Wednesday, June 12, 2019

இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும் அரவிந்த் சுப்பிரமணியன்

இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

2001-02ம் ஆண்டு முதல் 2017-18 வரை இந்தியாவின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி வீத புள்ளிவிபரங்கள் பற்றிய ஆய்வு. இந்தப் புள்ளிவிபரங்கள் சரி பார்ப்பதற்கு ஜி.டி.பி புள்ளிவிபரங்களிலிருந்து தனியாக சுயேச்சையாக திரட்டப்படும் 17 பிற கணக்கீடுகளை எடுத்துக் கொள்கிறார்.
  • மின்சார நுகர்வு, 
  • பெட்ரோலியம், 
  • ஸ்டீல், 
  • சிமென்ட், 
  • ஒட்டு மொத்த கடன், 
  • தொழில்துறைக்கு கடன், 
  • ஏற்றுமதி, 
  • இறக்குமதி, 
  • இரு சக்கர வாகன விற்பனை, 
  • வணிக வாகனங்கள் விற்பனை, 
  • கார் விற்பனை, 
  • டிராக்டர் விற்பனை, 
  • விமான பயணிகள் போக்குவரத்து, 
  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை, 
  • ரயில்வே சரக்கு போக்குவரத்து, 
  • தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (நுகர்வு சாதனங்கள், உற்பத்தி சாதனங்கள்), போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார். 
2001 முதல் 2011 வரையில் ஜி.டி.பி வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரங்களும், இந்த பொருளாதார செயல்பாடுகள் பற்றிய இந்த 17 கணக்கீடுகளும் ஒத்திசைவாக உள்ளன. அதாவது, ஜி.டி.பி வளர்ச்சி அதிகமாக இருந்த ஆண்டுகளில் மின்சார நுகர்வு, கார் விற்பனை, டூவீலர் விற்பனை முதலானவையும் அதிகமாக இருந்திருக்கின்றன. ஜி.டி.பி வளர்ச்சி குறைந்த ஆண்டுகளில் இந்தக் குறியீடுகள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

ஆனால், 2011-12 முதல் 2016-17 வரையிலான கால கட்டத்தில் ஜி.டி.பி புள்ளிவிபரங்களுக்கும் பிற வளர்ச்சி தொடர்பான குறியீட்டு எண்களுக்கும் இடையேயான ஒத்திசைவு குலைந்து போயிருக்கிறது. ஜி.டி.பி வளர்ச்சி அதிகரிப்பதாக காட்டும் போது, மற்ற கணக்கீடுகள் எல்லாம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

2011-க்கு முன்பு ஜி.டி.பி-ல் சேர்க்கப்படும் உற்பத்தித் துறை மதிப்புக் கூடுதல், தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணுடனும், உற்பத்தித் துறை ஏற்றுமதியுடனும் ஒத்திசைந்திருந்தது. 2011-க்குப் பிறகு இந்த உறவு எதிரெதிர் திசையில் சென்றிருக்கிறது.

  • சராசரி ஏற்றுமதி வளர்ச்சி வீதம் 2001-2011 வரை 14.5% ஆக இருந்தது, 2011-க்குப் பிறகு வெறும் 3.4% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. 
  • இறக்குமதி வளர்ச்சி வீதம் 2011-க்கு முன்பு ஆண்டுக்கு 15.6% ஆக இருந்தது அதற்குப் பிறகு 2.5% ஆகக் குறைந்திருக்கிறது.
     
  • வணிக வாகன உற்பத்தி 2011-க்கு முன்பு ஆண்டுக்கு 19.11% அதிகரித்திருக்கிறது, 2011-க்குப் பிறகோ 0.1% குறைந்திருக்கிறது. 
  •  
மின்சார நுகர்வும், பெட்ரோல் நுகர்வும் தவிர வேறு ஒவ்வொரு கணக்கீடுகளிலும் இவ்வாறு ஜி.டி.பி வளர்ச்சி எண்ணுக்கு அடிப்படையான இந்த கணக்கீடுகள், ஜி.டி.பி வளர்ச்சிக்கு பொருத்தமான வளர்ச்சி பெறாமல் தேய்ந்து போயிருக்கின்றன.

இது முதல் பார்வையில் இந்தியாவின் ஜி.டி.பி கணக்கீடுகளில் பிரச்சனை இருப்பதைத் தெரிவிக்கிறது என்று சொல்லும் அந்த ஆய்வறிக்கை, பின்னர் இந்தியாவைப் போன்ற வேறு சில நாடுகளின் ஜி.டி.பி வளர்ச்சிக்கும் இந்திய ஜி.டி.பி வளர்ச்சிக்கும் இடையேயான உறவை பரிசீலிக்கிறது. இதற்கு கடன், ஏற்றுமதி, இறக்குமதி, மின் நுகர்வு ஆகிய அளவீடுகளை எடுத்துக் கொள்கிறது.

2001-2011 ஆண்டு காலகட்டத்தில் இந்த ஜி.டி.பி வளர்ச்சி வீதங்கள் ஒத்திசைந்து இருக்கின்றன. இந்திய வளர்ச்சி வேறு எந்த வகையிலும் தனிச்சிறப்பானதாக இல்லை. ஆனால், 2011-க்கு பிறகு இந்திய வளர்ச்சி வீதம் பிற பொருளாதாரங்களின் வளர்ச்சி வீதங்களிலிருந்து பெருமளவு விலகிச் சென்றிருக்கிறது.

2011-ல் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரிய அளவு மாற்றம் ஜி.டி.பி கணக்கிடும் முறையில் செய்த மாற்றம் மட்டுமே. மற்றபடி அடிப்படையான எந்த பெரு வீத மாற்றமும் நடக்கவில்லை. உதாரணமாக, 1991ல் தொடங்கி வைக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் போலவோ, 2016-ல் நிகழ்ந்த பண மதிப்பு நீக்கம், அல்லது 2017-ல் ஜி.எஸ்.டி போலவோ பொருளாதாரத்தின் கட்டமைப்பை புரட்சிகரமாக மாற்றியமைப்பதாக வேறு எதுவும் நடக்கவில்லை.

எனவே, 2011-லிருந்து 2016 வரையிலான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு சுமார் 2.5% மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வறிக்கை முடிவு செய்கிறது. இந்தியாவின் வளர்ச்சி வீதம் 4.5% (3.5% முதல் 5.5% வரை) ஆக இருந்திருக்க வேண்டுமே தவிர, அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் சொல்லும் 7% இல்லை என்கிறது.

2011-ல் மதிப்புக் கூடுதலை கணக்கிடுவதற்கு அளவு அடிப்படையில் இல்லாமல் நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களில் இருந்து மதிப்பு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான செயல்முறை மாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாகத்தான் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் மிகையாக கணக்கிடப்பட்டிருக்கிறது என்கிறார்.

இது தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய அதிகாரிகள், சர்வதேச நிபுணர்கள், இந்திய நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அரவிந்த் சுப்ரமணியன் வலியுறுத்துகிறார்.