Wednesday, February 27, 2019

இன்றைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள உலகம் ஏன் மார்க்சியத்தை நாடுகிறது?

ஒரு கோட்பாடு மூலதனம் நூலில் முன் வைக்கப்படும் மார்க்சின் மதிப்பு பற்றிய கோட்பாட்டுக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத இடைவெளியை நிரப்ப வேண்டும்.
ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010
 

7

ந்த ஆய்வறிக்கை மூன்றாம் உலக தொழிலாளர்கள் மீது தனது கவனத்தை செலுத்துகிறது. ‘உலகளாவிய உழைப்பு ஆதாயம்' ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்கள் மீது செலுத்தும் சிக்கலான, ஒன்றுக்கொன்று முரணான தாக்கங்கள் இந்த ஆய்வறிக்கையில் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. மாறாக, ஏகாதிபத்திய நாட்டு பொருளாதாரங்களில் ஏற்படும் சிக்கலான தாக்கங்களை துலக்கமாக வெளிப்படுத்தும் இரண்டு முக்கியமான பரிமாணங்கள் அடுத்த அத்தியாயத்தில் சுருக்கமாக மட்டும் பரிசீலிக்கப்படுகின்றன.

  • முதலாவதாக, பெருவீத அயலக பணி முறை ஏகாதிபத்திய நாட்டு முதலாளிகள் லாபத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு தொழிலாளர்களின் நிஜக் கூலியை நேரடியாக குறைப்பதற்கு மாற்றாக உள்ளதால், ஏகாதிபத்திய நாடுகளில் வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தை அது மட்டுப்படுத்துகிறது. நுகர்வு பொருட்களின் விலை மலிவாக்கப்பட்டு வாங்கும் திறன் அதிகமாவதன் மூலமாகவும் முதலாளிகளின் லாபத்தின் மீது அயலகப் பணி செலுத்தும் நேர்மறை தாக்கத்தினாலும் இது நிகழ்கிறது. முதலாளிகள் ஈட்டும் கூடுதல் லாபம் 'சமூக ஒப்பந்தத்துக்கு' அடிப்படையாக விளங்கும் அதிக செலவு பிடிக்கும் சலுகைகளுக்கு நிதி ஒதுக்குவதை சாத்தியமாக்குகிறது. இவற்றில் அடிப்படை மருத்துவம், கல்வி ஆகியவற்றை பெறுவதற்கான உரிமை, அடிப்படை சமூக பாதுகாப்பு (வேலையின்மை உதவித் தொகை முதலியன) ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதும் அடங்கும்.
  • இரண்டாவதாக, அயலக பணி முறை ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்களுக்கும், மூன்றாம் உலகத் தொழிலாளர்களுக்கும் இடையே மேலும் மேலும் அதிகரித்த அளவில் நேரடி போட்டியை உருவாக்குகிறது. அதே நேரம் உலகளாவிய உற்பத்தி நிகழ்முறைகளுக்குள் அவர்களுக்கிடையேயான பரஸ்பர சார்பு நிலையை அதிகரிக்கிறது. 
உலக அளவில் தொழிலாளர்களுக்கிடையேயான பரஸ்பர சார்புநிலை அதிகரித்து வருவது, தொழிலாளர்களின் கல்வி அறிவும் கலாச்சார வாய்ப்புகளும் அதிகரிப்பது, பெண்கள் பெருமளவில் கூலி உழைப்புக்குள் சேர்க்கப்படுவது, ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேலும் அதிக அளவில் ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு தொழிலாளர் படையில் இணைவது ஆகியவை தொழிலாளி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான புறநிலை மாற்றங்கள். அவை உலக வங்கித் துறை நெருக்கடியைத் தொடர்ந்து வரவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களில் தொழிலாளி வர்க்கம் வெற்றியடைவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி வர்க்கம் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்ற வகையில் அது புரட்சிகர சக்தியாக உள்ளது. சமூக ஜனநாயக தலைவர்கள் முன் வைக்கும் ‘பிரிட்டிஷ் வேலை வாய்ப்புகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே' என்பன போன்ற தேசியவாத தீர்வுகளும், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர் தலைவர்கள் முன் வைக்கும் தேசியவாத, காப்புவாத கருத்துக்களும் மேலும் மேலும் நம்பகத்தன்மை இழந்து வருகின்றன. தொழிலாளி வர்க்க இயக்கத்தை முடக்கி விடவும், இனவெறியை நியாயப்படுத்தவும், பாசிசத்தின் வளர்ச்சியை தூண்டி விடவும் மட்டும்தான் அவை பயன்படுகின்றன. அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அவர்களது சக மெக்சிகன் அல்லது சீன தொழிலாளர்களுடன் போட்டி போட விரும்பா விட்டால் அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆய்வறிக்கையின் நோக்கமும் ஆய்வு திட்டமும்

“மார்க்சின் படைப்புகளின் சிறப்புத் தன்மையும், சிரமும் இரண்டுமே என்னவென்றால், ஒவ்வொன்றும் மற்ற எல்லாவற்றோடும் இணைந்துள்ளது என்பதுதான். கோட்பாட்டின் அனைத்து பிற அம்சங்களையும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யாமல் ஒரு 'வெற்றிடத்தில்' மட்டும் ஆய்வு செய்வது சாத்தியமற்றதாக உள்ளது”32 என்கிறார் டேவிட் ஹார்வி. இந்தக் கருத்தில் பெருமளவு உண்மை இருக்கிறது. ஆனால், இந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கும் விதம் சமூக யதார்த்தத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஆய்வுக்கான முறையியலை வரையறுத்துக் கொள்வதற்கு உதவியாக இல்லை . முழுமையான கட்டமைவு பற்றிய ஒரு கோட்பாட்டு கருதுகோளின் அடிப்படையில் அதன் குறிப்பிட்ட பரிமாணங்கள் அல்லது வெளிப்பாடுகளில் ஏதாவது ஒன்றை ஆய்வு செய்ய முடியும் என்று அவரது கருத்தை புரிந்து கொள்ளலாம். மேலும், அத்தகைய ஒரு ஆய்வின் முடிவுகள் முழுமையான கட்டமைவு பற்றிய கோட்பாட்டில் இணைக்கப்பட்டு அதை மேலும் செழுமைப்படுத்தும் என்பதையும் சொல்ல வேண்டும். இது மார்க்சிய இயக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளுக்கு மட்டுமின்றி அனைத்து ஆய்வுகளுக்கும் பொருந்துகிறது.

தான் முன் முடிவுகள் இல்லாமல் திறந்த மனதுடன் தொடங்குவதாக நேர்மறைவாத சமூக அறிவியலாளர் எவ்வளவுதான் நம்பிக் கொண்டிருந்தாலும், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் நிகழ்வு பற்றிய ஆரம்ப புரிதல்கள், ஆய்வு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முறையியல் அணுகுமுறை, ஏன் மற்ற பிரச்சனைகளிலிருந்து இந்த பிரச்சனையை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தோம் என்பது அனைத்தும் ஆய்வாளரின் மனதில் உணர்வுரீதியாகவோ உள்உணர்வு ரீதியாகவோ ஏற்கனவே உருவாகியிருக்கும் கோட்பாட்டு கருத்துக்களால் தீர்மானிக்கப்படுகின்றன.33 மார்க்சிய அணுகுமுறை பிற அணுகுமுறைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்றால, பகுதிக்கும் முழுமைக்கும் இடையேயான இந்த தவிர்க்க இயலாத இணைப்பை மார்க்சியம் உணர்வு ரீதியாகவும் வெளிப்படையாகவும் அங்கீகரிக்கிறது.

இந்த வகையில் டேவிட் ஹார்வியின் கருத்தை விட இவால்ட் இல்யன்கோவின் அறிவுரை உதவியாக உள்ளது. “எடுத்துக் கொண்ட பருண்மையான விஷயம் [இங்கு, புதிய தாராளவாத உலகமயமாக்கல்][...] மிகவும் சிக்கலான, உள் இணைப்புகள் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான வளர்ச்சி நிகழ்முறைகளை கொண்டுள்ளது. அவை பரஸ்பரம் உறவாடி, தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.. நடைமுறையில் நம் முன் இருக்கும் ஒட்டு மொத்த வரலாற்று நிகழ்முறையில் இந்தக் […] குறிப்பிட்ட பருண்மையான உறவாடல் கட்டமைவு வளர்ந்து செல்வதில் அடங்கியிருக்கும்  மிக முக்கியமான அம்சங்களை அடையாளம் காண்பதில்தான் ஒட்டு மொத்த சிக்கலும் அடங்கியுள்ளது.” என்று அவர் கூறுகிறார். ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள பிரச்சனையுடன் தற்செயலான உறவு கொண்டவையாக இல்லாமல் பிரச்சனையின் சாராம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும் அம்சங்களை அடையாளம் காண வேண்டும்.

இந்த ஆய்வுரை தனது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டிருக்கும் கோட்பாட்டின்படி புதிய தாராளவாத உலகமயமாக்கல் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் ஒரு உயர் கட்டமாக உள்ளது. இது தொடர்பான தற்செயல் நிகழ்வுகளையும், இரண்டாம் நிலை அம்சங்களையும் ஒதுக்கி விட்டு எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கு சாராம்சமானதை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய பணி ஆகும். ஏகாதிபத்திய முதலாளிகள் ஒடுக்கப்படும் நாடுகளின் உழைப்பை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதை பெரும் அளவில் அதிகரிப்பதற்கான முயற்சிதான் இந்த சாராம்சமான விஷயம் என்று இந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது.

எடுத்துக் கொண்ட பிரச்சனையின் சாராம்சமான விஷயங்களை அடையாளம் கண்டு அவற்றின் மீது கவனத்தை குவிப்பது எந்த ஒரு அறிவியல் ஆய்வுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். எந்த அம்சத்தை சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய ஒன்றாக தேர்ந்தெடுப்பது என்பதற்கு இன்னொரு நிபந்தனையும் உள்ளது. ஏற்கனவே உள்ள கருத்துக்கள் பருண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்க தவறும் இடம் எது என்பதை பார்க்க வேண்டும். இன்றைய உலகப் பொருளாதாரம் பற்றிய இப்போதைய கருத்தாக்கங்களில், ஏகாதிபத்தியம் என்பது இருப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதையும் மறுக்கப்படுவதாக உள்ளது. இதுதான் அதன் மிகப்பெரிய குறைபாடு. எனவே, ஒரு எளிமையான, இன்னும் வரையறுக்கப்பட்ட ஒரு விஷயத்திலிருந்து தொடங்குவதை விட சிக்கலானதாக இருந்தாலும், இந்த மையப் புள்ளியில் இருந்து தொடங்கி ஆய்வை நடத்துவது என்று முடிவு செய்தேன்.

இல்யன்கோவ் தான் சுட்டிக் காட்டும் “வளர்ச்சிப் போக்கின் மையமான அம்சங்களை கண்டறிவதில்” இருக்கும் சிக்கல்களை கையாள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். நடைமுறை உண்மைகளையும், நிகழ்முறைகளையும் முந்தைய கோட்பாட்டு அடிப்படையில் ஆய்வு செய்வதன் மூலம் அவற்றை கண்டறியலாம். “கம்யூனிசம் என்பது ஒரு வறட்டு கோட்பாடு இல்லை, அது ஒரு இயக்கம்; அதன் ஆய்வுகள் முன்பே வரையறுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாடுகளிலிருந்து இல்லாமல் நடைமுறை யதார்த்தங்களில் உண்மைகளிலிருந்து தொடங்க வேண்டும்" என்று மார்க்சியம் பற்றி எங்கெல்ஸ் சொன்னதை இங்கு நினைவு கூரலாம்.35

இந்த நடைமுறை யதார்த்தத்தை பரிசீலித்ததன் விளைவாக, புதிய தாராளவாத உலகமயமாக்கலின் 'வளர்ச்சிப் பாதையின் முக்கியமான புள்ளிகள்' மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பாளர்களை விரிவாக 'பயன்படுத்துவதற்காக' ஏகாதிபத்திய முதலாளிகளின் அமல்படுத்தி வரும் உற்பத்தி உலமயமாதலும், முன்னணி ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆலை பொருட்களை உற்பத்தி செய்யும் மூன்றாம் உலக தொழில்துறை பாட்டாளிகளின் எண்ணிக்கை பெருமளவு விரிவடைவதும் என்ற முடிவுக்கு வருகிறோம்.36 எனவே, இந்த ஆய்வறிக்கை மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவு உலகமயமாவதன் புதிய கட்டத்தின் மீது தனது கவனத்தை குவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின் நோக்கம், மூலதன உறவுகளின் ஏகாதிபத்திய வடிவம் பற்றிய முழுமையான கோட்பாட்டுக்கு அடித்தளம் இடுவதற்கான ஒரு பகுதியை பங்களிப்பு செய்வதாகும். இதில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்துக்கிடையே சமத்துவம் இல்லாமல் இருப்பதும், வெவ்வேறு நாடுகளில் சுரண்டல் வீதம் பெருமளவு வேறுபடுவதும் அடங்கும். அத்தகைய ஒரு கோட்பாடு மூலதனம் நூலில் முன் வைக்கப்படும் மார்க்சின் மதிப்பு பற்றிய கோட்பாட்டுக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத இடைவெளியை நிரப்ப வேண்டும். இந்த இடைவெளி வரலாற்று ரீதியில் ஏன் தவிர்க்க இயலாதது என்றால், மேலே சொன்னது போல உற்பத்தி உலகமயமாதலுக்குப் பிறகுதான் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் இடையேயான உறவு மதிப்பு உறவின் வரம்புக்குள் உட்பட்டதாக மாறியுள்ளது.

இந்த மிகப்பெரிய கோட்பாட்டு இடைவெளியை முழுமையாக நிரப்புவதற்கு இந்த ஆய்வறிக்கை முயற்சிக்கவில்லை. அந்த பணி பல ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும் 

  6. வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

  7. சீனா, இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் இல்லாமல் உலக முதலாளித்துவம் இல்லை

Sunday, February 24, 2019

சீனா, இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் இல்லாமல் உலக முதலாளித்துவம் இல்லை

சர்வதேச ரீதியில் உழைப்பாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது இனவாதம், தேசிய ஒடுக்குமுறை, கலாச்சார ரீதியான இழிவுபடுத்துதல்கள், இராணுவவாதம், அரச வன்முறை இவற்றை உள்ளடங்கிய ஒரு பரந்து விரிந்த கட்டமைவின் முக்கியமான அடிப்படையாக உள்ளது

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010
 

7

தன் விளைவாக, முதலாளித்துவ வளர்ச்சியின் சமீபத்திய கட்டம் மூன்றாம் உலக நாடுகள் ‘முன்னேறிய’ நாடுகளின் நிலையை எட்டிப் பிடிப்பதாகவும், ஏகாதிபத்தியங்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைப்பதாகவும் இல்லை. மாறாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் அதீத சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்பாளர் சேமப் படைகளாக மூன்றாம் உலக நாடுகள் மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக நாடுகளுக்கிடையே ஒரு உலகளாவிய பிரிவினை உருவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் உழைப்பாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது  இனவாதம், தேசிய ஒடுக்குமுறை, கலாச்சார ரீதியான இழிவுபடுத்துதல்கள், இராணுவவாதம், அரச வன்முறை இவற்றை உள்ளடங்கிய ஒரு பரந்து விரிந்த கட்டமைவின் முக்கியமான அடிப்படையாக உள்ளது. ஏகாதிபத்தியம் இந்த ஒடுக்குமுறை கட்டமைவை பாட்டாளி மயமாக்கப்பட்ட உலக மக்கள் மீது சுமத்துகிறது. இது வர்க்கப் போர் தொடுப்பதற்கான ஒரு ஆயுதம். இதை பயன்படுத்தி ஆக சாத்தியமான உயர் வீத சுரண்டலை உறுதி செய்வதோடு மட்டுமின்றி அரசியல் ரீதியான எதிர்ப்புரட்சிகளையும், பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் கட்டவிழ்த்து விட்டு சர்வதேச தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயேச்சையான அரசியல் சக்தியாக மாறி தனது சொந்த மேலாதிக்கத்தை நிறுவுவதை ஏகாதிபத்திய நிறுவனங்கள் தடுத்து நிறுத்துகின்றன

இது முற்றிலும் முதலாளித்துவ அடிப்படையிலான ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியத்தின் மிக முன்னேறிய வளர்ச்சி கட்டத்தில், ஒட்டு மொத்த உலகமும் காலனிய அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பதை முதலாளித்துவமும் மதிப்பு விதியும் தமக்குள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டுள்ளன. முதலாளித்துவம் அதன் நோக்கத்துக்கு விரோதமான அனைத்தையும் உதளி விட்டு, தனது ஆதிக்கத்தை தொடருவதற்கு பலனளிப்பதாக இருப்பவை அனைத்தையும் பாதுகாத்து தன்னுடையதாக மாற்றிக் கொண்டுள்ளது. எனவே, இந்த மாற்றங்களோடு தொடர்புடையதாக கிடைக்கும் நடைமுறை தரவுகளின் பெரும் தொகுப்பை நாம் பகுத்தாய வேண்டியுள்ளது. உண்மைகளை கோட்பாட்டு ரீதியாக விமர்சித்தும், கோட்பாடுகளை உண்மைகளின் ஒளியில் விமர்சித்தும் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி கட்டத்தின் சாராம்சம் பண்புரீதியான பரிணாம மாற்றத்தை அடைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மதிப்பு உறவின் ஏகாதிபத்திய வடிவம் பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்குவது இன்றைய அவசிய தேவையாக உள்ளது.

இன்றைய புதிய தாராளவாத உலகமயமாக்கலில் ஏகாதிபத்திய நாட்டு அரசுகளின் பொதுநலன் அடங்கியுள்ளது. மூன்றாம் உலக நாடுகளை புதிய தாராளவாத உலகமயமாக்கல் பாதையில் செலுத்துவதற்கு ஏகாதிபத்திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வரும் ‘ஏற்றுமதி சார் தொழில் மயமாக்க' வளர்ச்சி பாணியின் முறையின் விளைவாக மூன்றாம் உலக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சிறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளன. அது மட்டுமில்லை, இந்த வளர்ச்சி பாணி ஏகாதிபத்திய நாடுகளில் கார்ப்பரேட் லாபத்தையும், தொழில் வளத்தையும், சமூக அமைதியையும் பாதுகாப்பதற்கு மேலும் மேலும் முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது. எனவே, இன்றைய முதலாளித்துவ உலகமயமாதலைப் பற்றி விளக்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் 'மைய நாடுகள்', ‘விளிம்பு நாடுகள்' என்ற கருத்தாக்கம் தவறான பொருள் தருபவதாக உள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கு 'மைய' முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது மூன்றாம் உலக குறை-கூலி தொழிலாளர்கள் மீதான அதீத சுரண்டல்.

எனவே, 'அதீத சுரண்டல்’ பற்றிய பருண்மையான ஒரு கோட்பாட்டை வளர்த்தெடுப்பது இந்த ஆய்வறிக்கை முழுவதும் ஊடாடி நிற்கும் ஒரு மையமான பணியாகும். இது பற்றிய ஒரு பொதுவான வரையறை இந்த அத்தியாயத்தின் அடுத்த பிரிவில் தரப்படுகிறது. இப்போதைக்கு சுரண்டல் என்பதை எளிமையாக வரையறுக்கலாம். ஒரு வேலை நாளில் தொழிலாளி தான் உயிர் வாழ்வதற்கு தேவையானபொருட்களின் மதிப்புக்கு சமமான மதிப்பை படைக்கும் அவசிய உழைப்பு நேரம், முதலாளிக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்காக உழைக்கும் உபரி உழைப்பு நேரம் என இரண்டு பகுதிகள் உள்ளன. இவற்றுக்கிடையேயான விகிதம் சுரண்டல் வீதமாகும்.

அதீத சுரண்டல் என்பது ஏகாதிபத்திய நாடுகளில் நிலவும் சராசரி சுரண்டல் வீதத்தை விட அதிக சுரண்டல் வீதத்தை குறிக்கிறது. நாடுகளுக்கிடையேயான கூலி ஏற்றத் தாழ்வுகள், சர்வதேச ரீதியில் சுரண்டல் வீதத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் பற்றிய ஒரு உருத்திரிந்த சித்திரத்தை தருகின்றன என்று இந்த ஆய்வறிக்கையில் பேசப்படுகிறது. இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத முறைகளை பயன்படுத்தி சராசரியை விட அதிக சுரண்டல் வீதத்தை கொண்ட, அதாவது உயிருள்ள உழைப்பை அதீத சுரண்டலுக்கு உட்படுத்தக் கூடிய நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுவதன் மூலம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரிக்க முடிவது பற்றி இந்த ஆய்வறிக்கை பரிசீலிக்கிறது.

எனவே, இந்த ஒட்டு மொத்த ஆய்வறிக்கையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கிறது : அதீத சுரண்டல் என்பதை பருண்மையாக எப்படி பொருள் கொள்கிறோம்? ஏகாதிபத்தியம் என்பதை பருண்மையாக எப்படி பொருள் கொள்கிறோம்? நடைமுறையில் நிலவும் சமூக உறவுகள் பற்றிய பருண்மையான கருதுகோள்களை கோட்பாடுகளிலிருந்து மட்டுமோ, தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமோ உருவாக்க முடியாது. இரண்டையும் சேர்த்து செய்ய வேண்டும்.27

ஏகாதிபத்திய நிறுவனங்கள் மூன்றாம் உலக குறைகூலி தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாயை சார்ந்திருப்பது மேலும் மேலும் அதிகரித்து வருவதை இந்த ஆய்வறிக்கையின் மையமான வாதம் சுட்டிக் காட்டுகிறது. இதை 'உலக உழைப்பு ஆதாயம்' என்று குறிப்பிடலாம். இதன்படி, தம் நாட்டில் ஒப்பீட்டளவில் அதிக கூலி பெறும் தொழிலாளர்களுக்கு பதிலாக மூன்றாம் உலக குறை கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.28 இது உற்பத்தியையே குறைகூலி நாடுகளுக்கு மாற்றுவதன் மூலமோ, குறை கூலி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்து அவர்களை தம்நாட்டில் தீவிரமான சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலமோ நிறைவேற்றப்படுகிறது.29 உற்பத்தியையே மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்வது மேலும் மேலும் "அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் வேகமாக விரிடைவதுமான வழிமுறையாக உள்ளது என்கிறது ஐ.எம்.எஃப். அதீத சுரண்டலுக்கான இன்னொரு வழிமுறையான மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கு தொழிலாளர்கள் குடியேறுவதற்கு பல நாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் தடையாக உள்ளன".30

வெளிநாட்டில் அயலக பணி முறையில் உற்பத்தி செய்வதற்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உள்நாட்டில் பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கும் இடையேயான உறவை காரல் மார்க்ஸ் 1867-லேயே குறிப்பிட்டிருக்கிறார்.  சர்வதேச தொழிலாளர் கழகத்தின் பொதுக்குழுவின் சார்பாக லசான்யே காங்கிரசுக்கு அவர் எழுதிய ஒரு உரையில் அதற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது: “இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களை ஆய்வு செய்யும் போது, தொழிலாளர்களை முறியடிப்பதற்காக முதலாளிகள் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வருகிறார்கள் அல்லது உற்பத்தியை மலிவான தொழிலாளர் உள்ள நாடுகளுக்கு மாற்றி விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்கும் போது வெற்றிக்கு சிறிதளவாவது வாய்ப்பு இருக்கும் வகையில் தனது போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் தொடர வேண்டுமானால், தேசிய சங்கங்கள் சர்வதேச சங்கமாக மாற வேண்டும்."31

நமது சம காலத்தில்தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும் உலகை மாற்றியமைப்பதாகவும் உருவெடுத்திருக்கும் ஒரு போக்கின் ஆரம்ப வடிவம் பற்றிய சித்திரத்தை மார்க்ஸ் இங்கு தருகிறார். இந்த மேற்கோளில் இருந்து முதலாளித்துவம் குறை கூலி தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதும் அது பாட்டாளி வர்க்க இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் மார்க்ஸ் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. ஆனால், பருண்மையான யதார்த்தத்தின் இந்த அம்சத்தை மார்க்ஸ் மூலதனம் நூலின் 3 பாகங்களில் 'பொதுவான மூலதனம்' பற்றிய பகுப்பாய்வில் சேர்த்துக் கொள்ளவில்லை. இது பற்றி இந்த அத்தியாயத்தின் பிற் பகுதியில் இதே விஷயங்களை நாம் மறுபடியும் பரிசீலிக்கும் போது நாம் பார்க்கப் போகிறோம்.

மார்க்சுக்குப் பிறகு இந்த பொருளாதாரவியல் ஆய்வாளர்களால் இந்த அம்சம் பெருமளவு புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. எனவே, இந்த ஆய்வறிக்கை அயலகப் பணி அல்லது "உற்பத்தியை மலிவான உழைப்பு சக்தி உடைய நாடுகளுக்கு இடம் மாற்றுவது" என்று மார்க்ஸ் குறிப்பிடுவதன் மீது கவனம் செலுத்துகிறது. ‘உலக கூலி ஆதாயத்தின்' இன்னொரு வடிவமான குறை கூலி உழைப்பாளர்களை இறக்குமதி செய்வது தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் அளவில் மட்டுமே (அத்தியாயங்கள் 2&3) கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மார்க்ஸ் லசான்யே காங்கிரசில் இந்த நடைமுறை பற்றி பேசிய 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், உலகெங்கிலும் சரக்கு போக்குவரத்தின் வேகம் பெருமளவு அதிகரித்திருப்பதும், அயலகப் பணியை அனைத்து வழிகளிலும் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏகாதிபத்திய முதலாளிகள் குறை கூலி தொழிலாளர்களை பயன்படுத்துவதை அதிகரிப்பதை சாத்தியமாக்கின. ஆனால், ஏகாதிபத்திய நாடுகளில் நிலவிய வர்க்க போராட்டங்கள்தான் இதை செய்தே தீர வேண்டிய அவசியத்தை ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு ஏற்படுத்தின என்பது இறுதி பகுப்பாய்வில் தெரிய வருகிறது. தம் நாடுகளில் லாபவீதம் குறைந்து செல்லும் போக்கை தடுத்து நிறுத்தி லாப வீதத்தை உயர்த்துவதற்கு செய்ய வேண்டியிருந்த காட்டுமிராண்டித்தனமான செலவு குறைப்பு நடவடிக்கைகள் அந்த நாடுகளின் 'சொந்த' தொழிலாளர்கள் மீதே சுமத்தப்பட்டிருந்தால் அது ஏகாதிபத்திய நாடுகளில் மிகப்பெரிய சமூக, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். உலகின் பிற பகுதி மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்களையும் அவர்களது ஆட்சியாளர்களையும் பிணைக்கும் 'சமூக ஒப்பந்தம்' உடைக்கப்பட்டிருக்கும்.
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும் 

  6. வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

Saturday, February 23, 2019

வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

மூலதனம், சரக்குகள், ஆலை அதிபர்கள், ஏன் ஆலைகள் கூட ஏகாதிபத்திய நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும் பிரிக்கும் எல்லைகளை தாண்டி சுதந்திரமாக செல்ல முடிகிறது. ஆனால், அந்தச் சரக்குகளை உற்பத்தி செய்த, அந்தத் தொழிற்சாலைகளை கட்டி எழுப்பிய, அந்த மூலதனத்தை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு அவ்வாறு கடந்து செல்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது.

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010

6

பொதுவாக'உலகமயமாக்கல்' என்ற சொல், அரசுகள், முதலாளித்துவ கார்ட்டெல்கள், அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் உருவாக்கும் தடைகளை உடைத்து மூலதனத்தையும், சரக்குகளையும் நாடுகளுக்கிடையே தடையின்றி பரிவர்த்தனை செய்து கொள்வது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பற்றிய இன்னும் துல்லியமான, பருண்மையான வரையறையை வந்தடைய இந்த மாற்றங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட முக்கியமான நிகழ்முறைகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, அயல் நாட்டு உற்பத்தியும், ‘நிதிமயமாதல்' என்று சிலரால் அழைக்கப்படும் நிகழ்முறையும் இவற்றில் முக்கியமானவை ஆகும். நிதி மயமாதல் என்பது ஏகாதிபத்திய நாடுகளில் கார்ப்பரேட் லாபத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் (Fire services) துறைகளின் பங்களிப்பு அதிகரிப்பதையும் அதற்கு இணையாக தொழில்துறை உற்பத்தியின் பங்களிப்பு குறைவதையும் குறிக்கிறது. நிதித்துறை சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பவர்களின் மேலாதிக்கத்தை வலுப்படுத்துகிறது. அவர்கள் தமது அதிகாரத்தை செலுத்துவதற்கான நிதித்துறை சந்தைகளின் ஆதிக்கத்தையும் இது பெருமளவு உறுதிப்படுத்துகிறது.

முதலாளித்துவத்தின் தன்மையையும் அது தவிர்க்க இயலாமல் வீழ்ச்சியை நோக்கி போவதையும் பற்றி மேலும் புரிந்து கொள்வதற்கு 1970-களின் நெருக்கடிகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்த நெருக்கடிகளிலிருந்து அவற்றுக்கு எதிர்வினையாக நிதிமயமாதலும் அயல்நாட்டு உற்பத்தியும் தோன்றின. 1979 இந்த நிகழ்முறையின் உச்சகட்டமாக இருந்தது. அந்த ஆண்டு வோல்க்கர் அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆண்டாகவும், ரொனால்ட் ரீகனும், மார்கரெட் தாட்சரும் ஆட்சிக்கு வந்த ஆண்டாகவும் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் புரட்சிகள் நடந்த ஆண்டாகவும் இருந்தது. அந்த ஆண்டில் ஈரான், கிரெனடா, நிகரகுவா ஆகிய நாடுகளில் மக்கள் திரள் எழுச்சிகள் ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தன. இவை எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்தால், ‘புதிய தாராளவாத உலகமயமாக்கல்' என்பதை உள்நாட்டில் தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தவும், மூன்றாம் உலக நாடுகளில் புரட்சிகளை நசுக்கி, புரட்சிகர அரசியலை முறியடிக்கவும் அமெரிக்க அரசின் பொதுத் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட உலகளாவிய பொருளாதார, அரசியல், ராணுவ எதிர்ப்புரட்சி தாக்குதலாக பார்க்கலாம். மேலும், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான பகை மோதலை கட்டுப்படுத்தும் வகையில் மூன்றாம் உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் அதீத சுரண்டலுக்கு திறந்து விடுவதாகவும் இதை பார்க்கலாம்.

‘உலகமயமாதல்' என்பதும் 'புதியதாராளவாத உலகமயமாதல்' என்பதும் வெவ்வேறு பொருள் உடையவை. ‘உலகமயமாதல்' பற்றிய பருண்மையான பொதுவான வரையறை என்ன? மக்களிடையே பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார பரிவர்த்தனைகளை அனைத்து வகையான எல்லைகளையும் தாண்டி விரிவுபடுத்துவதும், ஆழப்படுத்துவதும் ஆகும். இது மனித சமூகத்தின் முன் நோக்கிய பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. இந்த நீண்ட காலப் போக்கின் ஒரு பண்பு ரீதியான பாய்ச்சலுக்கான புறநிலை அவசியம் 20-ம் நூற்றாண்டு முழுவதும் மேலும் மேலும் அதிகமாக அதிகரித்தது. முதலாளித்துவத்தில் உள்ளார்ந்து இருக்கும் பகைரீதியான தேசிய பிரிவினைகளால் இன்னும் மோசமாக்கப்பட்ட சிக்கலான பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குவிந்தன. அவற்றை உலக அளவில்தான் தீர்த்து வைக்க முடியும். 1970-களில் ஏகாதிபத்திய நாடுகளில் தேக்க வீக்கமும், அதிகரித்து வந்த தொழிலாளர் போராட்டங்களும் ஒரு புறம், மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்து வந்த புரட்சிகர இயக்கங்கள் மறுபுறம். இந்தப் போக்கு எழுப்பிய கேள்வி  என்னவென்றால் இந்த உலகமயமாக்கல் நிகழ்முறையை எந்த வர்க்கம் வழி நடத்தி செல்லப் போகிறது என்பதுதான். எந்த வர்க்கத்தின் வடிவத்தில் எந்த வர்க்கத்துடைய நலன்களுக்காக உலகளாவிய ஐக்கியத்துக்கான தடைகள் உடைத்தெறியப்படும்? அது 'ஏகாதிபத்திய உலகமயமாதல்' (ஜெயதி கோஷ் 20) ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது எந்த விதத்திலும் கட்டாயமானது இல்லை. ஏகாதிபத்திய நாடுகளின் தொழிற்சங்கங்களும் அவற்றின் தலைவர்களும் ஈரான் முதல் சிலி வரை சர்வாதிகாரிகள் ஆட்சியில் அமர்த்தப்பட்டதை எதிர்த்தும், வியட்னாமில் நடத்தப்பட்ட போரை எதிர்த்தும், நிகரகுவாவை எதிர்த்து நடந்த பயங்கரவாத காண்ட்ரா போரை எதிர்த்தும், ஏகாதிபத்திய நாடுகள் இஸ்ரேலுடனும் இனவாத தென் ஆப்பிரிக்காவுடனும் ஏற்படுத்திக் கொண்ட உறவுகளை எதிர்த்தும் (இவை இத்தகைய ஒரு நீளமான பட்டியலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில உதாரணங்கள் மட்டுமே) தமது அரசாங்கங்களுக்கு எதிராக எதிர்ப்பை அணிதிரட்டத் தவறின. அதன் விளைவாக உலகமயமாதலை முன் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை மிக தொழிலாளர் விரோத, மிக ஏகாதிபத்தியவாத முதலாளித்துவ பிரிவினரிடம் விட்டுக் கொடுப்பதாக அமைந்தது. கியூபாவில் மிகப் பிரபலமான  ஜோஸ் மார்டியின் மேற்கோள் "இன்னொரு மக்களின் பாதுகாப்புக்காக போராட முன் வராத ஒரு மக்கள் தம்மை ஒரு போதும் பாதுகாத்துக் கொள்ள முடியாது". அந்த மேற்கோளை ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தின் தோல்வி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக தோன்றிய புதிய தாராளவாத உலகமயமாதல் உண்மையில் வக்கிரமான உலகமயமாதல் ஆகும்.21

கருத்துக்களை கோட்பாடு ரீதியாக வளர்த்தெடுத்தல்: புதிய தாராளவாத     உலகமயமாதல் - முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியில் ஒரு புதிய கட்டம்

மூலதனம், சரக்குகள், ஆலை அதிபர்கள், ஏன் ஆலைகள் கூட ஏகாதிபத்திய நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும் பிரிக்கும் எல்லைகளை தாண்டி சுதந்திரமாக செல்ல முடிகிறது. ஆனால், அந்தச் சரக்குகளை உற்பத்தி செய்த, அந்தத் தொழிற்சாலைகளை கட்டி எழுப்பிய, அந்த மூலதனத்தை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு அவ்வாறு கடந்து செல்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. இந்த ஆய்வறிக்கை இந்த நிதர்சனத்தை மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்கிறது. எனவே, இந்த ஆய்வறிக்கை தனது வழிகாட்டும் கோட்பாட்டு உலகக் கண்ணோட்டமாக எடுத்துக் கொண்டது ‘உலகமயமாதல் எதிர்ப்பு' என்பதற்கு நேர் எதிர்மாறானது. உண்மையான உலகமயமாதலுக்கான, எல்லைகள் இல்லாத உலகத்துக்கான, முதன்மையான தடையாக முதலாளித்துவம் நிற்கிறது என்று முதலாளித்துவத்தை இந்த ஆய்வறிக்கை கண்டனம் செய்கிறது.

வரலாற்றில் ஏகாதிபத்தியம் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகிறது என்று இந்த ஆய்வறிக்கை வாதிடவில்லை. மாறாக, கடந்த 30 ஆண்டுகளில் 'புதிய தாராளவாத உலகமயமாக்கல்' என்ற பதாகையின் கீழ் நடத்தி முடிக்கப்பட்ட உருமாற்றங்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முழு பரிணாம வளர்ச்சியடைய வைத்திருக்கின்றன. முதலாளித்துவத்தின் முதிர்ச்சியடைந்த, முழு பரிணாம வளர்ச்சியடைந்த வடிவம் (இங்கிலாந்தில் தொழில்துறை முதலாளித்துவத்தின் வளர்ச்சி) தோன்றுவதற்கு முன்பு கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூலை எழுதியிருக்க முடியாது. அதே போல ஏகாதிபத்தியம் தோன்றிய காலகட்டத்தில் எழுதப்பட்ட லெனினின் படைப்புகளிலும், அதே காலத்திய மற்றவர்களின் ஆய்வறிக்கைகளிலும் ஏகாதிபத்தியத்தின் முழு பரிணாம வளர்ச்சி அடைந்த வடிவத்தை விளக்கும் விதமான ஒரு முழுமையான கோட்பாட்டை எதிர்பார்க்க முடியாது. இது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் ஒரு அடிப்படையான விதியை உறுதி செய்கிறது. முழு அளவில் பருண்மையாகவும் வளர்ச்சியடைந்ததாகவும் இல்லாத உற்பத்தி உறவுகள் பற்றிய பருண்மையான கருதுகோள் ஒன்றை உருவாக்குவது சாத்தியம் இல்லை.22

இங்கிலாந்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமும் கொள்ளையும் முன்நிபந்தனையாக இருந்தது. ஆனால், அதன் பிறகு முதலாளித்துவ வளர்ச்சியின் முழு பாதையையும் கடந்த பிறகுதான் உலக நாடுகள் ஏகாதிபத்திய அடிப்படையில் பிரிக்கப்படுவது உள்ளார்ந்து, மூலதன உறவின் ஒரு தன்மையாக மாற முடிந்திருக்கிறது. அதாவது இது உலகம் முழுவதும் உள்ள "ஒட்டு மொத்த சமூக மூலதனத்துக்கும்" அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இடையேயான உறவாக இப்போதுதான் மாறியிருக்கிறது.23 “ஏறக்குறைய அனைத்தும் தழுவிய முதலாளித்துவ உற்பத்தி முறையினால் ஆன உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியதுதான்" (எலன் வுட்).24

தான் வந்தடைந்த இந்த முக்கியமான முடிவை எலன் வுட் எவ்வளவு தூரம் வளர்த்துச் செல்கிறார் என்பதை இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில் பார்க்கலாம். நாம் எடுத்துக் கொண்ட நோக்கத்தைப் பொறுத்தவரை, அதன் மிக முக்கியமான பொருள் என்னவென்றால், இப்போது ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான உறவாடல் முதலாளித்துவத்துக்கும் முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறைகளுக்கும் இடையேயானதாக இல்லை; இப்போது அது மூலதன உறவுகளுக்கு உட்பட்டதாக உள்ளது. அது ஏகாதிபத்திய மூலதனத்துக்கும் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களுக்கும் இடையேயான உலகளாவிய உறவாக மாறியுள்ளது. இது முன்பு எப்போதையும் விட பண்பு ரீதியான மாற்றம் ஆகும்.

புதிய தாராளவாத உலகமயமாக்கலால் ஏற்படுத்தப்பட்ட மிக முக்கியமான மாற்றம் மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளி வர்க்கம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்ததாகும். மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்களின் உயிருள்ள உழைப்பு 'முன்னணி [கார்ப்பரேட்] நிறுவனங்களுக்கும்' மூன்றாம் உலக நாடுகளின் முதலாளிகளுக்கும்  இடையே பகிர்ந்து கொள்ளப்படும் மதிப்பில் பெரும்பகுதியை பங்களிப்பு செய்கிறது. இந்த மதிப்புச் சங்கிலி குறைகூலி பொருளாதாரங்களை மேற்கத்திய நுகர்வுச் சந்தையுடன் இணைக்கிறது.

இது ‘உலகளாவிய கூலி ஆதாயத்தினால்' செலுத்தப்பட்ட உற்பத்தி நிகழ்முறை உலகயமாதலின் முதன்மை ஆகும். இதில் குறை-கூலி நாடுகளில் உள்ள மலிவான, நெகிழ்வுத் தன்மையுடைய [முறைசாரா எனவே முதலாளிகளுக்கு சாதகமான வேலை நிலைமைகள் கொண்ட] உயிருள்ள உழைப்பு, ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள ஒப்பீட்டளவில் விலை அதிகமான [அமைப்பாக்கப்பட்ட, எனவே திட்டமான வேலை நிலைமைகள் கொண்ட] உயிருள்ள உழைப்பின் இடத்தைப் பிடிக்கிறது. இது மூலதனம்-உழைப்பு உறவுகள் உலகமயமாவதில் ஒரு புதிய, பண்புரீதியான கட்டத்தை குறிக்கிறது. அதன் ஒரு விளைவாக ஏகாதிபத்திய நாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் உயிருள்ள உழைப்பை அதீதமாக சுரண்டுவதை சார்ந்திருப்பது பெருமளவு அதிகரித்துள்ளது. இதன் இன்னொரு விளைவு உலகத் தொழிலாளி வர்க்கத்தின் இயைபு உருமாற்றம் அடைந்திருப்பது ஆகும். மூன்றாம் உலக நாடுகளின் தொழில்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை 'தொழில்மயமான' நாடுகளில் உள்ள அவர்களது சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கையை முந்துவதற்கு வெறும் 25 ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. இப்போது மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்கள் மொத்த உலகத் தொழிலாளர்களில் 80% ஆக உள்ளனர்.

புதிய தாராளவாத உலகமயமாக்கல் ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாளர்களையும், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களையும் ஒன்றாக இணைத்திருக்கிறது. அவர்கள் ஒருவரோடொருவர் போட்டியிடும் அதே நேரம், உலகமயமான உற்பத்தி நிகழ்முறைகளால் இணைக்கப்பட்டு பரஸ்பர சார்பையும் கொண்டிருக்கின்றனர். அவர்களது உழைப்பு சக்தியை ஒரே வங்கிகளும், தேசங்கடந்த தொழிற்கழகங்களும் சுரண்டுகின்றன. மூலதனம்/உழைப்பு உறவின் பரிணாம வளர்ச்சியில் இந்த புதிய, பண்புரீதியான கட்டம் ஒரு குறிப்பான தன்மையை கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலை அது அமல்படுத்திய விதத்தில், அவ்வாறு அமல்படுத்தப்பட்ட பிறகு உலகத்தின் நிலையில், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவு அதற்கு முன்பு நிலவிய ஏகாதிபத்திய அடிப்படையில் நிலவிய  உலக நாடுகளுக்கிடையேயான பிரிவினையை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரிவினை ஏகாதிபத்தியம் தோன்றுவதற்கும் வளர்வதற்கும் தேவையான நிபந்தனையாக இருந்தது. அது இப்போது இனரீதியாகவும், தேசிய ரீதியாகவும் ஒரு படிநிலை வடிவத்தில் தொடர்வது 'உலக உழைப்பு சந்தை'யாக உள்ளது.25

(தொடரும்)

  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும்

Friday, February 15, 2019

முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும்

“அநியாயம் எங்கிருந்து தோன்றுகிறது? ஏற்றத் தாழ்வு எங்கிருந்து பிறக்கிறது? வறுமை எங்கிருந்து தோன்றுகிறது? குறை வளர்ச்சி எங்கிருந்து உருவாகிறது? நவ காலனியமும் ஏகாதிபத்தியமும் எங்கிருந்து வருகின்றன? முதலாளித்துவத்திலிருந்து இல்லாமல் வேறு எங்கிருந்து இவை அனைத்தும் தோன்றுகின்றன?

'வானத்தையும் பூமியையும் படைத்தவர்கள்தான் ஏழ்மைக்கு பொறுப்பு, இந்த சமூகக் கட்டமைவு அதற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை, முதலாளித்துவம் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை' என்று கூட பேச முடியும் என்பதை நம்ப முடியவில்லை!” - பிடல் காஸ்ட்ரோ

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010 5

ஐக்கிய நாடுகள் பல்கலைக் கழகம் நடத்திய குடும்பங்களின் சொத்துக் கணக்கெடுப்பு ஒன்றில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, “ஒருவரிடம் $2161 [இன்றைய மதிப்பில் ரூ 1.5 லட்சம்] மதிப்பிலான சொத்து இருந்தாலே அவர் உலகின்வசதியான 50%- பேரில் சேர்ந்து விடுவார்.” ஆனால், மேல்மட்ட 1% பணக்காரர்கள் பட்டியலில் சேர்வதற்கு உங்களிடம் $5 லட்சம் [இன்றைய மதிப்பில் ரூ 3.5 கோடி]  சொத்து இருக்க வேண்டும். உலக மக்கள் தொகையில் ஏழ்மையான 50% பேரை விட 40 மடங்கு அதிக சொத்து 3.7 கோடி பணக்காரர்களிடம் உள்ளது.11

ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்குமிடையே சொத்து வினியோக ஏற்றத் தாழ்வு இன்னும் மோசமாக ஆவதற்கு காரணம் மூன்றாம் உலக நாடுகளிலேயே உள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் முதலாளிகள் தமது சொத்துக்களில் பெரும்பகுதியை டாலராக மாற்றி அவற்றை தமது நாட்டுக்கு வெளியே ஏகாதிபத்திய மையங்களுக்கு (அல்லது ஏகாதிபத்தியங்களால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு மையங்களுக்கு) கடத்தி பதுக்குகின்றனர். இந்த மையங்கள் இந்த மூன்றாம் உலக நாட்டு அரசுகளின் வரி விதிப்புக்கு அப்பால் இருப்பதோடு ஜி-7 நாடுகளாலும், அவர்களால் கட்டுப்படுத்தப்படும் சர்வதேச நிதி நிறுவனங்களாலும் (எனவே, இறுதிக் கணக்கில் அவர்களது இராணுவ பலத்தாலும் ) பாதுகாக்கப்படுகின்றன. இதை கேப்ஜெமினி, “2003-ம் ஆண்டு ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் உள்ள அதி உயர் மதிப்பு கொண்ட தனிநபர்கள் [$10 லட்சம் - ரூ 7.5 கோடி அல்லது அதற்கு மேல் முதலீடு செய்வதற்கான சொத்து இருப்பவர்கள்] தமது சொத்துக்களில் பாதியை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். தென் அமெரிக்காவின் அதி உயர் மதிப்பு கொண்ட தனிநபர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் தமது நிதித்துறை சொத்துக்களை வெளிநாட்டு வரியில்லா சொர்க்கங்களில் வைத்திருக்கின்றனர். அவற்றிலிருந்து வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்."12 என்றது

காலனிய ஆட்சி முடிவுக்கு வந்து, இறையாண்மையை பெற்றது மூன்றாம் உலக நாட்டு தேசிய முதலாளிகளுக்கு அதிகாரபூர்வமாக சுதந்திரம் வழங்கினாலும், அந்த நாடுகளின் ஆகப் பெரும்பான்மையினர் தமது உழைப்பு சக்தியை தவிர விற்பதற்கு ஏதும் இல்லாதவர்களாக முதலாளித்துவத்தால் மாற்றப்பட்டுள்ளனர். சுருக்கமாக சொல்லப் போனால், இந்த நாடுகளின் மக்கள் இன்னும் தமது விடுதலைக்காக காத்திருக்கின்றனர். இதை இந்த ஆய்வறிக்கையில் பயன்படுத்தப்படும் 'ஒடுக்கப்படும் மற்றும் ஒடுக்கும் நாடுகள்' என்ற பதம் அங்கீகரிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் - மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத் தாழ்வு என்ற கருத்துருவில் நாடுகளுக்கு இடையேயும், நாடுகளுக்கு உள்ளேயும் பொருளாதார வளர்ச்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் காணப்படும் அதி தீவிர ஏற்றத் தாழ்வு அடங்கியுள்ளது. இது இயல்பானதோ, இறைவன் விதித்ததோ இல்லை. இது முதலாளித்துவ வளர்ச்சியின் விளைபொருள். முதலாளித்துவம் வளர வளர ஆழமாகிச் சென்றிருக்கிறது.

இந்த எளிமையான, மறுக்கமுடியாத உண்மை எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்படுகிறது என்ற பலரது ஆச்சரியத்தை பிடல் கேஸ்ட்ரோ வெளிப்படுத்தினார்.

“அநியாயம் எங்கிருந்து தோன்றுகிறது? ஏற்றத் தாழ்வு எங்கிருந்து பிறக்கிறது? வறுமை எங்கிருந்து தோன்றுகிறது? குறை வளர்ச்சி எங்கிருந்து உருவாகிறது? நவ காலனியமும் ஏகாதிபத்தியமும் எங்கிருந்து வருகின்றன? முதலாளித்துவத்திலிருந்து இல்லாமல் வேறு எங்கிருந்து இவை அனைத்தும் தோன்றுகின்றன? 'வானத்தையும் பூமியையும் படைத்தவர்கள்தான் ஏழ்மைக்கு பொறுப்பு, இந்த சமூகக் கட்டமைவு அதற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை, முதலாளித்துவம் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை' என்று கூட பேச முடியும் என்பதை நம்ப முடியவில்லை!” - .13

கடற்கொள்ளை, சூறையாடல், காலனிய நாடு பிடித்தல் ஆகியவை முதலாளித்துவத்தின் தோற்றத்தில் முக்கியமான பங்களிப்பு செய்தன. முதலாளித்துவம் முதலில் இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் வேர் பிடித்து வளர்வதற்கு ஐரோப்பாவின் உள்நாட்டு பரிணாம மாற்றங்களுக்கு நிகராக உலகளாவிய வேட்டையாடல்கள் அடிப்படையாக இருந்தன. இது மூலதனம் நூலில் ஒரு புகழ்பெற்ற பத்தியில் கார்ல் மார்க்சால் சுட்டிக் காட்டப்படுகிறது.

“ஐரோப்பாவில் கூலி உழைப்பாளர்களின் திரையிடப்பட்டு மூடப்பட்ட அடிமைத்தனத்துக்கு புதிய உலகத்தில் (அமெரிக்கா) நிலவிய ஒளிவு மறைவில்லாத அடிமைத்தனம் அடித்தளமாக இருந்தது. அமெரிக்காவில் தங்கமும், வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டது, அந்தக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களின் அடையாளத்தை அழித்து, அவர்களை அடிமைகளாக்கி, சுரங்கங்களில் சமாதி கட்டியது, இந்தியாவை கைப்பற்றவும் கொள்ளையிடவும் தொடங்கியது, ஆப்பிரிக்காவை கருப்பின மக்களை வணிக ரீதியாக வேட்டையாடுவதற்கான களமாக மாற்றியது இவைதான் முதலாளித்துவ சகாப்தத்தின் விடியலை சித்தரித்து காட்டுகின்றன […] ஒளிவு மறைவற்ற கொள்ளை, அடிமையாக்கல், படுகொலைகள் ஆகியவற்றின் மூலம் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு அவை மூலதனமாக மாற்றப்பட்டன." 14

முதலாளித்துவம் எவ்வாறு தொடங்கியதோ அவ்வாறே தொடர்கிறது. அதன் இரண்டு நூற்றாண்டு உலக ஆதிக்கத்தின் போது ஒரு சில முதலாளித்துவ நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை பொறுத்தவரையில் வேட்டையாடுபவையாகவும் ஏகாதிபத்தியத் தன்மை உடையனவாகவும் இருந்திருக்கின்றன. ‘மைய' நாடுகளின் இந்த சிறிய பட்டியல் "கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக மாறாமல் இருந்திருக்கிறது. இதற்கு ஒரே விதி விலக்கு ஜப்பான் மட்டுமே" என்று ஃபிரெட் ஹால்லிடே நமக்கு நினைவூட்டுகிறார்".15

இந்த ஆய்வறிக்கையில் இந்த நாடுகள் சில இடங்களில் - வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் அடங்கிய முக்கூட்டு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாடுகள் '2008 உலக வரைபடம்' என்று அத்தியாயத்தின் ஆரம்பத்தில் தரப்பட்டிருந்த பெரும் ஏற்றத் தாழ்வின் ஏற்றமான பக்கத்தில் உள்ளன. அவை உலகை இரண்டு முறை உலகப் போருக்குள் தள்ளின. தாம் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் மீதான உரிமை பாராட்டலில் ஏற்பட்ட போட்டியை தீர்த்துக் கொள்வதே இந்த போர்களின் முக்கிய காரணமாக இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், குறிப்பாக 1979அக்டோபர் மாதம் ‘வோல்கர் அதிர்ச்சி’ தொடங்கி வைத்த புதிய தாராளவாத உலகமயமாதலின் போது வட அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் மூன்றாம் உலக நாடுகள் மீதான தமது பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தின் வடிவங்களை மாற்றியமைத்திருக்கின்றனர். அந்நாடுகளின் மனித வளத்தையும், இயற்கை வளங்களையும் கொள்ளையிடுவதற்கு புதிய வழிகளை உருவாக்கியுள்ளன. முதல் பெரிய மாற்றமாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனிய சாம்ராஜ்யங்கள் உடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த நாடுகள் அதிகாரபூர்வமாக இறையாண்மை பெற்ற நாடுகளாக மாறின. இந்த முன்னேற்றம் தேசிய விடுதலைக்கான கடுமையான போராட்டங்களில் இணைந்து கொண்ட பெரும் திரளான மக்கள் மூலம் சாத்தியமானது. இந்த இயக்கங்கள் மேலும் மேலும் புரட்சிகர சோசலிச பாதையில் பயணிக்கும் போக்கை பார்த்த ஏகாதிபத்தியவாதிகளின் மிகப்பெரிய பயமும் இவற்றுக்கு காரணமாக இருந்தது. இந்த புதிய சக்திகளின் உறவுகள், தமது அடிமை நாடுகளில் தோன்றி வரும் முதலாளித்து மேட்டுக்குடியினருடனான தமது உறவை மாற்றியமைத்து அவர்களது சீடர்கள் ஆட்சி அதிகாரத்தில் உட்காருவதை நோக்கி மறு சீரமைத்துக் கொள்ளத் தூண்டின. அதே நேரம் ஏகாதிபத்திய நாடுகள் தமது அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவேயில்லை. இந்த புதிய ஏற்பாடு ஒரு விஷயத்தை திறமையுடன் சாதித்தது. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் ஏகாதிபத்திய, சுரண்டல் தன்மையை அது மூடுதிரை போட்டு மறைத்தது.

இருந்தாலும், அது மறைந்து விட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது. ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதற்கான வழிகளில் நிதித்துறை பரிவர்த்தனை தரவுகளில் பதிவாகின்றவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், குறிப்பாக அன்னிய நேரடி முதலீடுகளிலிருந்து அனுப்பப்படும் லாபமும் வெளிநாட்டுக் கடன்கள் மீதான வட்டியையும் மட்டும் எடுத்துக் கொண்டால் அவற்றின் மொத்தக் கூட்டுத் தொகை ஆண்டுக்கு ஏறக்குறைய $50,000 கோடி ஆகும். இது இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% அல்லது சுமார் 15,000 டன் தங்கத்துக்கு நிகராகும். இந்த அளவு பணம் ஒவ்வொரு ஆண்டும் மிக ஏழை நாடுகளிலிருந்து மிகப் பணக்கார நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இது கொலம்பஸ் பஹாமா தீவில் இறங்கியதற்கு பிந்தைய 350 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலிருந்தும் அமெரிக்கக் கண்டத்திலிருந்தும் தோண்டப்பட்ட தங்கத்தின் ஒட்டு மொத்த அளவை விட இரண்டு மடங்கு ஆகும்.16

'புதிய தாராளவாத உலகமயமாக்கல்' ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவது பெருமளவு விரிவடைவதையும் பண்புரீதியாக ஆழமாவதையும் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறது என்று இந்த ஆய்வறிக்கை வாதிடுகிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த மிகச் சமீபத்திய கட்டத்தில் எது புதியதாக உள்ளது என்றால் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளுக்கும் ஆளப்படும் நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் "முதலாளித்துவத்துக்கு உள்ளார்ந்ததாகவும், முதலாளித்துவ கட்டாயங்களால் ஆளப்படுபவையாகவும் உள்ளன" (எலன் வுட் - ன் மேற்கோள்).17

ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை ஒழுங்குபடுத்துவதில் முதன்மையானதாக ராணுவ வலிமை இல்லை. மாறாக, சந்தை வலிமை இதை ஒழுங்குபடுத்துகிறது. இது முதலாளித்துவம் ஏற்கனவே நிலவும், வரித்துக் கொண்ட ஆதிக்க வடிவங்களை தனக்குள் உள் வாங்கிக் கொள்வதில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. அதாவது, இது மதிப்பு விதியின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது.18

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

Thursday, February 14, 2019

நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010

4

அத்தியாயம் 1 - உலகமயமாதலும், 'புதிய' ஏகாதிபத்தியமும்

"அனைத்து சர்வதேச உறவுகளும் முதலாளித்துவத்துக்கு உட்பட்டதாகவும், முதலாளித்துவத்தின் அதிகாரத்தால் ஆளப்படுவதாகவும் இருக்கும் உலகத்துக்கான ஏகாதிபத்தியம் பற்றி முறையான ஒரு கோட்பாட்டை நாம் இன்னும் உருவாக்கவில்லை. இதற்கான காரணம், ஏறக்குறைய உலகளாவிய முதலாளித்துவம் என்பது மிகச் சமீபத்திய நிகழ்வாக இருப்பதே ஆகும்." 1 – எல்லன் மெய்க்சின்ஸ் வுட்.

உலக அளவு பெரிதான இந்தக் கோட்பாட்டு இடைவெளியை இந்த ஆய்வறிக்கை நிரப்ப முயல்கிறது. “ஏறக்குறைய உலகளாவிய முதலாளித்துவ உலகத்துக்கான முறையான ஏகாதிபத்திய கொள்கை” இல்லாத நிலையை சரி செய்ய முயற்சிக்கிறது. இந்த ஒட்டு மொத்தப் பணியையும் ஒரே ஆய்வறிக்கை நிறைவேற்ற முடியாது என்பது உண்மை. எனவே, ஒரு முனைவர் பட்ட ஆய்வறிக்கைக்குள் கையாளப்படக் கூடிய அளவில், ஆனால் ஒட்டு மொத்த கட்டமைப்புக்கும் மையமான பரிமாணத்தை, அல்லது கூறு ஒன்றை அடையாளம் காண்பதை தனது பணியாக எடுத்துக் கொள்கிறது. இந்தப் பணி எவ்வாறு செய்யப்படுகிறது என்று இந்த அத்தியாயத்தின் முதல் பிரிவு விளக்குகிறது.

இரண்டாவது பிரிவில், சுரண்டலின் தன்மை பற்றிய சில முக்கியமான கருதுகோள்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாளித்துவ உற்பத்தி தனியார் அடிப்படையில் நடப்பதாலும், மாய்மாலமான, மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும், மேற்பார்வையில் ஏமாற்றங்களை தரக்கூடிய சந்தையை ஆதாரமாகக் கொண்டிருப்பதாலும் திரை போட்டு மறைக்கப்படும் ஆனால், தவிர்க்க முடியாத சுரண்டலின் இருத்தலையும் இருத்தலையும் அறிமுகப்படுத்துகிறது.

இறுதிப் பிரிவில், இந்த ஆய்வறிக்கையை வழிநடத்தும் கோட்பாட்டு சட்டகம் வளர்த்தெடுக்கப்படுகிறது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் பற்றிய நான்கு கோட்பாட்டு பாரம்பரியங்களை மீளாய்வு செய்து, அவற்றுக்கிடையே இணைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய சட்டகம் உருவாக்கப்படுகிறது. கார்ல் மார்க்சின் மூலதனம், லெனினின் ஏகாதிபத்தியம், சார்புநிலை கோட்பாடு இவற்றோடு 'உலகளாவிய முதலாளித்துவம்’, 'புதிய ஏகாதிபத்தியம்' ஆகியவை பற்றிய தற்கால கோட்பாடுகள் இந்த ஆய்வு பாரம்பரியங்கள் ஆகும்.

ஆய்வறிக்கையின் எஞ்சிய பகுதிகள் பற்றிய விளக்கத்தோடு இந்த அத்தியாயம் நிறைவடைகிறது.

1.1 புதிய தாராளவாத உலகமயமாதலும் ஏகாதிபத்திய/மூன்றாம் உலக வேறுபாடுகள் தொடர்தலும்

இந்த அறிமுகப் பிரிவு 5 பணிகளை நிறைவேற்றுகிறது.

  • முதலாவதாக, இந்த அத்தியாயத்திலும், இந்த ஆய்வறிக்கையின் பிற பகுதிகளிலும் விரிவாக பேசப்படவிருக்கிற குறிச்சொற்களுக்கும், கருதுகோள்களுக்கும் ஆரம்ப வரையறையை தருகிறது.
  • இரண்டாவதாக, இந்த ஆய்வறிக்கைக்கு காரணமாக அமைந்து, அதன் வடிவமைப்புக்கு வழிகாட்டிய பரந்துபட்ட கோட்பாட்டு அடித்தளத்தை விளக்குகிறது. 
  • ஆய்வு செய்யப்பட வேண்டிய களத்தை வரையறுப்பதற்கான குறிப்பான செயல்முறைகளையும், உறவாடல் கட்டமைவுகளையும் அடையாளம் காண்கிறது. 
  • நான்காவதாக, இந்த ஆய்வறிக்கைக்கு அடிப்படையாக அமையும் வாதங்களையும், கூற்றுகளையும் தெளிவாக முன்வைக்கிறது. 
  • ஐந்தாவதாக, இந்த வாதங்களை வளர்த்தெடுக்கவும், இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தவும் தேவையான ஆய்வு அணுகுமுறைகளை விளக்குகிறது.
உலக அரசியல் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வான, சுரண்டும், ஒடுக்கும், எதிர்மறையான, மனிதத்தன்மையற்ற உறவு முதன்மையானதாக உள்ளது. ஆனால்,  இதை மையநீரோட்ட சமூகவியல் மட்டுமின்றி, மார்க்சிய மையநீரோட்டமும்  அங்கீகரிக்கத் தவறுகின்றது. இந்த ஆய்வறிக்கை இந்த இடைவெளியை இட்டு நிரப்பும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டது. மார்க்சிய மையநீரோட்டத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் சிந்தனையாளர்கள் பற்றிய மீள்ஆய்வில் இது தொடர்பான விபரங்களை நாம் பார்ப்போம். நாடு பிடித்தல், கொள்ளை அடித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலான முதலாளித்துவத்தின் முந்தைய நூற்றாண்டுகளுக்கும் இன்றைய உலகுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. பெரும்பான்மையான மையநீரோட்ட தாராளவாத அணுகுமுறைகளும், மார்க்சிய அணுகுமுறைகளும் இதைச் செய்யத் தவறியிருக்கின்றன.

'வளர்ந்த', அதிக தனிநபர் உற்பத்தி (ஜி.டி.பி) கொண்ட, அதிக அளவு கனிம வளங்களை பயன்படுத்தும் பகுதிகளுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு, அதாவது ஏகாதிபத்திய-மூன்றாம் உலக ஏற்றத் தாழ்வு, விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. உலக மக்கள் தொகையில் 14% மட்டும் கொண்ட ஐரோப்பா, வட அமெரிக்கா, ஜப்பான்  உலகின் பிற பகுதிகளை காட்டிலும் பல மடங்கு அதிக ஒளியை இரவில் வெளியிடுகின்றன. இதை இந்த ஆய்வுரையின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் காணலாம். 2


இந்த அத்தியாயத்தில் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள, '2008-ம் ஆண்டு உலக வரைபடம்' உலகம் இரண்டாக பிளவுபட்டிருப்பதை இன்னும் தெளிவாகக் சித்தரிக்கிறது.


2008-ம் ஆண்டில் 90% மனிதர்கள் சராசரி ஜி.டி.பி $11,000-க்கு குறைவாகவோ $33,000-க்கு அதிகமாகவோ உள்ள நாடுகளில் வசிக்கின்றனர்;3 இந்த 90% மக்கள் தொகையில் பாதிப் பேர் $11,000-க்கும் $15,000-க்கும் இடையே தனிநபர் ஜி.டி.பி கொண்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.4 இதே போன்ற தரவுகளை ஆய்வு செய்த அந்தோனி பாய்னே, “இதில் வெளிப்படும் விஷயம் மிகவும் தீவிரமானது; இன்றைய உலகப் பொருளாதாரத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகள் செலுத்தும் ஆதிக்கம் பற்றிய மிகவும் மறுக்கமுடியாத ஆதாரத்தை இது வழங்குகிறது”5 என்று கூறுகிறார்.

மைய கருதுகோள்கள்
'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' என்ற சொல் புரிந்து கொள்ள சிரமமானதாக இருக்கலாம். ஏனென்றால், அளவில்லா சிக்கல்கள் நிரம்பிய உலகத்தை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்துவதாக இது உள்ளது. இருப்பினும், இந்த உலகைப் பற்றிய இரண்டு வரைபடங்களில் தெரிவது போல, இந்த எளிமைப்படுத்தல் பருண்மையானதும், யதார்த்தமானதுமாகும். ஏகாதிபத்திய நாடுகளுக்கும்-மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு பரிணாம வளர்ச்சி அடைவதோடு திடீர் திடீர் என மாற்றங்கள் அடைகிறது. அதற்கு தீவிரமான எதிர்ப்பு உள்ளது. அது ஆழமான நெருக்கடியில் உள்ளது - இருப்பினும் இன்னும் நம்மிடையே தொடர்கிறது.

உலகை விளக்குவதற்கான சொற்றொடர் என்ற அளவில் 'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' என்பது இரண்டு வலிமைகளை பெற்றிருக்கிறது : அது உலக அரசியல், சமூக, பொருளாதார பிரிவினையின் புவிசார் தன்மையையும், நிலப்பரப்பு சார் தன்மையையும் துலக்கமாக காட்டுகிறது. இந்த பிரிவினை கடகரேகையை ஒட்டிய ஒரு மாபெரும், வளைந்து நெளிந்து செல்லும், உலகளாவிய பிளவு ஆகும்6. இது இப்போதைய உலகநிலைமை காலனியாதிக்க ஏகாதிபத்திய முந்தைய நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாக இருப்பதை குறிக்கிறது.

2000-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சராசரி மனிதரின் ஆண்டு வருவாய் ஏகாதிபத்திய நாட்டின் ஒரு சராசரி மனிதரின் வருவாயில் 13-ல் ஒரு பங்குதான் என்று சுட்டிக் காட்டுகிறார். பெய்ன். ஆசியாவின் மூன்றாம் உலக நாடுகளின் மக்களுக்கு இது 24-ல் ஒரு பங்காகவும், சராசரி ஆப்பிரிக்க மனிதருக்கு 60ல் ஒரு பங்காகவும் உள்ளது.
வளர்ந்த/வளரும், மைய/விளிம்பு, ஏகாதிபத்திய/மூன்றாம் உலக நாடுகள் என உலகம் பிளவுபட்டுள்ளது என்ற கருத்து இன்றைய உலகின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் பல நுணுக்கங்களையும், யதார்த்த நிகழ்வுகளுக்கும் நிலைமைகளுக்கும் உள்ள சிக்கலான இயக்க உறவையும் சித்தரிக்கிறது. ஆனால், இவற்றில் எதுவும் புதிய உலகமய சகாப்தத்தின் விரிந்து செல்லும் எல்லைகளை விளக்குவதற்கு போதுமானதாக இல்லை என்று பெய்ன் கருதுகிறார்.7

இருப்பினும், தனது கண்ணோட்டத்தை முன் வைப்பதற்கு பெய்ன் பயன்படுத்தும் 'பணக்கார' நாடுகள், 'ஏழை' நாடுகள் என்ற சொற்றொடர் ஏகாதிபத்திய நாடுகள்/மூன்றாம் உலக நாடுகள் என்பதில் உள்ள அதே வரம்புகளை கொண்டுள்ளது.

'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' போன்ற உலகை இரண்டாக பிரிக்கும் கோட்பாடுகள், அளவுக்கு அதிகமாக எளிமைப்படுத்துகின்றன : ஒவ்வொரு நிலையிலும் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் தமக்குள் சமூக வர்க்கங்களாக பிரிந்திருப்பதை அவை வெளிப்படுத்துவதில்லை. அதாவது, ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் உள்ள விகாரமான ஏற்றத் தாழ்வுகள் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட துணைக்கோள் புகைப்படத்திலோ, '2008 உலக செல்வ பரவல் வரைபடத்திலோ' பிரதிபலிக்கப்படவில்லை.

அதாவது, சொத்து வினியோகம் பரவல் தொடர்பாக உலக வரைபடத்தில் வெளிப்படுத்தப்படும் நாடுகளுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வுகளுக்கு இணையான ஏற்றத் தாழ்வு ஒவ்வொரு நாட்டு எல்லைகளுக்குள்ளும் நிலவுகிறது8. நாடுகளுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வு அதிகரித்திருக்கிறதா என்பது பற்றிய சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் ஒவ்வொரு நாட்டின் உள்ளே ஏற்றத் தாழ்வு சமீபத்திய பல ஆண்டுகளில் வேகமாக அதிகரித்திருக்கிறது.9

ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகளுக்கு இடையேயான உறவை சமூக வர்க்க பிரிவினையை ஒதுக்கி விட்டு பார்க்காமல், ஏகாதிபத்திய நாடுகளுக்கும்-மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத் தாழ்வு பற்றிய வர்க்க பகுப்பாய்வு செய்ய வேண்டிய பணி உள்ளது. அத்தகைய வர்க்க பகுப்பாய்வு வருமான வினியோகத்தின் மீதே தனிச்சிறப்பாக கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி அதை விட வேகமாக அதிகரித்து வரும் சொத்துக்களின் வினியோகத்தின் மீதும் கவனம் செலுத்துவதை கோருகிறது. நாடுகளுக்கிடையேயும் நாடுகளுக்குள்ளேயும் சொத்து வினியோகத்தின் ஒரு பக்க சார்பு வருமான வினியோகத்தின் ஒரு பக்கச் சார்பை விட மேலும் தெளிவாக வெளிப்படுகிறது.10

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

Wednesday, February 13, 2019

பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010


3. நன்றியுரை
இங்கு நன்றி தெரிவிக்கிற முடிவதை விட பலரிடமிருந்து உதவிகளை பெற்றிருக்கிறேன். இந்த நன்றிக் குறிப்புகள் இந்த ஆய்வுரையை எழுதுவதற்கு எனக்கு நேரடியாக உதவி செய்தவர்களுக்கு சொல்லப்படுகின்றன.
  • முதலாவதாக ஐந்து ஆண்டுகள் முழு நேர படிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கிய பொருளாதார, சமூக ஆராய்ச்சி கழகத்துக்கு; இந்த ஆய்வறிக்கைக்கான பரிந்துரையை தேர்ந்தெடுத்த பொருளாதார, சமூக ஆராய்ச்சிக் கழகத்தின் முகம் தெரியாத விமர்சகர்களுக்கு
  • ஷெபீல்ட் பல்கலைக் கழகத்தின் அரசியல் துறை, அதன் கற்பிக்கும் ஊழியர்கள், நிர்வாக ஊழியர்கள், சிறப்பான கூட்டு நன்றிக்கு உரியவர்கள். என் வீட்டுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் அது மிகச் சிறப்பான, ஜனநாயக, நட்புரீதியான சூழலை உருவாக்கித் தந்தது. முனைவர் ஆய்வு செய்ய விரும்பும் எந்த மாணவருக்கும் நான் அதை பரிந்துரைப்பேன். முதுநிலை பட்ட செயலர் சாரா குக்கின் நட்புரீதியான அணுகுமுறையும், பணித் திறனும் சிறப்பு நன்றிக்கு பாத்திரமானவை.
  • என்னுடைய ஆய்வுப் பணி மேற்பார்வையாளர் பேராசிரியர் ஜான் எம் ஹாப்சனின் தொடர்ந்த ஆதரவுக்கும், பொறுமைக்கும், பாரபட்சமின்மைக்கும் ஒரு பெரிய, திருப்பிச் செலுத்த முடியாத கடனை நான் பெற்றிருக்கிறேன்; எனது வாதத்தை எப்படி முன் வைப்பது என்று தீர்மானிக்குமாறு தொடர்ந்து என்னை ஊக்குவித்தார் அவர்.
  • லூசியா பிராதெல்லாவுக்கு சிறப்பு நன்றிகள்: ஆய்வறிக்கையில் பொருத்தமான இடங்களில் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள், புரிதல்களுடன் கூடவே இந்த ஆய்வறிக்கையின் இறுதி வரைவில் கூடுதல் விளக்கமும் கருத்துரீதியான மேம்பாடும் தேவைப்படும் இடங்களை சுட்டிக் காட்டியது அவர்தான்.
  • இரண்டாவது வகை நேரடி உதவியை, கருத்துக்களை கோட்பாடு ரீதியாக வளர்ப்பதற்கு நேரடியாக தாக்கம் செலுத்தியவர்கள் வழங்கினார்கள். அவர்களது கருத்து ரீதியான பங்களிப்பு பொருத்தமான இடங்களில் மேற்கோள்கள் மூலமாகவும், சுட்டிகள் மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரது பங்களிப்பு சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டியது. முனைவர் ஆன்டி ஹிக்கின்பாட்டம். 1975ல் நாங்கள் இருவரும் ஒரே பட்டப் படிப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது நான் முதன் முதலில் ஆன்டியை சந்தித்தேன். அதுமுதல் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில். அத்தியாயம் 1ல் தரப்பட்டுள்ள கோட்பாட்டு ரீதியான கருத்துக்களை வளர்ப்பதில் ஆன்டி பெரும் பங்காற்றினார். அதை குறிப்பிடுவது எனது கடமையாகும்.
      நாங்கள் இருவரும் ஒரே ஆரம்பப் புள்ளியிலிருந்து தொடங்கினோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வது. உலகமயமாக்கம் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குறைந்த கூலி உழைப்பாளிகளிடமிருந்து யு.கே., யு.எஸ்., போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளுக்கும் தேசம் கடந்த தொழிற்கழகங்கள் லாபம் குவிப்பதற்கான வாய்ப்புகளை பெருக்குகிறது என்ற உணர்வு. ஒரே கோட்பாட்டு ரீதியான உணர்வு: மூலதனம் நூலில் மார்க்ஸ் ஆய்வு செய்த மூலதனத்தின் சமூக உறவுகளில் ஒரு பெரிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போது தேவைப்படுவது முதலாளித்துவத்துக்கான கோட்பாடு அல்ல, அதன் ஏகாதிபத்திய வடிவத்துக்கான கோட்பாடு. அதை சாதிப்பதற்கு, ஆன்டி சொன்னது போல நாம் மார்க்ஸின் மூலதனத்தை லெனினின் ஏகாதிபத்தியம் என்ற கண்ணாடி வழியாக படிப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
      இந்த முக்கியமான கண்ணோட்டங்கள், அவரது தாராளமான ஆதரவு, ஊக்கம் இவற்றுடன் இந்த ஆய்வறிக்கையில் நெய்யப்பட்டுள்ள பல கோட்பாட்டு ஆதாரங்களை எனக்கு அறிமுகம் செய்தார் ஆன்டி. அவற்றுள் மிக முக்கியமானது மாஸ்கோவில் 1960ல் பதிப்பிக்கப்பட்ட இவால்ட் இல்யங்கோவின் மகத்தான படைப்பான 'மார்க்சின் மூலதனத்தில் சாராம்சத்துக்கும் பருண்மைக்கும் இடையேயான இயங்கியல்'. மார்க்சின் இயங்கியல் உத்திகளையும் சொல் கையாளல்களையும் பற்றிய அவரது ஆழமான கண்ணோட்டங்கள் இந்த ஆய்வுரையின் வடிவமைப்பு மீதும் ஆய்வு முறையியல் மீதும் வெகுவாக தாக்கம் செலுத்தின.
      முதல் அத்தியாயத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அடிப்படை கருத்துக்களான, முதலாளித்துவத்திற்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையேயான உறவு, மூலதனத்தில் மார்க்ஸ் உருவாக்கிய உத்திகளை இப்போதைய ஏகாதிபத்திய உலக பொருளாதாரத்துக்கு ஏன் நேரடியாக பயன்படுத்த முடியாது, அதிதீவிர சுரண்டல் பற்றிய கோட்பாடு, மார்க்சின் மதிப்புக் கோட்பாட்டையும் லெனினின் ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாட்டையும் புதிய இணைப்புக்கான முன்மொழிவை முன் வைத்தது ஆன்டி. அவரது ஆய்வுரைகளிலிருந்தும் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களிலிருந்தும் தரப்பட்டுள்ள மேற்கோள்களில் அவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. முதல் அத்தியாயத்தில் முன் வைக்கப்பட்ட வடிவில் அவற்றிற்கு உருக் கொடுத்து வளர்த்தெடுத்தது என்னுடைய பணி. பின்வரும் ஆறு அத்தியாயங்களில் இந்த ஆய்வுத் திட்டப்பணியை வழிநடத்துவதற்கான நடைமுறைப்படுத்தலும் என்னுடைய பணி.
  • இறுதியாக இந்த ஆய்வறிக்கை புரட்சிகர கியூபாவின் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அவர்களது அசாதாரண சர்வதேசியவாதம், சாத்தியமற்றதாகத் தோன்றும் சூழ்நிலைகளில் எதிர்த்து நிற்பதற்கான ஆற்றல், மனித வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க சாதனைகள் இவை யாவும் பெருமை, ஊக்கம் மற்றும் நம்பிக்கைக்கான காரணிகளாக விளங்குகின்றன. இவை இல்லாமல், மிக முக்கிய காரணிகளான இவை இன்றி, இந்த ஆய்வறிக்கை ஒரு போதும் எழுதப்பட்டிருக்காது. 

ஆதாரம் : சர்வதேச நிதி அமைப்பு, உலக பொருளாதார நிலைமை தரவுத் தளம், ஏப்ரல் 2007

http://www.imf.org/external/pubs/ft/weo/2007/01/data/index.aspx

“உலக வரைபடத்துக்கான" விளக்கம்
ஒரு நபருக்கு சராசரி GDP (உள்நாட்டு உற்பத்தி மதிப்பின்) அடிப்படையில் 179 நாடுகள் இடமிருந்து வலமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இடது கோடியில் உலகிலேயே ஏழையான நாடு யேமனும், வலது கோடியில் அமெரிக்காவுக்கு வலது புறம் உலகிலேயே பணக்கார நாடான நார்வேயும் காட்டப்பட்டுள்ளன. x-அச்சு மொத்த மக்கள் தொகையை குறிக்கிறது. ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாட்டை குறிக்கிறது. அவற்றுக்கிடையேயான இடைவெளி நாட்டின் மக்கள் தொகையை குறிக்கிறது. முதல் அகலமான இடைவெளி இந்தியாவையும், அடுத்த பெரிய இடைவெளி சீனாவையும் குறிப்பிடுகின்றன.

உலகின் பாதி உற்பத்தி (வாங்கும் திறன் சமன்பாடு அடிப்படையில் கணக்கிடப்பட்டது) செங்குத்து கோட்டுக்கு இடது புறம் உள்ள 146 நாடுகளில் உற்பத்தியாகின்றது. இந்த நாடுகளில் 560 கோடி மக்கள் வசிக்கிறார்கள், உலக மக்கள் தொகையில் 85%. மறு பாதி செங்குத்து கோட்டுக்கு வலது புறம் உள்ள 33 நாடுகளில் உற்பத்தியாகிறது. இவற்றில் 100 கோடி மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 15% வாழ்கின்றனர்.

ஒருவருக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி $11,000க்கும் $33,000க்கும் இடையிலான மாறிச்செல்லும் பிராந்தியத்தில் உள்ள 40 நாடுகளில் உலகின் 10% மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பாதிபேர் $11,000க்கும் $15,000க்கும் இடையே உள்ளனர். வரைபடத்தின் மிகவும் செங்குத்தான பகுதியான $15,000க்கும் $30,000க்கும் இடைப்பட்ட பகுதியில் உலக மக்கள் தொகையில் 5.2% கொண்ட 32 சிறிய நாடுகள் உள்ளன. அவற்றின் தென் கொரியா மிகப் பெரியது.

  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

Tuesday, February 12, 2019

ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்


ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010




 2. உள்ளடக்கம்
சொற்பட்டியல்
படங்களும் அட்டவணைகளும்
நன்றியுரை
சாராம்ச உரை

அத்தியாயம் 1 - உலகமயமாதலும், 'புதிய' ஏகாதிபத்தியமும்
1.1 புதிய தாராளவாத உலகமயமாதலும் ஏகாதிபத்திய/மூன்றாம் உலக வேறுபாடுகள் நீடித்தலும்
    மைய கருதுகோள்கள்
    கருதுகோள்களை கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுத்தல்: புதிய தாராளவாத     உலகமயமாக்கம் - முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியில் ஒரு புதிய கட்டம்
    ஆய்வறிக்கையின் நோக்கமும் ஆய்வுத் திட்டமும்

1.2 சுரண்டலை திரையிட்டு மறைத்தல்
    சுரண்டலும் அதிதீவிர சுரண்டலும்
    சுரண்டலை புறக்கணிப்பதை பொருளாதாரவியல் நிபுணர்கள் கோட்பாட்டுரீதியாக எப்படி நியாயப்படுத்துகிறார்கள்?
    GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாயை

1.3 ஏகாதிபத்தியம் பற்றிய மார்க்சிய கோட்பாடுகளும் “புதிய ஏகாதிபத்தியமும்”
    மார்க்ஸ், லெனின், முதலாளித்துவ உற்பத்தி உலகமயமாக்கம்
    சார்பு கோட்பாடும் அதன் மறைவும்
    'புதிய ஏகாதிபத்தியம்' பற்றிய கோட்பாடுகள் 

1.4 ஆய்வறிக்கை வடிவமைப்பு

அத்தியாயம் 2 : அயல்நாட்டு உற்பத்தி, அயலக உற்பத்தி, 'உலகளாவிய உழைப்பு ஆதாயம்'
2.1 உற்பத்தி செயல்முறைகள் உலகமயமாதல்
2.2 உலகளாவிய அயலக உற்பத்திக்கான உதாரணங்கள்
2.3 மூன்றாம் உலக நாடுகள் - இனிமேலும் விளிம்பு நிலையில் இல்லை
      ஏகாதிபத்திய-மூன்றாம் உலக அன்னிய நேரடி முதலீட்டின் அதீத சமமின்மை
    உற்பத்தித் துறை நேரடி முதலீடும், சேவைத் துறை நேரடி முதலீடும்
    இணைப்புகள், கைப்பற்றுதலும் 'புத்தம் புதிய' அன்னிய நேரடி முதலீடும்
    ஏகாதிபத்திய நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் தேசங்கடந்த தொழிற்கழக வேலை வாய்ப்பு, .
    சமனற்ற 'சந்தை கட்டமைவுகள்' - ஏகாதிபத்திய நாடுகளில் ஏகபோக 'பெரு நிறுவனங்கள்', மூன்றாம் உலக நாடுகளில் கழுத்தை அறுக்கும் போட்டி
2.4 சேவைத்துறை அயலக உற்பத்தி
2.5 உயிருள்ள உழைப்பு - மையத்தில்
    அயலக உற்பத்தியும் முக்கூட்டு ஏகாதிபத்திய நாடுகளில் உழைப்பு சக்தியின்     மறுஉற்பத்தியும்.
2.6 'உலகளாவிய உழைப்பு ஆதாயம்' - உற்பத்தி செயல்முறைகள் உலகமயமாக்கப்படுவதற்கான     முக்கிய உந்து சக்தி
'உலகளாவிய உழைப்பு ஆதாயம்' - ஒரு பயனுள்ள குறிச்சொல்லா அல்லது உண்மையை மூடி மறைக்கும் சொற்சிலம்பமா? 
2.7 புதிய மார்க்சியவாதிகளும் 'உலகளாவிய உழைப்பு ஆதாயமும்'
2.8 விரிந்த பார்வையில் உலகளாவிய உழைப்பு ஆதாயம்

அத்தியாயம் 3 – மூன்றாம் உலக உழைப்பாளர்கள், இனிமேலும் விளிம்பு நிலையில் இல்லை

3.1 சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள மூன்றாம் உலக உழைப்பாளர்கள்
    தொழிலாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்வது தடுக்கப்படுவதும், மூன்றாம் உலகத்தின் உருவாக்கமும்
    மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர் படையின் வளர்ச்சியும் பாட்டாளிமயமாதலும்

3.2 முறைசாரா பொருளாதாரம் : முதலாளித்துவத்தின் 'ஒப்பீட்டு உபரி மக்கள் தொகை'
    விவசாயம் அல்லாத வேலை வாய்ப்புகளில் முறைசாரா வேலைவாய்ப்புகளின் சதவீதம்
    முறைசாரா மயமாக்கலும் சமூக பின்னடைவும்
    'நெகிழ்வாக்கம்'
    முறைசாரா பொருளாதாரமும் முதலாளித்துவத்தின் 'ஒப்பீட்டு உபரி மக்கள்     தொகையும்' 

3.3 உழைப்பு 'பெண்மையாக்கப்படுவதும்' பெண்கள் பாட்டாளியாக்கப்படுவதும்
    'கச்சிதமான பொருத்தம்'
    'பெண்மை நீக்கம்'
    பாலின கூலி வேறுபாடு - எப்போதையும் போலவே பெரிதாக உள்ளது.
    பெண்ணியமும் வர்க்க பகுப்பாய்வும்

3.4 தொழில் துறை வேலை வாய்ப்பும் விவசாய, சேவைத் துறை வேலைவாய்ப்பும்
    தொழில் துறை உழைக்கும் வர்க்கம் மூன்றாம் உலக நாடுகளுக்கு மாறிச் செல்தல்
    ஏற்றுமதி சார்ந்த தொழில் மயமாக்கல் : பரந்து விரிந்ததா, அல்லது குறுகிய அடிப்படையிலானதா?
    ஏற்றுமதி செயல்முறை மண்டலங்கள்
    பாரம்பரியமற்ற விவசாய ஏற்றுமதிகள் 

அத்தியாயம் 4 - உலகமய காலகட்டத்தில் கூலி மாற்றப் போக்குகள்

4.1 உலகக்கூலிகள் - புள்ளிவிபர பிரச்சனைகள்
4.2 புதிய தாராளவாத கால கட்டத்தில் உலக் கூலி மாற்றப் போக்குகள்
4.3 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்து செல்லும் உழைப்பின் பங்கு
4.4 அதிகரிக்கும் கூலி ஏற்றத் தாழ்வுகள்
4.5 நெருக்கடிகளின் போது கூலிகள்
முடிவுரை

அத்தியாயம் 5 - உற்பத்தித் திறன் முரணும் வாங்கும் திறன் வேறுபாடும்

5.1 உண்மையான கூலிகளும் வாங்கும் திறன் சமநிலையும்
 வாங்கும் திறன் வேறுபாடும் ஏகாதிபத்திய/மூன்றாம் உலக பிளவும்
 வாங்கும் திறன் சமன்பாட்டின் புதைகுழிகள்
 வாங்கும் திறன் சமன்பாடு குறித்து மார்க்சிய அரசியல் பொருளாதாரவியலாளர்கள்

5.2 சந்தை நாணய மாற்று விகிதங்கள் ஏன் 'வலு குறைந்த' நாணயங்களை குறைத்து     மதிப்பிடுகின்றன?
    வாங்கும் திறன் சமன்பாடு பற்றிய அனுமானம்
    உற்பத்தித் திறன் முரண்
    உற்பத்தித் திறனும் 'ஓரலகு உழைப்பு சக்தி செலவும்'

அத்தியாயம் 6 : அயலக உற்பத்தியின் மர்மங்கள்

6.1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தக புள்ளிவிபரங்களுக்கு பொருள் கூறுதல்
6.2 உலக உற்பத்தித் துறை ஏற்றுமதியில் அதிகரித்து வரும் மூன்றாம் உலக நாடுகளின் பங்கு
6.3 உலக உற்பத்தி மதிப்பு கூட்டலில் மூன்றாம் உலக நாடுகளின் பங்கு மெதுவாக உயருதல்
    உற்பத்தி மதிப்புக் கூட்டலின் வீழ்ச்சி, நிதிமயமாக்கலின் வளர்ச்சி
6.4 அயல்நாட்டு உற்பத்தியை விட வேகமாக வளரும், அயலகஉற்பத்தி.
    அயலக உற்பத்தியின் மர்மங்கள்

அத்தியாயம் 7 - மொத்த உள்நாட்டு உற்பத்தி மாயை

7.1 மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
7.2 மொத்த உள்நாட்டு உற்பத்தி, 'மதிப்பு கூட்டல்', நிறுவனம் பற்றிய கோட்பாடு
7.3 'மதிப்புச் சங்கிலி' கருதுகோள்
7.4 மதிப்புச் சங்கிலிகளும் மதிப்பு கோட்பாடும்
7.5 GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாயையின் மூன்று கூறுகள்
    திறன்மிகு உழைப்பும், திறன்குறை உழைப்பும்
    சர்வதேச ரீதியில் தொழில் நுட்ப வேறுபாடுகளும் அங்கக இயைபு வேறுபாடுகளும்
    சுரண்டல் விகிதத்தில் சர்வதேச வேறுபாடுகள்
7.6 உலகளாவிய உற்பத்தி சகாப்தத்தில் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி)

முடிவுரை
 அறிமுகம்
1 - முக்கிய கண்டுபிடிப்புகளும் பொருத்தப்பாடும்
    புதிய தாராளவாத உலகமயமாக்கம் - முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியில்     ஒரு புதிய கட்டம்
2. விளைவுகள்
    அயலக உற்பத்தியும் நெருக்கடியும்
    உற்பத்தி சர்வதேசமயமாதலும் ஏகாதிபத்தியங்களுக்கிடையே பகைமையும்
நூல் பட்டியல்

படங்களும் அட்டவணைகளும்
படம் 2.2     புதிய அன்னிய நேரடி முதலீட்டின் உலகளாவிய பரவல்
படம் 3.1     உலக பொருளாதார ரீதியாக செயல்படு நிலை மக்கள் தொகை
படம் 3.2    ஏற்றுமதி நிறைசார்ந்த உலக தொழிலாளர் படை
படம் 3.3    கூலி பெறும், சம்பளம் பெறும் ஊழியர்கள் பொருளாதார ரீதியாக செயல்படும்             மக்கள் தொகையில் சதவீதமாக
படம் 3.4     கூலி பெறும், சம்பளம் பெறும் ஊழியர்கள் பொருளாதார ரீதியாக செயல்படும்             மக்கள் தொகையில் சதவீதமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி                     வீதங்களும்
படம் 3.5    உலக தொழில்துறை தொழிலாளர் படை
படம் 3.6    மொத்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை ஏற்றுமதிகளின் பங்களிப்பு
படம் 3.7    மொத்த ஏற்றுமதியில் உற்பத்தித் துறை ஏற்றுமதிகள், 1990 & 2004
படம் 4.1    உற்பத்தித் துறை கூலிகளின் சர்வதேச ஒப்பீடு
படம் 4.2    ஜவுளித்துறை தொழிலாளர் கூலிகளின் சர்வதேச ஒப்பீடு
படம் 4.3    ஆசியா, தென் அமெரிக்கா (வாங்கும் திறன் சமன்பாடு அடிப்படையில்) வில்                 கூலிகள் அமெரிக்க கூலிகளின் சதவீதத்தில்
படம் 4.4    'முன்னேறிய' நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உழைப்பின் பங்கு
படம் 5.1    வாங்கும் திறன் வேறுபாடும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும்
படம் 5.2    வாங்கும் திறன் வேறுபாடு - 1980 - 2006
படம் 5.3    வாங்கும் திறன் சமன்பாடு மாற்றக் குறியீடும் பொருளாதார ரீதியாக செயல்பாட்டில் உள்ள மக்கள் தொகையில் கூலித் தொழிலாளர்களின் பங்கும்
படம் 5.4    வாங்கும் திறன் மாற்ற குறியீடுகள் - ஆசியா, தென் அமெரிக்கா
படம் 5.5    உலக உணவு விலை குறியீட்டு எண், 2000-2008
படம் 5.6    வலுவான நாணய கையிருப்புகள்
படம் 5.7    உழைப்பின் உற்பத்தித் திறனும், உழைப்புக்கான செலவும்
படம் 6.1    உற்பத்திப் பொருட்கள் வர்த்தகத்தில் 'வளரும் நாடுகளின்' பங்கு
படம் 6.2    'வளரும்  நாடுகளின்' ஏற்றுமதியில் 'வளர்ந்த நாடுகளின்' பங்கு
படம் 6.3    உற்பத்தி மதிப்புக் கூடுதலில் வளர்ச்சி, 1970-79 & 1980-2003
படம் 6.4    உற்பத்தி மதிப்புக் கூடுதலும் உற்பத்திப் பொருள் ஏற்றுமதிகளும் 1990 - 2007 படம் 6.5    'வளரும் நாடுகள்' உற்பத்தி மதிப்பு கூடுதல் வளர்ச்சியும் ஏற்றுமதி                     வளர்ச்சியும்

அட்டவணை 3.1
கூலி, மற்றும் சம்பளத் தொழிலாளர்களின் பங்கு (பொருளாதார ரீதியாக செயல்பாட்டில் உள்ள மக்கள் தொகை சதவீதம்)
அட்டவணை 3.2
விவசாயம் அல்லாத வேலை வாய்ப்புகளில் முறைசார வேலைவாய்ப்பு சதவீதம்
அட்டவணை 3.3       
ஏற்றுமதி மண்டலங்களில் வேலை வாய்ப்பு, 2006 அல்லது சமீபத்திய ஆண்டு
அட்டவணை 3.4       
ஏற்றுமதியில் ஏற்றுமதி மண்டலங்களின் பங்கு - தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதாரங்களில், 2006
அட்டவணை 4.1       
ஜவுளித்துறை உற்பத்தி தொழிலாளர்களின் நேரக் கூலி, 2008
அட்டவணை 4.2       
நாடுகளுக்கிடையேயான வேலை கூலி வேறுபாடுகள்
அட்டவணை 4.3
கூலி வளர்ச்சியும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும், 2001-2007
அட்டவணை 4.4       
ஏழை, பணக்கார நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உழைப்பின் பங்கில் மாற்றங்கள்

சொற்பட்டியல்

ஆசிய வளர்ச்சி வங்கி - ADB - Asian Development Bank
தொழிலாளர் புள்ளிவிபர அலுவலகம் - BLS - Bureau of Labor Statistics
பொருளாதார ரீதியாக செயல்படும் மக்கள் தொகை - EAP - Economically Active Population
ஏற்றுமதி சார்ந்த தொழில்மயமாதல் - EOI  - Export-oriented industrialisation
ஐரோப்பிய ஒன்றியம் - EU - European Union
ஏற்றுமதி நிறைசார்ந்த உலகளாவிய தொழிலாளர் படை - EWGLF - Export-Weighted Global Labour Force
அன்னிய நேரடி முதலீடு - FDI - Foreign Direct Investment
பைனான்சியல் டைம்ஸ் - FT - Financial Times
மொத்த உள்நாட்டு உற்பத்தி - GDP - Gross Domestic Product
மொத்த உள்நாட்டு வருமானம் -GDI - Gross Domestic Income
மொத்த தேசிய வருமானம் - GNI - Gross National Income
மொத்த தேசிய உற்பத்தி - GNP - Gross National Product
வெகுவாக கடன்பட்ட ஏழை நாடு - HIPC - Heavily-Indebted Poor Country
சர்வதேச ஒப்பீட்டு திட்டம் - ICP - International Comparison Program
சர்வதேச நிதி அமைப்புகள் - IFI - International Financial Institution (IMF, World Bank etc)
சர்வதேச தொழிலாளர் கழகம் - ILO - International Labour Organisation
சர்வதேச நாணய நிதியம் - IMF - International Monetary Fund
இடம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு - IOM - International Organization for Migration
தகவல் தொழில் நுட்பத் துறை IT - Information Technology
இணைப்புகளும், கைப்பற்றல்களும் - M&A - Mergers and Acquisitions
புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்கு - MDG - Millennium Development Goal
உற்பத்தி மதிப்புக் கூட்டல் - MVA - Manufacturing Value Added
பொருளாதார ஆய்வுக்கான தேசிய மையம் - NBER - National Bureau for Economic Research
புதிதாக தொழில்மயமாகும் பொருளாதாரம் - NIE - Newly Industrialising Economy
நிகர நடப்பு மதிப்பு - NPV - Net Present Value
பாரம்பரியமற்ற விவசாய ஏற்றுமதிகள் - NTAE - Non-Traditional Agricultural Exports
மரம் அல்லாத வன பொருட்கள் - NTFP - Non-Timber Forest Products
பொருளாதார ஒத்துழைப்புக்கும் முன்னேற்றத்துக்குமான அமைப்பு - OECD - Organisation for Economic Co-Operation and Development
வாங்கும் திறன் சமன்பாடு - PPP - Purchasing Power Parity
மூன்றாம் உலக நாடுகளின் கடன் - TWD - Third World debt
ஐக்கிய நாடுகள் சபை - UN - United Nations
வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு - UNCTAD or Unctad - United Nations Conference on Trade and Development
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் - UNDP - United Nations Development Programme
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு - UNESCO - United Nations Educational Scientific and Cultural Organisation
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி - UNICEF - United Nations Children’s Fund
ஐக்கிய நாடுகள் தொழில்துறை வளர்ச்சி அமைப்பு - UNIDO - United Nations Industrial Development Organisation
உலக வளர்ச்சி குறியீடுகள் - WDI - World Development Indicators (World Bank)
உலக பொருளாதார வழிகாட்டிகள் - WEO - World Economic Outlook
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

 

Monday, February 11, 2019

நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

ன்றைய உலகின் நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகள் பற்றிய அறிவியல் ரீதியான முக்கியமான ஆய்வுகளில் ஒன்று ஜான் ஸ்மித்-ன் "ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும்" என்ற முனைவர் பட்ட ஆய்வறிக்கை. 2010-ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுரையைத் தொடர்ந்து ஜான் ஸ்மித் இதே விஷயத்தைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் பதிப்பித்துள்ளார்.

பொருளாதார விஷயங்களில் ஆய்வுள்ள தமிழ் இளைஞர்களின் தேவைக்காக அந்த ஆய்வறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து இங்கு வெளியிடுகிறேன். மொத்தம் 300 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையை சிறு சிறு பதிவுகளாக வெளியிட்டால் சுமார் 100 பதிவுகள் வரை நீளலாம். இதை இறுதியில் ஒரு மின் நூல் ஆக தொகுக்கலாம் என்று திட்டம்.

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010

“நியாயமான வேலை நாளுக்கு நியாயமான கூலி' என்ற பழமைவாத குறிக்கோளுக்கு மாறாக, “கூலி முறையை ஒழித்துக் கட்டுவது” என்பதுதான் புரட்சிகர இலட்சியம் - கார்ல் மார்க்ஸ், 1865, மதிப்பு, விலை, லாபம்
 

1. சாராம்ச உரை
புதிய தாராளவாத உலகமயமாக்கல் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதற்கு பதிலாக, ஏகாபத்திய முக்கூட்டுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான உறவின் சுரண்டல் தன்மையையும், ஒட்டுண்ணித்தன்மையையும் அதன் மூலம் அதன் ஏகாதிபத்திய தன்மையையும் பெருமளவு ஊதிப் பெருக்கியிருக்கிறது.
 

இந்த ஆய்வறிக்கையின் மிகக் கடுமையான, எனவே மிகப் பொருத்தமான சோதனை, புதிய தாராளவாத உலகமயமாக்கலின் மிகப் புதிய, பெருமளவு மாறுதல்களை கொண்டு வந்த ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டு அது ஏகாதிபத்திய-மூன்றாம் உலக பிளவை பலவீனப்படுத்தியிருக்கிறதா அல்லது வலுப்படுத்தியிருக்கிறதா என்று கேட்பது ஆகும். 
உற்பத்தி செயல்முறைகள் உலகமயமாதல்தான் இந்த அம்சம் என்று இந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது. மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவின் உலகளாவிய வளர்ச்சியின் பண்பு ரீதியான புதிய கட்டமான இந்த அம்சம், தொழில்துறை உற்பத்தி குறை கூலி நாடுகளுக்கு மாற்றப்படுவதாக வெளிப்படுகிறது.

இந்த உருமாற்றத்தை இயக்கும் பிரதான சக்தி ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்கள் அதிக கூலியிலான உள்நாட்டு உழைப்பின் இடத்தில், குறை கூலி மூன்றாம் உலக உழைப்பை பதிலீடு செய்வதுதான்; அதன் மூலம் அவை செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றன என்று பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இதன் விளைவாக தேசங்கடந்த தொழிற்கழகங்கள் இந்த அதீத சுரண்டலை மேலும் மேலும் சார்ந்திருக்கின்றன. இந்த சுரண்டல் தொடர்பான விபரங்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே நிதி பரிவர்த்தனை தொடர்பான புள்ளிவிபரங்களில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கை உலகளாவிய தொழிலாளர் வர்க்கத்தின் மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த பிரிவுக்கு மைய இடத்தை வழங்குகிறது. மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் புதிதாக உருவாகி, வேகமாக வளர்ந்து வருகிறது; இந்த ஆய்வறிக்கை அதன் சமூக நிலை, உலக பொருளாதாரத்தில் அது இணைக்கப்பட்டுள்ள விதம், மூன்றாம் உலக நாடுகளின் கூலி வகைகள் மற்றும் போக்குகள் பற்றி ஆய்வு செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் உயிருள்ள உழைப்பு உலக வளத்துக்கு அளிக்கும் பங்கு பெருமளவு குறைத்து மதிப்பிடப்படுகிறது. 'உலக முதலாளித்துவம்' அல்லது 'புதிய ஏகாதிபத்தியம்' குறித்து தற்போது செல்வாக்கு பெற்றுள்ள மார்க்சிய ஆய்வுரைகளிலும் இதே நிலைதான்.

இந்த ஆய்வறிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ), வர்த்தகம் ஆகியவை மூலமாக வெளிப்படும் உற்பத்தி உலகமயமாதல் பற்றி பகுப்பாய்வு செய்வதை தனது வாதத்துக்கு  அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் எதை மறைக்கின்றன என்ற கேள்வியை எழுப்பி, பொதுவாக பருண்மையான புள்ளிவிபரங்கள் என்று கருதப்படுபவை தவறாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தத் தரவுகளுக்கு அடிப்படையாக இருக்கும் புதியசெவ்வியல் கருதுகோள்கள் மீதான விமர்சனத்தை உருவாக்குகிறது. ஜி.டி.பி அளப்பது ஒரு நாடு எவ்வளவு உற்பத்தி செய்கிறது என்பதை அல்ல அது சந்தையில் எவ்வளவை கைப்பற்றுகிறது என்பதைத்தான் என்ற முடிவுக்கு இந்த ஆய்வுரை வந்தடைகிறது. மூலதனம் உழைப்பைச் சுரண்டுவதை மறைப்பது போலவே, ஏகாதிபத்திய மூலதனம் மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பை சுரண்டுவதையும் ஜி.டி.பி கணக்குகள் மறைக்கின்றன.