Monday, August 4, 2008

முதலீடும் முன்னேற்றமும்

அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்.

கடந்த அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள் இரண்டு மடங்காகி விட்டது.

புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.

நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.

டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.

அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.

கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும். குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.

வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்று இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.

புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.

வாடிக்கையாளர் சேவை - ஒரு தவறின் கதை

வாடிக்கையாளர் நிறுவனத்தில் அவர்கள் விற்க வேண்டிய தோலுக்கான தேவை பல இடங்களிலிருந்து வரும். அவற்றை மென்பொருளில் போட்டு விடுவார்கள். அவற்றுக்கு எதிரான உற்பத்தி விபரங்கள், உற்பத்தி முடிந்த பிறகு பொருளை அனுப்பி வைக்கும் விபரங்களும் உள்ளிட்டு விடுவார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் நூற்றுக் கணக்கான ஆர்டர்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் கேட்கப்பட்ட அளவு, இதுவரை அனுப்பி வைக்கப்பட்டது, இனிமேல் அனுப்ப மீதியிருப்பது என்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். 10000 அடி தோல் கேட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர். முதலில் 4000 அடி உற்பத்தி செய்து ஒரு பொதியை அனுப்பி விட்டார்கள். இன்னும் மிஞ்சியிருப்பது 6000 அடி. அடுத்ததாக 1500 அடி அனுப்பி வைத்தால் 10000, 5500, 4500 ஆகி விடும்.

இந்த 4500 அடி அனுப்ப வேண்டும் என்றால் மூலப் பொருளை உற்பத்திக்கு எடுத்து நான்கைந்து நாள் வேலைக்குப் பிறகு தயாராகி அனுப்பலாம். எவ்வளவு உற்பத்தியில் இருந்து கொண்டிருக்கிறது, இன்னும் எவ்வளவு மூலப்பொருளிலிருந்து உற்பத்திக்குக் கொடுக்க வேண்டும் என்ற விபரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.

4500 அடி இன்னும் தேவை. 2500 அடிக்கு உற்பத்தியில் இருக்கிறது. மீதி 2000 அடிக்கு புதிதாக உற்பத்திக்கு அனுப்ப வேண்டும். இதுதான் கணக்கு.

மொத்தத் தேவை 10000
அனுப்பி விட்டது 5500
அனுப்ப வேண்டியது 4500
உற்பத்தியில் இருப்பது 2500
இன்னும் எடுக்க வேண்டியது 2000

இதுதான் கணக்கு. இதே போல நூற்றுக் கணக்கான ஆர்டர்கள். பல ஆர்டர்கள் ஒரே பொருளுக்கு இருக்கும். ஒரு ஆர்டருக்கு எதிராக உற்பத்தி செய்து விட்டு அவசரம் என்றால் இன்னொரு ஆர்டருக்கு அனுப்பி வைத்து விடுவதும் நடக்கும்.

புதிதாக ஆர்டர் வந்தால் அதை ஒரு இடத்தில் பதித்து வைத்துக் கொள்வோம். அந்த ஆர்டர் எண்ணையும், மொத்தத் தேவை அளவையும் ஆர்டர் நிலுவை விபரங்கள் என்று பதிந்து கொள்வோம்.

பொருள் அனுப்பும் போது எந்த ஆர்டருக்காக அனுப்புகிறார்கள் என்ற விபரத்தை வாங்கி அதையும் நிலுவை விபரங்களில் தனியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொருளை உற்பத்திக்கு எடுக்கும் போதும் ஆர்டருடன் இணைத்து குறிப்பிட்ட ஆர்டருக்கு எதிராக இவ்வளவு உற்பத்திக்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொரு விபரம் என்ன வேண்டும் என்றால் உற்பத்தியில் தற்போது எவ்வளவு இருக்கிறது என்பது. ஒரு ஆர்டருக்கு எடுக்கப்பட்ட பொருளை இன்னொரு ஆர்டருக்கு அனுப்பி விடுதலும் நடக்கும் என்பதால் இதையும் தனியாகக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

உற்பத்திக்கு என்று விபரங்களை உள்ளிடும் போது உற்பத்தியில் இருப்பதுடன் போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும். உற்பத்தி முடிந்து பொருளை வெளியே எடுக்கும் போது அந்த அளவில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். வெளியே எடுக்கப்பட்டது அதே ஆர்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அது அனுப்பி விட்டது கணக்கில் சேர்ந்து விடும். மாறாக வேறு ஆர்டருக்கு அனுப்பி விட்டால், புதிதாக உற்பத்தி செய்துதான் இந்த ஆர்டரை பூர்த்தி செய்ய முடியும்.

எங்கள் மென்பொருள் வடிவமைப்பில் பலவிதமான சரக்கு அறைகள் (மூலப் பொருள் அறை, பாதி பணி முடிந்த பொருள் அறை, இறுதிப் பொருள் அறை) இருக்கும். அவற்றிலிருந்து உற்பத்திக்கு மூலப் பொருளை அனுப்பலாம், உற்பத்திப் பணி முடிந்ததும் அதே அறைக்கு அல்லது வேறு அறைக்கு முடிந்த பொருளை சேர்த்து விடலாம்.

சரக்கு அறைக்குள் தரம் பிரித்தலும் நடக்கும்.

10000 அடி பச்சைத் தோல் வாங்கினால் அது ஒரு சரக்கு நுழைவாக பதிந்து விடும். அதன் குறிஎண் 1312 என்று வைத்துக் கொள்வோம். அதை 5 தரங்களாகப் பிரித்தால் 1313, 1314, 1315, 1316, 1317 என்று ஐந்து புதிய நுழைவுகளை ஏற்படுத்தி ஒவ்வொன்றிலும் அது 1312லிருந்து வந்தது என்பதையும் குறித்துக் கொள்வோம்.

இப்போது 1313, 1314, 1315 மூன்றையும் சேர்த்து 6000 அடி உற்பத்திக்கு அனுப்புகிறோம் என்றால் மூன்றையும் சேர்த்து 1318 என்று ஒரு சரக்குக் குறி உருவாகி விடும். அது மூன்று சரக்குகளிலிருந்து வந்தது என்ற விபரமும் இருக்கும். 1318 என்பது உற்பத்தியில் இருக்கும் சரக்கு.

உற்பத்திப் பணிகள் முடிந்ததும் அந்த 6000 அடியை இறுதிப் பொருள்களுக்கான சரக்கு அறைக்கு அனுப்பும் போது தரம் பிரித்தல் செய்வார்கள். அது மூன்று தரங்களாக அது பிரிந்தால் உற்பத்தியிலிருந்து வந்ததாகக் குறிக்கப்பட்டு மூன்று சரக்குக் குறியீட்டு எண்கள் இறுதிப் பொருள் அறையில் உருவாகி விடும்.

நம்ம கணக்கில் பார்த்தால் 6000 அடி உற்பத்திக்கு அனுப்பும் போது, அது எந்த ஆர்டருக்கு அனுப்பப்படுகிறதோ அதன் எதிரில் கணக்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். 6000 அடி உற்பத்தி முடிந்து வெளியே இறுதிப் பொருள் அறைக்கு எடுக்கப் படும் போது அந்த ஆர்டருக்காக உற்பத்தியில் இருக்கும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிக்கல் எங்கு ஆரம்பித்தது என்றால், தரம் பிரிப்பு விபரங்களை உள்ளிடுவதற்கான நிரல் இரண்டு வேலைகளைச் செய்யுமாறு எழுதியிருந்தோம். சரக்கு அறைக்குள் தரம் பிரித்தல் ஒரு வகை, உற்பத்தியிலிருந்து தரம் பிரித்து சரக்கு அறைக்கு அனுப்புதல் இன்னொரு வகை. குறிப்பிட்ட சரக்குக் குறியீட்டு எண் உற்பத்தியுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டும் அதன் குறிப்பில் தனி குறிப்பு சேர்த்து விட வேண்டும்.

பணம் கொடுக்கும் முறைகள் - 2

லெட்டர் ஆஃப் கிரெடிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வங்கிக் கடன் கடிதஙகளைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம். (3)

விற்பனையாளரும் வாங்குபவரும் ஒருவரை ஒருவர் எடை போட்டு, பொருட்களின் தரம், அளவு, விலை பேசி இன்ன நாளுக்குள் அனுப்பி விட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். சரியான தரம், சரியான அளவில் பொருள் வந்து சேர வேண்டும் என்ற கவலை வாங்குபவருக்கு. பொருளை தயாரிக்க அவ்வளவு செலவழிக்கிறோம். போட்ட பணம் வந்து சேர வேண்டும் என்ற கவலை விற்பவருக்கு.

வங்கிக் கடன் கடித முறையில் வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுகிறார். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனம் தில்லியிலிருந்து மின்னணு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. சென்னை நிறுவனம், ஒரு வங்கியை அணுகி இந்த விற்பனைக்கு தில்லி நிறுவனத்தின் பெயருக்கு ஒரு கடன் கடிதம் அனுப்பக் கேட்கிறது.

வங்கி சும்மா அனுப்பி விடாது

பணமும் பொதுவுடமையும்

சரி பணம் என்றால் என்ன? என் பையில் 100 ரூபாய் இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?

பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம். உலகில் பணம் என்ற கோட்பாடே இல்லை. பணம் என்பது மனிதன் உருவாக்கியதுதானே!

ஆரம்ப உலகில் காட்டில் தனியாக ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பசித்தால் போய் மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களைப் பறித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அவர் ஒரு நாள் இன்னொருவரைப் பார்க்கிறார். இரண்டாமவர் தினமும் காலையில் எழுந்து சின்ன விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறார்.

முதலாமவருக்கு தினமும் பழம் சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறது. ஆனால் வேட்டையாடுவதற்கான நுணுக்கங்களும், திறமையும் கற்றுக் கொண்டிருக்கவில்லை. இரண்டாமவருக்கு எந்த இடத்தில் நல்ல பழம் கிடைக்கும் எப்படிப் பறிப்பது என்றெல்லாம் விபரங்கள் தெரியாது.

இருவரும் தம்மிடம் இருப்பதில் ஒரு பகுதியை அடுத்தவருக்குக் கொடுக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பழங்களும் கிடைத்து விட்டன, இறைச்சியும் கிடைத்து விட்டன. இப்போது கை மாறிய பொருட்கள் பழங்கள் மற்றும் இறைச்சி.

இப்போது மூன்றாவதாக ஒருவர் வருகிறார். ஒல்லியான உருவம், ஊதினால் பறந்து விடுவது போன்ற உடல் வாகு. மென்மையான முகம். அவர் கைகளில் பூங்கொத்துகள். அவர் பூக்களின் இதழ்களைச் சாப்பிட்டுதான் வாழ்ந்து வருகிறார். மூன்றாமவர் இந்தப் பகுதிக்கு வந்தவுடன் ஏற்பட்ட நறுமணத்தை உணர்ந்த முதல் இரண்டு நண்பர்கள் கொஞ்சம் பூக்களை வாங்கி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

மூன்றாமவருக்கு அந்த நறுமணம் கமழும் பூக்கள் கிடைக்கும் இடம் தெரியும். அவரிடம் பூக்களை வாங்கிக் கொண்டு முதலாமவர் பழங்களையும் இரண்டாமவர் இறைச்சியும் கொடுக்கிறார்கள். இப்போது 3 பொருட்கள் 3 பேருக்கும் கிடைத்து விட்டன. மூன்று வகையான பரிமாற்றங்கள். பழம் - இறைச்சி, பழம் - பூ, இறைச்சி - பூ

மீண்டும் தாவி தற்காலத்துக்கு வந்து விடுவோம். இந்த மூன்று பரிமாற்றங்களுக்கும் பொதுவாக என்ன இருக்கும்? பணம். நான் பரிமாறிக் கொள்வதில் பெரும்பாலும் பணமும் இடம் பிடித்து விடுகிறது. பழம் விற்பவர் பழம் தேவைப்படுபவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார். பூ தேவைப்படுபவர் தான் விற்று சம்பாதித்த பணத்தைக் கொடுத்து பூக்களைப் பெற்றுக் கொள்கிறார்.

பணம் என்றால் என்ன?

மீண்டும் ஆரம்ப கால மூன்று நண்பர்களிடம் போவோம். அவர்கள் பணம் என்று எதையும் தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்களும் பரிமாற்றங்கள் செய்து கொண்டார்கள். அந்த மூன்று பரிமாற்றங்களையும் பொதுப்படையாக அளக்க எதை காரணியாக வைத்துக் கொள்ளலாம்? அதுதான் பணம்.

பழம் தேவைப்படுபவர் கொஞ்சம் முனைந்தால், தேடிப்பிடித்து மரத்தில் ஏறி உராய்ந்து பழங்கள் பறித்துக் கொண்டிருக்கலாம். இறைச்சி வேண்டுபவரும் ஓடும் விலங்கு ஒன்றைத் துரத்தி ஓடி பல தோல்விகளுக்குப் பிறகு ஒன்றைப் பிடிப்பதில் வெற்றி கண்டிருக்கலாம்.

அவரிடம் பழத் தோட்டம் இருந்தது, இவரிடன் முயல் பண்ணை இருந்தது என்பதால் பரிமாற்றம் ஆரம்பிக்கவில்லை.

எளிமையான அந்தக் காலத்தில் பரிமாற்றத்தின் அடிப்படை, பொருள் அல்லது சேவையை செய்வதற்குத் தேவையான அறிவு, திறமை, உழைப்பு. மிகச் சிக்கலான ஆயிரக்கணக்கான பரிமாற்றங்களின் அடிப்படையும் மனித அறிவு, திறமை, உழைப்புதான்.

'உனக்கு இருக்கும் பழம் கிடைக்கும் இடத்தைப் பற்றிய அறிவு, பழம் பறித்துக் கொண்டு வந்த உழைப்பு இவற்றை நான் வாங்கிக் கொண்டு என்னுடைய பூக்கள் பற்றிய அறிவு, அவற்றைச் சரிவரப் பறித்து கொண்டு வந்த உழைப்பை மாற்றாகக் கொடுக்கிறேன்.'

இதுதான் மார்க்சின் கோட்பாடு. எல்லா மதிப்பும் உழைப்பிலிருந்துதான் உருவாகின்றன. இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தால் அதிகமாக உழைப்பவர் அதிகமான மதிப்பைப் பெறுவார்கள். சோம்பேறிகள் செல்வந்தர்களாக இருப்பது அவர்கள் வளங்களை வளைத்துப் போட்டுக் கொள்வதால்தான். எல்லாவற்றையும் பொதுவில் வைத்து விடுவதுதான் இதற்குத் தீர்வு என்பது கம்யூனிசம்.

அப்படிச் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக் கொண்டு முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டுகிறார்கள். தொழிலாளிகள் கொடுக்கும் உழைப்பின் முழு மதிப்பையும் கொடுக்காமல் உபரியை தாமே தக்க வைத்துக் கொண்டு இன்னும் சுரண்டுவதற்கான ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

பணம் ஒரு அளவை

கேள்வி:
ஒரு வணிக நிறுவனத்தின் நோக்கம் என்ன? எதற்காக வணிக நிறுவனம் அமைப்பதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறோம்?

பதில்:
1. பணம் சம்பாதிக்கிறது! தொழில் நடத்தி நிறைய சம்பாதிக்கிறதுதான் முதல் நோக்கம்.
2. அடுத்ததா வேணும்னா அடுத்தவங்களுக்கு சேவை செய்றது என்று வைத்துக் கொள்ளலாம்.

திருத்தம்:
அப்படியா? பணம் சம்பாதிக்கிறது வேறு, சேவை செய்றது வேறு என்று நினைக்கிறீங்களா?
பணி செய்தால் சம்பளம் கிடைக்கும். பணி செய்வதற்கும் சம்பளம் கிடைப்பதற்கும் ஒரு உறவு இருக்கிறது.

இன்னொரு பக்கம் கிரிக்கெட் பார்க்கப் போனால், வேலைக்குப் போக முடியாது. கிரிக்கெட் பார்க்கப் போவதற்கும் வேலைக்குப் போவதற்கும் ஒரு உறவு இருக்கிறது.

சேவை செய்வதற்கும் பணி செய்வதற்குமான உறவு எதைப் போன்றது? ஒன்றுக்கொன்று நேரடி உறவுடையதா, அல்லது எதிர்மறை உறவுடையதா? ஒரு நிறுவனம் நல்ல சேவை கொடுக்கிறதா என்பதற்கான அளவு கோல்தானே சம்பாதிக்கும் பணம்?

நாம் நல்ல சேவை கொடுத்ததாகச் சொல்லிக் கொள்கிறோம். அது உண்மைதானா, நம்முடைய சேவையின் நன்மை என்ன என்று எப்படி அளப்பது? எப்படி மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்? அதுதான் ஈட்டும் பணம்.

இன்போசிஸ் 16000 கோடிகள் சம்பாதித்தது என்று சொன்னால், அவர்கள் சேவைகளை வாங்கிப் பலனடைந்த வாடிக்கையாளர்கள் 16000 கோடி ரூபாய்கள் இன்போசிஸ்ஸுக்குக் கொடுத்தார்கள் என்று பொருள். சேவை செய்வதன் அளவு கோல்தான் பணம்.

அதனால் நிறுவனத்தின் நோக்கம் என்று கேட்டால், பணம் சம்பாதிப்பது என்று மட்டும் சொன்னால் போதும். பணம் எப்படிச் சம்பாதிக்கலாம், சேவை அளிப்பதன் மூலம்.

அல்லது நிறுவனத்தில் நோக்கம் சேவை செய்வது என்று சொன்னால் போதும். எவ்வளவு சிறப்பாகச் சேவை செய்திருக்கிறோம் என்பதைப் பார்க்க வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை அளவிட்டுக் கொள்ள வேண்டும்.

'நான் நல்லா சேவை செய்தேன், ஆனால் பணம் வந்து சேரவில்லை' என்று சொன்னால் பொருள் இல்லை. நல்லா சேவை செய்திருந்தால் அதை வாங்கியவர் மனமுவந்து பணமும் கொடுத்திருப்பாரே!

'சில இடங்களில் சேவை நல்லா இல்லாமலேயே பணம் வாங்கி விடுகிறார்கள். டாடா உடுப்பி உணவு விடுதியை எடுத்துக் கொள்ளுங்கள். விலை இவ்வளவு அதிகம், அதற்கு ஏற்ற தரம் இல்லைதான். அங்கு போய்ச் சாப்பிடுபவர்கள் பணம் கொடுத்து விட்டுதான் வெளியில் வர வேண்டும். அவர்கள் பணம் கொடுக்கும் போது திருப்தி இல்லாமல் கொடுத்தாலும், அதை அளவிட்டால் டாடா உடுப்பி மிகச் சிறந்த சேவை அளிப்பதாக ஆகி விடுமே!'

அதுவும் சரிதான். சேவையின் சிறப்பை அளக்க பணம் ஒரு முக்கியமான அளவீடு. ஆனால், பணம் மட்டும் சரியான அளவீடாக இருக்க முடியாது. ஏனென்றால் பொருளாதார அமைப்பின் இயல்பால் எல்லோரும் சமமான நிலையில் இருந்து சேவைகளை வாங்கவும் விற்கவும் முடியாது. சில பண்டமாற்றுகளில் ஒருவரின் கை ஓங்கி இருக்கும். அவர் கொடுக்கும் சேவையை விட அதிகமான பணத்தை வாங்கி விடவோ, வாங்கிய சேவையை விட குறைவான பணத்தை கொடுத்து நகர்ந்து விடவோ முடியும்.

ஆகவே இரண்டாவதாக பார்க்க வேண்டியது, சம்பாதித்த பணம் என்ற அளவீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். இன்னும் புகுந்து பார்த்தால்தான் உண்மையான நிலவரம் வெளியில் வரும்.

பேர்வளம்

பிராண்டிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பேர்வளம் உருவாக்குவதைப் பற்றி பலராமன் என்பவர் நேற்றைக்கு ஏசிடெக் லெதர் அண்ட் ஃபுட்வியர் அலுமினி அசோசியேஷன் கூட்டத்தில் பேசினார். மிகவும் நன்கு தயாரிக்கப்பட்டு மனதில் பதியும் படி பேசினார்.

தோல் ஒரு மலிபொருள். ஆங்கிலத்தில் கமாடிடி எனப்படும் இந்த மலிபொருட்களுக்கான சந்தைகளின் இயல்புகளை விவரித்தார். மலிபொருட்களாக விற்பவர்களுக்கு ஆதாயம் குறைவாகத்தான் கிடைக்கும். நுகர்வோருக்கு அருகில் இருக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

தோலைப் பொறுத்த வரை பேர்வளம் உருவாக்கி நுகர்வோருக்கு நுகர்பொருட்களை விற்கும் நிறுவனங்கள், எதை விற்பது, எந்த விலைக்கு விற்பது என்பதைத் தீர்மானித்து பெருவாரியான ஆதாயத்தையும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரிப்பையும் பெறுகிறார்கள்.

'பேர்வளம் உருவாக்குதல் பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும், அல்லது நிறைய பணம் செலவாகும் ' என்று நினைப்பது முற்றிலும் உண்மை இல்லை. சரவணபவனில் ஆரம்பித்து சக்தி மசாலா, தவிட்டு எண்ணைய் பேர்வளம் என்று பலர் மலிபொருள் சந்தையில் பேர்வளம் உருவாக்கி பெரிதாக வளர்ந்தவர்கள்.

பேர் வளம் உருவாக்க என்ன வழிமுறை:

1. வாடிக்கையாளர் எப்படி வேலை செய்கிறார், என்னென்ன விரும்புகிறார், எப்படி வாழ்கிறார், எப்படி பிறருடன் உறவு வைத்திருக்கிறார் என்று ஆழமாக அவதானித்துப் பார்க்க வேண்டும்.

2. வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் ஆழமான விருப்பம் ஒன்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

3. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருள் அல்லது சேவை ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும்.

4. அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதை வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து நாளுக்கு நாள் புதிய புதிய நுணுக்கங்களைப் பின்பற்றி விருப்பம் நிறைவேறுதலை மேம்படுத்திக் கொண்டே போக வேண்டும்.

நம்முடைய நிறுவனத்தைப் பொறுத்த வரை, வாடிக்கையாளரின் நடவடிக்கைகள் குறித்த புரிதல்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் விபரமாகத் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் விருப்பம் அல்லது தேவை, தம்முடைய தொழில் நன்கு வளமடைய வேண்டும், அதற்குத் தேவையான தகவல்கள், முடிவுகள் சரியான நேரத்தில் சரியான நபருக்குக் கிடைக்க வேண்டும்.

தகவல்களைத் திரட்டுதல், சேமித்தல், எடுத்தல், வழங்குதல் என்ற நான்கு படிகளையும் முறைப்படி செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் மனதின் விருப்பம் அல்லது தேவையை நிறைவேற்றலாம். இது தோல் நிறுவனம் நடத்துபவர்களுக்கும், பொருள் உற்பத்தியாளர்களுக்கும், பொருள் விற்பவர்களுக்கும், பொருள் நுகர்வோருக்கும் பொருந்தும். அதுதான் நமது குறிக்கோள்.

தகவல்களை திரட்டி சேமித்து எடுத்து வழங்குதல் ஒவ்வொரு துறையிலும் மிகவும் தேவையான ஒன்று. கூகுள் இணையத்தில் இருக்கும் தகவல்களை எல்லாம் திரட்டி, சீராக சேமித்து வைத்து, தேவைப்படும் போது வசதியாக வெளியில் எடுத்து, பயனரின் விருப்பப்படி வழங்குகிறது. நாமும் அப்படி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

தகவல்களை திரட்டுதல் - நமது மென்பொருளுக்குள் தரவுகளை உள்ளிடுதல். இதில் புதிய புதிய தொழில் நுட்பங்களுடன், பயனர் எப்படி பணி புரிகிறார் என்ற புரிதலும் அவசியம்
சேமித்தல் - தொழில் நுட்பம் தொடர்பான நுணுக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
எடுத்தல் - பயனர் கேட்கும் போது கேட்ட விபரத்தை வேகமாக எடுக்க முடிதல்.
வழங்குதல் - தேடுகருவி அல்லது அறிக்கைகள், அல்லது ஆவணங்கள், அல்லது மின்னஞ்சல், அல்லது அச்சுப் பிரதி என்று பல வகையில் தகவல்களை எடுத்துக் கொடுக்க முடிய வேண்டும்.

1. தொழில் நுட்பக் குழு இப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படலாம்.
2. இந்த பேர்வளக் குறிக்கோளை குழுவினருக்கு வாடிக்கையாளருக்கு, பணம் கொடுப்பவருக்கு என்று எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.