Wednesday, December 26, 2007

தொழில் முனைவோருக்கு வழிகாட்டல்கள்

எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது அவரது நண்பர் கொடுத்த அறிவுரைகளாக எனக்குச் சொன்னது:
  1. 10 ரூபாய்க்கு வாங்கி 10.50 க்கு விற்று 50 காசுகள் ஆதாயம் பார்ப்பது ஒரு வகை வர்த்தகம். வாடிக்கையாளர் தரத்தயாராக இருக்கும் 10 ரூபாய்க்குள் பொருளைச் செய்து மிச்சப்படுத்துவதை ஆதாயமாக வைத்துக் கொள்வது போட்டி நிலவும் உற்பத்தித்துறை.

    போட்டியாளர்கள் கொடுக்கும் விலையை விட உனக்கு அதிகமாகக் கிடைக்கப் போவதில்லை.

  2. ஏற்கனவே இருக்கும் உறவுகள், அனுபவம் போட்டியாளர்களுக்கு வலிமை.
    புதிய இயந்திரங்கள், வேகமாகச் செயல்பட முடிதல் புதிய முனைவருக்கு வலிமை. இரண்டையும் புரிந்து கொண்டு போட்டி போட வேண்டும்.

  3. புதிதாக சந்தையில் நுழைபவர்கள் போட்டியாளர்களை விடக் குறைந்த விலை, அல்லது உயர்ந்த தரம் கொடுத்தால்தான் வாடிக்கையாளர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். ஏதாவது புதிய சத்தம் எழுப்பி கவனத்தை ஈர்த்தால்தான் பிழைக்க முடியும். அந்த கவன ஈர்ப்புக்கு ஆகும் செலவுகளால் ஆதாயம் குறையும்.

  4. மலிவு என்பது பயனுள்ள பொருளுக்குத்தான். விலை குறைவாக வாங்கிய பொருளைப் பயன்படுத்த முடியாவிட்டால் அது மலிவு இல்லை, அது வீண்.

    ஒரு ரூபாய்க்கு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டால், அது 2 ரூபாய் பழத்தை விட மலிவு. ஆனால் வாங்கிய பழம் அழுகியிருந்தால் அந்தக் காசு வீண்தான்.

  5. விற்கும் பொருளிலும், அதன் விலையிலும் உனக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த விலைக்கு இந்தப் பொருளை/சேவையை நான் வாங்குவேனா என்று எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளரை சம்மதிக்க வைக்க முடியும்.

  6. தொழிலில் நிலைக்க வேண்டுமென்றால் நீடித்த வாடிக்கையாளர்கள் வேண்டும். விற்ற பொருள் அல்லது சேவையை அவர் பயன்படாமல் வைத்திருக்கிறார் என்றால் நீயே முனைந்து கூடுதல் உதவி செய்து பயன்படுத்த வைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை உன்னிடம் வர மாட்டார்கள்.

  7. யாராவது கூக்குரலிட்டால், காது கொடுத்துக் கேட்க வேண்டும். உன் சேவை பொருள் நிறைவாக இருந்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை. குறைகள் எந்த வடிவில் சொல்லப்பட்டாலும் கூர்ந்து கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

  8. நம்முடைய நலனைக் கருத்தில் வைக்கும் அதே நேரத்தில் அடுத்தவர்களின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  9. ஒரு உறவில் இரண்டு பக்கமும் ஆதாயம் இருந்தால்தான் உறவு நீடிக்கும். ஒரு பக்கத்துக்கு ஆதாயமே இல்லாமல் பேரம் பேசினால் உறவு நிச்சயமாக முறிந்து விடும்.

3 comments:

Anonymous said...

என் பங்குக்கு நானும் ஒண்ணு போட்டிருக்கேன்..போடத்தூண்டியதுக்கு நன்றி மா.சி :-)

வடுவூர் குமார் said...

வழிகாட்டல் சரி தான்,இதில் பல கையை சுட்டுக்கிட்ட பிறகு தான் தெளிவாக தெரியும்.

மா சிவகுமார் said...

//என் பங்குக்கு நானும் ஒண்ணு போட்டிருக்கேன்..//

உங்க பாணியில் வெளுத்து வாங்கியிருக்கீங்க. போட்டதுக்கு நன்றி :-)

//இதில் பல கையை சுட்டுக்கிட்ட பிறகு தான் தெளிவாக தெரியும்.//

நிச்சயமா. தண்ணியில் குதிச்சாத்தானே நீச்சல் வரும்!

அன்புடன்,
மா சிவகுமார்