Monday, March 3, 2008

நாய் விற்ற காசு குலைக்குமா! - கும்

வாழ்க்கையின் குறிக்கோள்களை கோடிகளிலும் லட்சங்களிலும அளக்கலாம். ஆனால் குறிக்கோள்களே கோடிகளாகவும் லட்சங்களாகவும் இருக்கக் கூடாது.

உருப்படியான குறிக்கோள்கள் இருந்து அதை எப்படி சரிவர அளந்து, அளவையை தொடர்ச்சியா அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு வகை. அளவையை மட்டும் கருத்தில் கொண்டு அதை எப்படியாவது அதிகரித்துக் கொண்டே இருப்பது இன்னொரு வகை.

அள்ளிக் கொட்டும் பாத்திரமான தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போக வேண்டும். பாத்திரத்தின் அளவு விரிந்து கொண்டே போக வேண்டும் என்பது வளரும் வேட்கை. ஆனால், அந்தப் பாத்திரத்தில் அள்ளிக் கொட்டுவது வெற்றுக் குப்பையாக இருக்க வேண்டுமா, அல்லது உணவாக்கும் தானியங்களாக இருக்க முடியுமா?

தானியங்களை விளைவிக்கும் விவசாயியிடம் சரியான அளவுப் பாத்திரம் இல்லாமல் விளைச்சலை சரிவர பங்கிடாமல் போனால் விவசாயி அழிந்து போவான். அளவுப் பாத்திரத்திலேயே கவனம் செலுத்தி எதை அள்ளிப் போடுகிறோம் என்று கவனிக்காமல் செயல்படுபவர்களின் கதி அதை விட மோசமாக அல்லவா இருக்கும்.

தினமும் மேலும் மேலும் அதிக முயற்சிகள். அதிக சுமைகளை சுமத்தல். ஆனால், மனதில் நிறைவு இருக்காது. வெற்று வாழ்க்கையாகப் போய் விடும்.

அளவைகள் மட்டும் வாழ்க்கை இல்லை. பணம் என்பது ஒரு அளவை. அது மட்டும் வாழ்க்கை இல்லை. அது எதை அளக்கிறது என்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் நாம் செய்யும் பணிகளின் மதிப்பைக் காட்டுவது பணம். மாறுகோளாக, பணம் என்பது வாழ்க்கையின் மதிப்பைக் காட்டுவதில்லை

2 comments:

KARTHIK said...

//நாம் செய்யும் பணிகளின் மதிப்பைக் காட்டுவது பணம். மாறுகோளாக, பணம் என்பது வாழ்க்கையின் மதிப்பைக் காட்டுவதில்லை//

வணக்கம் அண்ணா

இன்றைய காலகட்டங்களில் படிப்பும்,பொருளாதார சூழ்நிலைகளும் தான் ஒருவருடைய மதிப்பைக்காட்டுகிறது.

மா சிவகுமார் said...

கார்த்திக்,

//இன்றைய காலகட்டங்களில் படிப்பும்,பொருளாதார சூழ்நிலைகளும் தான் ஒருவருடைய மதிப்பைக்காட்டுகிறது.//

எல்லாக் காலங்களிலுமே, ஒருவரது திறமைகளும் அதன் மூலம் அடுத்தவர்களுக்கு உதவ முடிவதும் மட்டுமே உண்மையான மதிப்பைக் காட்டும். அந்த மதிப்பின் அளவையாக பணம் இருக்கலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்