Showing posts with label மேலாண்மை். Show all posts
Showing posts with label மேலாண்மை். Show all posts

Thursday, March 21, 2019

மைண்ட்-ட்ரீ மீது காதலாம், தூக்கிப் போகத் துடிக்கும் எல்&டி

மைண்ட்-ட்ரீ என்ற ஐ.டி சேவை நிறுவனத்தின் மீது கண் வைத்திருக்கிறது எல்&டி. ஏற்கனவே, ஒரு ஐ.டி சேவை நிறுவனத்தை நடத்திவரும் எல்&டிக்கு, இதையும் வாங்கிப் போடலாம் என்று நப்பாசை.  கைநிறைய பணம் இருக்கிறது, ஐ.டி சேவைத் துறையில் நல்ல லாபம் கிடைக்கிறது என்று கிடைக்கும் வாய்ப்பை தட்டிச் செல்லப் பார்க்கிறது.

முன்னாள் விப்ரோ துணை சேர்மன் அசோக் சூடா தலைமையில் ஐ.டி துறையில் வேலை அனுபவம் கொண்ட 10 ஊழியர்கள் 1990-களின் இறுதியில் மைண்ட்-ட்ரீ என்ற ஐ.டி சேவை நிறுவனத்தை ஆரம்பித்தனர். அதில் கபே காபி டே-வை தொடங்கியவரான சித்தார்த்தா 6.5% பங்குகளை பெற்றுக் கொண்டார், மைண்ட்-ட்ரீக்கு அலுவலக வசதியை செய்து கொடுத்தார்.

2007-ம் ஆண்டில் மைண்ட்-ட்ரீ $70 கோடி (சுமார் ரூ 3500 கோடி) விற்பனை வருவாயை எட்டியதும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2012-க்குள் $100 கோடி விற்பனையை எட்ட வேண்டும் என்று 2006-ல் இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்தது. காலக்கெடுவை இரண்டு முறை நீட்டித்தும் இந்த ஆண்டு வரை அந்த இலக்கு எட்டப்படவில்லை. 2019 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனையில் பாதியை டிஜிட்டல் சேவை வணிகத்தில் துறையில் ஈட்டியிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி 2018-க்குப் பிறகு 52% உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான் சித்தார்த்தா தன் கைவசம் இருக்கும் மைண்ட்-ட்ரீ நிறுவனத்தின் 20% பங்குகளை விற்பதற்கு விரும்புகிறார். சென்ற ஆண்டே மைண்ட்-ட்ரீ இயக்குனர் குழுவில் இருந்து விலகி விட்டு, தான் பங்குகளை யாரிடமாவது விற்கப் போவதாக மைண்ட்-ட்ரீ உரிமையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பங்குகளை விற்கப் போவதாக பொதுவில் அறிவித்திருக்கிறார். சித்தார்த்தாவின் கபே காபி டே இயக்குனர் குழு இந்தப் பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கியிலிருந்து ரூ 3,000 கோடி கடன் பெற்று அந்தப் பங்குகளை அடகு வைத்திருந்த நிறுவனங்களிடமிருந்து அவற்றை மீட்டு விற்பதற்கு வசதியாக ஒரு எஸ்க்ரோ கணக்கில் போட்டு விட்டார், சித்தார்த்தா.

இப்போது எல்&டி நிறுவனம் சித்தார்த்தாவின் 20.3% பங்குகளை ரூ 3,269 கோடிக்கு வாங்கப் போவதாகவும் இன்னும் ரூ 7,464 கோடி வரை செலவழித்து சுமார் 46% (31%) பங்குகளை பிற பங்குதாரர்களிடமிருந்து வாங்க முன்வருவதாகவும் மார்ச் 18-ம் தேதி அறிவித்திருக்கிறது. இவ்வாறு மைண்ட்-ட்ரீயில் தனது பங்கு கையிருப்பை 66.32% ஆக உயர்த்துவதற்கு எல்&டி ரூ 11,000 கோடி செலவளிக்க திட்டமிட்டிருக்கிறது.

இடது புறம் எல்&டி தரப்பு, வலது புறம் மைண்ட்-ட்ரீ போராளிகள் (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)

இரண்டு நிறுவனங்களும் இணையும்போது ஒன்றையொன்று வலுப்படுத்துவதாக அமையும் என்கிறது எல்&டி. ஆனால், மைண்ட்-ட்ரீயின் உரிமையாளர்கள் கிருஷ்ணகுமார் நடராஜன், என்.எஸ் பார்த்தசாரதி, ரோஸ்தோவ் ராவணன், சுப்ரதோ பாக்சி அதை எல்&டியிடம் விற்க விரும்பவில்லை. எல்.&டியின் இந்தத் தாக்குதலை எதிர் கொள்ள ஒடிசா பணித்திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்த பாக்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு பெங்களூருவுக்கு திரும்பி மைண்ட்-ட்ரீயில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.

இந்த இரண்டு நிறுவனங்களின் நிதி நிலை எப்படி இருக்கிறது?

எல்&டி குழுமத்தின் மொத்த விற்பனையில் 75% பொறியியல், 5% உற்பத்தி, 15% ஐ.டி முதலாள சேவைத் துறையில் கிடைக்கிறது. ஐ.டி உள்ளிட்ட சேவைத் துறையில் கிடைக்கும் நிகர லாபம் 15-16% மற்ற துறைகளை விட அதிகம். எனவே, ஆண்டு தோறும் குவிக்கும் லாபத்தை புதிதாக முதலீடு செய்ய இந்தத் துறையில் வாய்ப்புகளை தேடுகிறது.

2019 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் (ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 வரை)

விற்பனை நிகர லாபம் பணக் கையிருப்பு
எல்&டி ஐ.டி 6,959.80 1,136.90 2,032.80
எல்&டி குழுமம் 95,323.20 4,878.80 23,900.00
மைண்ட்-ட்ரீ 5,182.10 555.70 973.60

மைண்ட்-ட்ரீ எல்&டி குழுமத்தின் முன்பு ஒரு சின்ன ஆளாக உள்ளது. தனது ரூ 23,900 கோடி பணக்கையிருப்பை எங்கு போட்டு லாபம் ஈட்டுவது என்று தேடி அலைகிறது. மைண்ட்-ட்ரீ பங்குகளை வாங்கி அதன் நிர்வாகத்தை கைப்பற்றி விட்டால் கணிசமாக லாபம் ஈட்ட முடியும் என்று நினைக்கிறது.

ஆனால், மைண்ட்-ட்ரீ முதலாளிகள் எல்&டியிடம் போய்ச் சிக்க விரும்பவில்லை. அவர்கள் சித்தார்த்தா தனது பங்குகளை ஏதாவது நிதி மூலதன நிறுவனத்திடம் விற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால்,  KKR, பேரிங் போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்களை அணுகிய போது, அவை தங்களுக்கு "இயக்குனர் குழுவில் இடம் வேண்டும், மாதாந்திர அறிக்கைகள் வர வேண்டும், உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் வேண்டும், செயலூக்கமான பங்களிப்பு வேண்டும்" என்று நிர்வாகத்தில் தலையிடும் வகையில் நிபந்தனை விதித்திருக்கின்றனர். அவர்கள் சித்தார்த்தாவை போல பணத்தை கொடுத்து விட்டு ஒதுங்கி இருக்க மாட்டார்கள். நிர்வாகத்துக்குள் நுழைந்து கையை முறுக்கத்தான் முயற்சிப்பார்கள்.

மைண்ட்-ட்ரீ அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பங்குகளை பங்குச் சந்தையிலோ அல்லது இயக்குனர் குழுவில் சேர வேண்டும் என்று நிபந்தனை விதிக்காத தனியார் முதலீட்டு நிறுவனங்களிடமோ விற்கும்படி சித்தார்த்தாவிடம் சொல்லியிருக்கிறார்கள். சந்தையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்கப்பட்டால் பங்கு விலை கணிசமாக சரியும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களோ கடும் நிபந்தனைகளை விதிக்கின்றன.

சித்தார்த்தாவின் பங்குகளை வாங்கும்படி கேட்டு ஜனவரி மாதம் வங்கிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளை அணுகினர். குடும்ப முதலீட்டு நிறுவனங்களான பிரேம்ஜி முதலீட்டு நிறுவனம், பட்னி ஆகியவையும் அணுகப்பட்டன. அவர்கள் அனைவரும் பேரிங் பங்குகளை வாங்க விரும்பும் போது அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கின்றனர்.

எல்&டி ஆரம்பத்தில் மைண்ட்-ட்ரீ நிர்வாகத்தின் ஒப்புதலுடன்தான் சித்தார்த்தாவின் பங்குகளை வாங்க விரும்ப நினைத்திருக்கிறது. ஆனால், எல்&டியிடம் நிர்வாகக் கட்டுப்பாடு போய் விட்டால் தங்களது நிறுவன கலாச்சாரம் மாறி விடும் என்று சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர் மைண்ட்-ட்ரீ முதலாளிகள். இறுதியில் எல்&டி அவர்களது சம்மதம் இல்லாமலேயே மைண்ட்-ட்ரீயை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி விட்டது.

பெண்ணின் அப்பாவின் சம்மதத்தோடு பெண் கேட்டு பார்த்து, அவர் மறுத்து விட்ட பிறகு இப்போது தனது பணபலம், படை பலம், ஆள் பலத்தை ஏவி தூக்கிக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறது எல்&டி.

சிறிய நிறுவனங்கள் பெரிய ஐ.டி நிறுவனங்களோடு இணைக்கப்படும் போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் நிறுவனம் எல்&டியோடு இணைக்கப்பட்டால் அது வணிக மதிப்பை குறைப்பதாகவும், நிர்வாக அறம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழி வகுப்பதாகவும் இருக்கும் என்று மைண்ட்-ட்ரீ முதலாளிகள் கருதுகின்றனர்.

எல்&டி "புல்டோசர்கள், கிரேன்கள் சகிதம் சொத்தை அள்ளிப் போவதற்கு வாசலில் வந்து நிற்கிறது" என்று பதறுகின்றனர். "இப்படி எல்லாம் நடந்தால் ஐ.டி துறையி்ல யாரும் புதிய நிறுவனம் தொடங்க மாட்டார்கள், நாடு முன்னேறாது" என்று தேசபக்த வேடம் பூண்டு பயமுறுத்துகின்றனர்.

"நாங்கள் மைண்ட்-ட்ரீயை காதலுடன் அணுகுகிறோம், எங்கள் உள்ளத்திலிருந்து இந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்" என்று அன்பாக பேசுகிறது எல்&டி. "முதலீட்டாளர்களாகத்தான் வருகிறோம், மைண்ட்-ட்ரீயை தனி நிறுவனமாக பராமரிப்போம்" என்கிறது. "எங்களிடம் புல்டோசர்களும், கிரேன்களும் மட்டும் இல்லை. நாங்கள் நாட்டுக்காக நீர்மூழ்கிக் கப்பல்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், துப்பாக்கிகள் உற்பத்தி செய்கிறோம். எங்களது ரேஞ்சே வேற. நாங்கள் நிர்வாக ஒழுங்கிலும், கொள்கைகளிலும் உயர் தரத்தை பின்பற்றுகிறோம்" என்று தன் பங்குக்கு தேச பக்த சான்றுகளை காட்டுகிறது

பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை வாங்க முன்வருவதாக சொல்லியிருக்கும் எல்&டியின் அறிவிப்பு பற்றி மைண்ட்-ட்ரீ இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு தங்கள் பரிந்துரையைச் சொல்ல வேண்டும். எல்&டியிடம் பங்குகளை விற்பது நல்லதா இல்லையா என்று அறிவிக்க வேண்டும். இதற்காக சுயேச்சையான இயக்குனர்கள் ஒரு கமிட்டி அமைத்து பரிசீலிக்க வேண்டும்.

இதில் எல்.ஐ.சி முதலான நிதி நிறுவனங்களின் முடிவு தீர்மானகரமானதாக அமையும். அவர்களது ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மைண்ட்-ட்ரீ நிர்வாக இயக்குனர்கள் சொல்கின்றனர்.  எல்&டியோ அவர்கள் எல்லாம் ஏற்கனவே எல்&டியில் பங்கு வைத்திருப்பவர்கள், எங்களுக்கு நல்ல தோஸ்துகள்தான் என்று நம்பிக்கையுடன் சொல்கிறது.

டுவிட்டரில் ஊழியர்கள் மைண்ட்-ட்ரீ நிர்வாகத்துக்கு ஆதரவாக பெருமளவு ட்வீட் செய்திருப்பதை போய்ப் பார்க்கும்படி மைண்ட்-ட்ரீ தரப்பு பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறது. பொதுவாக ஊழியர்கள் மைண்ட்-ட்ரீயில் வேலை செய்வதை விரும்புகிறார்கள் என்கிறார் எகனாமிக் டைம்ஸ் நிருபர்.



இதற்கிடையில் மைண்ட்-ட்ரீ பெங்களூரு அலுவலகத்தில் ஊழியர்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். வேலை வழக்கம் போல நடக்கிறது. எங்கு போனாலும் மாடாக உழைக்க வேண்டும், தேவை இல்லாத போது தூக்கி எறியப்படுவோம் என்பதுதான் விதியாக இருக்கும் என்ற போது யார் கம்பெனியை கைப்பற்றப் போகிறார்கள் என்பதில் அவர்களுக்கு பெரிய அக்கறை இருக்காதுதான்.

இதற்கிடையில் இந்திய பத்திரிகைகளுக்கு செல்லமான இன்னொரு நிறுவனம் கவிழும் நிலையில் இருக்கிறது. ஆம், நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு வாடகை கொடுக்க முடியாமல், விமானிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், டிக்கெட் கேன்சல் செய்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறி நிற்கிறது. முன்னதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ், நீரவ் மோடியின் வைர வியாபாரம், சகாரா குழுமத்தின் சீட்டுத் தொழில் சரிவு என்று திவால் வரிசையில் நிற்கின்றனர் இந்தியாவின் தொழில்துறை தலைவர்கள்.

பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்துக் கொண்டு இந்த முதலாளிகள் நடத்தும் சூதாட்டச் சண்டைகளால் யாருக்கு என்ன பலன்?

Saturday, December 19, 2009

கட்டுப்பாடுகளும் சுதந்திரமும்

நீக்கப்பட்டது (மிகவும் எதிர்மறையான கருத்துக்கள்!!)

Saturday, May 16, 2009

நிறுவனத் தொழில் முனைவு

(Intrepreneurship)

பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அல்லது உரிமையாளர் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். மற்றவர்கள் எல்லோரும் அவர் சொல்வதை சிரம் மேல் ஏற்று செயல்படுவார்கள். அவர் எல்லா முடிவுகளையும் எடுப்பார், மற்றவர்கள் அவர் சொல்வதைப் பின்பற்றி நடந்தால் போதும்.

பெரிய நிறுவனங்களில் இது போன்ற வழிபாட்டு முறைகள் குறைவு என்றாலும், கணிசமான அளவில் இருக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் போதும் சரி, லெதர்லிங்க் ஆரம்பித்த பிறகும் சரி, உயர் பதவி இருப்பவர்களை வழிபட வேண்டும் என்று நினைத்ததில்லை. அவர்களுக்கு நம்மை விட அனுபவர் அதிகம், வயதில் மூத்தவர்கள் அதனால் மதிப்பு உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை.

அப்படி நடந்து கொள்பவர்களைப் பார்த்தால் எனக்கு இரக்கம்தான் வரும். அப்படி மனிதர்களை சிறுமைப்படுத்தும் முறை என்னால் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. லெதர்லிங்கில் முதலிலிருந்தே என்னால் அப்படி ஒரு பாகுபாடு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இனிமேலும் இருக்கக் கூடாது.

நிறுவனத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலாளர்தான். தனக்குத் தாமே திட்டம் வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட அனுபவம், திறமை வளர்ந்த பிறகு பெரிய பெரிய பெயர்களில் பதவிகளைக் கூட வகுத்துக் கொண்டோம். அதைப்பார்த்து கேள்விகள் கேட்டவர்களும் உண்டு. ஒவ்வொருவரும் முனைப்புடன் தனது பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஒருவர் பணி ஒன்றைச் செய்யும் போது மேலாளர் சொல்லி விட்டார் என்பதற்காகச் செய்யக் கூடாது. இதைச் செய்தால் வாடிக்கையாளருக்கு உண்மையான பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். 'எனக்கு எதுவும் தெரியாது, தினமும் காலையில் வந்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வேன், மாதா மாதம் சம்பளம் வந்தால் போதும்' என்று இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட பொறுப்பை யாரும் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

அரசு ஊழியர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கடமைகள், ஊதிய விகிதங்கள் இருக்கும். அவர்கள் என்ன சம்பள உயர்வு கிடைக்கும், எப்பொழுது ஊதியக் குழு அமைக்கப்படும், சேமிப்பிலிருந்து எவ்வளவு முன்பணம் பெறலாம் என்றுதான் திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வரவைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலையைப் பற்றி யோசிப்பதற்குத் தேவையே இல்லை. அது அட்டவணைப்படி நடந்து கொண்டிருக்கும்.

அதிலும் சிலர் முனைப்பெடுத்து பெரிய பதவிகளுக்கு உயர்வதை குறிக்கோளாக வைத்து செயல்படுவார்கள். ஒரே நேரத்தில் ஆசிரியராகச் சேர்ந்தவர்களில் ஒருவர் பள்ளிப் பணியிலேயே ஓய்வு பெற்று விடுவார். இன்னொருவர் கல்வித்துறையில் உயர் பதவிகளுக்குப் போய்ச் சேருவார்.

தலை சிறந்த மருத்துவர், தட்டச்சு செய்பவரை வேலைக்கு வைத்திருக்கலாம். 'அவர் முதலாளி, எனக்கு படி அளப்பவர் என்று அவர் சொல்வதை எல்லாம் தட்டச்சு செய்வது என் கடமை' ஒரு பாணி. 'நோயாளிகளுக்குச் சிறந்த சேவை அளிப்பது நமது கூட்டுக் குறிக்கோள். அவர் மருத்து நிபுணர், மருத்துவம் தொடர்பான எல்லாவற்றுக்கும் அவர் பொறுப்பு. ஆவணப்படுத்துவது எல்லாம் நம்முடைய பொறுப்பு' என்ற நோக்குடன் செயல்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்போசிஸ் நிறுவனத்தைப் பாருங்கள். நாராயண மூர்த்தி தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பிறகு நந்தன் நீலகேணி பொறுப்பேற்றார். அவரும் ஓய்வு பெற்று இப்போது கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். வேலைகளை பகிர்ந்து கொண்டு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் அணி அல்லது அமைச்சரவை இயங்கும் முறை அதை அடிப்படையாகக் கொண்டதுதான். அணித் தலைவர் அல்லது முதல் அமைச்சர் என்பவர் சமமான திறமை, பொறுப்பு இருக்கும் குழுவில் முதலில் இருப்பவர் (First among equals). ஒவ்வொருவரும் தமது பணித் துறையில் முழுமையாக செயல்படுவதுதான் நடைமுறை சாத்தியம், ஆரோக்கிய வளர்ச்சிக்குத் தேவை.

'நான் இது வரைதான் செய்வேன் அதற்குப் பிறகு எனக்குப் பொறுப்பு இல்லை' என்று சொல்வது சரிப்படாது

Saturday, April 18, 2009

குளோவியூ

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6044.html

Sunday, April 12, 2009

கூட்டுறவும் முதலாளித்துவமும்

ஒரு நிறுவனத்தில் விற்பனை மதிப்பிலிருந்து எல்லா இடுபொருட்களின் விலையை கழித்தால் கிடைப்பது நிறுவனம் கூட்டிய மதிப்பு. அந்த மதிப்பில் ஒரு பகுதி வேலை செய்தவர்களுக்கு ஊதியமாகவும், ஒரு பகுதி அரசாங்கம் செய்து கொடுத்த வசதிகளுக்கு வரியாகவும், கடைசி பகுதி முதலீடு செய்தவர்களுக்கு ஆதாயமாகவும் போக வேண்டும்.

ஒரு வகை நிறுவனம்
10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் பத்தாயிரம் (1%) ரூபாய் சம்பள செலவு, மீதியில் அரசு நிர்ணயித்த வீதத்தில் வரி கட்டி கிட்டத்தட்ட 6 முதல் 7 லட்ச ரூபாய் ஆதாயமாக எடுத்துப் போவது முதலாளித்துவ நடைமுறை. மதிப்பு கூடுதல் பாதியாக குறைந்து 5 லட்சம் ஆகி விட்டாலும் சம்பளம் கொடுக்கப்படும், அரசுக்கு வரி தொகை குறையும், முதலாளியின் ஆதாயமும் குறையும். இப்படி குறைந்து போகும் மதிப்பு கூடுதலை சரிகட்ட எதிர்பார்த்த அளவு செயல்படாத ஊழியர்களை பணி நிறுத்தம் செய்து விடுவார்கள். சம்பளச் செலவு 7000 முதல் 8000 ஆக குறைந்து போகலாம்.

கூடுதல் மதிப்பு 3 லட்சம் அல்லது 2 லட்சம் என்று ஆகி விடும் நிலைமை வருவதற்கு முன்னால் நிறுவனமே இழுத்து மூடப்பட்டு விடும்.

இப்படி இருக்கும் நிறுவனம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி கடவுளாக மதிக்கப்படுவார். அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அவரது ஒரு சொல்லின் மூலம் பணி புரியும் ஊழியரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடலாம்.
  2. 'உன்னிடம் சொன்ன வேலையை செய், கேள்விகள் கேட்பதை மறந்து விடு. மாதா மாதம் சம்பளம் கிடைக்கிறது அல்லவா. முதலாளிக்குத் தெரியும் என்ன நடக்கிறது என்று'. வேலை செய்பவர்களின் மனத் திறமையில் பெரும்பகுதி அடைபட்டுப் போய் விடும்.
  3. ஒன்றாம் தேதி ஆனால் சம்பளப் பணம் கையில் வந்து விட வேண்டும்.
  4. 'விருப்பம் இருக்கும் வரை வேலை செய். இன்னொரு நிறுவனத்தில் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் தருகிறார்கள் என்றால் விட்டு விட்டுப் போய் விடு'.
இன்னொரு வகை நிறுவனம்

10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் ஒன்பதரை லட்ச ரூபாய் (95%) சம்பளம், அரசுக்கு வரி கட்டுவதற்கு எதுவும் மிஞ்சாமல், முதலீட்டுக்கு ஆதாயமும் கிடைக்காமல் போகிறது.

மதிப்பு கூடுதல் 15 லட்சமாக அதிகரிக்கும் போது சம்பளம் கொடுப்பதும் 14 லட்சமாக அதிகரிக்கிறது. இப்படியே அதிகரித்து மதிப்பு கூடுதல் 1.5 கோடி ரூபாய் ஆகும் போது சம்பளம் 1.3 கோடி கொடுத்து மீதி இருப்பதில் வரியும் ஆதாயமும் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கு நிலவரம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி மனிதராக மதிக்கப்படுவார். அவரை போல நல்லவர் கிடையாதுங்க. எல்லோருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கிறார். உடன் பணி புரிபவர்களை இயந்திரங்கள் போல நடத்தாமல் அவர்களையும் தொழிலை புரிந்து அதில் தமது பணியை செய்ய ஊக்குவிக்கிறார்.
  2. 'நிறுவனத்தில் என்ன வருமானம் வருகிறது, என்ன செலவாகிறது என்று உனக்குத் தெரியும். வருமானம் வருவது குறைந்தால் நம் எல்லோருக்கும் பாதிப்பு உண்டு வருமானம் வருவது அதிகமானால் எல்லோருக்கும் நல்லது'. வேலை செய்பவர்களின் மனத் திறமைக்கு சவால்.
  3. சம்பளம் கிடைப்பது நிறுவனத்தின் மாதாந்திர வெற்றி தோல்வியைப் பொறுத்தது. எல்லோரும் நிறை குறைகளை விவாதித்து குறைகளை களைந்து சரியான வழி வகுத்து நிறுவனம் முன்னேற முயற்சிப்பார்கள்.
  4. ஒவ்வொரு ஊழியரும் ஒரு தொழில் முனைவராக செயல்பட்டு நிறுவனத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்துவார்கள். கூடுதல் வருமானம் தேவைப்பட்டால் நிறுவனத்தின் வருமானத்தை இப்படி பெருக்கினால் நான் அதில் X சதவீதத்தை ஊதியமாக கேட்டுப் பெறலாம். எதற்கு வேறு இடத்தைப் பார்க்கப் போக வேண்டும்.
இவ்வகை நிறுவனம் செயல்பட சாத்தியங்கள் உண்டா?

Tuesday, April 7, 2009

கற்றதும் பெற்றதும்

எழுத்தில் தெரிந்தோ தெரியாமலோ பல விஷயங்களை சுஜாதாவிடமிருந்துதான் பெற்றிருக்கிறோம். இப்போது அவரது புகழ் பெற்ற தலைப்புகளில் ஒன்றை கொஞ்சம் இரவலாக வாங்கிக் கொள்வோம். (இந்த இடுகைக்கு மட்டும்)

1. 'நான் படிச்ச ஸ்கூலில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். நிறுவனத்தில் எப்படி வேலைகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். எங்க ஸ்கூல் முதல்வர் ஒவ்வொரு வாரமும் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களின் குறிப்பேட்டில் கையெழுத்து போடுவார். குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் பொருளடக்க அட்டவணை இருக்கும். வரிசை எண், பாடத்தின் பெயர், ஆசிரியர் கையொப்பம், கடைசி நெடுவரியாக முதல்வர் கையெழுத்து போடும் இடம் இருக்கும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் குறிப்பேட்டை பார்த்து கையெழுத்து போடுவாங்க அவங்க!'

இது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மாணவர்கள் மீது. முதல்வர் அம்மா எல்லா பாடங்களையும் படிக்கிறாரோ இல்லையோ, நமது குறிப்பேட்டை அவர் ஒவ்வொரு வாரமும் புரட்டுகிறார் என்ற எண்ணமே மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரியதொரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்பேடுகளில் சில பத்துகளை படித்துப் பார்த்து குறிப்பிட்ட மாணவர், ஆசிரியரிடம் அதைப்பற்றி கேள்வி கேட்கவும் செய்து விட்டால் இது இன்னும் சக்தி வாய்ந்ததாகி இருக்கும்.

நிறுவனத்தை நடத்தும் போது எல்லா இடங்களிலும் தலைமையின் பார்வை விழுந்து கொண்டே இருக்க வேண்டும். என்னதான் வேலையை பகிர்ந்து கொடுத்தாலும் தொடர்ந்த கண்காணிப்பு இருந்தால்தான் விழிப்புணர்வு உருவாகும்.

2. 'ஒரு நிறுவனத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 40% திறனுடன் வேலை பார்த்தால் நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைத்து விடும். அப்படி கிடைக்கவில்லை என்றார் 40% திறன் கூட வெளியாகவில்லை என்று பொருள்'

புகழ் பெற்ற நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் குழுமத்தின் நிறுவனம் ஒன்றுக்குப் போய் விட்டு வந்தோம். அங்கு பணி புரிபவர்கள் தமது வேலைகளை செய்து வருகிறார்கள். அலுவலகத்துக்குக் கிளம்பி வருவது, காபி குடிப்பது, மதியம் சாப்பிடுவது, மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு ஓடுவது என்று வேலையைத் தவிர்த்து புற உணர்வுகள் அவர்களில் நிரம்பி இருக்கின்றன.

வேலை வேலை என்று 24 மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சிறு நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறது. நிறைய பணம் சம்பாதித்துக் கொடுக்கிறது. எப்படி நடக்கிறது?

அமைப்பு முறைகள்தான். தனிநபர்களின் திறமைகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். வெற்றிகரமான நிறுவனங்களில் நன்கு சிந்தித்துத் திட்டமிடப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு செயலையும் எப்படி செய்ய வேண்டும் என்று வகுத்திருக்கிறார்கள். அதை அப்படி செய்வதற்கு போதிய பயிற்சி அளிக்கிறார்கள். அவை அப்படித்தான் நடைபெறுகின்றனவா என்று சரிபார்ப்பதற்கும் மேலாளர்களுக்கு பொறுப்பு. அதை மாதா மாதம் கண்காணிப்பதற்கு உள்ளுறை தணிக்கைக் குழு. ஆண்டு தோறும் பரிசீலிப்பதற்கு வெளியிலிருந்து வரும் தணிக்கைக் குழு.

இது இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நமது வழிமுறைகள் வகுக்கப்பட்ட காலமும் புறச்சூழல்களும் மாறும் போது வழிமுறைகள் மறு வடிவமைக்கப்பட வேண்டும். அதற்காக புதிது புதிதான முன்முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஐஎஸ்ஓ தரக்கட்டுப்பாட்டு முறை செயல்படுத்த ஆரம்பிப்பார்கள். அதை சாதித்தவுடன் அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று வடிவமைத்த தர மேம்பாட்டு முறை ஒன்றை பின்பற்ற முடிவு செய்வார்கள். இன்னொரு கட்டத்தில் புதிய கணினி வழி செயல்படும் முறையில் முதலீடு செய்வார்கள்.

தனி வாழ்க்கையிலும் சரி, நிறுவனத்திலும் சரி - எதுவுமே இரண்டு முறை உருவாக்கப்பட்டு நடக்க வேண்டும். வீடு கட்ட வேண்டுமானால் முதலில் தாளில் வடிவமைப்பை வரைந்து, திட்டம் போட்ட பிறகுதான் அடிக்கல் நாட்ட வேண்டும். கட்ட கட்ட யோசித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மனச் சோம்பலுக்கு அடையாளம்.

செய்ய வேண்டியதைக் குறித்து முழுமையாக சிந்தித்து முடித்து விடுவது எல்லோராலும் செய்ய முடிவது. ஆனால் பலரால் செய்யப்படாதது. அப்படி செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் வெற்றியும் தோல்வியும்.

Monday, August 4, 2008

முதலீடும் முன்னேற்றமும்

அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்.

கடந்த அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள் இரண்டு மடங்காகி விட்டது.

புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.

நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.

டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.

அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.

கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும். குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.

வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்று இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.

புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.

Wednesday, March 12, 2008

தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்

வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்து இரண்டு மேலாண்மை வல்லுனர்கள், தகவல் தொழில் நுட்பம் இன்றைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.

முழுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்.

அதைப் பற்றிய ஸ்லாஷ்டாட் விவாதத்தை இங்கு படிக்கலாம்.

சில குறிப்புகள்:

1. தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுனத்தின் ஆதாய வீதத்தை அதிகரிப்பதோடு தகவல் தொழில் நுட்பத்தில் செய்யும் முதலீட்டில் நல்ல வருமானத்தையும் ஈட்டலாம்.

2. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப பொருளாதாரத்தில் வெற்றியடைவதற்கு , நிறுவனத்தின் அடிப்படைத் திட்டமிடலின் போது தகவல் தொழில் நுட்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

3. நிறுவனத்தின் தொழிலை நன்கு புரிந்த தொழில் முறை மேலாளரை தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தகவல் தொழில் நுட்பத்தை ஒன்றுபடுத்த அவர் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

4. தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சந்தையிலும் பொருளாதாரத்திலும் மாற்றங்களின் வேகத்தை அதிகரித்துள்ளன. இதனால் ஏற்படும் வாய்ப்புகளையும் பாதகங்களையும் உடனுக்குடன் அடையாளம் கண்டு, சரியாக புரிந்து, எதிர் வினை ஆற்றுவது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் இன்றியமையாததாகிறது.

5. நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மேலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் செய்யக் கூடிய மேம்பட்ட தகவல் மேலாண்மை, தொழில் முறை அறிவு மேம்படல், தகவல் பாதுகாப்பு, மாற்றங்களை கையாளுதல், செய்முறைகளை ஒருங்கிணைத்தல் போன்றவை நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

6. தகவல் தொழில் நுட்பத்துக்காகத் திட்டமிடும் செலவினங்களும் முதலீடுகளும் மற்ற செலவினங்களைப் போலவே நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

சன்னுக்கு என்ன ஆச்சு?

ஐபிஎம் நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமாகத் தன்னை மறு அடையாளப்படுத்திக் கொண்டது. பயனர் கணினிப் பிரிவை லெனோவோ நிறுவனத்துக்கு விற்று விட்டது. இன்றைக்கு விற்பனையில் ஒரு பெரும் பகுதி சேவைகளிலிருந்து கிடைக்கிறது.

ஆரக்கிள் நிறுவனம் நிறுவன வள மேம்பாட்டு சேவை நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. தரவுத் தளம் மட்டும விற்கும்் நிறுனமாக இருந்து நிறுவனத்துக்குத் தேவையான எல்லா சேவைகளையும் வழங்கும் படி மற்ற சின்ன நிறுவனங்களை வாங்கி உள்வாங்கி சக்கை போடு போடுகிறது.

மைக்ரோசாப்டுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு மேசைக் கணினிகளுக்கு இயங்குதளமும் அலுவலக மென்பொருளும் விற்பதிலேயே நிறைந்து விடும். அதைச் சுற்றிச் சுற்றி மதில்கள் எழுப்புவதிலேயே முழுக்கவனமும் இருப்பது போல தெரிகிறது.

சன் மைக்ரோ சிஸ்டமஸ்் என்ன செய்கிறது?

ஜாவா தொடர்பான சேவைகளில் அதை உருவாக்கிய சன்னை முந்தி விட்டன பிற நிறுவனங்கள். சன் தனது இயங்குதளம் சோலாரிசை ஓப்பன் சோர்சாக வெளியிட்டு விட்டது. லினக்சு முதலான ஓப்பன் சோர்சு மென்பொருட்களுக்கும் ஆதரவு உண்டு.

சோலாரிஸ் கணினிகளின் விற்பனை வளர்ச்சி போதுமானதாக இல்லை. எங்கே போகிறது சன்?

Tuesday, March 11, 2008

வலைப்பதிவு மூலம் புரட்சி

இன்றைய (மார்ச்சு 11, 2008) எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் சென்னை பதிப்பில் 15ம் பக்கம் வெளியாகியுள்ள மைக்ரோசாப்டு நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் லிசா பிரம்மலின் பேட்டிக் கட்டுரையில் தெரியும் தகவல்கள்.
  • 1987ல் மைக்ரோசாப்டு நிறுவனத்தில் 4500 பேர் பணியாற்றினார்கள். இப்போது 85,000 பேர் இருக்கிறார்கள்.

  • உலகெங்கும் இருக்கும் நிறுவன ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருக்க லிசா வலைப்பதிவு ஒன்றில் எழுதுகிறார்

  • தினமும் 1 மணி நேரம் எழுதவும், 3-4 நான்கு மணி நேரம் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிக்கவும் செலவிடுகிறார்.

  • மைக்ரோசாப்டு இந்தியாவில் 5000 பேர் பணிபுரிகிறார்கள்.
கூகுளின் அடித்தாடல் ஆரம்பித்த கட்டத்தில், 2005ல் பொறுப்பேற்ற பிரம்மல், ஊழியர்களை ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்க வைக்கும் forced ranking system முறையை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்.

Monday, March 10, 2008

இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் தன்மை

இன்றைய எகனாமில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள பேட்டியின் படி

  • ஐபிஎம் - இந்தியா இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகள் நிறுவனம்.
  • ஐபிஎம் இந்தியாவில் 73,000 பேர் பணிபுரிகிறார்கள்
  • உலகளாவிய ஐபிஎம் வருமானத்தில் 55% சேவைகளிலிருந்து வருகிறது.
  • 65% வருமானம் அமெரிக்காவுக்கு வெளியிலிருக்கும் சந்தைகளிலிருந்து கிடைக்கிறது

மனித வளம், வாடிக்கையாளர் உறவு, சிறப்பான சேவைகள் இந்த மூன்றும்தான் ஐபிஎம் இந்தியாவுக்கு வழிகாட்டும் நெறிகளாக பின்பற்றப்படுகின்றனவாம்.

“யாரும் தொழில்நுட்பத்தை மட்டும் வாங்குவதில்லை. வாடிக்கையாளர்கள் தொழில் முறை ஆதாயங்களை கணக்கிட்டுப் பார்க்கிறார்கள்.”

(ஐபிஎம் இந்திய துணைத் தலைவர் ராஜேஷ் நம்பியார்).

ஐந்தாவது பக்கத்துக்குப் போகவும

Wednesday, March 5, 2008

தகவல் பரிமாற்றம்

ஒரு நிறுவனத்தில், சமூகத்தில் ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஏன்?

1. என்னிடம் குறிப்பிட்ட திறமை இருக்கிறது என்பது தெரிந்தால்தான் அடுத்தவர்களுக்குத் தேவைப்படும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள என்னை அணுகுவார்கள்.

ஒரு நிறுவனத்தின் பொருளை சேவைகளை விளம்பரம் செய்வது இந்த நோக்கத்தில்தான். பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் இருந்தால்தான் செழிக்கும்.

நிறுவனத்துக்குப் பொருந்துவது தனிமனிதர்களுக்கும் பொருந்தும். நிறுவனத்தில், வீட்டில், சமூகத்தில் நம்முடைய திறமைகளை சரிவர வெளிப்படுத்தி அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தி விட வேண்டும்.

அதற்கு வலைப்பதிவுகள், தெருமுனைக் கூட்டங்கள், கவிதைகள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், ஓவியம் வரைதல் ஏன் நல்ல மென்பொருள் உருவாக்குதல் என்று விருப்பப்பட்ட ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. நான் என் நடவடிக்கைகளை அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தும் போது அதிலிருக்கும் நிறைகுறைகளை எனக்கு தெரிவிப்பார்கள். நான் செய்வதை விடச் சிறப்பாக அவர்களுக்கு வழி தெரிந்தால் அதை நமக்குத் தெரிவிக்க முன்வருவார்கள்.

3. நமது திறமைகள், சாதனைகள், பணிகளுக்கான ஊதியம் அப்போதுதான் நமக்கு வந்து சேரும்.

'திறமையான எழுத்தாளர். உயிரோட்டமுள்ள கதைகளை எழுதினார். கடைசி வரை வறுமையில்தான் வாழ்ந்தார்' என்றால், ஒன்று அவரது திறமையை வெளிப்படுத்த ஊடகம் சமூகத்தில் இல்லை. அல்லது அவரால் அந்த ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

எந்தத் துறையிலும், ஒரு நிறுவனத்தில் பணி புரியும் போது கூட, ஊதிய உயர்வு, பணி முன்னேற்றம் போன்ற எல்லாமே நாம் செய்வது நமது மேலதிகாரிகள், கூட வேலை செய்பவர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

'நான் என் வேலையை நேர்மையாக, கருத்தோடு செய்து முடிப்பேன். பலன்கள் தானாக வந்து சேர வேண்டும்' என்று இருந்து விடாமல், அந்தப் பணியின் பலன்கள் பலருக்கும் போய்ச் சேரும்படி தகவல்களைப் பரவச் செய்ய வேண்டும்.

இதன் மறுபக்கம், மற்றவர்களின் திறமைகளை, பணிகளை, சாதனைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல்.

Thursday, February 7, 2008

வளரும் வழி

புதிதாக ஆரம்பித்த நிறுவனத்தின் வளர்ச்சி இலக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பல மடங்குகளாக அதிகரிக்க வேண்டும். என்னென்ன செய்கிறோம், எங்கெங்கு வாய்ப்புகள் இருக்கின்றன. என்னென்ன பலங்கள், என்னென்ன பலவீனங்கள், எங்கெங்கு ஆபத்துகள் வரலாம் என்று அலசிக் கொள்ள வேண்டும்.

சேவை நிறுவனம் ஒன்றில், ஆண்டு 0ல் X அளவு விற்பனை இருந்தால், 1ல் 5X, இரண்டாம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு, 4ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு, 5ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்காக விற்பனை அதிகரிக்க வேண்டும்.

இப்படி எண்களில் சிந்திப்பது, இலக்குகளை நிர்ணயிப்பது, அதை முறைப்படி தினமும் கண்காணிப்பது, நிர்ணயித்த இலக்குகளை எட்டுவது என்பது எல்லோருக்கும் வந்து விடாது. குறிப்பாக சம்பளத்துக்கு வேலைபார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு இப்படி கோடிகளைத் துரத்துவது மனதளவில் பொருந்தாத ஒன்று.

பலரைச் சேர்த்து நிறுவனம் நடத்துபவர்களுக்கு அந்த மதிப்பு உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரும் திறம்பட செயல்பட வழி வகுத்து, முயற்சிகளின் வெளிப்பாட்டை பலனுள்ள சேவையாக மாற்றி, மாற்றிய சேவையை வாடிக்கையாளருக்கு உருப்படியாகப் போய்ச் சேர வைத்து, அந்த விபரங்களை தெளிவாக எடுத்துரைத்து, வாடிக்கையாளர் பெற்ற பலன்களில் ஒரு பகுதியை கட்டணமாக பெற்று வருமானம் பெருக்க வேண்டும்.

அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, வசதிகளைப் பெருக்க வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

இன்போசிஸ் நிறுவனத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்த நூற்றுக் கணக்கான பேரின் சொத்து மதிப்பு இப்போது கோடிக் கணக்கில். முதல் நூறு எண்களுக்குள் ஒருவராக சேர்ந்தவரின் பங்குகளின் மதிப்பு நூற்று முப்பது கோடி ரூபாயாம்.

அதன் பொருள் என்ன?

ஒவ்வொருவரின் திறமையை/வேலையை வாடிக்கையாளருக்கு பயனுள்ள சேவையாக மாற்றியிருக்கிறது அந்த நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த சேவையின் மதிப்பு பல கோடி ரூபாய்கள், அதில் ஒரு பகுதி நிறுவனத்துக்கு கட்டணமாக வந்திருக்கிறது. அதில் ஒரு பகுதி வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளமாக, பங்குகளாக போய்ச் சேருகிறது.

Sunday, December 30, 2007

ஓடிக் கொண்டே இருக்கணும்

ராமகிருஷ்ணரின் குட்டிக் கதைகளில் ஒன்று. ஒரு விறகுவெட்டி காட்டுக்குப் போகிறார். காட்டின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் முனிவரிடம் 'நல்ல மரங்கள் எங்கு கிடைக்கும்' என்று கேட்கிறார். "உள்ளே உள்ளே போ" என்கிறார் முனிவர்.

உற்சாகமாக உள்ளே போனார் விறகுவெட்டி. நல்ல உயர்தர விறகுக்கான மரங்கள் கிடைத்தன. நல்ல காசு. அடுத்த முறை மரம் எடுக்க வரும் போது முனிவரின் சொற்களை நினைவு கூர்ந்து இன்னும் உள்ளே போனார். வீடுகள் கட்ட, மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் அருமையான மரங்கள் இருந்தன. பல நாட்கள் கழித்து வரும் போது இன்னும் உள்ளே போகலாம் என்று போனால் சந்தன மரங்கள் இருந்தன. (அப்போதெல்லாம் சந்தன வீரப்பன் மட்டும்தான் வெட்ட முடியும் என்று இல்லை போலிருக்கிறது).

அவர் பெரும் பணக்காரராகி விட்டார்.

கதை சொல்வது என்னவென்றால், உன் நிலையில் நிறைவுற்று நின்று விடக் கூடாது. தொழிலாக இருந்தாலும் சரி, படிப்பு, கலை, விளையாட்டு, சமூக அறிவியலாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, தனி மனிதனோ, சமூகமோ மேலும் மேலும் மேம்பட முயற்சிக்க வேண்டும்.

ஜக்கி வாசுதேவ் சொன்னதாக என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் சொன்னார்.
'நாம் விரிவடையும் போது பலர் அழிந்து போகிறார்களே அது பாவம் இல்லையா'

'அப்படி விரிந்து கொண்டே போவது மனித இயல்பு, அதுதான் இயற்கையின் அழைப்பு. உன் நிலையை தொழிலை பெருக்காமல் இருப்பதுதான் மனித இயல்புக்கு எதிரானது. நீயாகத் தேடிப் போய் ஒருவரை அழிக்க வேண்டும் என்று போகாத வரை, உனது விரிவாக்கலில் அடிபட்டு விடக் கூடியவர்களுக்கு நீ பொறுப்பு கிடையாது. ஒவ்வொரு உயிருக்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முனைப்பு உண்டு. அது உனக்கும் இருக்க வேண்டும்'

Friday, December 28, 2007

போர்க்களம் - 5

முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி

ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். 20 நிமிட நடையும் கிடைத்தது. 7 மணிக்கு வாராந்திர பரிசோதனை செய்ய வேண்டும். 7 மணி தாண்டி ஐந்து நிமிடங்களில் அலுவலகம். வேலை ஆரம்பித்து விட்டது. ஒரு பால் ஊத்தாத தேநீர் மட்டும் குடித்துக் கொண்டேன். எட்டேகாலுக்கு வந்திருந்தவர்களை வைத்து கூட்டத்தை ஆரம்பித்து விட்டோம். அடுத்த சில நிமிடங்களில் எதிர்பார்த்த எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள். ஒருவர் மட்டும் டிமிக்கி.

முந்தைய நாள் கூட்ட விபரங்களையும் விளக்கி விட்டு என்ன பேச வேண்டும் என்று எல்லோரது கருத்தையும் தெரிந்து கொண்டேன்.
  • இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து நமக்கும் ஆதாயம் இது வரை கிடைக்கவில்லை.
  • பல லட்சங்கள் செலவழித்து அவர்களுக்கும் முழுப் பலன் கிடைக்கவில்லை.
  • இன்னும் மூன்று மாதங்கள் வேலை செய்ய என்ன அடிப்படை.
  • வேலை வெற்றிகரமாக முடியாவிட்டால், என்ன தண்டம்,
  • முடித்து விட்டால், என்ன வெகுமதி
    என்று ஒவ்வொருவராகக் கருத்து சொன்னார்கள்.
ஒன்பதே முக்காலுக்கு அந்த கூட்டம் முடிய தயாரிப்பு ஆவணங்களுக்காக அரை மணி நேரம் போனது. கிளம்பும் போது பத்தரை மணி, ஒரு வாய் ஏதாவது சாப்பிட நேரமில்லை. 11 மணிக்கு வரச் சொன்னவரின் அலுவலத்தை அடையும் போது 11.20. நல்ல வேளையாக அவர் தாமதமாக பதினொன்றரைக்குத்தான் வந்தார். அவரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்த நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டு அடுத்த இடம் 12 மணிக்கு. அவர் இன்னும் வந்திருக்கவில்லை.

கிடைத்த இடைவெளியில் போய் சாப்பிட்டுக் கொண்டோம். மீண்டும் வரவேற்பு பகுதியில் காத்திருக்கும் போது அதிகம் காத்திருக்கும் முன் அவரே வந்து விட்டார். வேறு யாரும் காத்திருக்கவும் இல்லை. சாப்பாட்டு வேளை என்பதால் சாப்பிட ஆரம்பிக்கும் முன் சந்திக்க முடியுமா சாப்பிட்ட பிறகுதானா என்று உட்கார்ந்திருந்தோம். இடையில் அவரது உதவியாளரிடம் நினைவுபடுத்தவும் செய்தேன்

ஒன்றரை மணி வாக்கில் உள்ளே கூப்பிட்டார்கள். 'சாப்பிட்டிருக்க மாட்டார், சீக்கிரம் பேசி விட்டு வந்து விடலாம்' என்று போனோம். பேசி முடித்து வெளி வரும் போது மணி 4 தாண்டி விட்டிருந்தது. அவர் சாப்பிடாமலேயே பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு நிலைக்குப் பிறகு எனக்கும் அந்த கவனம் தப்பி விட்டிருந்தது. வெளியே வந்த பிறகு உதவியாளர் வருத்தப்படும் போதுதான் உறைத்தது.

உள்ளே போகும் போது ஒரு மடிக்கணினியை வைத்துக் கொண்டு கணினி பராமரிப்புப் பணியாளரிடம் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அதைப் பற்றிப் பேச ஆரம்பித்து, 'குழந்தைக்கு ஒரு மடிக்கணினி' திட்டம் பற்றிச் சொல்லி, இந்திய அரசு அதை நிராகரித்து விட்டதாகச் சொன்னேன்.

அங்கிருந்து வெளிநாட்டு உதவிப் பணம், சமூக சேவை மையங்கள் என்று ஆரம்பித்தார். அப்படியே திரும்பி நிதி திரட்டி தங்க கூரையுடன் கோயில் கட்டிய வேலூர் சாமியாரைக் குறிப்பிட்டார். அதற்கு ஒரு எதிர்ப்புத் தெரிவிக்க அந்தச் சாமியார் எப்படி விளக்குகிறார் என்று சொன்னார், திருப்தியான விளக்கம் இல்லை.

ஆன்மீகம், இந்து மதம், என்று பேச்சு நீள அவ்வப்போது தொந்தரவு செய்த கைப்பேசியை வெளியே உதவியாளரிடம் கொடுத்து விட்டார். பல இடங்களில் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாத முகபாவமும், பேச்சும் அவருக்குப் புரியக் கூடியவை. இந்த நிலையில் இன்றைக்கு வந்த வேலை எப்படிப் போகுமோ என்று ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஆர்எஸ்எஸ் பிற மதங்கள் என்றும் வந்து சேர்ந்தது. என்னுடைய கருத்துக்களை கோடி காட்டினேன்.

அப்படி இரண்டு மணி நேரம் ஓடிய பிறகு, 'சொல்லுங்க சிவா' என்று வேலை ஆரம்பித்தார். பேசும் போது தொழிலில் வாடிக்கையாளர் சேவை பற்றியும் பேசியிருந்தார். மனதுக்குள் கையை மடித்து விட்டுக் கொண்டு கையில் கொண்டு வந்திருந்த திட்டத்தை நீட்டினேன். ஒரே பக்கத்தில் நான்கே அட்டவணைகள்.

இதுவரை வாங்கும் பணம், அடுத்த மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது, அதற்கு எதிர்பார்ப்பது, முடிக்கா விட்டால் என்ன தண்டம், முடித்து விட்டால் என்ன வெகுமதி என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

சரமாரியாக ஆயுதங்களைத் தொடுக்க ஆரம்பித்தார். பல முறைகளில் அவரிடம் பேசியதில் ஏற்பட்ட புரிதல்களும், அவர் எப்படி எல்லாம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த தயாரிப்புகளும், இன்றைக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று நானும் சண்டையில் இறங்கி விட்டேன். ஆரம்ப காலங்களில் இப்படி யாராவது பேரம் பேச ஆரம்பித்தால் உடனேயே விட்டுக் கொடுத்து விடுவேன். அவர்கள் கேட்கும் கேள்விகள் நம்மைக் குறை சொல்ல இல்லை, நமது காரணங்களை புரிந்து கொள்ள என்பது இப்போதுதான் புரிகிறது.

'ஆரம்பித்தில் சொன்ன விலையில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கூடினால் பரவாயில்லை, 10 மடங்காக சொன்னால் என்ன நியாயம்' அவர்கள் தேவைகளையும் 3 தொழிற்சாலைகளுக்கு விரித்து, பல குழப்பங்களையும் சமாளிக்க வைத்ததை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் நியாயத்தை விளக்கினேன். கேட்ட பணத்தில் பாதியில் நின்றார். அதுவே பெருந் தொகைதான், ஆனாலும் முடியாது என்று விட்டேன்.

'நாங்கள் திட்டமிட்ட அளவு பணம் தராவிட்டால் தேவையான முயற்சி போட முடியாமல் மீண்டும் வேலை அரைகுறையாக நின்று விடும்' என்று கணக்குகளை என் குறிப்பேட்டில் எழுதிப் பார்த்தேன். நெருக்கிப் பிடித்தால் சம்பளச் செலவு மட்டும் கேட்டதில் மூன்றில் இரண்டு பங்கு வருகிறது. மற்ற செலவுகளுக்கு ஒரு பங்கு. இடையில் அவருக்கு தொலைபேசி அழைப்பு.

அவர்கள் போட்டியாளர்களுக்குக் குறைந்த விலையில் கிடைத்து விடுமோ என்று ஒரு கேள்வி, அதையும் விளக்கினேன். 30 ஆண்டு SAP கூட கூடுதல் ஒரு நிறுவனத்துக்கு விலை குறைக்க முடியாது, மென்பொருள் உருவாக்கம், பராமரிப்பின் இயல்பு அப்படி என்று விளக்கினேன். இறுதியாக 5ல் நான்கு பங்கில் நின்று விட்டார். நாங்களும் ஏற்றுக் கொண்டோம். பெரும் பொறுப்புதான்.

அவரது குரலும் பல முறை உயர்ந்தது, இடையிடையே புன்சிரிப்பு வேறு. நானும் உச்சக் கட்டத்தில், விடாமல் சண்டை போட்டேன். நண்பரின் ஆதரவு வேறு. 'இதே மாதிரி அந்த வேலைக்கும் ஒரு திட்டம் போட்டுக்கோப்பா' என்று அனுப்பி வைத்தார். பழைய நிலுவையில் பெரும்பகுதிக்கு காசோலையும் கொடுத்து விட்டார்.

(முடிந்தது)

Thursday, December 27, 2007

போர்க்களம் - 4

முதல் பகுதி
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி

காத்திருக்கும் அந்த நிமிடங்கள் தவிப்பாக இருந்தது. தேவையில்லாத பேச்சுக்களும் வளர்ந்து விடக் கூடாது. பேசாமலும் இருக்க முடியாது. அடுத்த சில நிமிடங்களில் எல்லோரும் வந்து விடத் திட்டமிட்டபடி படக்காட்சியும் விளக்க உரையும் ஆரம்பித்து விட்டது.

அவர்கள் கேட்க நினைக்கும் கேள்விகள், அறிய வேண்டும் தகவல்கள் என்று எல்லாமே காண்பித்துப் பேச முடிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சேகரித்த விபரங்களை தொகுத்து முழுக் காட்சியாக விளக்கி முடிக்கும் போது நல்ல ஒரு சூழல் உருவாகியிருந்தது. இடையில் ஓரிரு குறுக்கீடுகள் வந்தாலும், அவர்கள் சொல்ல வந்த கருத்தை நாங்கள் ஏற்கனவே சேர்த்துக் கொண்டிருந்தோம்.

மனதில் நிரம்பியிருந்த கேள்விகள் கருத்துக்களுக்கு வடிவம் கிடைத்து வெளியில் வந்து விட்ட பிறகு விவாதம் ஆரம்பிக்கலாம்.

நல்லதோ கெட்டதோ, உள்ளதில் சொதப்பியிருந்த, அதிகம் கடுப்பேற்றும் மேலாளர் ஆரம்பித்து வைத்தார். 'பேசினது நல்லா பேசினீங்க, நல்லா விளக்கினீங்க, ஆனா..' என்று ஆரம்பித்து மிகத் தீவிரமாக நியாயமற்ற முறையில் தாக்கிக் குறை சொன்னார்.

எதிர்பார்த்திருந்தாலும் கேட்கும் போது மனம் வாடியது. அவர்கள் மீது நேரடியாக எதிர்க் குறை சொல்ல ஆரம்பிக்காமல், விளக்கங்கள் சொன்னேன். அதைத் தொடர்ந்து அவர்களது மனக்குறைகள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தது. நாங்களே அவற்றை எல்லாம் பேசி விட்டதால், அவற்றுக்கு அழுத்தம் குறைந்து போயிருந்தது.

இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் குறை கூறும் வடிவில், எங்கள் சேவையின் பலன்களை அவரது நிறைவுகளை வெளிப்படுத்தினார். மூன்றாவது தொழிற்சாலை மேலாளருக்கும் முதலாமவருக்கும் உட்கட்சிச் சண்டை. அவர் கடைசியில் வாயைத் திறந்தாலும் காரமாக ஆதரித்தார். 'என்னுடைய வேலைகளை கணினி மூலமாகத்தான் செய்கிறேன். என்ன அறிக்கை வேண்டுமோ, என்ன வெளிப்பாடு வேண்டுமோ அதை மென்பொருள் பயன்பாட்டில் எடுத்துக் கொள்கிறோம்' என்று அவர் அடித்த அடியில் சூழல் சாதகமாக மாறி விட்டது.

முதலாமவரின் மதிப்பு இறங்கி விட்டது, நம் பங்குக்கு முதல் தொழிற்சாலையில் அவர்களின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டினோம். தொகுத்துப் பேசும் போது ஒரு மேலாளர் மூன்று தொழிற்சாலைக்குமான பணியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கேட்டு முதல் மேலாளரைக் குறிப்பிட்டால், தலைவர் உடனேயே குறிக்கிட்டு மூன்றாமவரை நியமித்து விட்டார். முதலாமவரிடம் மன்னிப்புக் கேட்பு வேறு.

பணம், சேவைக் கட்டணம் குறித்து நாளைக்கு அலுவலகத்தில் வந்து பேசிக் கொள்ளச் சொல்லி விட்டார். கூட்டம் முடிந்து மற்றவர்கள் எல்லோரும் வெளியே போய் விட்ட பிறகு நாங்கள் மட்டும் நின்றிருக்க அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார் தலைவர். தனது அனுபவ முத்துக்களை வழக்கம் போல அள்ளி இறைத்தார். அதற்கு முன்பு அவர் பேசிக் கேட்டிராத இரண்டு பேரும் கேட்டிருந்த இரண்டு பேரும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் அவரைச் சந்திக்கும் போது பேசுவதற்கான ஆதாரங்கள் பல கிடைத்தன. திட்டமிட்டு அப்படிப் பேசிக் கொண்டிருந்தாரா, இயல்பாக வந்ததா என்று தெரியாது, தன்னிடம் பேரம் பேசுவதற்கு அவரே பல குறிப்புகளை விட்டுச் சென்றார்.

வினை முடித்த இனிமையுடன், நல்ல பசி வேறு. அலுவலத்துக்கு வந்து சாப்பிட்டு விட்டுச் சின்னச் சின்ன வேலைகளை முடித்தேன். இன்னொரு நிறுவனத்துக்குத் தொலைபேசினால் சனிக்கிழமை காலையில் 11 மணிக்கு வரச் சொன்னார். மதியத்துக்கு மேல் தொழிற்சாலை மேலாளருடன் சந்திப்பு 3.30க்கு. இடையில் நிறுவனத் தலைவரையும் சந்திக்க வேண்டும்.

வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தை விட முடியாது என்று காலையில் 8 மணிக்கு எல்லோரையும் வரச் சொன்னோம். எட்டே காலுக்கு ஆரம்பித்தால் 10 மணி வரை போகலாம். அதன் பிறகு கிளம்பி பெரிய மேடு போய் 11 முதல் அரை மணி நேரத்துக்கு முதல் சந்திப்பை முடித்து விட்டால், இரண்டாவது அதி முக்கிய சந்திப்புக்குப் போய் விட்டு இரண்டரை மணிக்குக் கிளம்பினால், 40 கிலோமீட்டர்கள் பயணித்து தொழிற்சாலைக்கும் போய் விடலாம்.

ஐந்தாவது பகுதி

Wednesday, October 17, 2007

நிரல் பராமரிப்பு - 6

சரி, ஏற்கனவே இருக்கும் நிரல் பிரதிகளை என்ன செய்வது. அவற்றை நிரல் பராமரிப்புத் தொகுப்புக்கு எப்படி கொண்டு வருவது என்றும் திட்டமிட வேண்டும்.

ஒவ்வொரு திட்டத்தின் சிவிஎஸ்சில் தற்போதைய பதிப்பை உருவாக்கம் கிளையாக ஆக்கி விட வேண்டும். எல்லா கோப்புகளையும் உருவாக்கம் கிளைக்குள் தகவிறக்கி விட்டால் போதும்.

உருவாக்கம் கிளையிலிருந்து புதிதாக உருவான கோப்புகளை அப்படியே சோதனை கிளையில் இருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர் கிளைகளுக்கு இணைத்து (merging) விட வேண்டும்.

வாடிக்கையாளர்களின் தற்போதைய நிரல் தொகுப்பிலிருந்து கோப்புகளை மேலே உருவாக்கிய கிளை பதிப்பில் நகல் செய்தால் அவர்களுக்காக செய்த மாற்றங்கள் நிரல் பராமரிப்புக்குள் வந்து விடும். அது சரிவர வேலை செய்கிறது என்று உறுதி செய்து கொண்ட பிறகு சோதனை கிளையிலிருந்து பயன் கிளைக்கு இணைக்கும் வேலையை மேலாளர் செய்து விடுவார்.

கடைசியாக பயன் கிளையிலிருந்து ஒரு பிரதியை எடுத்து வாடிக்கையாளர் இடத்தில் மாற்றி விடுவோம். இப்போது எல்லாமே ஒரே நிரல் கட்டுப்பாடு முறைக்குள் வந்து விட்டது.

மென்பொருள் பயன்பாட்டு நிரல்கள் ஒரு புறம் இருக்க, அதே நேரம் தரவுத் தள வடிவமைப்பின் பிரதிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளர் பிரதிக்கும் இன்னொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் நிரல் கோப்புகள் மட்டுமின்றி, தரவுத் தள வடிவமைப்புகளும் எப்படி வேறுபடுகின்றன என்று கவனிக்க வேண்டியிருக்கும்.

ஒரு பிரதியில் மூன்று அடைவுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
திட்டம் 3
உரு
சோதனை
பயன்
-வாடி1
- பயன்பாடு
- நிரல் தொகுப்புகள்
- நுட்பக் கோப்புகள்
பயன்பாடு அடைவில் மென்பொருளைப் பயன்படுத்தும் போது பயனர் அணுகும் கோப்புகள் மட்டும் இருக்க வேண்டும். நிரல் தொகுப்புகளில் செயலிகள் (functions), செயலிக்கூட்டுகள் (classes) போன்றவற்றின் தொகுப்புகள் இருக்க வேண்டும். இவை பயன்பாட்டு நிரல்களில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். சேர்க்கப்பட்ட கோப்புகளுக்கான அடைவு இது என்று குறிப்பிட தோதுவாக இருக்கும்.

நுட்பக் கோப்புகளில் தரவுத் தளத்தை உருவாக்கப் பயன்படுத்திய உரைக் கோப்புகள் இருக்கும். தரவுத் தள வடிவமைப்பு ஒரு கோப்பு, கொடாநிலையாக முதலில் போட்டுத் தரும் தரவுகள் ஒரு கோப்பில், தரவுத் தள செயலிகளுக்கு ஒரு தனி அடைவு - அதில் ஒவ்வொரு செயலிக்கும் ஒரு கோப்பு. இப்படிப் போட்டு வைத்து விட்டால் வாடிக்கையாளர் பதிப்புகளுக்கிடையேயான தரவுத் தள மாறுதல்களையும் எளிதாகக் கையாளலாம்.

நிரல் பராமரிப்பு - 5

தொகுப்புக்குள், ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு அடைவு. மொத்தம் 5 திட்டங்கள். ஒவ்வொரு திட்டத்துக்குள்ளும் மூன்று அடைவுகள். dev, test, pro.

தொகுப்பு
- திட்டம் 1
உருவாக்கம்
சோதனை
பயன்
- திட்டம் 2
உருவாக்கம்
சோதனை
பயன்
- திட்டம் 3
உருவாக்கம்
சோதனை
பயன்

என்ற விரிவு.
  • உருவாக்கம் என்பது புதிய கூறுகளை உருவாக்குதல், பெரிய மாற்றங்களை செய்தல் போன்ற வேலைகளுக்குப் பயன்படும்.
  • சோதனையும், பயனும் ஒரே மாதிரி இருக்கும். இரண்டிலுமே தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிரதிகள் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் ஒரு கிளை இருக்கும்.
திட்டம் 2
உருவாக்கம்
சோதனை - வாடி 1
வாடி 2
வாடி 3
பயன் - வாடி 1
வாடி 2
வாடி 3

பயன் அடைவில் இருக்கும் குறிப்பிட்ட வாடிக்கையாளர் கிளையிலிருந்து பிரதியை எடுத்துப் பார்த்தால் அது அவர்கள் இடத்தில் ஓடும் நிரலை அப்படியே ஒத்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளரிடமிருந்து வரும் புகார் அல்லது கோரிக்கைக்கேற்ப நிரலை மாற்றுவதற்கு சோதனைக் கிளையிலிருந்து நிரல் பிரதி உருவாக்கிக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய மாறுதல்களைச் செய்து கோப்பை தொகுப்புக்கு அனுப்புவார் உருவாக்குனர். தொகுப்புக்கு அனுப்பும் போது நமது issue tracker பயன்பாட்டில் வாடிக்கையாளர் கோரிக்கையை உள்ளிடும் போது கிடைத்த கோரிக்கை எண்ணையும் (issue id) குறிப்பிட வேண்டும்.

இந்த மாறுதல், குறிப்பிட்ட கோரிக்கை எண் தேவையைச் சரி செய்வதற்காக சேர்க்கப்பட்டது என்று தெரிந்து கொள்ள இது உதவும்.

மாறுதலை செய்த ஊழியர் அது பற்றிய விபரத்தை, தொகுப்புக்கு அனுப்பும் போது கிடைத்த மாறுதல் எண்ணைக் (revision no) குறிப்பிட்டு, 'இன்ன கோரிக்கை எண்ணுக்காக, இன்ன மாறுதல் எண்ணில் மாற்றங்களை சோதனைத் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன்' என்று மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி விடுவார். அதே தகவல் சோதனை குழுவுக்கும் போகும்.

சோதனை செய்பவர் குறிப்பிட்ட மாறுதல் எண்ணுக்கான பதிப்பை தொகுப்பிலிருந்து பெற்று என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற விபரங்களையும் எடுத்து சோதனை செய்வார்.

மேலாளர் கோரிக்கை விபரங்களையும், மாறுதல்களையும் சீர்தூக்கிப் பார்ப்பார். எல்லாம் சரிவர இருந்தால், சோதனைக் குழுவின் சோதனை முடிவுகளும் ஒத்துப் போனால் அதே மாற்றங்களை சோதனைக் கிளையிலிருந்து பயன் கிளைக்கு கடத்துவார்.

இது போல மாற்றங்களை எடுத்தல், மாற்றங்களை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அனுப்புதல் போன்ற அன்றாட வேலைகளுக்கான கட்டளைகள் சப்வெர்ஷனில் மிக எளிதாக மாற்றப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர் பிரதிக்கு மேலாளர் பயன் கிளைக்கு கடத்திய மாறுதல் எண்ணுக்கான நிரல் மேம்பாட்டைச் செய்து விடுவோம். அதாவது வாடிக்கையாளரின் பயன்பாடும் சப்வெர்ஷன் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பிரதியாகவே இருக்கும். அங்கே போய் மேம்படுத்தும் கட்டளையைக் கொடுத்தால் மாற்றங்கள் இறங்கி வந்து விடும்.

யார் என்ன மாற்றம் செய்ய வேண்டுமானாலும் அது சோதனை கிளையில்தான் நடக்க வேண்டும். பயன் கிளையில் மாற்றங்களைச் சேர்ப்பது சோதனைக் கிளையிலிருந்து இணைக்கும் முறையில் மட்டும்தான் நடக்க வேண்டும். அந்த இணைப்புக்கான அனுமதி ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒருவரின் பொறுப்பில் இருக்க வேண்டும்.

நிரல் பராமரிப்புத் தொகுப்பை இணைய வழங்கியில் வைத்துக் கொண்டு வாடிக்கையாளர் கணினிகள், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர் என்று எல்லா இடங்களிலும் ஒத்திசைவு செய்து கொள்ளலாம். வெளியூர்களிலிருந்து நமது உருவாக்கத்தில் பங்களிக்க முன்வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

சரி, ஏற்கனவே இருக்கும் நிரல் பிரதிகளை என்ன செய்வது. அவற்றை நிரல் பராமரிப்புத் தொகுப்புக்கு எப்படி கொண்டு வருவது என்றும் திட்டமிட வேண்டும்.

ஒவ்வொரு திட்டத்தின் சிவிஎஸ்சில் தற்போதைய பதிப்பை உருவாக்கம் கிளையாக ஆக்கி விட வேண்டும். எல்லா கோப்புகளையும் உருவாக்கம் கிளைக்குள் தகவிறக்கி விட்டால் போதும்.

உருவாக்கம் கிளையிலிருந்து புதிதாக உருவான கோப்புகளை அப்படியே சோதனை கிளையில் இருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர் கிளைகளுக்கு இணைத்து விட வேண்டும்.

வாடிக்கையாளர்களின் தற்போதைய நிரல் தொகுப்பிலிருந்து கோப்புகளை மேலே உருவாக்கிய கிளை பதிப்பில் நகல் செய்தால் அவர்களுக்காக செய்த மாற்றங்கள் நிரல் பராமரிப்புக்குள் வந்து விடும். அது சரிவர வேலை செய்கிறது என்று உறுதி செய்து கொண்ட பிறகு சோதனை கிளையிலிருந்து பயன் கிளைக்கு இணைக்கும் வேலையை மேலாளர் செய்து விடுவார்.

கடைசியாக பயன் கிளையிலிருந்து ஒரு பிரதியை எடுத்து வாடிக்கையாளர் இடத்தில் மாற்றி விடுவோம். இப்போது எல்லாமே ஒரே நிரல் கட்டுப்பாடு முறைக்குள் வந்து விட்டது. மேலே சொன்ன நடைமுறைப்படி மாற்றங்களை கையாளலாம்.

மென்பொருள் பயன்பாட்டு நிரல்கள் ஒரு புறம், அதே நேரம் தரவுத் தள வடிவமைப்பின் பிரதிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளர் பிரதிக்கும் இன்னொரு வாடிக்கையாளர் பிரதிக்கும் நிரல் கோப்புகள் மட்டுமின்றி, தரவுத் தள வடிவமைப்புகளும் எப்படி வேறுபடுகின்றன என்று கவனிக்க வேண்டியிருக்கும்.

ஒரு பிரதியில் மூன்று அடைவுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
திட்டம் 3
உரு
சோதனை
பயன்
-வாடி1
- பயன்பாடு
- நிரல் தொகுப்புகள்
- நுட்பக் கோப்புகள்
பயன்பாடு அடைவில் மென்பொருளைப் பயன்படுத்தும் போது பயனர் அணுகும் கோப்புகள் மட்டும் இருக்க வேண்டும். நிரல் தொகுப்புகளில் செயலிகள் (functions), செயலிக்கூட்டுகள் (classes) போன்றவற்றின் தொகுப்புகள் இருக்க வேண்டும். இவை பயன்பாட்டு நிரல்களில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். சேர்க்கப்பட்ட கோப்புகளுக்கான அடைவு இது என்று குறிப்பிட தோதுவாக இருக்கும்.

நுட்பக் கோப்புகளில் தரவுத் தளத்தை உருவாக்கப் பயன்படுத்திய உரைக் கோப்புகள் இருக்கும். தரவுத் தள வடிவமைப்பு ஒரு கோப்பு, கொடாநிலையாக முதலில் போட்டுத் தரும் தரவுகள் ஒரு கோப்பில், தரவுத் தள செயலிகளுக்கு ஒரு தனி அடைவு - அதில் ஒவ்வொரு செயலிக்கும் ஒரு கோப்பு. இப்படிப் போட்டு வைத்து விட்டால் வாடிக்கையாளர் பதிப்புகளுக்கிடையேயான தரவுத் தள மாறுதல்களையும் எளிதாகக் கையாளலாம்.