Friday, October 31, 2008

பொருளாதாரச் சரிவு - யாருக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆட்டத்தின் விளைவுகளை முழு உலகமும் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் யாருக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படும்?

1. எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்தாலும், மக்கள் சாப்பிடத்தான் வேண்டும், உடுத்தத்தான் வேண்டும்.

உணவுப் பொருட்கள் மற்றும் ஆடை/அணிகலன்கள் துறையினருக்கு மற்ற சேவைத் துறைகளுடன் ஒப்பிடும் போது நல்ல தொழில் நடக்கும். விவசாயிகள், விவசாய இடுபொருட்கள் விற்பவர்கள், துணி உற்பத்தியாளர்கள், உடை தயாரிப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகள் பட்ட பாட்டுக்கு பரிகாரமாக நல்ல நிலைக்கு வருவார்கள்.

இந்தத் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கும் வங்கித் துறையில் ஏற்படும் சரிவால் தொழில் செய்ய கடன் தொகை கிடைக்காமல் போனால் மட்டும் சிக்கல் உண்டாகி விடும்.

2. மதிப்புக் கூடுதல் சேவையாக, உயர்தர உணவு விடுதிகள், விலை உயர்ந்த அணிகலன்கள் கொஞ்சம் இழுத்துப் பிடிக்க ஆரம்பிக்கும்.

3. தகவல் தொழில் நுட்பத் துறையில், திறமை வாய்ந்த ஊழியர்களை கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் (இன்போசிசு, டாடா, விப்ரோ) தமது தொழில் முறை, சந்தை அணுகல் உத்திகளை வெற்றிகரமாக மாற்றி அமைத்து ஏற்பட்டுள்ள நலிவை தாண்டி வர வாய்ப்புகள் அதிகம். ஆதாய வீதம், வளர்ச்சி வீதம் குறுகிய கால நோக்கில் வெகுவாக மட்டுப்பட்டு விடும்.

4. பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு அவர்களை விடக் குறைந்த விலை என்ற ஆதாயத்தின் மூலம் மட்டும் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் அவர்கள் செய்யும் அதே மாதிரியான பணிகளை பெற்று நடந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமக்கென்று தனிச் சிறப்பாக சேவை அல்லது பொருளை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

5. கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீட்டில் பளபளக்கும் அடுக்குமாடி கடைகள், உயர்தர தங்கும் விடுதிகள், துணிச்சலான புதிய முயற்சிகளுக்கு முதலீடு கிடைக்காமல் போய் விடும். கட்டிடத் துறையைச் சார்ந்து பங்குச் சந்தையில் தமது பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களுக்கு பெருத்த சரிவு ஏற்படும்.

மற்ற நிறுவனங்களைப் போல விலை உயர்வது வரை சும்மா இருப்போம் என்று இருந்து விடவும் முடியாது. ஒவ்வொரு காலாண்டும் வளர்ச்சியைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.

6. ஏற்றுமதித் துறை நிறுவனங்களுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிதி நிலைமை மோசமானால் வணிகம் நலிவடைவதை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படையில் உறுதியான உற்பத்தி திறன், உயர்ந்த தர நிர்ணயம் இருக்கும் நிறுவனங்கள் இந்த சிரமமான காலத்துக்குப் பிறகு இன்னும் சிறப்படைய முடியும். கொஞ்சம் நோஞ்சான்களான நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, October 28, 2008

யாருக்கும் வருந்த வேண்டியதில்லை!

ஒரு சின்ன புள்ளி விபரக் கணக்கு - மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் மாற்றங்கள்:
ஆதாரம்


1. 5000ஐத் தாண்டியது - ஜனவரி 2000
2. 3000 ஆக இறங்கியது - ஆகத்து 2002
3. மீண்டும் 5000 - டிசம்பர் 2003 (16 மாதங்களில்)
4. 10000ஐத் தாண்டியது - மார்ச்சு 2006 (27 மாதங்களில்)
5. 20000ஐத் தொட்டது - நவம்பர் 2007 (20 மாதங்களில்)

டிசம்பர் 2003லிருந்து 4 ஆண்டுகளில் குறியீட்டு எண் நான்கு மடங்காகியிருக்கிறது. ஆகத்து 2002லிருந்து ஐந்து ஆண்டுகளில் 7 மடங்காகியிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் "அப்படி என்ன சிறப்பாக நடந்து விட்டது" என்று கேட்டால், 'இந்திய வளர்ச்சி கதை', 'அடிப்படை வலிமை' என்று மாற்றி மாற்றி ஜல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். பங்குகளின் விலை ஏற்றத்தின் காரணமாக இன்னும் பலர் வாங்குவதில் இறங்க விலை இன்னும் ஏறியது.

அடிப்படை 'நிறுவனம் ஆண்டுக்காண்டு சாதிக்கும் விற்பனையும் அதன் மூலம் ஈட்டும் உபரித் தொகையும்தான்' அதிலிருந்து வரும் பகிர்வுத் தொகையின் அடிப்படையில்தான் பங்கு விலை இருக்க முடியும். ஒரு சில வார நோக்கில் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும், ஓரிரு ஆண்டுகள் நோக்கில் அதுதான் ஒரே அடிப்படை. அதைத் தவிர்த்த மற்ற எல்லாம் சூடான காற்றுதான்.

பங்குச் சந்தையில் வாங்கி விற்கப்படும் பங்குகளின் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையையும், ஆதாயத்தையும் இரட்டிப்பாக்கினவா? என்று கேட்டிருந்தால் கடைசி இருபது மாதங்களில் 10000 புள்ளிகள் உயர்ந்தது நடந்திருக்காது.

இது 2008ன் கதை மட்டுமல்ல. பங்குச் சந்தை ஆரம்பித்த நாட்களிலிருந்தே 19ம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஏற்றமும் இறக்கமும் வளமையாகத்தான் இருக்கின்றன.

2008ல் இப்போது நடப்பது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் உருகி ஓடுதல். இறுக்கமாக பாதுகாப்புப் பட்டியை அணிந்து கொண்டு உழைத்து மட்டும் வரும் பணத்தில் வாழ தயாராகிக் கொள்ள வேண்டியதுதான்.