Sunday, December 30, 2007

ஓடிக் கொண்டே இருக்கணும்

ராமகிருஷ்ணரின் குட்டிக் கதைகளில் ஒன்று. ஒரு விறகுவெட்டி காட்டுக்குப் போகிறார். காட்டின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் முனிவரிடம் 'நல்ல மரங்கள் எங்கு கிடைக்கும்' என்று கேட்கிறார். "உள்ளே உள்ளே போ" என்கிறார் முனிவர்.

உற்சாகமாக உள்ளே போனார் விறகுவெட்டி. நல்ல உயர்தர விறகுக்கான மரங்கள் கிடைத்தன. நல்ல காசு. அடுத்த முறை மரம் எடுக்க வரும் போது முனிவரின் சொற்களை நினைவு கூர்ந்து இன்னும் உள்ளே போனார். வீடுகள் கட்ட, மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் அருமையான மரங்கள் இருந்தன. பல நாட்கள் கழித்து வரும் போது இன்னும் உள்ளே போகலாம் என்று போனால் சந்தன மரங்கள் இருந்தன. (அப்போதெல்லாம் சந்தன வீரப்பன் மட்டும்தான் வெட்ட முடியும் என்று இல்லை போலிருக்கிறது).

அவர் பெரும் பணக்காரராகி விட்டார்.

கதை சொல்வது என்னவென்றால், உன் நிலையில் நிறைவுற்று நின்று விடக் கூடாது. தொழிலாக இருந்தாலும் சரி, படிப்பு, கலை, விளையாட்டு, சமூக அறிவியலாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, தனி மனிதனோ, சமூகமோ மேலும் மேலும் மேம்பட முயற்சிக்க வேண்டும்.

ஜக்கி வாசுதேவ் சொன்னதாக என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் சொன்னார்.
'நாம் விரிவடையும் போது பலர் அழிந்து போகிறார்களே அது பாவம் இல்லையா'

'அப்படி விரிந்து கொண்டே போவது மனித இயல்பு, அதுதான் இயற்கையின் அழைப்பு. உன் நிலையை தொழிலை பெருக்காமல் இருப்பதுதான் மனித இயல்புக்கு எதிரானது. நீயாகத் தேடிப் போய் ஒருவரை அழிக்க வேண்டும் என்று போகாத வரை, உனது விரிவாக்கலில் அடிபட்டு விடக் கூடியவர்களுக்கு நீ பொறுப்பு கிடையாது. ஒவ்வொரு உயிருக்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முனைப்பு உண்டு. அது உனக்கும் இருக்க வேண்டும்'

Friday, December 28, 2007

போர்க்களம் - 5

முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி

ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். 20 நிமிட நடையும் கிடைத்தது. 7 மணிக்கு வாராந்திர பரிசோதனை செய்ய வேண்டும். 7 மணி தாண்டி ஐந்து நிமிடங்களில் அலுவலகம். வேலை ஆரம்பித்து விட்டது. ஒரு பால் ஊத்தாத தேநீர் மட்டும் குடித்துக் கொண்டேன். எட்டேகாலுக்கு வந்திருந்தவர்களை வைத்து கூட்டத்தை ஆரம்பித்து விட்டோம். அடுத்த சில நிமிடங்களில் எதிர்பார்த்த எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள். ஒருவர் மட்டும் டிமிக்கி.

முந்தைய நாள் கூட்ட விபரங்களையும் விளக்கி விட்டு என்ன பேச வேண்டும் என்று எல்லோரது கருத்தையும் தெரிந்து கொண்டேன்.
  • இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து நமக்கும் ஆதாயம் இது வரை கிடைக்கவில்லை.
  • பல லட்சங்கள் செலவழித்து அவர்களுக்கும் முழுப் பலன் கிடைக்கவில்லை.
  • இன்னும் மூன்று மாதங்கள் வேலை செய்ய என்ன அடிப்படை.
  • வேலை வெற்றிகரமாக முடியாவிட்டால், என்ன தண்டம்,
  • முடித்து விட்டால், என்ன வெகுமதி
    என்று ஒவ்வொருவராகக் கருத்து சொன்னார்கள்.
ஒன்பதே முக்காலுக்கு அந்த கூட்டம் முடிய தயாரிப்பு ஆவணங்களுக்காக அரை மணி நேரம் போனது. கிளம்பும் போது பத்தரை மணி, ஒரு வாய் ஏதாவது சாப்பிட நேரமில்லை. 11 மணிக்கு வரச் சொன்னவரின் அலுவலத்தை அடையும் போது 11.20. நல்ல வேளையாக அவர் தாமதமாக பதினொன்றரைக்குத்தான் வந்தார். அவரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்த நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டு அடுத்த இடம் 12 மணிக்கு. அவர் இன்னும் வந்திருக்கவில்லை.

கிடைத்த இடைவெளியில் போய் சாப்பிட்டுக் கொண்டோம். மீண்டும் வரவேற்பு பகுதியில் காத்திருக்கும் போது அதிகம் காத்திருக்கும் முன் அவரே வந்து விட்டார். வேறு யாரும் காத்திருக்கவும் இல்லை. சாப்பாட்டு வேளை என்பதால் சாப்பிட ஆரம்பிக்கும் முன் சந்திக்க முடியுமா சாப்பிட்ட பிறகுதானா என்று உட்கார்ந்திருந்தோம். இடையில் அவரது உதவியாளரிடம் நினைவுபடுத்தவும் செய்தேன்

ஒன்றரை மணி வாக்கில் உள்ளே கூப்பிட்டார்கள். 'சாப்பிட்டிருக்க மாட்டார், சீக்கிரம் பேசி விட்டு வந்து விடலாம்' என்று போனோம். பேசி முடித்து வெளி வரும் போது மணி 4 தாண்டி விட்டிருந்தது. அவர் சாப்பிடாமலேயே பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு நிலைக்குப் பிறகு எனக்கும் அந்த கவனம் தப்பி விட்டிருந்தது. வெளியே வந்த பிறகு உதவியாளர் வருத்தப்படும் போதுதான் உறைத்தது.

உள்ளே போகும் போது ஒரு மடிக்கணினியை வைத்துக் கொண்டு கணினி பராமரிப்புப் பணியாளரிடம் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அதைப் பற்றிப் பேச ஆரம்பித்து, 'குழந்தைக்கு ஒரு மடிக்கணினி' திட்டம் பற்றிச் சொல்லி, இந்திய அரசு அதை நிராகரித்து விட்டதாகச் சொன்னேன்.

அங்கிருந்து வெளிநாட்டு உதவிப் பணம், சமூக சேவை மையங்கள் என்று ஆரம்பித்தார். அப்படியே திரும்பி நிதி திரட்டி தங்க கூரையுடன் கோயில் கட்டிய வேலூர் சாமியாரைக் குறிப்பிட்டார். அதற்கு ஒரு எதிர்ப்புத் தெரிவிக்க அந்தச் சாமியார் எப்படி விளக்குகிறார் என்று சொன்னார், திருப்தியான விளக்கம் இல்லை.

ஆன்மீகம், இந்து மதம், என்று பேச்சு நீள அவ்வப்போது தொந்தரவு செய்த கைப்பேசியை வெளியே உதவியாளரிடம் கொடுத்து விட்டார். பல இடங்களில் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாத முகபாவமும், பேச்சும் அவருக்குப் புரியக் கூடியவை. இந்த நிலையில் இன்றைக்கு வந்த வேலை எப்படிப் போகுமோ என்று ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஆர்எஸ்எஸ் பிற மதங்கள் என்றும் வந்து சேர்ந்தது. என்னுடைய கருத்துக்களை கோடி காட்டினேன்.

அப்படி இரண்டு மணி நேரம் ஓடிய பிறகு, 'சொல்லுங்க சிவா' என்று வேலை ஆரம்பித்தார். பேசும் போது தொழிலில் வாடிக்கையாளர் சேவை பற்றியும் பேசியிருந்தார். மனதுக்குள் கையை மடித்து விட்டுக் கொண்டு கையில் கொண்டு வந்திருந்த திட்டத்தை நீட்டினேன். ஒரே பக்கத்தில் நான்கே அட்டவணைகள்.

இதுவரை வாங்கும் பணம், அடுத்த மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது, அதற்கு எதிர்பார்ப்பது, முடிக்கா விட்டால் என்ன தண்டம், முடித்து விட்டால் என்ன வெகுமதி என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

சரமாரியாக ஆயுதங்களைத் தொடுக்க ஆரம்பித்தார். பல முறைகளில் அவரிடம் பேசியதில் ஏற்பட்ட புரிதல்களும், அவர் எப்படி எல்லாம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த தயாரிப்புகளும், இன்றைக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று நானும் சண்டையில் இறங்கி விட்டேன். ஆரம்ப காலங்களில் இப்படி யாராவது பேரம் பேச ஆரம்பித்தால் உடனேயே விட்டுக் கொடுத்து விடுவேன். அவர்கள் கேட்கும் கேள்விகள் நம்மைக் குறை சொல்ல இல்லை, நமது காரணங்களை புரிந்து கொள்ள என்பது இப்போதுதான் புரிகிறது.

'ஆரம்பித்தில் சொன்ன விலையில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கூடினால் பரவாயில்லை, 10 மடங்காக சொன்னால் என்ன நியாயம்' அவர்கள் தேவைகளையும் 3 தொழிற்சாலைகளுக்கு விரித்து, பல குழப்பங்களையும் சமாளிக்க வைத்ததை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் நியாயத்தை விளக்கினேன். கேட்ட பணத்தில் பாதியில் நின்றார். அதுவே பெருந் தொகைதான், ஆனாலும் முடியாது என்று விட்டேன்.

'நாங்கள் திட்டமிட்ட அளவு பணம் தராவிட்டால் தேவையான முயற்சி போட முடியாமல் மீண்டும் வேலை அரைகுறையாக நின்று விடும்' என்று கணக்குகளை என் குறிப்பேட்டில் எழுதிப் பார்த்தேன். நெருக்கிப் பிடித்தால் சம்பளச் செலவு மட்டும் கேட்டதில் மூன்றில் இரண்டு பங்கு வருகிறது. மற்ற செலவுகளுக்கு ஒரு பங்கு. இடையில் அவருக்கு தொலைபேசி அழைப்பு.

அவர்கள் போட்டியாளர்களுக்குக் குறைந்த விலையில் கிடைத்து விடுமோ என்று ஒரு கேள்வி, அதையும் விளக்கினேன். 30 ஆண்டு SAP கூட கூடுதல் ஒரு நிறுவனத்துக்கு விலை குறைக்க முடியாது, மென்பொருள் உருவாக்கம், பராமரிப்பின் இயல்பு அப்படி என்று விளக்கினேன். இறுதியாக 5ல் நான்கு பங்கில் நின்று விட்டார். நாங்களும் ஏற்றுக் கொண்டோம். பெரும் பொறுப்புதான்.

அவரது குரலும் பல முறை உயர்ந்தது, இடையிடையே புன்சிரிப்பு வேறு. நானும் உச்சக் கட்டத்தில், விடாமல் சண்டை போட்டேன். நண்பரின் ஆதரவு வேறு. 'இதே மாதிரி அந்த வேலைக்கும் ஒரு திட்டம் போட்டுக்கோப்பா' என்று அனுப்பி வைத்தார். பழைய நிலுவையில் பெரும்பகுதிக்கு காசோலையும் கொடுத்து விட்டார்.

(முடிந்தது)

Thursday, December 27, 2007

போர்க்களம் - 4

முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி

காத்திருக்கும் அந்த நிமிடங்கள் தவிப்பாக இருந்தது. தேவையில்லாத பேச்சுக்களும் வளர்ந்து விடக் கூடாது. பேசாமலும் இருக்க முடியாது. அடுத்த சில நிமிடங்களில் எல்லோரும் வந்து விடத் திட்டமிட்டபடி படக்காட்சியும் விளக்க உரையும் ஆரம்பித்து விட்டது.

அவர்கள் கேட்க நினைக்கும் கேள்விகள், அறிய வேண்டும் தகவல்கள் என்று எல்லாமே காண்பித்துப் பேச முடிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சேகரித்த விபரங்களை தொகுத்து முழுக் காட்சியாக விளக்கி முடிக்கும் போது நல்ல ஒரு சூழல் உருவாகியிருந்தது. இடையில் ஓரிரு குறுக்கீடுகள் வந்தாலும், அவர்கள் சொல்ல வந்த கருத்தை நாங்கள் ஏற்கனவே சேர்த்துக் கொண்டிருந்தோம்.

மனதில் நிரம்பியிருந்த கேள்விகள் கருத்துக்களுக்கு வடிவம் கிடைத்து வெளியில் வந்து விட்ட பிறகு விவாதம் ஆரம்பிக்கலாம்.

நல்லதோ கெட்டதோ, உள்ளதில் சொதப்பியிருந்த, அதிகம் கடுப்பேற்றும் மேலாளர் ஆரம்பித்து வைத்தார். 'பேசினது நல்லா பேசினீங்க, நல்லா விளக்கினீங்க, ஆனா..' என்று ஆரம்பித்து மிகத் தீவிரமாக நியாயமற்ற முறையில் தாக்கிக் குறை சொன்னார்.

எதிர்பார்த்திருந்தாலும் கேட்கும் போது மனம் வாடியது. அவர்கள் மீது நேரடியாக எதிர்க் குறை சொல்ல ஆரம்பிக்காமல், விளக்கங்கள் சொன்னேன். அதைத் தொடர்ந்து அவர்களது மனக்குறைகள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தது. நாங்களே அவற்றை எல்லாம் பேசி விட்டதால், அவற்றுக்கு அழுத்தம் குறைந்து போயிருந்தது.

இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் குறை கூறும் வடிவில், எங்கள் சேவையின் பலன்களை அவரது நிறைவுகளை வெளிப்படுத்தினார். மூன்றாவது தொழிற்சாலை மேலாளருக்கும் முதலாமவருக்கும் உட்கட்சிச் சண்டை. அவர் கடைசியில் வாயைத் திறந்தாலும் காரமாக ஆதரித்தார். 'என்னுடைய வேலைகளை கணினி மூலமாகத்தான் செய்கிறேன். என்ன அறிக்கை வேண்டுமோ, என்ன வெளிப்பாடு வேண்டுமோ அதை மென்பொருள் பயன்பாட்டில் எடுத்துக் கொள்கிறோம்' என்று அவர் அடித்த அடியில் சூழல் சாதகமாக மாறி விட்டது.

முதலாமவரின் மதிப்பு இறங்கி விட்டது, நம் பங்குக்கு முதல் தொழிற்சாலையில் அவர்களின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டினோம். தொகுத்துப் பேசும் போது ஒரு மேலாளர் மூன்று தொழிற்சாலைக்குமான பணியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கேட்டு முதல் மேலாளரைக் குறிப்பிட்டால், தலைவர் உடனேயே குறிக்கிட்டு மூன்றாமவரை நியமித்து விட்டார். முதலாமவரிடம் மன்னிப்புக் கேட்பு வேறு.

பணம், சேவைக் கட்டணம் குறித்து நாளைக்கு அலுவலகத்தில் வந்து பேசிக் கொள்ளச் சொல்லி விட்டார். கூட்டம் முடிந்து மற்றவர்கள் எல்லோரும் வெளியே போய் விட்ட பிறகு நாங்கள் மட்டும் நின்றிருக்க அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார் தலைவர். தனது அனுபவ முத்துக்களை வழக்கம் போல அள்ளி இறைத்தார். அதற்கு முன்பு அவர் பேசிக் கேட்டிராத இரண்டு பேரும் கேட்டிருந்த இரண்டு பேரும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் அவரைச் சந்திக்கும் போது பேசுவதற்கான ஆதாரங்கள் பல கிடைத்தன. திட்டமிட்டு அப்படிப் பேசிக் கொண்டிருந்தாரா, இயல்பாக வந்ததா என்று தெரியாது, தன்னிடம் பேரம் பேசுவதற்கு அவரே பல குறிப்புகளை விட்டுச் சென்றார்.

வினை முடித்த இனிமையுடன், நல்ல பசி வேறு. அலுவலத்துக்கு வந்து சாப்பிட்டு விட்டுச் சின்னச் சின்ன வேலைகளை முடித்தேன். இன்னொரு நிறுவனத்துக்குத் தொலைபேசினால் சனிக்கிழமை காலையில் 11 மணிக்கு வரச் சொன்னார். மதியத்துக்கு மேல் தொழிற்சாலை மேலாளருடன் சந்திப்பு 3.30க்கு. இடையில் நிறுவனத் தலைவரையும் சந்திக்க வேண்டும்.

வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தை விட முடியாது என்று காலையில் 8 மணிக்கு எல்லோரையும் வரச் சொன்னோம். எட்டே காலுக்கு ஆரம்பித்தால் 10 மணி வரை போகலாம். அதன் பிறகு கிளம்பி பெரிய மேடு போய் 11 முதல் அரை மணி நேரத்துக்கு முதல் சந்திப்பை முடித்து விட்டால், இரண்டாவது அதி முக்கிய சந்திப்புக்குப் போய் விட்டு இரண்டரை மணிக்குக் கிளம்பினால், 40 கிலோமீட்டர்கள் பயணித்து தொழிற்சாலைக்கும் போய் விடலாம்.

ஐந்தாவது பகுதி

போர்க்களம் - 3

முதல் பகுதி
இரண்டாவது பகுதி
  • நிறுவன வளத் திட்டமிடல் (நி வ தி) என்றால் என்ன, அதன் பலன்கள், இன்றைய உலக அளவில், இந்திய அளவில், தோல் துறை அளவில் யார் யார் சேவை அளிக்கிறார்கள் என்பது முதல் பகுதி.

  • இரண்டாவது பகுதியாக நமது நிறுவனத்தின் சேவையில் என்னென்ன செய்திருக்கிறோம், அதில் கண்ட குறைபாடுகள், அவற்றை நீக்க எடுத்த நடவடிக்கைகள், இது வரை சாதித்தவை, இனிமேல் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டிருப்பவை என்று வடிவம் கிடைத்து விட்டது. இரண்டு வாரங்கள் விவாதித்த கருத்துக்கள் எல்லாம் வடித்துச் சுருக்கியது போல அமைந்து விட்டிருந்தது. இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படலாம்.
சுற்றுலா குழுவினர் கிளம்பிப் போய் விட, தரையை சுத்தம் செய்து துடைத்து அரை மணி நேரம் செலவிட்டேன். வீட்டு வேலை செய்யும் போது கிடைக்கும் மனத்தெளிவும் அமைதியும் எந்த தியான முறையிலும் கிடைத்து விடாதுதான்.

நண்பரும் தயாராகி விட அலுவலகம் வந்து சேர்ந்தோம். கணினியை இயக்கி நண்பருக்கு ஒரு முறை போட்டுக் காட்டி ஒத்திகை. அவர் சில மாற்றங்களைச் சொன்னார். மொத்தத்தில் நன்றாக வந்து விட்டிருப்பது அவரது முகத்தில் தெரிந்தது. காட்சிக்கருவி கொண்டு வருபவரின் தொலைபேசி இயங்காமல் இருந்தது. இருந்தும் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து விட்டார்.

அந்த நேரம் இன்னொரு அலுவலகத் தோழர் வந்து விட அவரை உட்கார வைத்து படக்காட்சியாகவே காட்டிப் பேசினேன். அதன் பிறகும் ஓரிரு மாறுதல்கள் செய்து கொண்டோம்.

பத்து மணிக்குக் கிளம்பி சந்திப்பு நடக்கும் தொழிற்சாலைக்குப் போய் விட்டோம். ஏற்கனவே இரண்டு பேர் போய் முந்திய நாள் ஏற்பட்ட கடைசி நிமிடக் குளறுபடிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அந்த மேலாளரைப் பார்க்க முடியவில்லை.

இரண்டாவது தொழிற்சாலைக்கு இரண்டு நாட்கள் முன்பு நானே போய் அதன் மேலாளரைச் சந்தித்து அவரது தேவைகளை, குறை நிறைகளைக் கேட்டறிந்திருந்தேன். அவர் கேட்டிருந்த அறிக்கைகளும் எடுத்துக் கொடுத்து விட்டிருந்தார்கள்.

மூன்றாவது தொழிற்சாலையில் ஏற்கனவே நல்லபடியாக பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கு கடைசி நேர கைபிடித்தல் செய்ய காலையிலேயே ஒருவர் போய் அந்த மேலாளருடனேயே வண்டியில் கூட்டத்துக்கு வர திட்டம்.

கூட்டம் நடத்த வேண்டிய அறையை தேர்ந்தெடுத்து பொருட்களை ஒதுக்க, நாற்காலிகளை ஏற்பாடு செய்ய, தூய்மை செய்யக் கேட்டுக் கொண்டோம். பெரிய உரிமையாளர் வருவதால் எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். பத்தரை மணிக்கெல்லாம் காட்சிக் கருவியை அமைத்து கணினியை இணைத்து திரைக் காட்சி சரியாகத் தெரிகிறதா என்று உறுதி செய்து கொண்டோம்.

11 மணி சந்திப்புக்கு இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் மட்டும் நேரத்துக்கு வந்து விட்டார். அவருடன் பொதுவாகவும், பணி குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரும் வந்த பிறகுதானே ஆரம்பிக்க வேண்டும். தாமதமாகவே ஆனாலும் நம்ம ஆட்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.

மூலவர் பதினொன்றரைக்கெல்லாம் வந்து சேர மற்ற மேலாளர்கள் எல்லோரும் வந்திருக்கவில்லை. அவர் உட்கார்ந்த பிறகு விளக்குகளை அணைத்து விட்டுக் காட்சிப் படத்தின் முதல் துண்டைப் போட்டு வைத்திருந்தோம்.

நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி

போர்க்களம் - 2

முதல் பகுதி

மொத்தம் மூன்று அமர்வுகளில் குறிப்பேட்டில் பல பக்கங்கள் நிறைந்து விட்டன.

இதற்கிடையே ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னென்ன வேலை நடந்திருக்கிறது. அங்கிருக்கும் மேலாளர்களுக்கு என்ன குறை நிறைகள் என்று அடையாளம் கண்டு கொண்டு அங்கு வேலையையும் தொடர்ந்தோம். அந்தந்தப் பிரிவு மேலாளர்களுக்கும் இப்படி ஒரு சந்திப்பில் பேசுவதற்கு தயாரிப்பு வேண்டும். அவர்களது தேவைகளைச் சொல்லி வேலை வாங்கினார்கள்.

கணினியில் ஒரு உரைத் தொகுப்பாக வைத்துக் கொண்டு எல்லோருக்கும் ஒரு சுற்று விட்டோம். இடையில் ஊருக்கு ஒரு பயணம் எல்லாம் முடித்து விட்டுத் திரும்பி வந்து வேலை தொடர்ந்தது. ஊருக்கு மடிக்கணினி எடுத்துப் போகாமல் நான்கு நாட்களுக்கு கணினியிலிருந்து பிரிவு கிடைத்த ஓய்வு.

17ம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பி நினைவூட்டல். 19ம் தேதி அவர்களாகவே அழைத்து 21ம் தேதி சந்திப்பை உறுதி செய்தார்கள். கிடைத்த அறிகுறிகள் மிக நல்லதாகவே இருந்தன.

20ம் தேதி மதியத்துக்கு மேல் என்ன காண்பிக்க வேண்டும் என்று இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். களப்பணியாளர்கள் கடைசி நிமிடத் திக்கல்களை சரி செய்யப் போனார்கள். இருமக் காட்சிக் கருவி ஒன்றை வாடகைக்கு எடுத்து காண்பிக்கலாம் என்று நினைத்திருந்தோம். மாலை நான்கு மணிக்குப் பிறகுதான் அந்த நினைவே வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்குக் கொடுத்திருந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை வைத்திருந்தேன். அது மாறாமல் இருக்க வேண்டுமே!

மாறியிருக்கவில்லை. பழைய உறவை நினைவில் வைத்திருந்து மாலையே வந்து கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். ஒரு நாள் வாடகை 750 ரூபாய், தொடரும் உறவுக்காக 150 ரூபாய்கள் தள்ளுபடி. ஒவ்வொரு முறையும் இந்தக் கருவிகளின் அளவு குறுகி, தரம் உயர்ந்திருக்கிறது. நேற்றைக்கு நாளிதழில் பார்த்தால் ஏசர் நிறுவனத்தின் காட்சிக் கருவி 45 ஆயிரம் ரூபாய்களுக்குக் கொடுக்கிறார்களாம்.

அப்பா அம்மா வெளியூர் கிளம்பும் தயாரிப்புகள் வேறு.. காலையில் வழியனுப்ப வர முடியாது என்று முதலிலேயே சொல்லி விட்டேன். என் பங்காக சின்னச் சின்ன ஏற்பாடுகளுக்கான பணிகள் 20ம் தேதி முழுவதும். கடைசி நேரச் சிக்கல் ஒன்று ஒரு தொழிற்சாலையில். அங்கிருக்கும் மேலாளர் உள்ளதில் கடுப்பேற்றுபவர். எப்படியாவது சரி செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

தூங்கும் முன் எதுவும் செய்ய ஓடவில்லை. காலையில் எழுந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நல்ல தூக்கம். விழிப்பு வந்த பிறகும் நாளில் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரை மணி நேரம் அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்து விட்டே எழுந்தேன். ஏழு மணிக்கு விமான நிலையத்துக்குக் கிளம்புகிறார்கள். அந்தத் தயாரிப்புகள் முடிந்து விட்டன. நானும் 5 மணிக்கு எழுந்து குளித்து விட்டு அவர்கள் பைகளை மூடி வைத்து, வாடகை வண்டிக்கு தொலைபேசி ஏற்பாடு செய்தலையும் முடித்துக் கொண்டேன்.

சரி கணினியை இயக்கி விடுவோம் என்று மேசையில் வைத்து உயிர் கொடுத்து 11 மணிக்குப் பேசப் போவதற்கு திரைக்காட்சிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன்.

மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி

Wednesday, December 26, 2007

போர்க்களம் - 1

குருட்சேத்திரப் போர்க்களம். அபிமன்யூ சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான். உடைப்பை ஜெயத்ரதன் அடைத்துக் கொள்ள தனியே மாட்டிக் கொள்கிறான். தீவிரமான போர் நடக்கிறது. ஆசிரியர் துரோணர் எதிர்க் கட்சியில். அவருக்கு ஒரே பூரிப்பு. 'மாணவனின் மகன், சிறு பையன் எப்படி திறமையாக போர் புரிகிறான்' என்று பாராட்டுகிறார்.

தான் கற்றுக் கொடுத்த வித்தை தனக்கு எதிரேயே பயன்படுத்தப்படும் போது மகிழ்ச்சியுடன் எதிர்த் தாக்குதல் நடத்தி போராட்டம் காணும் ஆசிரியர்கள் ஏராளம்.

அப்படி ஒரு நாள்.

அக்டோபரிலிருந்து அதிகரித்த செலவுகள், முனைப்பான உழைப்பு, ஆர்வமான குழுவினர் என்று புறப்பட்டு விட்டாலும் மூன்று மாதங்களாக ஒரு பெரிய வாடிக்கையாளர் நிதானிக்க ஆரம்பித்து விட தவிப்பும், சிக்கல்களும். பொறுமை இழக்காமல், ஒவ்வொரு சிடுக்காக விடுவிக்கும்படி தொடர்ந்து வேலையைச் செய்து கொண்டு வந்து அதற்கான கணக்குகளையும் வைத்திருந்தோம். டிசம்பர் முதல் வாரத்தில் நாள் முழுதும் காத்திருந்து பின் மாலையில் சில நிமிடங்கள் சந்தித்த போது அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன.

'நான் வெளிநாடு போறேன், திரும்பி வந்ததும் நிறுவனத்தில் உயர் மேலாளர்கள் எல்லோரையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அவர்களையும் ஈடுபடுத்தினால் இந்தத் திட்டத்தை இப்படியே தொடர முடியும்' என்று சொல்லி 21ம் தேதி என்று நாள் குறித்து விட்டுப் போய் விட்டார்.

மூன்று ஆண்டுகள் தாண்டி விட்ட உறவு. ஒரு பணி முடிந்து ஆறு மாதங்களாக நல்ல பெயர். இரண்டாவதாகக் கிடைத்த வேலையில் தேக்கங்கள் பல ஏற்பட்டு அதை முடுக்கி விடத்தான் இந்தக் கூட்டம். பல சிக்கல்கள். நம் பக்கம் பல குளறுபடிகள். அவர்கள் பக்கம் பல குழப்பங்கள். சென்னையிலேயே வெவ்வேறு இடங்களில் மூன்று தொழிற்சாலைகள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மேலாண்மை அமைப்புகள். மூன்றிற்குமிடையே ஓருங்கிணைப்பு இல்லாதது, மென்பொருள் வழுக்கள், நம் குழுவினரின் தவறுகள் என்று எதைத் தொட்டாலும் எதிர்மறையாகவே போய் விடக் கூடிய வெடிகுண்டுகள்.

இரண்டு வாரங்களில் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தயாரிக்க முடிவு செய்தோம்.
மிக நெருக்கமாக இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த நிறுவனத்தின் தேவைகள் நன்கு புரிந்தவை.
  • அவர்களுக்கு முழுமையான சேவை எப்படி இருக்க வேண்டும்.
  • இது வரை நாம் செய்த பணியில் சாதித்தது என்ன,
  • அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது.
  • நமது சேவையின் மீது அவர்களுக்கு என்னென்ன குறைபாடுகள், முறையீடுகள்,
  • அவற்றைச் சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம்,
  • இனிமேல் அடுத்து செய்ய வேண்டியது என்ன
என்று பகுதி வாரியாக தொடர்புடைய எல்லோரும் உட்கார்ந்து விவாதித்தோம்.
(தொடரும்)
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி

தொழில் முனைவோருக்கு வழிகாட்டல்கள்

எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது அவரது நண்பர் கொடுத்த அறிவுரைகளாக எனக்குச் சொன்னது:
  1. 10 ரூபாய்க்கு வாங்கி 10.50 க்கு விற்று 50 காசுகள் ஆதாயம் பார்ப்பது ஒரு வகை வர்த்தகம். வாடிக்கையாளர் தரத்தயாராக இருக்கும் 10 ரூபாய்க்குள் பொருளைச் செய்து மிச்சப்படுத்துவதை ஆதாயமாக வைத்துக் கொள்வது போட்டி நிலவும் உற்பத்தித்துறை.

    போட்டியாளர்கள் கொடுக்கும் விலையை விட உனக்கு அதிகமாகக் கிடைக்கப் போவதில்லை.

  2. ஏற்கனவே இருக்கும் உறவுகள், அனுபவம் போட்டியாளர்களுக்கு வலிமை.
    புதிய இயந்திரங்கள், வேகமாகச் செயல்பட முடிதல் புதிய முனைவருக்கு வலிமை. இரண்டையும் புரிந்து கொண்டு போட்டி போட வேண்டும்.

  3. புதிதாக சந்தையில் நுழைபவர்கள் போட்டியாளர்களை விடக் குறைந்த விலை, அல்லது உயர்ந்த தரம் கொடுத்தால்தான் வாடிக்கையாளர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். ஏதாவது புதிய சத்தம் எழுப்பி கவனத்தை ஈர்த்தால்தான் பிழைக்க முடியும். அந்த கவன ஈர்ப்புக்கு ஆகும் செலவுகளால் ஆதாயம் குறையும்.

  4. மலிவு என்பது பயனுள்ள பொருளுக்குத்தான். விலை குறைவாக வாங்கிய பொருளைப் பயன்படுத்த முடியாவிட்டால் அது மலிவு இல்லை, அது வீண்.

    ஒரு ரூபாய்க்கு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டால், அது 2 ரூபாய் பழத்தை விட மலிவு. ஆனால் வாங்கிய பழம் அழுகியிருந்தால் அந்தக் காசு வீண்தான்.

  5. விற்கும் பொருளிலும், அதன் விலையிலும் உனக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த விலைக்கு இந்தப் பொருளை/சேவையை நான் வாங்குவேனா என்று எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளரை சம்மதிக்க வைக்க முடியும்.

  6. தொழிலில் நிலைக்க வேண்டுமென்றால் நீடித்த வாடிக்கையாளர்கள் வேண்டும். விற்ற பொருள் அல்லது சேவையை அவர் பயன்படாமல் வைத்திருக்கிறார் என்றால் நீயே முனைந்து கூடுதல் உதவி செய்து பயன்படுத்த வைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை உன்னிடம் வர மாட்டார்கள்.

  7. யாராவது கூக்குரலிட்டால், காது கொடுத்துக் கேட்க வேண்டும். உன் சேவை பொருள் நிறைவாக இருந்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை. குறைகள் எந்த வடிவில் சொல்லப்பட்டாலும் கூர்ந்து கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

  8. நம்முடைய நலனைக் கருத்தில் வைக்கும் அதே நேரத்தில் அடுத்தவர்களின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  9. ஒரு உறவில் இரண்டு பக்கமும் ஆதாயம் இருந்தால்தான் உறவு நீடிக்கும். ஒரு பக்கத்துக்கு ஆதாயமே இல்லாமல் பேரம் பேசினால் உறவு நிச்சயமாக முறிந்து விடும்.

Tuesday, December 25, 2007

பொருளாதாரச் சூழல் மாற்றம்

அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆண்டு அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள் இரண்டு மடங்காகி விட்டன.

புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.

நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.

டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.

அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.

கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.

வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்ற இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.

புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.

மக்கள் தொகை மாற்றங்கள்

அமெரிக்க மக்கள் தொகை, பிரிவுகள், ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தப் பிரிவுகளில் ஏற்படும் ஒட்டு மொத்த மாற்றங்கள் என்று பல ஆராய்ச்சிகள் செய்து கட்டுரைகள் எழுதுகிறார்கள். 1930களின் பொருளாதாரச் சரிவைப் பார்த்து வாழ்ந்த குழந்தைகளை டிப்ரெஷன் தலைமுறை, பொருளாதாரத் தேக்கத் தலைமுறை என்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1950களில் அமைதி ஏற்பட்ட போது நிறைய குழந்தைகள் பெறப்பட்டனவாம். அவர்களை பேபி பூமர்ஸ் - குழந்தைப் பெருக்கத்தினர் - என்று அழைக்கிறார்கள். அதற்குப் பிறகு பேபி பர்ஸ்ட்.

பேபி பூமர்கள் வேலைக்குப் போகும் கட்டம், பேபி பூமர்கள் திருமணம் செய்து கொள்ளும் கட்டம் என்று ஒவ்வொரு கால கட்டத்தையும் அலசி மாற்றங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்களை அவர்கள் பிறந்து வாழ்ந்த காலத்தை வைத்துப் பிரிக்க முயற்சித்தால் எப்படி இருக்கும்.
  • ஒரு பிரிவில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போராட்டம் நடந்த காலத்தில் 1940களுக்கு முன்பு பிறந்து வளர்ந்தவர்கள்.

    இன்றைக்கு இவர்களுக்கு எழுபது வயதுகளுக்கு மேல் ஆகியிருக்கும். பெரிய அளவில் வருமானம் கிடையாது. அரசு ஊழியராக இருந்தால் ஓய்வூதியத்துடனும். மற்றவர்கள் குழந்தைகளின் ஆதரவிலும் வாழ்ந்து வரலாம்.
    இவர்கள் தியாகராஜ பாகவதர் முதலான சினிமா காலகட்டத்தின் ரசிகர்கள். மன்மத லீலையினர்.

  • அடுத்த பிரிவில் விடுதலை கிடைக்கும் ஆண்டுகளில் 1940களில் பிறந்தவர்கள்.

    இவர்கள் ஐம்பதுகளின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், 60களில் திராவிட இயக்க ஆட்சி பிடிப்பு என்று பார்த்து வாழ்க்கையின் நடுக்கட்டில் 1970களின் பொருளாதார அதிர்ச்சிகளை பார்த்திருப்பார்கள். தொண்ணூறுகளில் தாராளமயமாக்கலும் பொருளாதார சீர்திருத்தமும் கொண்டு வரும் மாற்றங்கள் இவர்களை நேரடியாகத் தொட்டு விடாமல் இருக்கிறது.

    இவர்கள் எம்எஸ்விஸ்வநாதன், டிஎம் சௌந்திரராஜன், கண்ணதாசன் என்று உருகுவார்கள். திராவிடக் குழந்தைகள்.

  • மூன்றாவது பிரிவில், 1980களுக்கு முன்பு பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களின் குழந்தை மற்றும் இளமைப் பருவம், எம்ஜிஆரின் ஆட்சி, கருணாநிதியின் எதிர் அரசியல் பார்த்து வளர்ந்தது. இளையராஜா, எஸ்பி பாலசுப்பிரணியம், கமலஹாசன், ரஜினி காந்த் என்று அதிகம் குழப்பமில்லாத சூழல்கள்.

    சத்துணவுத் திட்டமும், வேகமாக வளர்ந்த உயர் கல்வித் துறையும் இந்தப் பிரிவினருக்கு கல்வி வாய்ப்பைத் திறந்து விட்டது. இட ஒதுக்கீடு மூலமாக பெரும்பாலானோருக்கு அது வரை மூடப்பட்டிருந்த கதவுகள் திறந்தன. பொருளாதார காரணங்கள் அல்லது வாய்ப்புகளைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள்த பின்தங்கி இருக்கிறார்கள். 'யார் வேண்டுமானாலும் கதவை இடித்துத் திறந்து கொள்ளலாம், திறக்கா விட்டால் கதவை உடைத்து விடுவோம்' என்ற மாற்றங்களை பார்த்து வளர்ந்த காலகட்டத்தினர் இவர்கள்.

    கூட்டமான முன்னேற்றத்தினர்.

  • நான்காவது கடைசிப் பிரிவில் இருப்பவர்கள் 1980களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த இன்றைய இளைஞர்கள். எம்ஜிஆர் என்பவரைத் தெரியாமல் வளர்ந்திருப்பார்கள். உலக மயமாதல், தகவல் தொழில் நுட்பப் புரட்சி, ஏஆர்ரஹ்மான், ஐந்திலக்க சம்பளம், அமெரிக்கா செல்லும் வாய்ப்புகள் என்று முற்றிலும் புதிய உலகைப் பார்க்கிறார்கள்.

    தகவல் தொழில்நுட்ப தலைமுறையினர்.
இப்படிப் பிரித்துக் கொண்டால் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து பொருளாதார சமூக மாறுபாடுகள் எப்படி இருக்கும் என்பதை ஆராய முடியும்.

  • 2020ல் கூட்டமான முன்னேற்றத் தலைமுறையினருக்கு சராசரி வயது 45 முதல் 60 வரை இருக்கும்.
  • தகவல் தொழில் நுட்பத் தலைமுறையினர் வீடுகள் வாங்கவும், திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆரம்பித்திருப்பார்கள்.
  • திராவிடக் குழந்தைகள் எல்லோரும் முழுநேர பணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்கள்.
  • மன்மத லீலையினரில் ஒரு சிலரே மிஞ்சியிருப்பார்கள்.
அத்தகைய சூழலில் அரசியல், கலை, வணிகம் போன்ற துறைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

  • சிறு நகரங்களில் கூட ஆங்கிலத்தில் கல்வி பயின்று வரும் குழந்தைகள் இளைஞர்களாக பொருளாதார முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள்.
  • ஊடகங்கள், அரசியல் நடைமுறைகளில் பரிமாற்ற மொழி மாறியிருக்கும்.
  • அப்போதைய இளைஞர்கள் மின்னணு பொருட்களான, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பார்த்து வளர்ந்திருப்பார்கள்.
  • மின்னணு பொருட்களின் சந்தை பெருகும்.
கூட்டமான முன்னைற்றத் தலைமுறையினர் தங்களுக்கே உரிய குழப்பமான பாணியில் அரசியலையும் கலை உலகையும் வடிவமைக்க முயன்று கொண்டிருப்பார்கள். திராவிடத் தலைமுறையினருக்கும், தகவல் தொழில் நுட்பத் தலைமுறையினருக்கும் இருக்கும் தெளிவு இவர்களிடம் கிடையாது. தாம் பார்த்து வளர்ந்த உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பொருளாதார சமூகச் சூழலில் பிழைக்க வேண்டிய கட்டாயத்துடன் வாழ்ந்த இவர்களிடம் பழமையும் புதுமையும் முண்டி அடித்துக் கொண்டு வருத்திக் கொண்டிருக்கும்.