Showing posts with label முனைவு. Show all posts
Showing posts with label முனைவு. Show all posts

Friday, January 1, 2010

திருக்குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

Riches devoid of love and grace
Off with it; it is disgrace!

Source :
http://www.tamilnation.org/literature/kural/kaviyogi/tks2c.htm

Saturday, May 16, 2009

நிறுவனத் தொழில் முனைவு

(Intrepreneurship)

பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அல்லது உரிமையாளர் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். மற்றவர்கள் எல்லோரும் அவர் சொல்வதை சிரம் மேல் ஏற்று செயல்படுவார்கள். அவர் எல்லா முடிவுகளையும் எடுப்பார், மற்றவர்கள் அவர் சொல்வதைப் பின்பற்றி நடந்தால் போதும்.

பெரிய நிறுவனங்களில் இது போன்ற வழிபாட்டு முறைகள் குறைவு என்றாலும், கணிசமான அளவில் இருக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் போதும் சரி, லெதர்லிங்க் ஆரம்பித்த பிறகும் சரி, உயர் பதவி இருப்பவர்களை வழிபட வேண்டும் என்று நினைத்ததில்லை. அவர்களுக்கு நம்மை விட அனுபவர் அதிகம், வயதில் மூத்தவர்கள் அதனால் மதிப்பு உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை.

அப்படி நடந்து கொள்பவர்களைப் பார்த்தால் எனக்கு இரக்கம்தான் வரும். அப்படி மனிதர்களை சிறுமைப்படுத்தும் முறை என்னால் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. லெதர்லிங்கில் முதலிலிருந்தே என்னால் அப்படி ஒரு பாகுபாடு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இனிமேலும் இருக்கக் கூடாது.

நிறுவனத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலாளர்தான். தனக்குத் தாமே திட்டம் வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட அனுபவம், திறமை வளர்ந்த பிறகு பெரிய பெரிய பெயர்களில் பதவிகளைக் கூட வகுத்துக் கொண்டோம். அதைப்பார்த்து கேள்விகள் கேட்டவர்களும் உண்டு. ஒவ்வொருவரும் முனைப்புடன் தனது பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஒருவர் பணி ஒன்றைச் செய்யும் போது மேலாளர் சொல்லி விட்டார் என்பதற்காகச் செய்யக் கூடாது. இதைச் செய்தால் வாடிக்கையாளருக்கு உண்மையான பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். 'எனக்கு எதுவும் தெரியாது, தினமும் காலையில் வந்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வேன், மாதா மாதம் சம்பளம் வந்தால் போதும்' என்று இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட பொறுப்பை யாரும் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

அரசு ஊழியர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கடமைகள், ஊதிய விகிதங்கள் இருக்கும். அவர்கள் என்ன சம்பள உயர்வு கிடைக்கும், எப்பொழுது ஊதியக் குழு அமைக்கப்படும், சேமிப்பிலிருந்து எவ்வளவு முன்பணம் பெறலாம் என்றுதான் திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வரவைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலையைப் பற்றி யோசிப்பதற்குத் தேவையே இல்லை. அது அட்டவணைப்படி நடந்து கொண்டிருக்கும்.

அதிலும் சிலர் முனைப்பெடுத்து பெரிய பதவிகளுக்கு உயர்வதை குறிக்கோளாக வைத்து செயல்படுவார்கள். ஒரே நேரத்தில் ஆசிரியராகச் சேர்ந்தவர்களில் ஒருவர் பள்ளிப் பணியிலேயே ஓய்வு பெற்று விடுவார். இன்னொருவர் கல்வித்துறையில் உயர் பதவிகளுக்குப் போய்ச் சேருவார்.

தலை சிறந்த மருத்துவர், தட்டச்சு செய்பவரை வேலைக்கு வைத்திருக்கலாம். 'அவர் முதலாளி, எனக்கு படி அளப்பவர் என்று அவர் சொல்வதை எல்லாம் தட்டச்சு செய்வது என் கடமை' ஒரு பாணி. 'நோயாளிகளுக்குச் சிறந்த சேவை அளிப்பது நமது கூட்டுக் குறிக்கோள். அவர் மருத்து நிபுணர், மருத்துவம் தொடர்பான எல்லாவற்றுக்கும் அவர் பொறுப்பு. ஆவணப்படுத்துவது எல்லாம் நம்முடைய பொறுப்பு' என்ற நோக்குடன் செயல்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்போசிஸ் நிறுவனத்தைப் பாருங்கள். நாராயண மூர்த்தி தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பிறகு நந்தன் நீலகேணி பொறுப்பேற்றார். அவரும் ஓய்வு பெற்று இப்போது கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். வேலைகளை பகிர்ந்து கொண்டு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் அணி அல்லது அமைச்சரவை இயங்கும் முறை அதை அடிப்படையாகக் கொண்டதுதான். அணித் தலைவர் அல்லது முதல் அமைச்சர் என்பவர் சமமான திறமை, பொறுப்பு இருக்கும் குழுவில் முதலில் இருப்பவர் (First among equals). ஒவ்வொருவரும் தமது பணித் துறையில் முழுமையாக செயல்படுவதுதான் நடைமுறை சாத்தியம், ஆரோக்கிய வளர்ச்சிக்குத் தேவை.

'நான் இது வரைதான் செய்வேன் அதற்குப் பிறகு எனக்குப் பொறுப்பு இல்லை' என்று சொல்வது சரிப்படாது

Saturday, April 18, 2009

குளோவியூ

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6044.html

Sunday, April 12, 2009

தொழில் முனைவு

எங்கள் கல்லூரி வகுப்புத் தோழன் படித்து முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தோல் பிரிவில் வேலைக்கு சேர்ந்தான். அவனது அப்பா ஒரு தொழிலதிபர். கட்டிடத் துறையில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

ஓரிரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு, 'எதுக்கு இன்னொருத்தருக்காக நாம இவ்வளவு உழைக்கணும். நாமே சொந்தமா தொழில் செய்யலாம்' என்று நண்பனுக்குத் தோன்றி விட்டது.

தோல் துறையில் பட்டம் பெற்ற எல்லோருக்குமே, 'ஒரு இடத்தில் ஆர்டர் வாங்கி, அதை வைத்து மூலப் பொருட்களை கடனுக்கு வாங்கி, தோல் செய்து கொடுத்து, வரும் பணத்திலிருந்து வாங்கியவற்றுக்குப் பணத்தை அடைத்து மீதியை நமது ஆதாயமாக வைத்துக் கொள்ளலாம்' என்ற அடிப்படையிலான ஜாப்வொர்க் எனப்படும் முறையின் மீது ஒரு நப்பாசை உண்டு.

அதற்கு பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை.
  • என்ன மாதிரியான தோல் செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு தேவை. அது இருக்கிறது.
  • 'எங்கு உள்ளீடு தோல் வாங்க வேண்டும், எங்கு வேதிப் பொருட்கள் வாங்க வேண்டும் எப்படி கடனுக்கு வாங்க வேண்டும்' என் அனுபவம் தேவை. அது ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்ததில் தெரிந்து போயிருக்கும்.
'அப்பா இவ்வளவு பணக்காரராக இருக்கும் போது நாம் எதற்கு அந்த வழியில் கஷ்டப்பட வேண்டும்' என்று நினைத்து பணித் திட்டம் ஒன்று தயாரித்து இத்தனை கோடி முதலீடு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டானாம்.

'இப்போ உனக்கு மாசச் சம்பளம் எவ்வளவு?'

'மாசம் 15,000 ரூபாய்'

'கையில் சேமிப்பு எவ்வளவு இருக்கு? இரண்டு வருஷம் சம்பளம் வாங்கியிருக்கிறாய் அல்லவா!'

'ஐம்பதாயிரம் ரூபாய்'

'அப்படியா!!!. சரி அதற்குக் கூட நான் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். அந்த 1 லட்ச ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு மாதா மாதம் 15,000 ரூபாய் ஆதாயம் சம்பாதித்துக் காட்டு. அதன் பிறகு கோடிக் கணக்கான முதலீட்டைப் பற்றி யோசிக்கலாம்'.

அப்படி ஆரம்பித்தது அவனது தொழில் முனைவு. இன்றைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை நடத்தி வருகிறான். அப்பாவின் காலத்துக்குப் பிறகும் அவர் கற்றுக் கொடுத்த ஆரம்ப பாடங்களை பின்பற்றி வளர்ந்து கொண்டிருக்கிறான்.

Sunday, February 8, 2009

பணசாட்சியும் மனசாட்சியும்

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் உழைத்த பிறகு பணத்தைக் கேட்டால், 'வேலை எதுவுமே செய்யவில்லை, எங்களுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை, இதுவரை கொடுத்த பணத்தைக் கூட ஒருபகுதி திரும்பிக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களது பெயரை உங்கள் வாடிக்கையாளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, சட்டப்படி தீர்வு செய்யுங்கள்' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

கோபமும் ஆத்திரமும் பொங்கி வந்தாலும் அதை எல்லாம் உள்ளுக்குள் திட்டித் தீர்த்து விட்டு, பொறுமையாக பணிவாக நமது நிலைமையை விளக்கி பதில் போட்டிருந்தோம். ஆரம்பத்திலிருந்த நடந்த தகவல் பரிமாற்றங்கள், மென்பொருள் உருவாக்கப் பணிகள், அவர்கள் நிறுவனத்துக்குப் போய் செய்த பணிகள் போன்ற விபரங்களை நமது தகவல் பயன்பாட்டிலிருந்தும், மின்னஞ்சல்களிலிருந்தும் தொகுத்து அனுப்பி விட்டிருந்தோம்.

'அதே பணத்துக்கு அதிக வேலை வாங்க முயற்சிக்கிறார்களா அல்லது மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்களா' என்று பல குழப்பங்கள். 'எல்லா விபரங்களையும் திரட்டி விட்டோம். அவர்களுக்கு நமது கட்சியை எடுத்துச் சொல்வோம்.' என்று ஒரு உத்தேசமான கருத்தொற்றுமை உருவாக்கியிருந்தோம்.

இந்த நிறுவனத்துக்கான பணி ஆரம்பித்த போது, அது வரை மென்பொருளில் பார்த்த குறைகளை எல்லாம் ஒரு மூச்சாக நிவர்த்தி செய்து விடுவோம் என்று அடிப்படை வடிவமைப்பில் நான்கைந்து பெரிய மாற்றங்களை செய்து முடித்திருந்தோம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை விட இவர்களுக்கு மிக உறுதியான அடிப்படையிலான பயன்பாடு கொடுத்திருந்தோம். நம்மைப் பொறுத்த வரை நமது பயன்பாட்டில் ஏற்பட்ட மேம்பாடு அவர்கள் கொடுத்த வாய்ப்பினால் கிடைத்தது. ஒரு ஆண்டு உழைத்ததற்கு பணம் கிடைக்கா விட்டாலும் கூட, இந்த மேம்பாட்டைப் பயன்படுத்து நிறைய ஈட்டிக் கொள்ளலாம்.

நாம் ஒரு ஆண்டு உழைத்தும் அவர்களுக்கு எதிர்பார்த்த, தேவையான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்களைப் பொறுத்த வரை நாம் அவர்களுக்காக செய்த வேலை வீண்தான். அதற்கு பணம் வாங்கியது, இன்னும் பணம் கேட்பது என்பது நியாயமாகாது. கொடுத்த பணத்தில் ஒரு பகுதி என்று இல்லாமல், மொத்தத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவோம். திருப்புவதற்கான காலக்கெடுவை மட்டும் வாங்கிக் கொள்வோம்.

'ஆரம்பத்தில் எந்த சுணக்கமும் இல்லாமல் கொடுத்து வந்த நீங்கள் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகு பணம் கொடுப்பதில் தயக்கம் காட்டும் போது நாங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு உங்களிடம் பேசி திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வழி தேடியிருக்க வேண்டும். அதைச் செய்ய நாங்கள் தவறி விட்டோம்.'

'இப்போது, இது வரை கொடுத்த பணத்துக்கான பலன் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள். வாடிக்கையாளரிடமிருந்து வாங்கிய தொகையை விட ஒரு ரூபாயாவது ஆதாயம் ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.'

'எங்கள் பக்கம் பேசிய தொகைக்கு நாங்கள் பணி செய்து விட்டதாக நாங்கள் நினைத்தாலும், அந்தப் பணிக்கான பலன்கள் உங்களை வந்து சேரவில்லை என்னும் போது அந்தப் பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுவதுதான் முறையானது என்று நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.'

'நிறுவனத்தை நடத்தும் நாங்கள் யாருமே அதீத லாபம் ஈட்டி வாழ வேண்டும் என்ற குறிக்கோளில் பணி புரியவில்லை. தோல் துறை நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப கருவிகள் குறைவான செலவில், நிறைவான பலனில் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், பணிபுரியும் எல்லோருக்கும் அளவான வாழ்க்கை நடத்தத் தேவையான பொருள் மட்டும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.'

'நாங்கள் உழைத்த நாட்கள், செய்த பணிகளின் செலவு எங்கள் பக்க நிலவரம். அந்தப் பணியின் பலன் தொடவில்லை என்பது உங்கள் பக்க உண்மை. இந்த நிலையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம்'

1. 'உங்களுக்கு பல முறை உணர்த்தியும் எங்களுக்கு வேலை நடக்கவில்லை. கொடுத்த பணம் முழுவதையும் திருப்பி விடுங்கள்.' என்று நீங்கள் தீர்ப்பு சொன்னால், மிகவும் வருத்தத்துடன், நாங்கள் ஒரு ஆண்டுகளுக்கு மேல் செய்த முயற்சிகளுக்கும், நீங்களும் உங்கள் ஊழியர்களும் உழைத்த மணிகளுக்கும் பலனில்லை என்ற வருத்தத்துடன், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் இறங்குவோம்.

உடனடியாக முழுப் பணத்தையும் திருப்பி விடும் செழிப்பு இல்லாத எங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்குள் திருப்பி விடும்படி அனுமதியுங்கள். அதற்கிடையில் இந்தப் பணியையோ, வேறு பணிகளையோ எங்களுக்குக் கொடுத்து ஆதரித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

2. 'எங்கள் பக்கமும் தவறுகள் சில இருக்கின்றன. உங்கள் பக்கமும் பல தவறுகள் இருக்கின்றன. இது வரை போனது போகட்டும், நீங்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுகிறேன். இனிமேல் செய்யும் வேலைக்கும் இன்ன தொகையை ஒதுக்கி விடுகிறேன். மார்ச்சு 31க்குள் முடித்துக் கொடுத்து விடுங்கள்' என்று தீர்ப்பளித்தால் என்றென்றும் மறக்காத நன்றிக் கடனோடு உங்கள் சேவையில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இப்படி ஒரு மனத் தயாரிப்பு வந்து விட்டது. இல்லை பேரம் பேசுவதற்காகத்தான் கூப்பிடுகிறார்கள் என்றால் இது வரை செய்த வேலைக்கான தொகையைத் தந்து விட்டு இனிமேல் செய்வதற்கான கட்டணத்தையும் தருவதற்கு ஒத்துக் கொண்டால் தொடர்வோம். இரண்டுக்கும் நடுவில் இதே பணத்துக்கு இன்னும் வேலை செய்யுங்கள் என்பது மட்டும் வேண்டாம்.

வாசற் காவலரிடம் பேரைச் சொல்லி வந்த வேலையைச் சொன்னேன். உள்ளே நிறுவனத் தலைவரின் நேரடி உதவியாளரிடம் பேசினார். வழக்கமாக அவரே உள்ளே விடச் சொல்லி விடுவார். இப்போது இன்னொரு முறை உள்பேசியைச் சுழற்றி வரவேற்பறை மேலாளரிடம் பேசினார்.

வரவேற்பறைக்குப் போனால் உடனேயே மேலே போகச் சொல்லி விட்டார். அதற்குள் பேசி முடிவு செய்து விட்டார்கள். 'பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம்' என்று நிறுவனத் தலைவர் சொன்னதைச் சரிபார்க்கும் விதமாக கணினித் திரைகளை எட்டிப் பார்க்க முயற்சிக்கவில்லை. அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். நிறுவனத் தலைவர் அறையில் விளக்கு எரியவில்லை. இன்னும் வந்திருக்கவில்லை.

நேரடி உதவியாளர் வரவேற்று உள் அறையில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச வேண்டியதை முன்கூட்டியே வெளியில் சிதற விட்டு விடக் கூடாது என்று நானும் பொதுவான மற்ற செய்திகளையே பேசிக் கொண்டிருந்தேன். தோல் கண்காட்சியில் நாங்கள் பங்கேற்றது, தோல் துறையின் நிலைமை, உலகப் பொருளாதாரச் சுணக்கம். நமது நிறுவனச் செய்திகள் என்று வளர்ந்து கொண்டே போனது. அவர் ஒரு கட்டத்தில் விட்டுச் சென்றதும் கணினியை இயக்கி எழுத ஆரம்பித்தேன். காத்திருந்து மனதைக் கனக்கச் செய்து கொள்ள வேண்டாம்.

நிறுவனத் தலைவர் 11 மணிக்கெல்லாம் வந்து விட்டார். உள்ளே போய் பேசி விட்டு வந்த உதவியாளர், முன்னதாக நான் அனுப்பியிருந்த மின்னஞ்சல் நகல்களை எடுத்துக் கொண்டு வந்து, 'இதற்கு விளக்கம் கேட்கிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளச் சொன்னார். அதன் பிறகு அவரைப் பார்க்கலாம்'

அப்போ சரி என்று ஆரம்பித்தேன். நினைத்து வைத்திருந்த முடிவை விளக்கினேன். 'எங்களுக்கு பண நெருக்கடி நிறைய உண்டு. கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இருப்பது கொடும்பாவம் என்று கூட நான் வசை கேட்கிறேன். அந்த பாவங்களுடன் எங்கள் மென்பொருளைப் பயன்படுத்த முடியாத வாடிக்கையாளரிடம் பணம் வாங்கினேன் என்ற பாவமும் சேர வேண்டாம். நீங்கள் வர்த்தக நிறுவனமோ தரகு நிறுவனமோ கிடையாது. ஒவ்வொரு ரூபாயும் தொழிலாளர்களின் உழைப்பின் பலன். அதைச் செலவழிப்பதில் சரியாக காரண கற்பிதம் இல்லா விட்டால், உங்கள் நிறுவனத் தலைவரின் முடிவு இப்படித்தான் இருக்கும்' என்றேன்.

அவரது பதில் எதிர்நிலையாக இருந்தது. 'இனிமேல் செய்ய வேண்டிய வேலைக்கு இவ்வளவு பணம் கேட்கிறீர்களே, அதை மட்டும் மறுபரிசீலனை செய்து கொள்ளச் சொன்னார்' என்று சொல்ல ஆரம்பித்தார். கணினித் துறை மேலாளர், 'நாங்களும் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம் சார், எப்படி ஒரு பொருளை விளக்குவது, எழுதி அனுப்புவது என்றெல்லாம் நிறைய தெரிந்து கொண்டேன்' என்று உணர்ச்சி பூர்வமாகவே சொன்னார்.

இந்த நேரத்தில் தோல் கண்காட்சிக்காக உருவாக்கியிருந்த காட்சிப்பட விளக்கங்களை காண்பிக்க ஆரம்பித்தேன். நமது நிறுவனச் செயல்பாட்டு முறை பற்றிய காட்சி முதலில். அதைத் தொடர்ந்து உலகளாவிய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் அளவு, போக்கு பற்றிய விபரங்கள். பொறுமையாகப் பார்த்தார்கள். இதன் நகல் அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார் கணினித் துறை மேலாளர்.

இதை எல்லாம் பேசி முடித்தவுடன், 'போய்ப் பார்க்கலாம்' என்று உள்ளே அழைத்தார் உதவியாளர். கதவைத் திறந்து வணக்கம் சொன்னதும், 'வாங்க சிவா' என்று அன்பாக வரவேற்றார் நிறுவனத் தலைவர்.

வழக்கம் போல, 'சொல்லுங்க' என்று நிறுத்தினார். வருபவர்களை பேச விட்டு அவர்கள் எப்படி வருகிறார்கள் என்று பார்த்து விட்டு தமது சீட்டுகளை இறக்குவது பல வெற்றிகரமான நிறுவனத் தலைவர்களிடம் பார்த்திருக்கிறேன். நினைத்து வைத்திருந்த கருத்துக்களைச் சொன்னேன். 'எங்களைப் பொறுத்த வரை வேலை செய்து விட்டோம் என்று நினைத்தாலும், நீங்கள் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும் போது, உங்கள் முடிவு எதுவானாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் கொடுத்த வாய்ப்பின் மூலம் எங்கள் மென்பொருளை பல நிலைகள் மேம்படுத்திக் கொள்ள முடிந்ததே எங்களுக்கு பெரிய ஆதாயம்தான்'

'பணியைத் தொடருவதற்கு உங்களுக்கு விருப்பமே இல்லாதது போல எனக்குப்படுகிறது. அவ்வளவு தொகை எல்லாம் என்னால் கூடுதல் கொடுக்க முடியாது. எங்களது குழுமத் தலைவரிடம் போய் இது போல கூடுதல் கேட்கிறார்கள் என்று சொன்னால் வேலையை முழுமையாக நிறுத்தி விடத்தான் சொல்வார். அவரிடம் போவதற்குப் பதிலாக நானே நிறுத்தி விடுகிறேன். உங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறோம். அதை இழப்பாக வைத்துக் கொள்கிறோம்.'

'நிச்சயமாக நாங்கள் அப்படி இல்லை. உங்கள் நிறுவனத்துடன் பணி செய்வது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எனக்குத் தெரியும். கல்லூரியில் படிக்கும் போதே உங்கள் நிறுவனத்தைப் பார்த்து மதிப்பு கொண்டவன் நான். எங்களது சின்னக் குழுவை நடத்திச் செல்வதற்கு குறைந்த பட்ச பண ஆதரவை மட்டும் நீங்கள் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் ஆகச் சிறந்த சேவையை உங்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம்'

'நீங்கள் கேட்கும் அளவுக்கு என்னால் தர முடியாது' என்று ஒரு தொகையேச் சொல்லி, 'இந்தத் தொகைக்கு உங்களால் செய்ய முடியும் என்றால் என் உதவியாளரிடம் விவாதித்து, திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக எல்லா பணிகளையும் முடித்திருக்க வேண்டும். மீண்டும் இது போல உட்கார்ந்து பேசுவதற்கு நான் தயாராக இல்லை. தற்போது உங்களுக்குத் தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை பத்து நாட்களுக்குள் தரச் சொல்கிறேன்'

'அப்படியே செய்கிறேன்' என்று வெளியில் வந்தேன். வாராக்கடனாக பெருந்தொகையை இழந்து, இது வரை செய்த பணிகளின் பலனையும் முற்றிலும் இழந்து தவிப்போமோ என்று கலங்கிக் கொண்டிருந்தது, சுமுகமாக முடிந்து மேல் பணிகளுக்கும் வழி ஏற்பட்டு விட்டது. வெளியில் உதவியாளரிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டேன். 'உங்கள் குழுவினரிடமும் பேசி விட்டுத் திட்டம் அனுப்புங்கள்' என்று சொல்லி விடை கொடுத்தார்.

கடமையும் தருமமும்

'தவறாமல் முதல் தேதி சம்பளம் கொடுத்து விட வேண்டும், எப்படியாவது கொடுத்து விட வேண்டும்'

3. அதற்கு இறுதிப் பொறுப்பு நிறுவனத் தலைவர்தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
2. மூத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வர கொண்டு வர வேண்டிய கடமை இருக்கிறது.
1. நிறுவனத்துக்கு வரும் பணத்தை சம்பளம் கொடுப்பதற்குத்தான் முதல் உரிமை தருகிறோம்.

'சம்பளம் கூட்டிக் கொடுப்பது குறித்துப் பேசிய போது ஏற்கனவே இருக்கும் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றும் முறைகளை வகுத்துக் கொள்ளச் சொன்னேன். நீ கேட்க வில்லை'

'நீ மட்டும் அதைச் சொல்லவில்லை. அதனால் ஆதாயம் அடைபவர்கள் கூட அதை குழப்பத்தோடுதான் பார்த்தார்கள். 10000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் இன்றைக்கு 25,000 சம்பளத்தில் இருக்கிறார். அதே நிறுவனத்தில் அவருக்கு 15000 என்று உயர்வு கிடைத்திருந்தால் கூட ஆண்டு முழுமைக்கும் 1.8 லட்சம் கிடைத்திருக்கும்.'

'குறைந்த சம்பளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தால், திறமை படைத்தவர்கள் வேலை கற்றுத் தேர்ந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு இரண்டு பேர் என்று விலகிப் போய் விடுகிறார்கள். அப்புறம் நாம் ஆரம்பத்திலிருந்து புதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்து எழுந்து நிற்க வேண்டியிருக்கிறது.'

'தொடக்கத்திலேயே பெரு முதலீடு கொண்டு வந்து திறமையானவர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு உயர் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் முறையில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி வரவுக்கு மேல் சம்பளம் கொடுப்பதும் ஒரு முதலீடு போலத்தான். நேரடியாக பணம் போட்டவர்கள், தமது உழைப்பை தந்தவர்கள் என்று பலரும் இதில் முதலீடு செய்திருக்கிறோம்.'

'வளர்ச்சிக்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஏணி மாதிரி அல்லது மாடிப்படி மாதிரி. ஏணி மாதிரியில் வளர்ச்சி ஒரே சாய்வுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும். வேகமாக வளரலாம், எப்போதும் அழுத்தத்துடனேயே இருக்க வேண்டி வரும், கீழே விழுந்தால் ஒரே அடியாக தரையில்தால் விழ வேண்டியிருக்கும்'

'மாடிப்படி முறைமையில் ஒரு படியில் ஏறியதும் கொஞ்ச தூரம் அதே தளத்தில் நடந்து விட்டு அடுத்த படியில் ஏற முயற்சிக்க வேண்டும். கிட்டத்தட்ட மலையேறும் படி போல் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் ஏறும் வீதம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு படியில் ஏற முயற்சிக்கும் போது தவறி விட்டால் ஏணியிலிருந்து விழுவதைப் போல தரைக்கு வந்து விடாமல், கீழ்ப் படியில்தான் போய் விழுவோம். இன்னொரு முறை முயற்சித்து ஏறிக் கொள்ளலாம்'

'நாம் மலைப்படி முறையைப் பின்பற்றாமல் ஏணி முறைமையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனங்களுக்கு நிவதி செய்து கொடுத்து சம்பாதிப்பது என்பது நமது குறிக்கோள் கிடையாது. நிறுவனங்களை இணைக்கும் மென்பொருள் சேவைதான் நமது நீண்ட கால குறிக்கோள். மலைப்படி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தால் படியிலேயே இளைப்பாற ஆரம்பித்து விடும் அபாயம் இருக்கிறது. நாம் ஏறிக் கொண்டேதான் இருக்க வேண்டும்'

'நிறுவனத் தலைவரின் வழிகாட்டலில்தான் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தமது நேரத்தைத் திறமையை தலைவரின் வழிகாட்டலில் செலவிடுகிறார்கள். அந்த வழிகாட்டல் சரியான திசையில் இருக்க வேண்டும், அதிலிருந்து சரியான பணபலன்கள் கிடைக்க வேண்டும் என்ற பொறுப்பு நிறுவனத் தலைவருக்குத்தான்.'

'நிறுவனத்தின் வருமானத்தை எடுத்துக் கொண்டு போய் பிற இடங்களில் சேமித்து வைத்திருப்பது இங்கு நடக்கவில்லை'

'பிற வழிகளில் சம்பாதித்து சேமித்து வைத்ததை எல்லாம் முதலீடாகப் போட்டிருக்கிறோம். நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி கடனாகவும், முதலீடாகவும் போட்டிருக்கிறோம். கடனட்டையில் கடன் வாங்கிக் கூட செலவழித்திருக்கிறோம்'

'எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து விட வேண்டும், எப்படியானாலும் ஆதாயம் அதிகப்படுத்தி விட வேண்டும் என்று சத்யமின் ராமலிங்க ராஜூ தனக்குத் தெரிந்த வழிகளில் தகிடுதத்தங்கள் செய்து கொண்டிருந்தார். எச் சி எல்லின் சிவ்நாடார் பணம் வாங்கி வர வேண்டிய விற்பனையாளர்கள் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவாராம், போட்டியாளர்களை விட தான் குறைந்து விடக் கூடாது என்று கொடுக்க வேண்டிய பணத்தை தாமதப்படுத்துகிறார்.'

'அதுதான் நமது தொழில் செய்யும் சூழல். அவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் பின்பற்றும் அதே வழிகளில் நாமும் பணம் ஈட்டுவது குறித்து நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.'

'தர வேண்டிய பணத்தைக் கொடுத்து விடும் விவாதம் வந்த போது நினைவுப் பிறளல் அல்லது வேறு ஏதோ காரணத்தினால், அதிகமான பணத்தைக் கொடுத்து விட இருந்தார். அதை சரி செய்ய வேண்டுமா என்று ஒரு கணம் தயங்கி குறைந்த பணம்தான் தர வேண்டும் என்று சொல்லி விட்டேன். அந்தக் கணத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?'

'நான் அவரது தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாகவோ, ஓரிரு நாட்களிலோ உண்மை வெளியில் வந்து உறவு பின்னப்பட்டிருக்கும் என்ற நடைமுறை ஒரு புறம் இருக்க, நம்முடைய தர்மப்படி எதிராளியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, உண்மையை பேச வேண்டும் என்பது நடைமுறை சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதுதானே!'

'பெரிய குழுமம், காலணி தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலை, கோடிக் கணக்கில் வருமானம், சொத்துக்கள், ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் என்ற நிறுவனங்களை விட 20 பேர் வேலை செய்யும் நமது நிறுவனத்தின் கடை கலகலப்பாக, வருபவர்களும் உள்ளிருப்பவர்களும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது'

'பொருள் ஈட்டுதல் என்றால் பணத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாறுவது மட்டும் இல்லை. உண்மையான வளத்தை உருவாக்குதல் என்ற பொருளில் பார்த்தால் நமது குழுவினருக்கு வாழ்வில் உண்மையான வளத்தை உருவாக்குகிறோம்.'

பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். மாதம் பெரும் தொகை சம்பளம் வாங்குகிறார். போன தடவை சென்னைக்கு வந்திருந்த போது 'நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்கிறார்கள். என் அருகில் வேலை பார்ப்பவருக்கு வேலை இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். ஒரு நாள் காலையில் அவருக்கு சொன்னார்கள். மதியத்துக்குள் கணக்கு எல்லாம் முடக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்'

'வேறு இடத்தில் வேலை கிடைக்காது என்று இல்லை, ஆனால் இது போல பேக்கேஜ் கிடைக்காது'

'இதைச் சொன்ன போது அவரது கண்ணில் தெரிந்த பயம், முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் எந்த மனிதருக்கும் வரக்கூடாத ஒன்று. மாதம் பெரும் தொகை வாங்கிச் செலவழிக்கும் நிலையை இழந்து விடுவோமோ என்ற பயம் மனிதரை இழிந்து போகச் செய்யும் பயம். முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அவலம் இது. அந்த அவலத்துக்குள் நாங்களும் போக மாட்டோம். '

Saturday, January 17, 2009

multitasking - பல்செயல் வன்மை

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல வேலைகளை செய்வதை multitasking என்று குறிப்பிடுகிறார்கள். கணினித் திரையில் ஒரு தத்தலில் மின்னஞ்சல், இன்னொன்றில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆவணம், இன்னொன்றில் எழுதிக் கொண்டிருக்கும் நிரல், நான்காவதில் நிரலை சரிபார்க்கும் செயலி, ஐந்தாவதில் நண்பர் ஒருவருடன் இணைய அரட்டை என்று வைத்துக் கொண்டு இதிலிருந்து அதற்கு தாவுவது சிலருக்கு வாடிக்கை. எனக்கு அந்தப் பழக்கம் நிறையவே உண்டு.

சாப்பிடும் போது புத்தகம் படித்துக் கொள்வேன். பல் தேய்க்கும் போது, கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது நாளிதழ் படித்துக் கொண்டிருப்பேன். பேருந்தில் பயணம் செய்யும் போது படித்துக் கொண்டிருப்பேன். வீட்டை ஒதுங்க வைக்கும் போது, துணி துவைக்கும் போது ஏதாவது பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வேலையிலும் கையை வைத்துக் கொண்டிருப்பேன்.

multitasking செய்வதை ஒரு பெருமையாக வைத்திருப்பார்கள் மூளையால் வேலை செய்பவர்கள். சதாவதானி, தசாவதானி என்று ஒரே நேரத்தில் முறையே 100, 10 செயல்களை செய்யக் கூடியவர்களும் உண்டு. நான்கைந்து செயல்களுக்கு தாவிக் கொண்டிருப்பது பலருக்கு பழக்கமாக இருக்கிறது.

அதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்து பழக ஆரம்பித்தேன். பல் தேய்க்கும் போது பல் தேய்ப்பு மட்டும்தான். எண்ணக் கோர்வை வேறு எங்காவது போனால் அதை நூல் பிடித்து திருப்பி நிகழ்காலத்துக்குக் கொண்டு வர வேண்டும். சாப்பிடும் போது சாப்பாட்டில் மட்டும்தான் கவனம். சமைக்கும் போது சமையலில் மட்டும்தான் கவனம். கையில் புத்தகமோ நாளிதழோ இருக்காது.

நாளிதழ், புத்தகம் படிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி சரியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும். தூங்கப் போகும் போது புத்தகம் எடுத்துப் போகக் கூடாது. அலுவலகத்துக்கு நடந்து செல்லும் போது வேறு எதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. கண்ணில் படும் ஏதாவது காட்சியினால் எண்ணங்கள் தூண்டப்பட்டு கடந்த காலை நினைவுகளுக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டாலும் அதை உணர்ந்ததும் என்ன வரிசையில் அப்படிப் போனோம் என்று தடம் பிடித்து நடக்கும் பாதையை அவதானிப்பது மட்டும் செய்ய வேண்டும்.

தியானம் என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. வாழும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தில் இருப்பதாக மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுதான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பாடம். பள்ளிப் பருவத்தில் வீட்டில் 'அறிந்ததனின்றும் விடுதலை' என்று அட்டையில் பிசாசு போல கிருஷ்ணமூர்த்தி இருக்கும் புகைப்படம் போட்டு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று கிடந்தது. எது கிடைத்தாலும் முக்கி முக்கி படித்து முடித்து விடும் என்னால் கூட அதில் புகுந்து படித்து விட முடியவில்லை. அதன் பிறகு கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில மூலத்தில் சில நூல்களை பிடித்து கொஞ்ச கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். மிகவும் தூக்கம் வரவழைத்து விடக் கூடிய நடை. மிகவும் ஆழமான தத்துவம். அதைப் புரிந்து கொண்டு விட்டால் அவரது மற்ற நூல்களைப் படிக்கத் தேவையில்லை.

நிகழ்காலத்தில் மட்டும் வாழ வேண்டும். கடந்த காலம் என்று பிணத்தையும், எதிர்காலம் என்ற மாயையும் சுமந்து கொண்டிருந்தால் மனம் துன்புறத்தான் செய்யும். Just Be. அதை புத்தகம் புத்தகமாக, பிரசங்கம் பிரசங்கமாக விளக்கியிருப்பார். அவரது விளக்கங்களில் மனம் மாறினாலும், முற்றிலும் நிகழ்காலத்தில் வாழ்வது என்பது உடனேயே செய்து விடக் கூடியது இல்லை.

நன்கு நடந்து பழக வேண்டும் என்று மனிதர்களுக்குச் சொல்வது எளிது. குழந்தை ஒன்று முதலில் தவழ்ந்து, அதன் பிறகு தத்தி நடந்து, அதன் பிறகுதான் நடக்க முடியும். ஆரம்பத்திலேயே Just Be என்றால் எதுவும் வேலைக்காகாது.

ஓஷோ என்ற ரஜ்னீஷ் சாமியார் கிருஷ்ணமூர்த்தியை கிண்டலடிப்பார். அவரது பாடங்கள் படிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் எளிதானவை. 'சாப்பிடும் போது திட உணவுகளை திரவம் போலவும், திரவ உணவுகளை திட உணவு போலவும் வாயில் ஆக்கி சாப்பிட வேண்டும் என்பார். திட உணவை நன்கு சவைத்து, திரவமாக்கி விழுங்க வேண்டும். திரவ உணவை திட உணவை சவைப்பது போல வாயில் சுழற்றி விழுங்க வேண்டும். அப்போதுதான் உணவின் சுவையையும் குணத்தையும் நன்கு உணர்ந்து சாப்பிட முடியும்.' இது போல சின்னச்சின்ன எளிதில் புரியக் கூடிய வழிகளை நூற்றுக் கணக்கில் சொல்லிக் கொண்டே போவதில் ஓஷோவின் பாடங்கள் எளிதில் பின்பற்றும்படி இருக்கும்.

Saturday, December 20, 2008

பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (3) - ஆழிப் பேரலை

2004 டிசம்பரில் சுனாமி வந்த அன்று ஞாயிற்றுக் கிழமை. அந்த நேரத்தில் வாரத்துக்கு 7 நாட்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஏபிஎன் அம்ரோ வங்கியின் சென்னையிலிருந்து சேவை அளிக்கும் பிரிவில் பணி புரிபவர்களுக்கு சீன மொழி வகுப்பு. அதை முடித்ததும் மாலையில் வாணியம்பாடியில் வகுப்பு. திங்கள் கிழமை காலையில் வாணியம்பாடியில் அடுத்த வகுப்பு. ஞாயிறு நேரத்தில் வாணியம்பாடி போய்க் கொண்டிருக்கும் பேருந்தில். வேலூர் பேருந்து நிலையத்தில் சுனாமி சிறப்பு செய்தி மலராக தினமலர் எல்லோருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். (சனி ஞாயிறு குழப்பம் சரி செய்யப்பட்டது - நன்றி முகம்மது இஸ்மாயில்)

2005ல் நுழைந்ததும் வாடிக்கையாளர் எண்ணிக்கை நன்றாகவே கூடியிருந்தது. வருமானம் இன்னும் இழுபறியாகவே இருந்தது. குழந்தை நடக்க ஆரம்பித்து விட்டிருந்தது, ஆனால் இன்னமும் கால்களில் பலமில்லை. அவ்வப்போது தடுமாற்றம்தான்.

நண்பர்கள் சிலருக்கு நிலைமையை விளக்கி, 'நான் தனியாக சமாளிக்க முடியவில்லை. சந்தையில் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. நீங்களும் சேர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்' என்று மின்னஞ்சல் அனுப்பி வேண்டினேன். ஒரு நண்பர் ஆர்வம் காட்டினார். நெய்வேலியிலிருந்து பல முறை அலுவலகத்துக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தார்.

அவரது முயற்சியில் குழுவினரின் எண்ணிக்கை வேறு திசையிலிருந்து வளர ஆரம்பித்தது. ஆரம்ப குழு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு பணிக்குப் பிறகு இரண்டு பேரும் விலகி விட்டிருந்தார்கள். சந்தைப்படுத்தலில் நல்ல அனுபவம் படைத்த அந்த நண்பர் புதிய வாடிக்கையாளர்களை அணுகுதல், புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருதால் என்று கவனத்தைத் திருப்பினார். கூடவே அவரது நண்பர்கள் மூலம் முதலீடு பெறவும் முயற்சி செய்தார்.

பெங்களூரில் ஒரு தோல் ஆடை நிறுவனம், சென்னை, ராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருச்சியில் செயல்படும் நிறுவனம் என்று வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது. வாணியம்பாடியில் முதல் வாடிக்கையாளரின் மூலம் அடுத்த இரண்டு வாய்ப்புகள் வந்தன. ராணிப்பேட்டை, வாணியம்பாடி, சென்னை பல்லாவரம் என்று கூட்டங்கள் ஏற்பாடு செய்தோம். சுறுசுறுப்பாக வளர்ச்சிக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

அலுவலகம் அந்த அத்துவானக் காட்டில் இருப்பது சரிப்படாது என்று வேறு இடம் தேடினார். வளசரவாக்கத்தில், பெரிய ஒரு வீட்டில் மாறிக் கொண்டோம். குழுவினரின் எண்ணிக்கையும், செலவுகளும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே இருந்தது. வாடிக்கையாளர், வருமான வளர்ச்சியை விட செலவுகள் ஒரு படி முன்னதாகவே போய்க் கொண்டிருந்தன.

நண்பரின் கல்லூரித் தோழர் சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்தார். அவரும் அவரது அண்ணனும் முதலீடு செய்வார்கள் என்று பேச ஆரம்பித்தோம். பல முறை சந்தித்து, விபரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பங்குகளை வாங்கிக் கொண்டு பணம் தருவதாக ஒத்துக் கொண்டார்கள்.

2005ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கின் போது, வீட்டின் முன்பு தண்ணீர் நிரம்பியது. அடுத்த மழையில் ஆலப்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு, வளசரவாக்கம் அலுவலகத்தின் அருகில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது. தண்ணீர் அலுவலகத்துக்குள் வரும் இரவில் கண் மூடாமல், தண்ணீரைக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் எல்லாப் பொருட்களையும் முதல் மாடியில் இருந்த வீட்டு உரிமையாளரின் பகுதிக்கு மாற்றி வைத்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அலுவலகம் செயல்படாமல் எல்லோரும் வாடிக்கையாளர் இடங்களிலேயே பணியாற்றினோம்.

வீட்டில் சிக்கல் முற்றி, சண்டை பெருத்து டிசம்பர் மாதத்தில் நான் அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டிருந்தேன். நண்பன் நங்கநல்லூரில் தனது வீட்டில் தங்கிக் கொள்ளச் சொல்ல அங்கு மாறிக் கொண்டேன். நிறுவனத்தில் பணிக்குக் குறைவே இல்லை இப்போது. சீனமொழித் தொடர்பான சேவைகளை நிறுத்தி விட்டேன். தமிழ்க்கணினி வேலைகளிலிருந்தும் 2005லேயே ஒதுங்கியிருந்தேன்.

பணம் வருவது இழுபறியாகவே இருந்தது. 2006 ஜனவரியில் தோல் நிறுவனத்தில் நல்லபடியாக வேலை போகும் நம்பிக்கையில் அதே நிறுவனத்தின் காலணி மென்பொருளும் செய்யச் சொன்னார்கள். அவரிடமே கடன்/முன்பணமாக கணிசமாகக் கேட்டு வாங்கிக் கொண்டோம். முதலீடாக கணிசமான தொகைகளும் உள்ளே வந்தன.

புதிய கணினிகள், மேசைகள், நாற்காலிகள், சரியான நேரத்துக்கு சம்பளம் என்று வருவதும் போவதும் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் இன்னும் அதிகமாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் எல்லோருக்கும். முதலீட்டாளர்களும் செலவுகளைக் குறைப்பதை விட, வருமானத்தைப் பெருக்குவதைப் பார்க்க வேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

புதிய காலணி நிறுவன வேலைக்கு தரவுத்தளத்தை புது வடிவத்தில் செய்வது என்று ஆரம்பித்தோம். அந்த வேலையில் பல மாதங்கள் இழுத்தடிப்பு நடந்து விட்டது. வாணியம்பாடியில் ஒரு வாடிக்கையாளரின் பயன்பாட்டைப் பார்த்து புர்கினா பாசோவைச் சேர்ந்த தோல் நிறுவனத்தின் நம்ம ஊர் பிரதிநிதி தொடர்பு கொண்டார். புர்கினா நிறுவனத்தின் உரிமையாளர் சென்னைக்கு வரும் போது அவரைச் சந்தித்து விற்பனை ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தோம். அவர்கள் பணியை ஏற்றுக் கொண்டோம்.

ஏற்கனவே பயன்படுத்தும் நிறுவனங்களைப் பார்த்து நம்மை அணுகும் வாடிக்கையாளர்கள் ஒன்றிரண்டாக சேர்ந்து கொண்டே இருந்தது.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கி வளரும் வழியில் சமாளிக்க முடியாது என்ற வழிகாட்டல் வந்தது. தவறான பாதையில் நடந்து கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்வது எனக்கு கொஞ்சம் எளிதாகவே வந்து விடுகிறது. நண்பருக்கு அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வது முடியவில்லை. 2006ம் ஆண்டின் இறுதியில் அவர் விலகிக் கொள்வதாகச் சொல்லி அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தோம்.

வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 15ஐத் தாண்டியிருந்தது. வாடிக்கையாளர் பட்டியலும் 20ஐத் தாண்டி விட்டிருந்தது. தனியார் பங்கு நிறுவனமாக வழிகாட்டுபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்திருந்தது. பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் மேலும் மேலும் அதிக சேவை வழங்கி, ஆதாயம் உருவாக்கி, நமது வருவாயையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று வழிமுறைக்கு நகர்ந்தோம். குழந்தை பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை வாடிக்கையாளர்கள் நம் மீது அவ்வளவாக அழுத்தம் செலுத்தவில்லை. லட்சக் கணக்கில் பணம் பெற ஆரம்பித்ததும், அவர்களின் வேலைத் தேவைகளும் இன்னும் இறுகலாயின. வேலை செய்யும் முறை, ஆவணப்படுத்தும் முறைகள், தகவல் தெரிவிக்கும் முறைகள், சந்திப்புகள், விவாதங்கள் என்று மேலும் மேலும் மேம்படுத்த வேண்டியிருந்தது.

2005ம் ஆண்டின் இறுதியிலிருந்து தமிழ் வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் கிடைத்து 2006ம் ஆண்டில் முழுவீச்சில் எழுத, பங்கு பெற ஆரம்பித்திருந்தேன். அதன் மூலம் கிடைத்த அறிமுகம் ஒரு நண்பர். அவர், இன்னொரு இயக்குனர் பேரும் பெங்களூரிலிருந்து தீவிரமாக வழிகாட்டலைத் தர ஆரம்பித்திருந்தார்கள். வெற்றிகரமான மென்பொருள் நிறுவனங்களில் பின்பற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள்.

2006ம் ஆண்டில், கல்லூரி இறுதியாண்டு திட்டப்பணி செய்ய குழுவாக வந்த மாணவர்கள், நிரல் கோப்புகளில் மாற்றங்களை கையாள சிவிஎஸ்சிலிருந்து சப்வெர்சனுக்கு மாறியது, வாடிக்கையாளர் தேவைகளுக்காக செய்யும் பணிகளை பதிந்து வைத்துக் கொள்ள மென்பொருள் கருவி பயன்படுத்துதல் என்று பல மேம்பாடுகள்.

நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகளில் விட்டுப் போகிறவர்கள், சில மாதங்களிலேயே விட்டுப் போகிறவர்கள் என்ற நடைமுறை பெரும் அவதியாக இருந்தது. பேசியதில் சம்பளத்தின் அளவை ஏற்றுங்கள் என்று ஒரு வழி காட்டினார். 2007 ஜூலை, தொடர்ந்து அக்டோபர் என்று சம்பள விகிதங்களை இரு முறை இரட்டிப்பாக்க முடிவு செய்தோம். வருமானமே போதாத நிலையில் அதிக சம்பளமா! என்று யாரும் கேட்டு விடவில்லை.

குழுவை வலுப்படுத்த, வலுவான குழு தொடர்ந்து பணி புரிய அது அடிப்படைத் தேவை. நண்பர்களிடம் கடன் வாங்கி சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தோம். வாடிக்கையாளர்களிடம் வரும் பணத்தை வைத்து கடனைத் திருப்பலாம் என்று திட்டம். இதற்கிடையில் முதலீடு செய்ய விரும்புவதாகச் சொல்ல, அடுத்த சுற்று பங்குகளை வினியோகிக்க ஏற்பாடு செய்தோம்.

கடன் கொடுத்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு கடன் தொகை, வட்டித் தொகை இரண்டையும் சேர்த்து ஈடாக பங்குகள் கொடுப்பது என்று திட்டம் தீட்டி அவர்களிடமும் பேசியதில் யாரும் மறுப்பு சொல்லவில்லை. அப்படிக் கேட்கும் நம்பிக்கையையும் நிறுவனத்தின் வளர்ச்சி அளித்தது. 2007ம் ஆண்டில் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு உறுதியான சேவை வழங்கி அதிகப் பணம் பெறும் திசையில் முயற்சிகளைத் திருப்பினோம். அலுவலகத்தில் வேலை செய்யும் வசதிகளும் திடப்பட்டிருந்தன. சம்பள விகிதங்கள் ஓரளவு மதிப்பாக இருக்க, பணம் போதவில்லை என்று வேலையை விட்டு விட்டுப் போகிறவர்கள் நின்று போயிருந்தார்கள்.

2007ம் ஆண்டின் மத்தியில் தோல் துறையில் பணி புரிந்து கொண்டிருந்த நண்பர் நிறுவனத்தில் சேருவதாகப் பேசி சேர்ந்து விட்டார். அவரது அனுபவமும், நுணுக்கமும், நடைமுறை வழிகாட்டல்களும், வாடிக்கையாளருக்கு அளிக்கும் சேவையில் பல மடங்கு உயர்வு கொண்டு வந்தது. பல மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த நடைமுறைப்படுத்தும் பணிகளில், சரியான இடங்களில் கட்டுப்பாடுகளை புகுத்தி எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைத்தார்.

இப்போது இன்னும் உயர் நிலையில் வரவை விட செலவு அதிகமாகப் போய்க் கொண்டிருந்தது. நண்பரின் கையிருப்புகளை கடனாக நிறுவனத்தில் கொண்டு வந்தார். முதலீடு செய்தவர்களிடமும், மற்ற நண்பர்களிடமும் அவ்வப்போது கைம்மாற்றாக வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.

Friday, December 19, 2008

பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (2)

குழந்தை கண்களைத் திறக்காமல் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் தூங்கிக் கொண்டே இருக்கும் நாட்கள் போய், அடுத்த நிலையில் தவழ வேண்டும். 2002ம் ஆண்டு டிசம்பர் வாக்கில் சேமிப்புகள் கரைந்து விட்டன. சேமிப்புகள் என்றால் சீனாவில் வேலை செய்யும் போது வங்கியில் போட்டு வைத்த வைப்புத் தொகைகள், அப்பா அம்மா ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தில் கொடுத்த பங்கு என்று எல்லாவற்றையும் செலவழித்து விட்டேன் (டோம்). இப்போது ஒரு திருப்புச் சந்தியில்.

'வங்கியில் கேட்டுப் பார்க்கலாமே' என்று நண்பன் சொல்ல, நிறுவனத்தின் கணக்கு வைத்திருந்த சௌராசுடிரா வங்கி மேலாளரை சந்திக்க முயற்சித்தேன். 'நம்ம கிளையில் நகை வைக்க பாதுகாப்புப் பெட்டகம் பற்றி விசாரிச்சாங்களே அவங்க கணவன்தான்' என்று அறிமுகப்படுத்தினார் உதவி மேலாளர். ஒரு ஆவணத்தில் அடுத்த மாதங்களில் வருமானம், செலவின உத்தேசங்களை போட்டு எடுத்துப் போயிருந்தேன். அதற்கு முன்பாக தொழில் விபரங்கள், எப்படி வாடிக்கையாளர்களை கவரப் போகிறோம் என்றெல்லாம் குறிப்புகள்.

அவர் நேராக எண்களுக்குள் மட்டும் புகுந்தார். ஐந்து லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தேன். 'கடன் கொடுப்பதற்கு 3 காரணிகளைப் பார்ப்பேன். கடன் கேட்பவரின் திருப்பிக் கொடுக்கும் திறமை, தொழிலின் வருமான வாய்ப்புகள், மூன்றாவதுதான் சொத்துப் பாதுகாப்பு. அப்படிப் பார்த்ததில் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று மரியாதையாக தெளிவாக அனுப்பி வைத்து விட்டார். ஏதாவது பிணைச் சொத்து இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள் என்று அவதூறு சொல்வதற்கு வழி இல்லை.

அடுத்த நிலையில் உறவினர்கள், நண்பர்களிடம் கேட்பது என்று முடிவு. நண்பன் ஒரு 30000 ரூபாய் கொடுத்து தொடங்கி வைத்தான். அப்பா/அம்மா, அத்தான்/அக்கா, அண்ணன் என்று சில லட்சங்கள் திரட்டி விட்டேன். கணினிகள், மடிக்கணினிகள் வாங்கியது, 2003ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்து தோல் கண்காட்சியில் பங்கு பெற்றது எல்லாம் அந்தப் பணங்களைப் பயன்படுத்திதான்.

அந்தக் கண்காட்சியின் போது ஒரு இடத்தை எடுத்து படம் காட்டும் கருவியில் எப்படி நிறுவனம் தோல் துறைக்குச் சேவை அளிக்கும் என்று விளக்கிக் கொண்டிருந்தேன். நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். எதுவும் வாடிக்கையாளராக கிடைத்து விடவில்லைதான். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்பு, ஸ்லாஷ்டாட் போல விவாதக் களம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தரவுத்தளம் வடிவமைத்து நிரல் எழுதி இணைய வழங்கியில் போட்டு விட்டேன். தினமும் தோல் துறை தொடர்பான செய்திகளை இணைய சுட்டியுடன் போட்டு அது தொடர்பான கருத்துக்களை போடும் வசதி செய்து கொடுத்திருந்தேன். அதை மாணவர்களிடமும், துறையில் பணிபுரிபவர்களிடமும் பரப்புவதற்கான முயற்சிகளையும் கண்காட்சியின் போது செய்ய முடிந்தது.

2003ம் ஆண்டில் வாடிக்கையாளர் பட்டியல் கிடைத்திருந்தது. ஏதோ வருமானமும் மாதா மாதம் கிடைக்க ஆரம்பித்திருந்தது. எல்லாமே இணைய வழங்கியில் பயன்படுத்தும் பயனர்கள்தாம். ராணிப்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ளே புகவே முடியவில்லை. இணைய இணைப்பு பரிதாபமாக இருந்தது. வருமானத்துக்காக சீன மொழி கற்றுக் கொடுத்தல், சீன மொழியில் நிறுவன ஆவணங்களை செய்து கொடுத்தல் என்று உப தொழில் செய்து வந்தேன். அதில் மாணவர்களும், தொடர்புகளும் கிடைத்தன. பெரும்பாலும் தோல் துறையைச் சார்ந்தவர்களே வாடிக்கையாளராகக் கிடைத்தார்கள்.

ஆண்டின் நடுப்பகுதியில் திரட்டிய காசு கரைந்து மீண்டும் நெருக்கடி. அண்ணா நகரில் வணிக நிதி உதவி நிறுவனம் என்ற விளம்பரத்தைப் பார்த்து தொலைபேசினால் வரச் சொன்னார்கள். ஏதோ ஒரு ஒத்திசைவில், கோயமுத்தூரில் இருந்து ஏதாவது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து தொழிலில் இறங்க விருப்பம் தெரிவித்தவருடன் சேர்த்து விட்டார்கள். அவரும் நாகர்கோவில் காரர்.

அவரை அழைத்து வந்து வீட்டில் காட்டினேன். அவருக்கும் ஏதாவது வேலையில் இருந்து விட வேண்டும் என்று அழுத்தம். வீட்டில் திருமணம் செய்து வைக்க அவசரப்படுத்துகிறார்கள். அவரது அப்பாவிடம் பணம் வாங்கி முதலீடு செய்யப் போகிறார். 5 முதல் 10 லட்சம் போடலாம் என்று சொன்னார். அவரது அப்பா சென்னை அசோகா விடுதியில் வந்து தங்கியிருக்கையில் போய்ப் பார்க்கப் போனோம். 5 லட்ச ரூபாய் தருவதாக ஒத்துக் கொண்டார். நிறுவனத்தில் பங்கு அளிக்காமல், கடனாக வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். ஏதோ ஒரு காரணத்தால் அவரை பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ள மனது வரவில்லை.

நாகர் கோவில் போய் அப்பாவையும் கூட்டிக் கொண்டு போய் 5 லட்ச ரூபாய் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்தோம். 'நிறுவனத்தை வீட்டிலிருந்து நடத்தக் கூடாது, தனியார் பங்கு நிறுவனமாக மாற்ற வேண்டும்' என்று திட்டமிட்டுக் கொண்டோம். கடனுக்கு பணம் திரும்பக் கொடுப்பது ஒரு ஆண்டுக்குப் பிறகு ஆரம்பிக்க வேண்டும்.

அரும்பாக்கத்தில் கடைத்தெருவில் ஒரு அலுவலகம் பிடித்து, தரையில் மர உரிப்பு ஒட்டி, ஜன்னலில் வெனிசியன் திரை எல்லாம் போட்டு புதிய நாற்காலிகள் மேசைகள் வாங்கி போய் விட்டோம். வீட்டின் வாடகையைக் குறைக்க குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அருகிலேயே 2000 ரூபாய் குறைவில் மாறிப் போய் விட்டோம். செலவழிப்பது பெரிதும் குறைந்து போயிருந்தது. அடுத்தவர் பணத்தைக் கடன் வாங்கி நமது விருப்பப்படி செலவழிக்க முடியுமா? குழந்தைகளின் படிப்புக்கும், உணவுத் தேவைகளுக்கு மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்று முடிந்தது. அதனால் உரசல்கள் தீவிரமடைந்தன.

வாங்கிய 5 லட்ச ரூபாயில் மீதியிருந்த பணத்தில் 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கேற்பு, 2003ம் ஆண்டு டிசம்பரில் சீனா போய் வருவது என்று திட்டமிட்டுக் கொண்டோம். 2004ம் ஆண்டில் சீன மொழி மாற்றுச் சேவைகள் வருமானத்தைத் தந்து கொண்டிருக்க, தமிழ்க் கணினி என்று திட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

சீனாவுக்குக் கிட்டத்தட்ட 70000 ரூபாய்கள் செலவழித்துப் போய் வந்தேன். ஒரே ஒரு வாடிக்கையாளரை உருப்படியாகப் பார்க்க முடிந்தது. தொடர்பு கொண்ட மற்றவர்கள் யாரும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவ்வளவு காசு செலவழித்ததற்கு ஒரே பலன், நாம் திட்டமிடும் சேவைக்கு வாடிக்கையாளர்களிடையே ஆர்வமிருக்கும் என்று தெரிய வந்ததுதான்.

நண்பர்கள் இரண்டு பேருடன் போய் வந்தேன். திரும்பும் வழியில் இணையத்தில் 'பயன்பாட்டை வைத்திருந்தால் யாரும் சேர மாட்டார்கள். வாடிக்கையாளரது கணினியிலேயே மென்பொருள் இருக்கும் படி சேவை வழங்கு. நானும் அதை வாங்கிக் கொள்கிறேன். மாதா மாதம் பணத்தையும் தவறாமல் வாங்கிக் கொள்.' என்று நண்பன் சொல்ல, கடைசியில் கசப்பான அந்த நடைமுறையை புரிந்து கொண்டு, அப்படியே சேவை வழங்கும் படி மாறிக் கொண்டோம்.

நண்பனின் நிறுவனம், அதைத் தொடர்ந்து முதல் வாடிக்கையாளர் என்று வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் தெரிந்த ஒருவரின் நண்பரின் நிறுவன அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் மாதக் கட்டணத்துக்கு வேலை செய்ய பேசிக் கொண்டோம். அந்த ஆண்டு முழுவதும் இந்த நிறுவனங்களுக்குப் பணி புரிந்து தோல், வேதிப் பொருட்கள், வாங்குதல், சரக்குக் கையாளுதல், உற்பத்தி விபரங்கள், போன்ற பகுதிகள் உருவாகி வந்தன. ராணிப்பேட்டை, பாண்டிச்சேரி, கூடுவாஞ்சேரி என்று நாலாபுறமும் போய் வர வேண்டும். அலுவலகத்திலேயே ஒரு சீன மொழி வகுப்பு, சென்னை அசோக் நகரில் ஒரு வகுப்பு என்று அந்தப் பக்கமும் வளர்ந்தது.

2004ம் ஆண்டு கோடையில் நண்பனுடன் இரு சக்கர வண்டியில் கடற்கரைச் சாலையில் தமிழகத்தின் தென் கோடியைத் தொட்டுத் திரும்பி வந்தோம். அந்த நண்பனிடம் பணம் வாங்கி கடனை வட்டியுடன் திருப்பி விட்டேன். நண்பன் பணம் வந்த போது வந்தால் போதும் என்று கொடுத்திருந்தான். அந்தப் பணத்தில் மீதியும் வைத்து வரும் சொற்ப வருமானத்தையும் வைத்து கொஞ்ச நாள் ஓடியது. வீட்டுச் செலவுகளில் குறையே ஏற்பட முடியாமல் இருந்தது. எதை எதையோ புரட்டி நிறுவனத்தையும் வீட்டுச் செலவுகளையும் சமாளிக்க முயன்று கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ஒவ்வொருவராக அணியினரின் எண்ணிக்கையும் பெருகி விட்டிருந்தது. ஏழெட்டு பேராகி விட்டிருந்தோம். இரண்டு ஆண்டு அனுபவம் பெற்று விட்டிருந்தார்கள். வேறு வேலை பார்ப்பதாகச் சொன்னார். அந்த ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கு பெறுவதற்கு வழியே தெரியவில்லை.

அரும்பாக்கம் அலுவலகத்தை விட்டு மிகக் குறைந்த வாடகையில் போரூருக்கு அருகில் மதனந்தபுரம் என்ற கிராமத்தில் ஒரு கடையின் மாடியில் நகர்ந்தோம். 10000 ரூபாய் முன்பணம் கொடுப்பதற்குக் கூட அப்பா பணம் அனுப்பித்தான் நடந்தது. எல்லாமே இறுகிப் போய் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. வாணியம்பாடியில் ஒரு குழுவினருக்கு சீனமொழி கற்றுக் கொடுக்கப் போய்க் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு காலணி நிறுவனத்துக்கு சீன மொழி மாற்றம் செய்து கொடுத்ததன் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருந்தது.

இடையில் ஐஎஸ்ஓ தணிக்கைக் குழுவினரில் துறை வல்லுனராக ஓரிரு நிறுவனங்களின் அறிமுகம் கிடைத்தது.

டிசம்பர் மாதத்தில் நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம், ராணிப்பேட்டையின் பெரிய வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத் தலைவரைப் பார்க்கப் போன போது, முன்பணமாகத் தாருங்கள் என்று கேட்டு விட, 5000ம்தான் கொடுப்பேன் என்று காசோலை ஒன்றைக் கொடுத்து விட்டார். திக்குமுக்காடிப் போன உணர்வு. எல்லாம் தொலைந்து போய் நம்பிக்கை அற்றுப் போயிருந்த நிலையில், மழையின்றி வாடி உலர்ந்து போன செடியின் மீது மழைத்துளி விழுந்தது போல இருந்தது அந்த 5000 ரூபாய் காசோலை.

2004 ஜனவரியில் காலணி நிறுவனத்திலும் பணியை ஆரம்பிக்கச் சொல்லி விட்டார்கள். சீன மொழிக் கற்றுக் கொடுத்த வாணியம்பாடி நிறுவனத்திலும் வேலை ஆரம்பித்து விட்டோம். வாடிக்கையாளர் பட்டியல் வளர்ந்து விட்டது.

பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (1)

இந்தக் குழந்தைக்கு வயது ஏழு ஆகி விட்டது. 2001ம் ஆண்டில் டிசம்பரில்தான் இந்தப் பணித்திட்டத்தில் தீவிரமாக இறங்கி நடைமுறைப்படுத்துவதை ஆரம்பித்தேன்.

இப்படி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் கருக் கொண்டது 2001ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரியில் இருக்கலாம். பிஎல்சி நிறுவனத்தின் சார்பாக செய்து வந்த பணிகள் ஓய்ந்து கொண்டிருந்த சமயம். நிரல் உருவாக்கத்திலும், தமிழ் டாட் நெட் தொடர்ந்த எறும்புகள் குழுமத்திலும் ஆர்வமாக பணி செய்து கொண்டிருந்த சமயம்.

2001 டிசம்பரில் ஆரம்பிக்கும் போது, பெற்றெடுக்க உதவியாக இருந்தது கல்லூரி நண்பன். சீனாவிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இடம் பிடித்து வாழ்க்கையை அமைப்பதற்கு ஓரிரு மாதம் பிடித்தது. செயிண்ட் தாமசு மலைக்கருகில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அருகிலேயே இருந்த அவனுக்கு தொலைபேசி விபரம் சொன்னேன். இங்கே தங்கினால் நிறைய செலவாகும். இன்னொரு நண்பனின் வீட்டில் இப்போது இடம் இருக்கிறது, என்று அவன்தான் ஆலோசனை சொன்னான்.

அடையாறில் வீட்டில் இருந்து கொண்டே வாடகைக்கு வீடு தேடினேன். இந்து பத்திரிகையில் அகர வரிசையில் முதலில் வருவது அண்ணா நகர். வழக்கமான தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளை விட்டு விட்டு தேடினேன். அண்ணா நகரில் இரண்டு வீடுகள் அடையாளம் கண்டு கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை பார்க்கக் கிளம்பினோம். முதல் வீடு புத்தம் புதிதாக வீட்டுக் காரர் ஆர்வமே இல்லாமல் காட்டினார். இரண்டாவது வீடு அமைந்து விட்டது.

நிறுவனம் தொடர்பாக நிரல் உருவாக்க வேண்டும். எறும்புகள் சந்திப்பு ஒன்றுக்குப் போனோம். அடையாறில் இருந்த ஒரு எறும்புகள் உறுப்பினரின் அலுவலகத்தில் நடந்தது. அங்கு ஒருவர். தோல் துறை தொடர்பான பயன்பாட்டை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அவருடன் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தோம்.

வளசரவாக்கத்தில் இருக்கும் வீடு அல்லது போரூரில் இருக்கும் அலுவலகத்துக்கு வாங்க பேசலாம் என்றார். ஒரு நல்ல நாளில் என்னை அடையாறிலிருந்து இரு சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வளசரவாக்கம் நோக்கி அழைத்துச் சென்றான். கிளம்பும் போதே தாமதமாகி விட்டிருந்தது. எனக்கு நேரம் தவறி விடுமோ என்று எரிச்சல். நான்கு முறை தொலைபேசி தாமதமாக வருவதாகச் சொல்லி விட்டேன். 'அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால்தான் இப்படி நேரம் பற்றிக் குறிப்பாக இருக்கிறார்' என்று அப்புறமாகச் சொன்னார்.

அவரது அலுவலகம் ஒரு வீட்டுக்குள் இருந்தது. புதியத் திட்டப் பணிக்காக ஒரு நிறுவனம் உருவாக்கி அதில் 50க்கு 50 என்று பொறுப்பும் உரிமையும் பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.

அவர்கள் நிரல் எழுதிக் கொடுத்து விட வேண்டும். நாங்கள் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய எண்ணங்களை விளக்கினேன். அங்கு நிரல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் விளக்கச் சொன்னார். முதலில் பயனர் மேலாண்மை பகுதியைச் செய்து விடலாம் என்று உடனேயே உறுதி அளித்தார்கள். வளசரவாக்கத்தில் இருந்த ஒரு விடுதியில் மதிய உணவும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

திட்டப்படி, தோல் செய்யும் நிறுவனங்களுக்கு தோல் தேவையை அனுப்பும் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை இணையத்தில் இணைந்து நமது பயன்பாடு மூலம் உள்ளிடுவார்கள். தோல் நிறுவனம் உள்நுழையும் போது புதிதாக வந்திருக்கும் தேவை விபரங்களைத் தெரிந்து கொள்வார்கள். அந்தத் தேவைகளை உற்பத்திக்கு எடுத்து, தயாரான பிறகு வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த விபரங்களையும் இதே பயன்பாட்டில் போட்டு வைப்பார்கள். வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் எத்தனை தேவைகள் அனுப்பியிருக்கிறோம், எவ்வளவு உற்பத்தியில் இருக்கிறது, எந்தத் தேவைக்கு எவ்வளவு தோல் அனுப்பியிருக்கிறார்கள், எவ்வளவு மீதி இருக்கிறது போன்ற விபரங்களை இணையம் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு தோல் நிறுவனத்துக்கு 10 வாடிக்கையாளர்கள் இருந்தால், தோல் நிறுவனம் எல்லா வாடிக்கையாளர்களின் தேவை விபரங்களையும் பயன்பாட்டில் உள்ளிடும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது தேவை விபரங்களை மட்டும் பார்த்துக் கொள்ள முடியும். பயனரைப் பொறுத்து விபரங்களை மட்டுப் படுத்த வேண்டும்.

ஒரு தோல் நிறுவனத்துக்கு இதை விற்று விட்டால், அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அவர் இந்தப் பயன்பாட்டில் மனம் மகிழ்ந்து தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் இதே போல லெதர்லிங்க் பயன்பாட்டின் மூலமாக தனது தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வழி செய்யுமாறு வற்புறுத்துவார். அப்படி அவரது மற்ற விற்பனையாளர்களும் லெதர்லிங்கிலிருந்து பயன்பாட்டுக்கு பதிவு செய்து, வாடிக்கையாளருக்கு விபரங்கள் பார்க்க வழி செய்வார்கள்.

ஒரு வாடிக்கையாளருக்கு பல விற்பனையாளர்கள் லெதர்லிங்க் பயன்பாடு மூலம் தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வசதி கிடைத்திருந்தால், எல்லா விற்பனையாளர்களின் விபரங்களும் ஒரே இடைமுகத்தின் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரியும் படி வசதி செய்து கொடுத்து விட வேண்டும். லெதர்லிங்குக்கான பணம் விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும். வாங்குபவர்கள் கட்டணமின்றி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிக உறுதியான திட்டம். பயன்பாட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் நல்ல வாடிக்கையாளர் சேவை அளித்து தமது தொழிலை பெருக்கிக் கொள்ளலாம். அந்தச் சேவையால் மனம் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள் தாமே முன் வந்து மற்றவர்களுக்கு நமது பயன்பாட்டை பரிந்துரை செய்வார்கள்.

அப்படிப் பரிந்துரை செய்வதற்கான வசதிகளையும் கொடுக்க வேண்டும்.

இவ்வளவு விபரங்களையும் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ ஆட்கள் கிடைத்து விட்டார்கள், வேலையை ஆரம்பித்து விடலாம் என்றுதான் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விட்டு நகருக்குள் சுற்றி வர ஒரு வண்டியும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா நகரின் 9வது பிராதானச் சாலையில் முதல் மாடியில் இருந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து குடிபுகுந்து விட்டேன். மூன்று அறைகள், ஒரு பெரிய முன்னறை, சமையலறை. ஒரு தளத்துக்கு நான்கு வீடுகள் வீதம், நான்கு தளங்கள் இருந்தன. அண்டை அயலாருடன் பழகும் இயல்பு எனக்கு கிடையாது.

அண்ணா நகரின் டிவிஎஸ் விற்பனை நிலையத்துக்குப் போய் வண்டிகளைப் பார்த்தோம். அங்கிருந்த விற்பனையாளர் சரியாகப் பேசிக் கவனிக்கவில்லை. விலையை காசோலையாகக் கொடுத்தால், காசோலை பணமாக மாறிய பிறகுதான் வண்டியை எடுத்துப் போக முடியும் என்று சொன்னதும் எனக்குக் கோபம் வந்து வெளியில் வந்து விட்டேன்.

நண்பர்கள் ஓட்டிக் கொண்டிருந்த சுசுகி சமுராய் வண்டியை வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். 2001ம் ஆண்டில் அந்த தயாரிப்பையே ஓய்த்துக் கொண்டிருந்தார்கள். புதிதாக நான்கு சுழற்சி முறையிலான டிவிஎஃச் விக்டர் அறிமுகப்படுத்த இருந்தார்கள். கடைசியில் நங்கநல்லூரில் இருந்த புளூ பைக் நிறுவனத்தில் வண்டியை வாங்க பதிவு செய்து கொண்டோம். அவர்கள் வண்டி உரிமத்துக்கு ஏற்பாடு செய்ய 2 நாட்கள் பிடிக்க, 2 நாட்களுக்குப் பிறகுதான் வண்டியை எடுத்துக் கொண்டேன். அவர்களும் உடனடியாக வண்டியைக் கொடுத்து விடவில்லைதான்.

வண்டி வாங்கியாச்சு, ஓட்டப் படிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும். கற்றுக் கொடுத்தலில் ஒரே நாளில் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வேக மாற்றிகளைக் கையாளுதல் போன்ற புதிய விபரங்களில் தேர்ச்சி பெற வேண்டும். உரிமம் பெறுவதற்காக ஆலந்தூரில் இருந்த போக்குவரத்து அலுவலகத்தில் பழகுனர் உரிமம் வாங்கிக் கொண்டேன்.

அதை வைத்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் குழுவினர் எழுதும் நிரல், மென்பொருள் நிறைவளிக்கவில்லை. அவர்களுக்கு பரிநிரல் பயன்பாடுகளைப் பயன்படுத்த விருப்பமில்லை. மைஎசுகியூஎல் வேண்டாம் என்று காரணங்களை அடுக்கினார்கள். போசுடுஎசுகியூஎல் பயன்படுத்தலாம் என்றால் அவர்களுக்கு அதில் தேர்ச்சியில்லை. போகும் போது ஏற்கனவே செய்து வைத்த சில இடைமுகங்களைக் காட்டினார்கள். நமது பயன்பாட்டுக்குத் தொடர்பில்லாமல் பொதுவாக பயனர் மேலாண்மை என்று இருந்தது. இடையில் வீட்டுக்குக் கூட்டிப் போய் மதிய உணவெல்லாம் கொடுத்தார்.

வெளி நாட்டிலிருந்து இந்தியா திரும்பி ஒரு ஆண்டு முடியும் காலமாகியிருந்தது. அவன் வேலை ஒன்றில் சேர முடிவு செய்து, மைலாப்பூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான். நான் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.

தமிழ்க் குழுக்களின் மூலம் அறிமுகமாயிருந்த பேராசிரியர் தனது உறவினரின் மென்பொருள் நிறுவனம் வேளச்சேரியில் இருப்பதாகவும், அவர்கள் பரிநிரல் பயன்படுத்தி மென்பொருள் செய்வதாகவும் சொன்னார். அவரிடம் தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு அவர்களிடம் பேசினேன். விபரங்களைக் கேட்டு விட்டு 17000 ரூபாய்கள் கொடுத்தால் முடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னார்கள்.

வேளச்சேரியில் சுடாலினின் வீட்டுக்கு அருகிலேயே புரொபசனல் அல்காரிதம்சு என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். போசுடுகிரசுஎசுகியூஎல், பிஎச்பி என்று பேசினார்கள். தலைமையில் வேலை நடக்கும் என்றார்கள். எனக்கு என்ன தேவை என்பதை எழுதிக் கொடுத்து விடுமாறு கேட்டார்கள்.

நான் எச்டிஎம்எல்லில் எந்த மாதிரி இடைமுகங்கள், அறிக்கைகள் வர வேண்டும் என்று செய்து அதற்குள் நான் வாடகைக்கு எடுத்திருந்த இணையத் தளத்தில் போட்டு வைத்தேன். லெதர்லிங்க் டாட் நெட் என்ற முகவரியை பதிவு செய்து கொடுத்திருந்தார். போகசு இந்தியா என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு 5000 ரூபாய் செலவில் இணைய வழங்கியில் இடம் வாங்கியிருந்தேன். அவர்கள் அதில் போசுடுகிரெசுஎசுகியூஎல்லும் போட்டுக் கொடுத்திருந்தார்கள்.

அந்தத் தளத்தில் போய் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியது. முதல் தவணை பணத்தைக் கொடுத்து விட்டேன். மளமளவென்று நிரல் எழுத ஆரம்பித்து விட்டார்கள். பிப்ரவரி முதல் வாரம் தோல் கண்காட்சிக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று பேசியிருந்தோம். ஒரு மாதத்தில் முடித்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தார்கள்.

ஒரு மாதத்தில் எதுவுமே முடிந்திருக்கவில்லை, முடித்திருக்கவும் முடியாது. ஏதோ சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் கொடுத்த பணத்துக்கு முழு பயன்பாட்டுக்கான அடிப்படை நிரல்கள் கிடைத்து விட்டன. கொஞ்சம் சண்டை போட்டு விட்டு நிரலை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

குழந்தை கண்களை இறுக மூடிக் கொண்டு குட்டியாக கையில் இருந்தது. வீட்டில் ஒரு அறையில் இரண்டு கணினிகள், ஒரு மடிக்கணினி என்று போட்டு வைத்திருந்தேன். வேலையைத் தொடர சித்தப்பா பையன் தம்பி நண்பனின் தம்பி சேர்த்துக் கொண்டேன். இரண்டு பேரும் கணினிவியலில் பட்டம் பெற்று வேலை இல்லாமல் இருந்தார்கள். அவரவர் வீட்டில் இருந்து வேலை செய்து கொள்ளலாம்.

இதற்குள் சமாதானக் கொடி காட்டி அவளையும் குழந்தைகளையும் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டிருந்தேன். தோல் கண்காட்சியில் அறிமுகத்தின் மூலம் ஒரு தோல் நிறுவன உரிமையாளரைச் சந்தித்து நமது பயன்பாட்டைப் பற்றி விளக்கியிருந்தேன். குரோம்பேட்டை நாகல்கேணியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து அது வரை செய்து வைத்திருந்த பயன்பாட்டைப் பற்றிச் சொன்னேன். அவர் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், பயன்படுத்திப் பார்த்தால் போதும் என்று பேசிக் கொண்டேன்.

அவருக்கு எனது சீனத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணம் இருந்திருக்கும். சீனாவில் தோல்களை விற்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்த தொழிற்சாலைகளைத் தொடர்பு கொள்ளச் சொல்லலாம் என்று விபரங்களைக் கொடுத்தேன். எனக்கு அதில் ஆர்வமில்லை. பிற்காலத்தில் வளர்த்தபடி செய்யும் திட்டம் எட்டிப் பார்க்கவே இல்லை. தோல் விற்பதில் எனது திறமை பொருந்தாது என்று ஏற்கனவே சலித்திருந்தது.

ஆரம்ப கால வாடிக்கையாளர்கள் எல்லோருமே சீனத் தொடர்பின் அடிப்படையில்தான் கிடைத்தார்கள்.

தொழில்நுட்ப முகப்பில் இணையத்தில் தீவிரமாக படிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் ஈடுபட்டிருந்தேன். ஸ்லாஷ்டாட், போசுடுகிரெசுகியூஎல், பிஎச்பி என்று ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருப்பேன். பயன்பாட்டில் செய்ய வேண்டிய மாறுதல்கள், புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் ஒவ்வொன்றையும் நானே புரிந்து கொள்ள முயற்சி செய்து வெற்றியும் கண்டு கொண்டிருந்தேன். பயன்பாட்டில் இருந்த தரவுத்தள வடிவமைப்பு, நிரல் அமைப்பு அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ராணிப்பேட்டையில் போய் பேசி விட்டு வந்திருந்தேன். அவர்களுக்கு தகவல் மேலாண்மைக்கு உதவி செய்யலாம் என்று திட்டம். ராணிப்பேட்டையில் இணைய இணைப்பு சொதப்பலாக இருந்தது. இணையத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. பாண்டிச்சேரியில் நிறுவனம் நடத்தி வரும் நண்பனிடமும் தொடர்பு கொண்டிருந்தேன். வேலை பார்க்கும் கல்லூரித் தோழியின் மூலம் அவர்களையும் சந்தித்துக் கொண்டிருந்தேன்.

வேலை தேட ஆரம்பித்திருந்தாள். நிறுவனத்துக்குப் போய் உரிமையாளரைச் சந்தித்த போது என்னைப் பற்றிச் சொல்ல என்னுடைய பயன்பாட்டைப் பார்க்க அழைத்திருந்தார். அங்கும் விற்பனைக்கான சாத்தியங்கள் தெரிந்தன.

நிரல் உருவாக்கத் தரப்பில் மனம் சலித்து வேறு வழி பார்த்து போயிருந்தார்கள். தொடர்பு கொண்டு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க அவரது கல்லூரியில் மாணவர்களான இரண்டு பேரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அப்படி வந்து சேர்ந்தார்கள் இரண்டு பேர். 5000 ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்னதும், இரண்டு பேரும் சேர்கிறோம் ஆளுக்கு 2500 கொடுத்து விடுங்கள் என்று சேர்ந்து கொண்டார்கள்.

வீட்டில் அந்த அறையிலேயே சுவற்றில் பொருத்தும்படியாக ஒரு மேசை உருவாக்கி அவர்களும் உட்கார்ந்து பணி புரியும்படியான சூழலை உருவாக்கிக் கொண்டேன். வீட்டில் சூழலோ மோசமாகவே இருந்து வந்தது. உரசல்கள், வழக்கம் போல வெடிப்புகளாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு முறை பணி புரிய வந்தவர்களும் அதைப் பார்க்க நேரிட்டது.

டாடா நிறுவனத்தில் ஓட்டுனராக இருந்தவர் தனது உறவினர் என்று ஒருவரை அனுப்பி வைத்தார். அவர் எப்படிக் கற்றுக் கொள்கிறார் என்று பார்த்து விட்டு முடிவு செய்தவாகச் சொல்லியிருந்தேன். அவரை சும்மாவே அனுப்பி வைத்து விட்டேன்.

நிரல் உருவாக்கத்தை முழுப் பொறுப்புடன் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு இடத்துக்கும் போய் அவர்களைப் பயன்படுத்த வைத்தோம். நமது பயன்பாட்டில் வாடிக்கையாளர் தேவைகளை உள்ளிடவும் ஆரம்பித்தார்கள். கொஞ்சம் காசு கூட வாங்கிக் கொண்டோம்.

கையில் இருந்த சேமிப்புகள் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. வீட்டு வாடகை, வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவது - சோபா, தரை விரிப்புக் கம்பளம், துணி துவைக்கும் எந்திரம், தொலைக்காட்சி, குளிர்பதன கருவி என்று எதையும் விட்டு வைக்காமல் வாங்கி முடித்தோம். வெளியில் சுற்றுவது, சாப்பிடுவது என்றும் குறையில்லை. இதோ ஓரிரு மாதங்களில் நிறுவனத்திலிருந்து பணமாகக் கொட்டப் போகிறது. அதனால் எந்தக் கவலையும் இல்லை.

வாடிக்கையாளர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. இணைய இணைப்பு சரியில்லாமல் பயன்படுத்துவது சரியில்லாமல் எதுவும் வெளிப்பாடு வரவில்லை. ஆனால் நடைமுறைத் தகவல்களை உள்ளிட முயற்சிக்கும் போது பயன்பாட்டில் பல மேம்பாடுகள் செய்ய வேண்டியது தெரிந்து செய்து முடித்தோம்.

தொழில் நுட்பப் புத்தகங்களையும் வாங்கிக் குவித்தேன். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை அளிக்க வேண்டுமானால் சொந்தமாக வழங்கி இருக்க வேண்டும் என்று நெட்பார் இந்தியாவில் நமது வழங்கியை வைத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். மாதா மாதம் அதற்கு 7000 ரூபாய் செலவாகி வந்தது.

அந்த 7000, வீட்டு வாடகையில் நிறுவனத்தின் பங்காக 3000, சம்பளம் 5000 என்று 15000 ரூபாய்கள் செலவாகி வந்தது. இது போக தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவுகள் என்று மாதம் 20000 தாண்டியது. வீட்டுச் செலவுகளாக வாடகையில் பங்கு 4000, சாப்பாட்டுச் செலவுகள் 5000, வெளியில் போய் வரும் செலவுகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என்று 20000 தொட்டுக் கொண்டிருந்தது. மொத்தச் சேமிப்பு சில லட்சங்கள்தான் இருந்தது. டிசம்பர் வரும் போது எல்லாமே வறண்டு போயிருந்தது.

Monday, August 4, 2008

பணம் ஒரு அளவை

கேள்வி:
ஒரு வணிக நிறுவனத்தின் நோக்கம் என்ன? எதற்காக வணிக நிறுவனம் அமைப்பதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறோம்?

பதில்:
1. பணம் சம்பாதிக்கிறது! தொழில் நடத்தி நிறைய சம்பாதிக்கிறதுதான் முதல் நோக்கம்.
2. அடுத்ததா வேணும்னா அடுத்தவங்களுக்கு சேவை செய்றது என்று வைத்துக் கொள்ளலாம்.

திருத்தம்:
அப்படியா? பணம் சம்பாதிக்கிறது வேறு, சேவை செய்றது வேறு என்று நினைக்கிறீங்களா?
பணி செய்தால் சம்பளம் கிடைக்கும். பணி செய்வதற்கும் சம்பளம் கிடைப்பதற்கும் ஒரு உறவு இருக்கிறது.

இன்னொரு பக்கம் கிரிக்கெட் பார்க்கப் போனால், வேலைக்குப் போக முடியாது. கிரிக்கெட் பார்க்கப் போவதற்கும் வேலைக்குப் போவதற்கும் ஒரு உறவு இருக்கிறது.

சேவை செய்வதற்கும் பணி செய்வதற்குமான உறவு எதைப் போன்றது? ஒன்றுக்கொன்று நேரடி உறவுடையதா, அல்லது எதிர்மறை உறவுடையதா? ஒரு நிறுவனம் நல்ல சேவை கொடுக்கிறதா என்பதற்கான அளவு கோல்தானே சம்பாதிக்கும் பணம்?

நாம் நல்ல சேவை கொடுத்ததாகச் சொல்லிக் கொள்கிறோம். அது உண்மைதானா, நம்முடைய சேவையின் நன்மை என்ன என்று எப்படி அளப்பது? எப்படி மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்? அதுதான் ஈட்டும் பணம்.

இன்போசிஸ் 16000 கோடிகள் சம்பாதித்தது என்று சொன்னால், அவர்கள் சேவைகளை வாங்கிப் பலனடைந்த வாடிக்கையாளர்கள் 16000 கோடி ரூபாய்கள் இன்போசிஸ்ஸுக்குக் கொடுத்தார்கள் என்று பொருள். சேவை செய்வதன் அளவு கோல்தான் பணம்.

அதனால் நிறுவனத்தின் நோக்கம் என்று கேட்டால், பணம் சம்பாதிப்பது என்று மட்டும் சொன்னால் போதும். பணம் எப்படிச் சம்பாதிக்கலாம், சேவை அளிப்பதன் மூலம்.

அல்லது நிறுவனத்தில் நோக்கம் சேவை செய்வது என்று சொன்னால் போதும். எவ்வளவு சிறப்பாகச் சேவை செய்திருக்கிறோம் என்பதைப் பார்க்க வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை அளவிட்டுக் கொள்ள வேண்டும்.

'நான் நல்லா சேவை செய்தேன், ஆனால் பணம் வந்து சேரவில்லை' என்று சொன்னால் பொருள் இல்லை. நல்லா சேவை செய்திருந்தால் அதை வாங்கியவர் மனமுவந்து பணமும் கொடுத்திருப்பாரே!

'சில இடங்களில் சேவை நல்லா இல்லாமலேயே பணம் வாங்கி விடுகிறார்கள். டாடா உடுப்பி உணவு விடுதியை எடுத்துக் கொள்ளுங்கள். விலை இவ்வளவு அதிகம், அதற்கு ஏற்ற தரம் இல்லைதான். அங்கு போய்ச் சாப்பிடுபவர்கள் பணம் கொடுத்து விட்டுதான் வெளியில் வர வேண்டும். அவர்கள் பணம் கொடுக்கும் போது திருப்தி இல்லாமல் கொடுத்தாலும், அதை அளவிட்டால் டாடா உடுப்பி மிகச் சிறந்த சேவை அளிப்பதாக ஆகி விடுமே!'

அதுவும் சரிதான். சேவையின் சிறப்பை அளக்க பணம் ஒரு முக்கியமான அளவீடு. ஆனால், பணம் மட்டும் சரியான அளவீடாக இருக்க முடியாது. ஏனென்றால் பொருளாதார அமைப்பின் இயல்பால் எல்லோரும் சமமான நிலையில் இருந்து சேவைகளை வாங்கவும் விற்கவும் முடியாது. சில பண்டமாற்றுகளில் ஒருவரின் கை ஓங்கி இருக்கும். அவர் கொடுக்கும் சேவையை விட அதிகமான பணத்தை வாங்கி விடவோ, வாங்கிய சேவையை விட குறைவான பணத்தை கொடுத்து நகர்ந்து விடவோ முடியும்.

ஆகவே இரண்டாவதாக பார்க்க வேண்டியது, சம்பாதித்த பணம் என்ற அளவீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். இன்னும் புகுந்து பார்த்தால்தான் உண்மையான நிலவரம் வெளியில் வரும்.

Monday, March 10, 2008

இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் தன்மை

இன்றைய எகனாமில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள பேட்டியின் படி

  • ஐபிஎம் - இந்தியா இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகள் நிறுவனம்.
  • ஐபிஎம் இந்தியாவில் 73,000 பேர் பணிபுரிகிறார்கள்
  • உலகளாவிய ஐபிஎம் வருமானத்தில் 55% சேவைகளிலிருந்து வருகிறது.
  • 65% வருமானம் அமெரிக்காவுக்கு வெளியிலிருக்கும் சந்தைகளிலிருந்து கிடைக்கிறது

மனித வளம், வாடிக்கையாளர் உறவு, சிறப்பான சேவைகள் இந்த மூன்றும்தான் ஐபிஎம் இந்தியாவுக்கு வழிகாட்டும் நெறிகளாக பின்பற்றப்படுகின்றனவாம்.

“யாரும் தொழில்நுட்பத்தை மட்டும் வாங்குவதில்லை. வாடிக்கையாளர்கள் தொழில் முறை ஆதாயங்களை கணக்கிட்டுப் பார்க்கிறார்கள்.”

(ஐபிஎம் இந்திய துணைத் தலைவர் ராஜேஷ் நம்பியார்).

ஐந்தாவது பக்கத்துக்குப் போகவும

Wednesday, March 5, 2008

தகவல் பரிமாற்றம்

ஒரு நிறுவனத்தில், சமூகத்தில் ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஏன்?

1. என்னிடம் குறிப்பிட்ட திறமை இருக்கிறது என்பது தெரிந்தால்தான் அடுத்தவர்களுக்குத் தேவைப்படும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள என்னை அணுகுவார்கள்.

ஒரு நிறுவனத்தின் பொருளை சேவைகளை விளம்பரம் செய்வது இந்த நோக்கத்தில்தான். பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் இருந்தால்தான் செழிக்கும்.

நிறுவனத்துக்குப் பொருந்துவது தனிமனிதர்களுக்கும் பொருந்தும். நிறுவனத்தில், வீட்டில், சமூகத்தில் நம்முடைய திறமைகளை சரிவர வெளிப்படுத்தி அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தி விட வேண்டும்.

அதற்கு வலைப்பதிவுகள், தெருமுனைக் கூட்டங்கள், கவிதைகள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், ஓவியம் வரைதல் ஏன் நல்ல மென்பொருள் உருவாக்குதல் என்று விருப்பப்பட்ட ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. நான் என் நடவடிக்கைகளை அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தும் போது அதிலிருக்கும் நிறைகுறைகளை எனக்கு தெரிவிப்பார்கள். நான் செய்வதை விடச் சிறப்பாக அவர்களுக்கு வழி தெரிந்தால் அதை நமக்குத் தெரிவிக்க முன்வருவார்கள்.

3. நமது திறமைகள், சாதனைகள், பணிகளுக்கான ஊதியம் அப்போதுதான் நமக்கு வந்து சேரும்.

'திறமையான எழுத்தாளர். உயிரோட்டமுள்ள கதைகளை எழுதினார். கடைசி வரை வறுமையில்தான் வாழ்ந்தார்' என்றால், ஒன்று அவரது திறமையை வெளிப்படுத்த ஊடகம் சமூகத்தில் இல்லை. அல்லது அவரால் அந்த ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

எந்தத் துறையிலும், ஒரு நிறுவனத்தில் பணி புரியும் போது கூட, ஊதிய உயர்வு, பணி முன்னேற்றம் போன்ற எல்லாமே நாம் செய்வது நமது மேலதிகாரிகள், கூட வேலை செய்பவர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

'நான் என் வேலையை நேர்மையாக, கருத்தோடு செய்து முடிப்பேன். பலன்கள் தானாக வந்து சேர வேண்டும்' என்று இருந்து விடாமல், அந்தப் பணியின் பலன்கள் பலருக்கும் போய்ச் சேரும்படி தகவல்களைப் பரவச் செய்ய வேண்டும்.

இதன் மறுபக்கம், மற்றவர்களின் திறமைகளை, பணிகளை, சாதனைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல்.

Tuesday, March 4, 2008

வளத்தை உருவாக்குவோம்

உடலுழைப்புடன் மூலதனம் சேரும் போது உற்பத்தித் திறன் அதிகமாகி தொழிலாளியின் வருமானம் பல மடங்காக உயரும். கணினியைப் பயன்படுத்தி, இணையத்தின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதும் அது போன்று மூலதனம் மூலம் திறனை அதிகமாக்கிக் கொள்வதுதான்.

ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் மூலதனம் இல்லாமல் செயல்பட்டால், திறன் குறைந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாகவே இருக்கும்

தமிழர்களிடையே மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது என்று பார்ப்போம்? மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.

1. அதை வங்கியில் போட்டு வைத்தால், வங்கி தேவைப்படும் தொழில் முனைவோருக்கு அல்லது கடன் வாங்கும் தனிநபருக்கு அளிக்கிறது.
2. மும்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை ஏறி, அந்த நிறுனத்தின் தேவைக்கு அதிக மூலதனம் கிடைக்கிறது.
3. தங்கம் வாங்கினால், அதை விற்கும் மும்பை வணிகர்கள், தங்கச் சுரங்க உரிமையாளர்களிடம் நமது மூலதனம் போய்ச் சேருகிறது.

குஜராத்தில் ஒரு இளைஞர் புதிய தொழில் நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு முதலீடு எங்கிருந்து கிடைக்கும்?

தமிழகத்தில் ஒருவர் புதிய நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு?

கையிலிருக்கும் சேமிப்பைப் பயன்படுத்தி 100 கிராம் தங்கம் வாங்கி வைத்து விட்டீர்கள்.

உங்கள் நட்பு, அல்லது உறவினர் ஒருவர் மளிகைக் கடை நடத்துகிறார். அவருக்கு அந்த 1 லட்சம் ரூபாய்களை மூலதனமாகக் கொடுக்க நீங்களும் அதைப் பயன்படுத்து அவரும் தயாராக இருந்தால், கடைக்குத் தேவையான நவீன கருவி ஒன்றை வாங்கி கடையில் வேலை செய்பவர்களின் திறனை அதிகரிக்கலாம். அந்த அதிகரிப்பின் மூலம் வரும் ஆதாயத்தின் மூலம் உங்கள் முதலீட்டை வட்டியுடன் திருப்பவோ, அல்லது ஆதாயத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு தோறும் தரவோ செய்யலாம்.

தமிழகத்தில் சேமிப்பை மூலதனமாக மாற்றி தொழில் முனைவோருக்கு அளிக்க வங்கிக் கட்டமைப்புகளும் இல்லை, பங்குச் சந்தைகளும் இல்லை, சமூக அமைப்புகளும் இல்லை. இருக்கும் பணத்தையும் மும்பை பங்குச் சந்தைக்கு எடுத்துச் செல்வதில் ஊடகங்கள் தீவிரமாக இருக்கின்றன.

Monday, March 3, 2008

நாய் விற்ற காசு குலைக்குமா! - கும்

வாழ்க்கையின் குறிக்கோள்களை கோடிகளிலும் லட்சங்களிலும அளக்கலாம். ஆனால் குறிக்கோள்களே கோடிகளாகவும் லட்சங்களாகவும் இருக்கக் கூடாது.

உருப்படியான குறிக்கோள்கள் இருந்து அதை எப்படி சரிவர அளந்து, அளவையை தொடர்ச்சியா அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு வகை. அளவையை மட்டும் கருத்தில் கொண்டு அதை எப்படியாவது அதிகரித்துக் கொண்டே இருப்பது இன்னொரு வகை.

அள்ளிக் கொட்டும் பாத்திரமான தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போக வேண்டும். பாத்திரத்தின் அளவு விரிந்து கொண்டே போக வேண்டும் என்பது வளரும் வேட்கை. ஆனால், அந்தப் பாத்திரத்தில் அள்ளிக் கொட்டுவது வெற்றுக் குப்பையாக இருக்க வேண்டுமா, அல்லது உணவாக்கும் தானியங்களாக இருக்க முடியுமா?

தானியங்களை விளைவிக்கும் விவசாயியிடம் சரியான அளவுப் பாத்திரம் இல்லாமல் விளைச்சலை சரிவர பங்கிடாமல் போனால் விவசாயி அழிந்து போவான். அளவுப் பாத்திரத்திலேயே கவனம் செலுத்தி எதை அள்ளிப் போடுகிறோம் என்று கவனிக்காமல் செயல்படுபவர்களின் கதி அதை விட மோசமாக அல்லவா இருக்கும்.

தினமும் மேலும் மேலும் அதிக முயற்சிகள். அதிக சுமைகளை சுமத்தல். ஆனால், மனதில் நிறைவு இருக்காது. வெற்று வாழ்க்கையாகப் போய் விடும்.

அளவைகள் மட்டும் வாழ்க்கை இல்லை. பணம் என்பது ஒரு அளவை. அது மட்டும் வாழ்க்கை இல்லை. அது எதை அளக்கிறது என்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் நாம் செய்யும் பணிகளின் மதிப்பைக் காட்டுவது பணம். மாறுகோளாக, பணம் என்பது வாழ்க்கையின் மதிப்பைக் காட்டுவதில்லை

Wednesday, February 13, 2008

படைப்பாளிகள்

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10 செகண்டுகளுக்குள் ஓடி முடித்து ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வெல்லும் வீரர் அந்த பத்து விநாடிகள் மட்டும்தான் உழைத்தாரா?

பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் தினமும் மனம் குவித்து பயிற்சி செய்து, பொருத்தமான உணவு உண்டு, தூக்கத்தை மட்டுப்படுத்தி, மற்ற கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பதைக் குறைத்து செய்த முயற்சிகளின் விளைவுதான் இந்த பத்து விநாடிகளின் சாதனை.

ஒவ்வொரு துறையிலும் அது போன்ற உழைப்பும் சாதகமும் இருந்தால்தான் உலகை வெல்ல முடியும். ஒரு
ப சிதம்பரத்தையோ, மு கருணாநிதியையோ எளிதாக குறை கூறி விட்டுப் போய் விடுகிறோம். அவர்களுக்கு இருக்கும் பொறுப்பு எவ்வளவு பெரியது. பங்குச்சந்தையில் குறியீட்டு எண் மதிப்பு குறைந்து விட்டால் நிதியமைச்சருக்கு ஏன் பதறுகிறது என்று கேட்கிறோம்?

இன்ஃபோசிஸ் நிறுவனம் பெருமைப்படுத்தப்பட் கூலி வேலைதான் செய்கிறது என்று இடது கையால் ஒதுக்கித் தள்ள முயல்கிறோம். எத்தனை ஆண்டுகள் உழைப்பும் கருத்தும் கவனமும் உருவாக்கிய நிறுவனம் இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உலகுக்கே சேவைப் பொருளாதாரம் என்று நம் ஊரில் வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது.

ஒரு அம்பானி/டாடா உருவாக்கிய நிறுவனம் போல, பில்கேட்சின் மைக்ரோசாப்டு போல, லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகை உலுக்கும் ஆக்கங்களை எப்போது படைக்கப் போகிறோம்

இதற்குத் தேவை தனி மனித முயற்சியும் உழைப்பும், கூட்டாக சமூகத்தின் ஒருங்கிணைப்பும்.

ஜாம்ஷெட்பூர் என்ற ஒரு நகரையே உருவாக்கிக் காட்டிய டாடா போன்ற கனவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது. உலகத் தரத்தில் கட்ட வேண்டும் என்று உறுதியுடன் இருந்து, அரசு சட்டங்கள் வரும் முன்னரே தொழிலாளர்களை நிறுவனத்தின் சொத்துக்களாக மதித்து சம்பள விகிதம், பணி நேரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்திய டாடா போன்ற பெரிய படைப்பாளிகள் நம்மில் எப்போது வரப்போகிறார்கள்!

அதற்கு என்னென்ன தேவை?

Saturday, February 9, 2008

சேமிப்பும் முதலீடும்

ஒரு சமூகத்தில் சேமிப்பும் முதலீடும் சமமாக இருக்க வேண்டும். ஒருவரின் சேமிப்பு இன்னொருவருக்கு மூலதனமாக பயன்படும்.

பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் அதில் 8000 ரூபாய் செலவழிக்கிறார். செலவழித்து அவர் வாங்கிய பொருள், சேவை செய்தவர்கள் கையில் அந்தப் பணம் போகிறது. அவர்கள் வேறு வழியில் செலவழிக்கிறார்கள். இப்படி சுற்றி வந்து முதல் ஆள் 10000 ரூபாய் ஈட்டிய பணியில் விளைந்த பொருள்/சேவையும் வாங்கப்பட்டு விடும்.

எல்லாமே மனித உழைப்புதான். 10000 ரூபாய் ஒருவருக்கு சம்பளம் என்றால் அவரது பணியால் விளைந்த மதிப்பு 10000 ரூபாய்கள். தன் உழைப்பை பணமாக மாற்றிக் கொண்டு விட்டார். அந்த உழைப்பைச் செலவாணியாகப் பயன்படுத்தி சமூகத்தின் பிற உறுப்பினர்களின் உழைப்பை தனக்குப் பிடித்தவாறு திருப்பி விடும் உரிமையைப் பெறுகிறார்.

கொஞ்சம் இருங்க, இவரே 8000ம்தானே செலவழித்தார், மீதி இரண்டாயிரம் ரூபாய் என்னவாகும்? அந்த மதிப்பிலான பொருள்/சேவை தேங்கி விடாதா?

விடும்தான், ஒரு பழக்கம் இல்லாவிட்டால். சேமிப்பவர் தனது சேமிப்பை வங்கியில், அல்லது பங்குச் சந்தையில் அல்லது சொத்து வாங்க போடுகிறார். அவரைப் பொறுத்த வரை வருமானத்தில் ஒரு பகுதியை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்துக்கு ஒதுக்கி வைத்து விட்டார்.

அந்தச் சேமிப்புப் பணத்தை கடனாக இன்னொருவர் பெற்று முதலீடு செய்கிறார்். அதை எதிர்கால உற்பத்தியை பெருக்கும் மூலதனமாகப் பயன்படுத்தினால், வளர்ச்சியும் கிடைக்கும்.

அதாவது, முழுதாக உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட்டால் அது சேமிப்பு. அந்தச் சேமிப்பை இன்னொருவர் எடுத்து மூலதனமாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

எந்தத் துறையில் முதலீடு நடக்க வேண்டும்? யார் மூலம் முதலீடு நடக்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை காண்பது ஒரு அடிப்படையான சிக்கல்.

சோவியத் போன்ற திட்டமிடும் பொருளாதாரங்களில் சில அறிவாளிகளைக் கொண்ட குழு கூடி முடிவெடுக்கும். இரும்பு உற்பத்தித் துறைக்கு இவ்வளவு மூலதனம், வானூர்தி உற்பத்தி துறைக்கு இவ்வளவு மூலதனம், கல்லூரி கட்ட இவ்வளவு மூலதனம் என்று முழு பொருளாதாரத்துக்கும் இந்தச் சின்னக் குழு திட்டமிட்டு விட வேண்டும்.

நடைமுறையில் சாத்தியமில்லாத நடைமுறை அது, அந்தப் பொருளாதாரங்கள் மண்ணைக் கவ்வியதன் ஒரு முக்கிய காரணம் முழுமையாக திட்டமிடல் மூலமே பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முயன்றது.

சந்தைப் பொருளாதாரத்தில், சேமிப்பாக சேரும் பணத்தை மூலதனமாகப் பெறுவதற்கு போட்டி நடக்கும். 'எனக்கு இவ்வளவு பணம் தந்தால் ஒரு ஆண்டு கழித்து 10% அதிகமாக திரும்பத் தருகிறேன்' என்று ஒருவர் சொல்வார். அவருக்கு தான் முதலீடு செய்யப் போகும் தொழில் வளர்ந்து பலன் தரும் என்று நம்பிக்கை. இன்னொருவர் 12% தர தயாராக இருக்கலாம். யார் அதிக விலை (வட்டி) கொடுக்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு மூலதனம் கிடைக்கும்.

வட்டி வீதத்தை விட முதலீடு திரட்டுபவரின் திறமையையும் தொழில் நிலவரத்தையும் பார்க்க வேண்டும். ஒரு ஆண்டில் இரட்டித்துத் தருகிறேன் என்று சொல்லி விட்டு ஆறே மாதத்தில் ஆளே காணாமல் போய் விடுகிறவரை விட ஒரு ஆண்டுக்குப் பிறகு 10% கூட்டித் தருவதாகச் சொல்லி விட்டு அசலையும் வட்டியுடன் திருப்பி தருபவருக்குத்தான் கொடுப்போம்.

மாடு வாங்குவதற்கு நண்பரிடம் கடன் வாங்கும் விவசாயி செய்யும் முதலீடு ஆரம்பித்து, வங்கிக் கடன்கள், கடன் பத்திரச் சந்தைகள், பங்குச் சந்தைகள், தனியார் பங்கு முதலீடு, டெரிவேட்டிவ் எனப்படும் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு முறைகள் என்று எல்லாவற்றின் அடிப்படையும் 'சேமிப்பு யாருக்குப் போய்ச் சேர வேண்டும், எந்த விலையில் போய்ச் சேர வேண்டும்' என்று தீர்மானிப்பதுதான்.

Friday, February 8, 2008

மூலதனத்தின் மகிமை

வீட்டில் ஒரு 10 அடி ஆழமும் 4 அடிக்கு 4 அடி சுற்றளவும் உடைய பள்ளம் தோண்ட வேண்டும். வேலைக்கு ஒருவரைக் கூப்பிடுகிறோம். 'இதைத் தோண்டிக் கொடுத்திடுங்க. மொத்தம் 400 ரூபாய் கொடுத்து விடுகிறோம்' என்று பேசுகிறோம்.

தோண்ட வருபவர் எப்படி வேலை செய்வார்?

எந்த கருவியும் இல்லாமல் வெறும் கையினால் தோண்ட முடியுமா? அப்படியே முடிந்தால் அந்த நானூறு ரூபாய் வேலை எத்தனை நாட்களில் முடியும்? ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம்.

ஒரே ஒரு மண்வெட்டி, 200 ரூபாய் விலையிலானது கொண்டு வந்தால் அதே வேலையை ஒன்றரை நாட்களில் முடித்து விடலாம். அந்த மண்வெட்டியை அடுத்த வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். வெறுங்கையில் வேலை செய்வதை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம்.

இதே சமயம் ஒரு தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தினால் எவ்வளவு நேரம் ஆகும். 10000 ரூபாய்கள் விலை கொடுத்து மின் விசையால் இயங்கி மண்ணைப் பறித்து அதையே குவித்து வெளியே போட்டு விடும் இயந்திரம் கொண்டு வேலை செய்தால் அதே தொழிலாளி 2 மணி நேரத்தில் வேலையை முடித்து 400 ரூபாய்கள் வாங்கிக் கொண்டு போய் விடுவார். ஒரு நாளைக்கு 1600 ரூபாய்கள் சம்பாதிக்கலாம். வாரத்துக்கு 6 நாட்கள் உழைத்தால் 10000 ரூபாய்கள்.

இதுதான் மூலதனத்தின் மகிமை. உடலுழைப்புடன் மூலதனம் சேரும் போது உற்பத்தித் திறன் அதிகமாகி தொழிலாளியின் வருமானம் பல மடங்காக உயரும்.

கணினியைப் பயன்படுத்தி, இணையத்தின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதும் அது போன்று மூலதனம் மூலம் திறனை அதிகமாக்கிக் கொள்வதுதான்.

ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் மூலதனம் இல்லாமல் செயல்பட்டால், திறன் குறைந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாகவே இருக்கும்

மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது?

மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.

(அடுத்தது - சேமிப்பும் முதலீடும்)

Thursday, February 7, 2008

வளரும் வழி

புதிதாக ஆரம்பித்த நிறுவனத்தின் வளர்ச்சி இலக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பல மடங்குகளாக அதிகரிக்க வேண்டும். என்னென்ன செய்கிறோம், எங்கெங்கு வாய்ப்புகள் இருக்கின்றன. என்னென்ன பலங்கள், என்னென்ன பலவீனங்கள், எங்கெங்கு ஆபத்துகள் வரலாம் என்று அலசிக் கொள்ள வேண்டும்.

சேவை நிறுவனம் ஒன்றில், ஆண்டு 0ல் X அளவு விற்பனை இருந்தால், 1ல் 5X, இரண்டாம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு, 4ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு, 5ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்காக விற்பனை அதிகரிக்க வேண்டும்.

இப்படி எண்களில் சிந்திப்பது, இலக்குகளை நிர்ணயிப்பது, அதை முறைப்படி தினமும் கண்காணிப்பது, நிர்ணயித்த இலக்குகளை எட்டுவது என்பது எல்லோருக்கும் வந்து விடாது. குறிப்பாக சம்பளத்துக்கு வேலைபார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு இப்படி கோடிகளைத் துரத்துவது மனதளவில் பொருந்தாத ஒன்று.

பலரைச் சேர்த்து நிறுவனம் நடத்துபவர்களுக்கு அந்த மதிப்பு உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரும் திறம்பட செயல்பட வழி வகுத்து, முயற்சிகளின் வெளிப்பாட்டை பலனுள்ள சேவையாக மாற்றி, மாற்றிய சேவையை வாடிக்கையாளருக்கு உருப்படியாகப் போய்ச் சேர வைத்து, அந்த விபரங்களை தெளிவாக எடுத்துரைத்து, வாடிக்கையாளர் பெற்ற பலன்களில் ஒரு பகுதியை கட்டணமாக பெற்று வருமானம் பெருக்க வேண்டும்.

அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, வசதிகளைப் பெருக்க வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

இன்போசிஸ் நிறுவனத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்த நூற்றுக் கணக்கான பேரின் சொத்து மதிப்பு இப்போது கோடிக் கணக்கில். முதல் நூறு எண்களுக்குள் ஒருவராக சேர்ந்தவரின் பங்குகளின் மதிப்பு நூற்று முப்பது கோடி ரூபாயாம்.

அதன் பொருள் என்ன?

ஒவ்வொருவரின் திறமையை/வேலையை வாடிக்கையாளருக்கு பயனுள்ள சேவையாக மாற்றியிருக்கிறது அந்த நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த சேவையின் மதிப்பு பல கோடி ரூபாய்கள், அதில் ஒரு பகுதி நிறுவனத்துக்கு கட்டணமாக வந்திருக்கிறது. அதில் ஒரு பகுதி வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளமாக, பங்குகளாக போய்ச் சேருகிறது.