றவை எல்லாம் இயற்கையில் கிடைப்பவை.
  • நிலம், தாதுப் பொருட்கள், விளைபொருட்கள் இவை இயற்கையிலேயே உருவாகியிருக்கின்றன.
  • நிலத்தைப் பண்படுத்த, தாதுப் பொருட்களை அகழ்ந்து தூய்மைப்படுத்த, விளைபொருட்களை பெருக்க, புதிய பொருட்களை உற்பத்தி செய்ய மனித உழைப்பு தேவைப்படுகிறது.
  • இந்த உழைப்பு நேரடியாகவோ அல்லது ஒரு இயந்திரம் மூலமாகவோ நடக்கலாம். இயந்திரம் செய்யவும் மனித உழைப்புதானே தேவைப்படுகிறது.

இந்த மனித உழைப்புக்கு மட்டும்தான் பொருளாதார பரிமாற்றத்தில் மதிப்பு. உழைப்பின் விளைவை பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நமது உழைப்பினால் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொள்ள முயற்சிக்காமல், தேவைகளில் பலவற்றை மற்றவர்களின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொள்ள முடிகிறது. நமது உழைப்பின் பலனை அவர்களின் தேவைகளுக்குக் கொடுப்பது மூலம் அந்தப் பரிமாற்றத்தை நடத்திக் கொள்கிறோம்.

அப்படிப்பட்ட பரிமாற்றத்தின் செலாவணிதான் பணம். நான் உழைத்ததற்கு பணம் கிடைக்கிறது, அதைக் கொண்டு அடுத்தவரின் உழைப்பை வாங்கிக் கொள்கிறேன். ஒரு நாளின் 24 மணிநேரமும் ஒரு வாழ்நாளும்தான் ஒவ்வொரு மனிதரின் இயற்கையான சொத்து. அவற்றைப் பயன்படுத்தி உருவாக்கும் மதிப்பை விற்று பணம் ஈட்டி மற்ற தேவைகளை நிறைவேற்ற அடுத்தவரின் உழைப்பை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த உழைப்பு நேரடியான உடல் உழைப்பாக மட்டும் இன்றி, முந்தைய ஆண்டுகளில் குறிப்பிட்ட வேலையை செய்ய உழைத்த முயற்சிகளையும் உள்ளடக்கும். ஒரு துறையில் பட்டம் வாங்க உழைத்திருக்கிறோம், அந்த அறிவைக் கொண்டு குறிப்பிட்ட செயலை சிறப்பாக செய்ய முடிகிறது (அதிக மதிப்பு உண்டாக்க முடிகிறது), அதற்கு ஏற்ற பணம் விற்பனையில் கிடைக்கும்.

இந்த உழைப்பில் பணியை செய்வதற்குத் தேவையான கருவிகளை வாங்கிய பணமும் அடங்கும். கருவிகள் மூலம் உழைப்பு அதிக மதிப்பைத் தருகிறது. அந்தக் கருவிகளை வாங்குவதற்கு முந்தைய உழைப்பின் பலனைப் பயன்படுத்தியிருக்கிறோம். அந்த உழைப்பும் நமக்குக் கிடைக்கும் விலையில் அடங்க வேண்டும்.

உற்பத்தியின் காரணிகளாக நிலம், மனித உழைப்பு, மூலதனம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பரிமாற்றத்தின் காரணிகளாக மனித உழைப்பு மட்டுமே இருக்க வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய உழைப்பு, மூலதனத்தை உருவாக்கிய உழைப்பு இரண்டையும் நேரடி உழைப்புடன் சேர்த்து உற்பத்தியின் மதிப்பை கணக்கிடலாம்.

Saturday, June 19, 2010

ஒரு வங்கியின் கதை

1993ல் வங்கியாக தொடங்கப்பட்ட ஐசிஐசிஐ நிறுவனம் அடுத்த 15 ஆண்டுகளில் போட்ட ஆட்டம், மேற்கத்திய நிதி நிறுவனங்கள் கண்டு பிடித்த புதிது புதிதான உத்திகளின் மூலம் மக்களின் உழைப்பை (பணத்தை) சுரண்டி, அந்த நிறுவனங்களின் மேலாளர்களும் பங்குதாரர்களும் பெரும் பணம் எடுத்துக் கொண்ட கதையின் ஒரு சிறு வடிவம்.

இந்திய ஒழுங்கு முறை சட்டங்களுக்குள் பெரிய அளவில் தில்லுமுல்லு செய்ய முடியாமல் தப்பித்து விட்டார்கள்.

பொருளாதார சீட்டு அடுக்கு சரிந்த பிறகான சென்ற ஒன்றரை ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கி ஜூன் 27 தேதியிட்ட பிஸினஸ் இந்தியா ஆங்கில இதழில் அட்டைப்படக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையிலிருந்து சில விபரங்கள்:
  • வட்டி வழியாக சம்பாதித்தது, வட்டி அல்லாத வருமானம் இரண்டும் 2009-10ல், 2008-09ஐ விடக் குறைந்து விட்டன.

  • நேரடி விற்பனையாளர்களுக்கு (அதுதான் தெருவெல்லாம் வழி மறித்து கார்டு வித்தாங்களே) செலவழித்த தொகை 2009-10ல் முந்தைய ஆண்டை விட நான்கில் ஒரு பகுதியாகக் குறைக்கப்பட்டது.

  • கடன் கொடுத்த தொகை கிட்டத்தட்ட 15% குறைக்கப்பட்டது. வைப்புத் தொகை 7% குறைந்தது.

  • வாரக்கடன்களின் சதவீதம் கடன் தொகையில் 2.09%லிருந்து 2.12 உயர்ந்தது.
கடனட்டை வியாபாரத்தைப் பற்றி:

ஒரு காலத்தில் குறைந்தது அரை டஜன் கடனட்டை விற்பனையாளர்கள் துரத்தாமல் ஒரு கடைத்தெருவுக்குப் போய் வர முடியாத நிலைமை இருந்தது. உங்களிடம் ஒரு செல்பேசி இருந்தால் கடனட்டை வாங்கும் தகுதி இருப்பதாக எடுத்துக் கொண்டார்கள்.

'இன்றைக்கு மாதத்துக்கு கிட்டத்தட்ட 1000 கடனட்டைகள் வழங்குகிறோம். ஒரு கட்டத்தில் மாதத்துக்கு 2,00,000 அட்டைகள் கூட கொடுத்துக் கொண்டிருந்தோம்.'

சில்லறைக் கடன் (கடனட்டை, தனிநபர் கடன்) கொடுப்பதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள். மொத்த கடன் தொகையில் 49% ஆக இருந்த சில்லறைக் கடன்களை இப்போது 43.6% ஆக குறைத்திருக்கிறார்கள்.

விற்பனைப் பொருளை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மாற்றி வாடிக்கையாளரை மையமாக வைத்து சேவை வழங்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

'முன்பெல்லாம் எப்படியாவது புதிய வாடிக்கையாளரைக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் மந்திரமாக இருந்தது. இப்போது வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்துகிறோம்.'