Wednesday, March 27, 2019

இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி

“ஒரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் வெளியாகியிருந்தது. மணிந்தர் தபஸ் என்பவர் எழுதியிருந்தார்.

தேர்தலில் மோடி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாவதால் டாலர் முதலீடு அதிகரிக்கிறது என்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே புல்வாமாவுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்திருப்பதாலும் ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றும் இணைக்கப்பட்ட புளூம்பெர்க் செய்தியிலிருந்து காப்பி பேஸ்ட் செய்திருந்தார். மோடி ஆட்சியில் இருந்த போதே ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ந்தது என்று விளக்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கும் ரூபாய் மதிப்புக்கும் என்ன தொடர்பு என்றால் இந்தப் போர் பதற்றத்தின் காரணமாக மோடி ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம். அதாவது, ஒரே ஒரு காரணம்தான் அவரது கண்டுபிடிப்பு. மோடி தேர்தலில் ஜெயிக்கப் போகிறார், வெளிநாட்டுக் காரர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் டாலரை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். 5 வருஷமா எங்க போனாங்கன்னு கேட்க வேண்டும்!

இணைக்கப்பட்ட புளூம்பெர்க் செய்தி -  India's Rupee Just Went From Asia's Worst to Best Currency-ல் சில புள்ளிவிபரங்களைக் கொடுத்திருந்தனர். மார்ச் 18 அன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் $330 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியிருக்கின்றனர். ஒரே நாளில் உள்ள வந்த இந்த டாலர் அளவு அந்த தேதி வரையில் இந்த ஆண்டின் முதல் இரண்டரை மாதங்களில் வந்த டாலர் வரத்தக்கு இணையானது. அன்னிய முதலீட்டாளர்கள் தமது கடன் பத்திரங்களின் கையிருப்பை $140 கோடி டாலர் அளவுக்கு உயர்த்தியிருக்கின்றனர்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்திய ரூபாயின் மதிப்பை குறுகிய காலத்தில் ஏற்றுவதோ, இறக்குவதோ பங்குச் சந்தையிலும், கடன் பத்திரச் சந்தையிலும் அன்னிய நிதி நிறுவனங்களின் வரத்தும் போக்கும்தான்.

கடந்த ஒரு மாதமாக அதிகமாக டாலர் இந்தியச் சந்தைகளுக்குள் வருவதற்கு வேறு என்ன காரணம்?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதங்களை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு/கடன் சந்தைகளில் டாலர் வரத்தை அதிகரிக்கும் என்று சொல்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்தி. இது புளூம்பெர்க் குவிண்ட் செய்தியிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது கைவசம் இருக்கும் அரசு கடன் பத்திரங்களை விற்பதை செப்டம்பரில் முடித்துக் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து அமெரிக்க டாலருக்கான வட்டி வீதத்தை குறைத்திருக்கிறது. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக லாபத்தைத் தேடி பிற நாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள்.

இரண்டாவதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் டாலர் ஸ்வாப் வசதியை பயன்படுத்துவதற்காக வங்கிகள் டாலரை இங்கு கொண்டு வருகின்றன என்ற செய்தி. இந்த ஸ்வாப் முறையின் கீழ் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடமிருந்து டாலர்களை வாங்கி ரூபாயை விற்க முன் வந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டாலர்களை குறிப்பிட்ட ரூபாய் மதிப்பில் (இப்போதைய மதிப்பை விட அதிகமாக இருக்கும்) வங்கிகளுக்கு திருப்பித் தரும். எவ்வளவு கூடுதல் விலை வங்கிகள் கேட்கின்றன என்பது மார்ச் 26 அன்று ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்.

அதாவது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டாலருக்கு எத்தனை ரூபாய் என்று பந்தயம் கட்ட வேண்டும்.

இந்தத் திட்டத்தின்படி ரிசர்வ் வங்கி சுமார் $500 கோடி வங்கிகளிடமிருந்து வாங்கவிருக்கிறது. அதற்கு பதிலாக ரூ 35,000 கூடுதல் ரூபாய் வங்கிகளிடம் சேரும்.

இந்த டாலர் ஸ்வாப் முறையை ரிசர்வ் வங்கி முதல் முறையாக பயன்படுத்துகிறது.

வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு ரிசர்வ் வங்கி பின்பற்றும் வழக்கமான நடைமுறை, சந்தையில் (வங்கிகளிடமிருந்து) இருந்து அவை கைவசம் வைத்திருக்கும் அரசு கடன் பத்திரங்களை பணம் கொடுத்து வாங்குவது. அதன் மூலம் வங்கிகளின் பணக்கையிருப்பு அதிகரிக்கும்.

அதைச் செய்யாமல் இந்த புதிய உத்தியை ரிசர்வ் வங்கி ஏன் பயன்படுத்துகிறது, என்று கேள்வி.

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஏற்கனவே ரூ 2.9 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து வாங்கியிருக்கிறது.  இவ்வாறு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அவற்றின் வட்டி வீதம் குறைகிறது. எனவே, அரசு புதிய கடன் பத்திரங்களை வெளியிடுவதை அது எளிதாக்குகிறது. இதை ஒரு வரம்புக்குள் வைக்க ரிசர்வ் வங்கி விரும்புவதால் மேலும் கடன் பத்திரங்களை வாங்க விரும்பாமல் இருக்கலாம்.

வங்கிகள் தமது வைப்புத் தொகைகளின் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக் கடன் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளில் ஒன்று. இப்போது வங்கிகளின் வைப்புத் தொகையில் சராசரி 27.9% அரசு கடன் பத்திரங்களாக அவற்றிடம் உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும்  19.25%-ஐ விடக் கணிசமாக அதிகம்.

மேலும், எதிர்கால தேதியிட்டு பெரும் அளவிலான டாலர்களை விற்க முன்வருவதன் மூலம் எதிர்கால செலாவணியின் பிரீமியத்தை குறைக்க முயற்சிக்கிறது, ரிசர்வ் வங்கி. இதன் விளைவாக கடன் வாங்குபவர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த குறை பிரீமியத்தால் ஈர்க்கப்பட்டு அதிக அளவிலான டாலர் இந்தியச் சந்தைக்குள் பாயும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கலாம். இதிலும் வரும் டாலர் ஒரு கட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் போதோ, லாபமாகவோ திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். எனவே, இது ரூபாயின் மதிப்பை நீண்ட கால நோக்கில் அதிகரித்து விடப் போவதில்லை.

மூன்றாவதாக, குறுகிய கால நோக்கில் (மேலே சொன்ன காரணங்களால்) ரூபாய் மதிப்பு அதிகரிப்பதை ரிசர்வ் வங்கி விரும்பவில்லை. இவ்வாறு $500 கோடி மதிப்பிலான டாலரை வாங்குவதன் மூலம் ரூபாய் மதிப்பு அதிகரிப்பை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆதாரங்கள் எதுவும் இல்லாத ஒரு காரணி உள்ளது. இந்தியத் தேர்தலை ஒட்டி வெளிநாடுகளில் தமது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களது பினாமி நிறுவனங்களும் அதைச் செலவழிப்பதற்காக பங்குச் சந்தை வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவது நடந்து கொண்டிருக்கலாம்.

உண்மையில் நமது நாட்டுப் பணத்தின் மதிப்பு உயர வேண்டுமானால், நாம் அதிக மதிப்பிலான பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். அது சர்வதேச அளவில் நமது வர்த்தக வலிமையை அதிகரிக்க வேண்டும்.

அது வரை, இது போல கடன் வாங்கி கல்யாணம் செய்வது போல, மேலும் மேலும் கடன் சுழலில் சிக்கி தவிக்க வேண்டியதுதான்.

Tuesday, March 26, 2019

இந்திய ரூபாய் சர்வதேச நாணயம் ஆக எப்போது மாறும்?

ரு காகிதம் அல்லது உலோகத் துண்டு எப்போது பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது?
  • கட்டிடத் தொழிலாளி ஒருவர் வார இறுதியில் தனது ஒருவார உழைப்புக்குக் கூலியாக ரூபாய் நோட்டுகளை ஏன் வாங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்?
  • தனது ஒரு மாத உழைப்புக்கு ஊதியமாக மாத இறுதியில் வங்கிக் கணக்கில் ரூபாய் வரவு வைக்கப்படுவதை ஒரு ஐ.டி ஊழியர் ஏன் ஏற்றுக் கொள்கிறார். 
அவர்கள் தமக்குக் கிடைக்கும் ரூபாயை எப்படி பயன்படுத்துகின்றனர்? அந்தப் பணத்தை பயன்படுத்தி அவர்கள் தமக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் வாங்க வேண்டும்; சக குடிமக்களும், நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்த பொருட்களையும், சேவைகளையும் (கூலியாக/சம்பளமாக ஈட்டிய) ரூபாயை பெற்றுக் கொண்டு விற்பதற்கு  தயாராக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களை ரூபாயை பணமாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

இந்த நம்பிக்கை நாடு தழுவிய அளவில் செயல்படுவதற்கு நாட்டு அரசின் அங்கீகாரமும், அரசின் நம்பகத்தன்மையும், வலிமையும் அவசியம். போலி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாமல் தடுப்பதற்கான போலீஸ் வலிமை, தேவைக்கு அதிகமாக நோட்டுகளை வெளியிட்டு விடாத பொறுப்பு இவை அரசுக்கு இருக்க வேண்டும்.

அது இல்லாமல் போகும் போது ஜிம்பாப்வேயில் 2000-2009 வரையிலும், சீனாவில் 1940-களிலும், ஜெர்மனியில் 1920களிலும், இப்போது சமீபத்தில் வெனிசுலாவிலும் நிகழ்ந்தது போல நாட்டின் பணம் மதிப்பை இழந்து விடும். இறுதியில் அந்தப் பழைய பணத்தை கைவிட்டு புதிய பணத்தை நாட்டு அரசு வெளியிடுவதாகவோ, அல்லது முற்றிலும் வெளிநாட்டு நாணயம் ஒன்றை பயன்படுத்த ஆரம்பிப்பதாகவோ முடிகிறது.

இந்தப் பின்னணியில் ஒரு நாட்டின் நாணயம் சர்வதேச நாணயமாக எப்படி ஆக முடியும் என்று பார்க்கலாம்.

ஒன்று, அந்தப் பணத்தை வைத்து தம் நாட்டுக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் பிற நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்வதற்கு நாணயம் வெளியிடும் நாட்டின் பொருளாதார வலிமை அடிப்படையாக இருக்கிறது.

பொருளாதார ரீதியாக உலகம் முழுவதும் காலனிய அதிகாரமாக கால் பதித்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் 19/20-ம் நூற்றாண்டுகளிலும், அதே போல உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலர் 20/21-ம் நூற்றாண்டிலும் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

உலகப் பொதுப்பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாட்டு அரசுக்கு அதன் மூலம் பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பொறுப்பும் அந்த நாட்டுக்கு இருக்கிறது.
  • போலி டாலர்கள் அச்சிடப்படாமல் தடுக்க வேண்டும்.
  • வங்கித் துறையை நம்பகமானதாக கட்டிக் காக்க வேண்டும்.
  • டாலரின் முதன்மை இடத்தைத் தக்க வைப்பதற்கு ஏற்ற பொருளாதார நடவடிக்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் எடுக்க வேண்டும்.
  • அது மட்டும் போதாது, சர்வதேச நாணயமாக தக்க வைத்துக் கொள்வதற்கான சர்வதேச அரசியல் ராணுவ நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்கேற்ற அரசியல், ராணுவ வலிமை இருக்க வேண்டும்.
ஆனால், இறுதிக் கணக்கில் தீர்மானகரமானதாக அமைவது அந்த நாட்டுக்குள் நடக்கும் பொருளாதார உற்பத்தி, மதிப்பு சேர்க்கும் நடவடிக்கைதான்.

அதனால்தான் சுமார் 40 ஆண்டுகள் உலகின் உற்பத்திக் களமாக செயல்பட்ட சீனாவின் யுவான் இப்போது பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படும் சர்வதேச நாணயமாக உருவெடுத்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு சவால் விட முயற்சிக்கிறது.

இது போல இந்திய ரூபாய் சர்வதேச அரங்கில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக மாற வேண்டுமானால், இந்தியாவின் பொருளாதாரம் மனித சக்தி ரீதியாகவும் சரி, தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, இயற்கை வளங்களை பயன்படுத்துவதிலும் சரி சுயேச்சையாக செயல்பட வேண்டும். நமது பொருளாதார செயல்பாடு நம் உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

மாறாக, வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற சார்பு நிலை முதன்மையாக இருந்தால் இந்திய நாணயம் பிற நாட்டு நாணயங்களுக்குக் கீழ்ப்பட்ட இரண்டாம் நிலையிலேயே இருந்து வரும்.

ஆங்கிலத்தில் இந்தக் கேள்விக்கு விடை

Sunday, March 24, 2019

ஜி.டி.பி என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது?

ந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எப்படி கணக்கிடப்படுகிறது என்று ஒரு கேள்வி.

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் சந்தையில் நிகழும் பொருளாதார பரிவர்த்தனைகளின் மதிப்பை கணக்கிடுவது. அதன் மூலம் அந்த நாட்டில் குறிப்பிட்ட ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட மதிப்பு எவ்வளவு என்பதை கண்டறிவது. இதன் மூலம் நாடு முன்னேறுகிறதா, தேங்குகிறதா, பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டின் பொருளாதார வாழ்வு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இது எப்படி கணக்கிடப்படுகிறது?

கூலி, சம்பளம், லாபம், வாடகை என்று பல வகைகளில் வருமானம் பெறும் தனிநபர்கள் அவற்றை பயன்படுத்தி தமக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் சந்தையில் வாங்குவது ஒரு புறம், இன்னொரு புறம் தானாக உழைத்தோ, வேலைக்கு ஆட்களை வைத்து கூலி கொடுத்தோ அந்த பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் வணிக நிறுவனங்கள்/தனிவணிகர்கள்.

இந்த இரண்டும் பரிவர்த்தனையின் இரண்டு பக்கங்கள். இந்தப்பக்கம் கூலி வாங்கி அந்தப் பக்கம் பொருட்களை வாங்க செலவிடுகின்றனர். அந்தப் பக்கம் பொருட்களை விற்றுக் கிடைக்கும் பணத்தை கூலியாக கொடுக்கின்றன வணிக நிறுவனங்கள். இது அடிப்படையானது.

இதற்கு மேல்

2. நிறுவனங்கள் புதிய முதலீட்டுக்காக தங்களுக்குள் வாங்கி/விற்கும் பொருட்கள்/சேவைகள் 3. அரசு வரி விதிப்பது, சம்பளம் கொடுப்பது, சேவைகளை வழங்குவது
4. ஏற்றுமதி/இறக்குமதி

இவற்றையும் சேர்த்து கணக்கிட்டால் நாட்டில் ஒரு ஆண்டில் நிகழ்ந்த மொத்த பொருளாதார செயல்பாடுகளையும் தொகுத்துக் கொள்ள முடியும்.
இதை கணக்கிடுவதற்கு வருவாய் முறை (கூலி, சம்பளம், வட்டி, லாபம், வாடகை என்று அனைத்து வருமானங்களையும் கணக்கெடுப்பது), உற்பத்தி முறை (உற்பத்தி ஆகும் பொருட்களின் மதிப்பை அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் உள்ளீட்டுப் பொருட்களின் மதிப்பிலிருந்து கழித்து உற்பத்தியில் நிகழ்ந்த மதிப்புக் கூடுதலை கணக்கிடுதல்), செலவுகள் முறை (அனைத்து செலவினங்களையும் கணக்கெடுப்பு எடுத்த கூட்டுவது), என்று மூன்று முறைகளை பின்பற்றுகின்றனர். இந்த மூன்று வழிகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரே அளவினதாகக் கிடைக்க வேண்டும். இந்தத் தரவுகளை திரட்டுவதிலும், கணக்கிடுவதிலும் பல விடுபடுதல்கள், கூடுதல் குறைகள் இருக்க இவற்றை சரிக்கட்டி கணக்கிடுவது அரசின் முக்கியமான வேலையாக இருக்கிறது.

இதில் சொந்த பயன்பாட்டுக்காக செய்யப்படும் வேலைகளான சொந்த குடும்பத்துக்கான சமையல், வீட்டு பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவை, வீட்டுத் தோட்டத்தில் பயிரிடுதல் போன்றவை சேர்க்கப்படுவதில்லை.

சந்தை பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் அழிவு, கல்வி, மருத்துவம் மறுக்கப்படுவது போன்றவற்றின் எதிர்மறை விளைவுகளையும் இது கணக்கிடுவதில்லை.

இன்னொரு புறம் நமது உற்பத்திப் பொருட்களை அவற்றின் மதிப்பை விடக் குறைந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கிச் சென்று, நாம் அவர்களது உற்பத்திப் பொருட்களை மதிப்பை விட அதிக விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதன் உண்மை மதிப்பை விடக் குறைவாக தோன்றும்.


இது பற்றி ஜான் ஸ்மித் எழுதிய ஜி.டி.பி மாயை என்ற கட்டுரையை படிக்கலாம்.
ஆங்கில மூலம் GDP Illusion

இந்தப் பதிவின் ஆங்கில வடிவம் What is GDP? How is the GDP of India calculated?

Thursday, March 21, 2019

மைண்ட்-ட்ரீ மீது காதலாம், தூக்கிப் போகத் துடிக்கும் எல்&டி

மைண்ட்-ட்ரீ என்ற ஐ.டி சேவை நிறுவனத்தின் மீது கண் வைத்திருக்கிறது எல்&டி. ஏற்கனவே, ஒரு ஐ.டி சேவை நிறுவனத்தை நடத்திவரும் எல்&டிக்கு, இதையும் வாங்கிப் போடலாம் என்று நப்பாசை.  கைநிறைய பணம் இருக்கிறது, ஐ.டி சேவைத் துறையில் நல்ல லாபம் கிடைக்கிறது என்று கிடைக்கும் வாய்ப்பை தட்டிச் செல்லப் பார்க்கிறது.

முன்னாள் விப்ரோ துணை சேர்மன் அசோக் சூடா தலைமையில் ஐ.டி துறையில் வேலை அனுபவம் கொண்ட 10 ஊழியர்கள் 1990-களின் இறுதியில் மைண்ட்-ட்ரீ என்ற ஐ.டி சேவை நிறுவனத்தை ஆரம்பித்தனர். அதில் கபே காபி டே-வை தொடங்கியவரான சித்தார்த்தா 6.5% பங்குகளை பெற்றுக் கொண்டார், மைண்ட்-ட்ரீக்கு அலுவலக வசதியை செய்து கொடுத்தார்.

2007-ம் ஆண்டில் மைண்ட்-ட்ரீ $70 கோடி (சுமார் ரூ 3500 கோடி) விற்பனை வருவாயை எட்டியதும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2012-க்குள் $100 கோடி விற்பனையை எட்ட வேண்டும் என்று 2006-ல் இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்தது. காலக்கெடுவை இரண்டு முறை நீட்டித்தும் இந்த ஆண்டு வரை அந்த இலக்கு எட்டப்படவில்லை. 2019 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனையில் பாதியை டிஜிட்டல் சேவை வணிகத்தில் துறையில் ஈட்டியிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி 2018-க்குப் பிறகு 52% உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான் சித்தார்த்தா தன் கைவசம் இருக்கும் மைண்ட்-ட்ரீ நிறுவனத்தின் 20% பங்குகளை விற்பதற்கு விரும்புகிறார். சென்ற ஆண்டே மைண்ட்-ட்ரீ இயக்குனர் குழுவில் இருந்து விலகி விட்டு, தான் பங்குகளை யாரிடமாவது விற்கப் போவதாக மைண்ட்-ட்ரீ உரிமையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பங்குகளை விற்கப் போவதாக பொதுவில் அறிவித்திருக்கிறார். சித்தார்த்தாவின் கபே காபி டே இயக்குனர் குழு இந்தப் பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கியிலிருந்து ரூ 3,000 கோடி கடன் பெற்று அந்தப் பங்குகளை அடகு வைத்திருந்த நிறுவனங்களிடமிருந்து அவற்றை மீட்டு விற்பதற்கு வசதியாக ஒரு எஸ்க்ரோ கணக்கில் போட்டு விட்டார், சித்தார்த்தா.

இப்போது எல்&டி நிறுவனம் சித்தார்த்தாவின் 20.3% பங்குகளை ரூ 3,269 கோடிக்கு வாங்கப் போவதாகவும் இன்னும் ரூ 7,464 கோடி வரை செலவழித்து சுமார் 46% (31%) பங்குகளை பிற பங்குதாரர்களிடமிருந்து வாங்க முன்வருவதாகவும் மார்ச் 18-ம் தேதி அறிவித்திருக்கிறது. இவ்வாறு மைண்ட்-ட்ரீயில் தனது பங்கு கையிருப்பை 66.32% ஆக உயர்த்துவதற்கு எல்&டி ரூ 11,000 கோடி செலவளிக்க திட்டமிட்டிருக்கிறது.

இடது புறம் எல்&டி தரப்பு, வலது புறம் மைண்ட்-ட்ரீ போராளிகள் (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)

இரண்டு நிறுவனங்களும் இணையும்போது ஒன்றையொன்று வலுப்படுத்துவதாக அமையும் என்கிறது எல்&டி. ஆனால், மைண்ட்-ட்ரீயின் உரிமையாளர்கள் கிருஷ்ணகுமார் நடராஜன், என்.எஸ் பார்த்தசாரதி, ரோஸ்தோவ் ராவணன், சுப்ரதோ பாக்சி அதை எல்&டியிடம் விற்க விரும்பவில்லை. எல்.&டியின் இந்தத் தாக்குதலை எதிர் கொள்ள ஒடிசா பணித்திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்த பாக்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு பெங்களூருவுக்கு திரும்பி மைண்ட்-ட்ரீயில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.

இந்த இரண்டு நிறுவனங்களின் நிதி நிலை எப்படி இருக்கிறது?

எல்&டி குழுமத்தின் மொத்த விற்பனையில் 75% பொறியியல், 5% உற்பத்தி, 15% ஐ.டி முதலாள சேவைத் துறையில் கிடைக்கிறது. ஐ.டி உள்ளிட்ட சேவைத் துறையில் கிடைக்கும் நிகர லாபம் 15-16% மற்ற துறைகளை விட அதிகம். எனவே, ஆண்டு தோறும் குவிக்கும் லாபத்தை புதிதாக முதலீடு செய்ய இந்தத் துறையில் வாய்ப்புகளை தேடுகிறது.

2019 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் (ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 வரை)

விற்பனை நிகர லாபம் பணக் கையிருப்பு
எல்&டி ஐ.டி 6,959.80 1,136.90 2,032.80
எல்&டி குழுமம் 95,323.20 4,878.80 23,900.00
மைண்ட்-ட்ரீ 5,182.10 555.70 973.60

மைண்ட்-ட்ரீ எல்&டி குழுமத்தின் முன்பு ஒரு சின்ன ஆளாக உள்ளது. தனது ரூ 23,900 கோடி பணக்கையிருப்பை எங்கு போட்டு லாபம் ஈட்டுவது என்று தேடி அலைகிறது. மைண்ட்-ட்ரீ பங்குகளை வாங்கி அதன் நிர்வாகத்தை கைப்பற்றி விட்டால் கணிசமாக லாபம் ஈட்ட முடியும் என்று நினைக்கிறது.

ஆனால், மைண்ட்-ட்ரீ முதலாளிகள் எல்&டியிடம் போய்ச் சிக்க விரும்பவில்லை. அவர்கள் சித்தார்த்தா தனது பங்குகளை ஏதாவது நிதி மூலதன நிறுவனத்திடம் விற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால்,  KKR, பேரிங் போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்களை அணுகிய போது, அவை தங்களுக்கு "இயக்குனர் குழுவில் இடம் வேண்டும், மாதாந்திர அறிக்கைகள் வர வேண்டும், உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் வேண்டும், செயலூக்கமான பங்களிப்பு வேண்டும்" என்று நிர்வாகத்தில் தலையிடும் வகையில் நிபந்தனை விதித்திருக்கின்றனர். அவர்கள் சித்தார்த்தாவை போல பணத்தை கொடுத்து விட்டு ஒதுங்கி இருக்க மாட்டார்கள். நிர்வாகத்துக்குள் நுழைந்து கையை முறுக்கத்தான் முயற்சிப்பார்கள்.

மைண்ட்-ட்ரீ அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பங்குகளை பங்குச் சந்தையிலோ அல்லது இயக்குனர் குழுவில் சேர வேண்டும் என்று நிபந்தனை விதிக்காத தனியார் முதலீட்டு நிறுவனங்களிடமோ விற்கும்படி சித்தார்த்தாவிடம் சொல்லியிருக்கிறார்கள். சந்தையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்கப்பட்டால் பங்கு விலை கணிசமாக சரியும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களோ கடும் நிபந்தனைகளை விதிக்கின்றன.

சித்தார்த்தாவின் பங்குகளை வாங்கும்படி கேட்டு ஜனவரி மாதம் வங்கிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளை அணுகினர். குடும்ப முதலீட்டு நிறுவனங்களான பிரேம்ஜி முதலீட்டு நிறுவனம், பட்னி ஆகியவையும் அணுகப்பட்டன. அவர்கள் அனைவரும் பேரிங் பங்குகளை வாங்க விரும்பும் போது அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கின்றனர்.

எல்&டி ஆரம்பத்தில் மைண்ட்-ட்ரீ நிர்வாகத்தின் ஒப்புதலுடன்தான் சித்தார்த்தாவின் பங்குகளை வாங்க விரும்ப நினைத்திருக்கிறது. ஆனால், எல்&டியிடம் நிர்வாகக் கட்டுப்பாடு போய் விட்டால் தங்களது நிறுவன கலாச்சாரம் மாறி விடும் என்று சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர் மைண்ட்-ட்ரீ முதலாளிகள். இறுதியில் எல்&டி அவர்களது சம்மதம் இல்லாமலேயே மைண்ட்-ட்ரீயை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி விட்டது.

பெண்ணின் அப்பாவின் சம்மதத்தோடு பெண் கேட்டு பார்த்து, அவர் மறுத்து விட்ட பிறகு இப்போது தனது பணபலம், படை பலம், ஆள் பலத்தை ஏவி தூக்கிக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறது எல்&டி.

சிறிய நிறுவனங்கள் பெரிய ஐ.டி நிறுவனங்களோடு இணைக்கப்படும் போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் நிறுவனம் எல்&டியோடு இணைக்கப்பட்டால் அது வணிக மதிப்பை குறைப்பதாகவும், நிர்வாக அறம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழி வகுப்பதாகவும் இருக்கும் என்று மைண்ட்-ட்ரீ முதலாளிகள் கருதுகின்றனர்.

எல்&டி "புல்டோசர்கள், கிரேன்கள் சகிதம் சொத்தை அள்ளிப் போவதற்கு வாசலில் வந்து நிற்கிறது" என்று பதறுகின்றனர். "இப்படி எல்லாம் நடந்தால் ஐ.டி துறையி்ல யாரும் புதிய நிறுவனம் தொடங்க மாட்டார்கள், நாடு முன்னேறாது" என்று தேசபக்த வேடம் பூண்டு பயமுறுத்துகின்றனர்.

"நாங்கள் மைண்ட்-ட்ரீயை காதலுடன் அணுகுகிறோம், எங்கள் உள்ளத்திலிருந்து இந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்" என்று அன்பாக பேசுகிறது எல்&டி. "முதலீட்டாளர்களாகத்தான் வருகிறோம், மைண்ட்-ட்ரீயை தனி நிறுவனமாக பராமரிப்போம்" என்கிறது. "எங்களிடம் புல்டோசர்களும், கிரேன்களும் மட்டும் இல்லை. நாங்கள் நாட்டுக்காக நீர்மூழ்கிக் கப்பல்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், துப்பாக்கிகள் உற்பத்தி செய்கிறோம். எங்களது ரேஞ்சே வேற. நாங்கள் நிர்வாக ஒழுங்கிலும், கொள்கைகளிலும் உயர் தரத்தை பின்பற்றுகிறோம்" என்று தன் பங்குக்கு தேச பக்த சான்றுகளை காட்டுகிறது

பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை வாங்க முன்வருவதாக சொல்லியிருக்கும் எல்&டியின் அறிவிப்பு பற்றி மைண்ட்-ட்ரீ இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு தங்கள் பரிந்துரையைச் சொல்ல வேண்டும். எல்&டியிடம் பங்குகளை விற்பது நல்லதா இல்லையா என்று அறிவிக்க வேண்டும். இதற்காக சுயேச்சையான இயக்குனர்கள் ஒரு கமிட்டி அமைத்து பரிசீலிக்க வேண்டும்.

இதில் எல்.ஐ.சி முதலான நிதி நிறுவனங்களின் முடிவு தீர்மானகரமானதாக அமையும். அவர்களது ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மைண்ட்-ட்ரீ நிர்வாக இயக்குனர்கள் சொல்கின்றனர்.  எல்&டியோ அவர்கள் எல்லாம் ஏற்கனவே எல்&டியில் பங்கு வைத்திருப்பவர்கள், எங்களுக்கு நல்ல தோஸ்துகள்தான் என்று நம்பிக்கையுடன் சொல்கிறது.

டுவிட்டரில் ஊழியர்கள் மைண்ட்-ட்ரீ நிர்வாகத்துக்கு ஆதரவாக பெருமளவு ட்வீட் செய்திருப்பதை போய்ப் பார்க்கும்படி மைண்ட்-ட்ரீ தரப்பு பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறது. பொதுவாக ஊழியர்கள் மைண்ட்-ட்ரீயில் வேலை செய்வதை விரும்புகிறார்கள் என்கிறார் எகனாமிக் டைம்ஸ் நிருபர்.



இதற்கிடையில் மைண்ட்-ட்ரீ பெங்களூரு அலுவலகத்தில் ஊழியர்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். வேலை வழக்கம் போல நடக்கிறது. எங்கு போனாலும் மாடாக உழைக்க வேண்டும், தேவை இல்லாத போது தூக்கி எறியப்படுவோம் என்பதுதான் விதியாக இருக்கும் என்ற போது யார் கம்பெனியை கைப்பற்றப் போகிறார்கள் என்பதில் அவர்களுக்கு பெரிய அக்கறை இருக்காதுதான்.

இதற்கிடையில் இந்திய பத்திரிகைகளுக்கு செல்லமான இன்னொரு நிறுவனம் கவிழும் நிலையில் இருக்கிறது. ஆம், நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு வாடகை கொடுக்க முடியாமல், விமானிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், டிக்கெட் கேன்சல் செய்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறி நிற்கிறது. முன்னதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ், நீரவ் மோடியின் வைர வியாபாரம், சகாரா குழுமத்தின் சீட்டுத் தொழில் சரிவு என்று திவால் வரிசையில் நிற்கின்றனர் இந்தியாவின் தொழில்துறை தலைவர்கள்.

பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்துக் கொண்டு இந்த முதலாளிகள் நடத்தும் சூதாட்டச் சண்டைகளால் யாருக்கு என்ன பலன்?