Tuesday, March 26, 2019

இந்திய ரூபாய் சர்வதேச நாணயம் ஆக எப்போது மாறும்?

ரு காகிதம் அல்லது உலோகத் துண்டு எப்போது பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது?
  • கட்டிடத் தொழிலாளி ஒருவர் வார இறுதியில் தனது ஒருவார உழைப்புக்குக் கூலியாக ரூபாய் நோட்டுகளை ஏன் வாங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்?
  • தனது ஒரு மாத உழைப்புக்கு ஊதியமாக மாத இறுதியில் வங்கிக் கணக்கில் ரூபாய் வரவு வைக்கப்படுவதை ஒரு ஐ.டி ஊழியர் ஏன் ஏற்றுக் கொள்கிறார். 
அவர்கள் தமக்குக் கிடைக்கும் ரூபாயை எப்படி பயன்படுத்துகின்றனர்? அந்தப் பணத்தை பயன்படுத்தி அவர்கள் தமக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் வாங்க வேண்டும்; சக குடிமக்களும், நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்த பொருட்களையும், சேவைகளையும் (கூலியாக/சம்பளமாக ஈட்டிய) ரூபாயை பெற்றுக் கொண்டு விற்பதற்கு  தயாராக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களை ரூபாயை பணமாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

இந்த நம்பிக்கை நாடு தழுவிய அளவில் செயல்படுவதற்கு நாட்டு அரசின் அங்கீகாரமும், அரசின் நம்பகத்தன்மையும், வலிமையும் அவசியம். போலி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாமல் தடுப்பதற்கான போலீஸ் வலிமை, தேவைக்கு அதிகமாக நோட்டுகளை வெளியிட்டு விடாத பொறுப்பு இவை அரசுக்கு இருக்க வேண்டும்.

அது இல்லாமல் போகும் போது ஜிம்பாப்வேயில் 2000-2009 வரையிலும், சீனாவில் 1940-களிலும், ஜெர்மனியில் 1920களிலும், இப்போது சமீபத்தில் வெனிசுலாவிலும் நிகழ்ந்தது போல நாட்டின் பணம் மதிப்பை இழந்து விடும். இறுதியில் அந்தப் பழைய பணத்தை கைவிட்டு புதிய பணத்தை நாட்டு அரசு வெளியிடுவதாகவோ, அல்லது முற்றிலும் வெளிநாட்டு நாணயம் ஒன்றை பயன்படுத்த ஆரம்பிப்பதாகவோ முடிகிறது.

இந்தப் பின்னணியில் ஒரு நாட்டின் நாணயம் சர்வதேச நாணயமாக எப்படி ஆக முடியும் என்று பார்க்கலாம்.

ஒன்று, அந்தப் பணத்தை வைத்து தம் நாட்டுக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் பிற நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்வதற்கு நாணயம் வெளியிடும் நாட்டின் பொருளாதார வலிமை அடிப்படையாக இருக்கிறது.

பொருளாதார ரீதியாக உலகம் முழுவதும் காலனிய அதிகாரமாக கால் பதித்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் 19/20-ம் நூற்றாண்டுகளிலும், அதே போல உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலர் 20/21-ம் நூற்றாண்டிலும் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

உலகப் பொதுப்பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாட்டு அரசுக்கு அதன் மூலம் பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பொறுப்பும் அந்த நாட்டுக்கு இருக்கிறது.
  • போலி டாலர்கள் அச்சிடப்படாமல் தடுக்க வேண்டும்.
  • வங்கித் துறையை நம்பகமானதாக கட்டிக் காக்க வேண்டும்.
  • டாலரின் முதன்மை இடத்தைத் தக்க வைப்பதற்கு ஏற்ற பொருளாதார நடவடிக்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் எடுக்க வேண்டும்.
  • அது மட்டும் போதாது, சர்வதேச நாணயமாக தக்க வைத்துக் கொள்வதற்கான சர்வதேச அரசியல் ராணுவ நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்கேற்ற அரசியல், ராணுவ வலிமை இருக்க வேண்டும்.
ஆனால், இறுதிக் கணக்கில் தீர்மானகரமானதாக அமைவது அந்த நாட்டுக்குள் நடக்கும் பொருளாதார உற்பத்தி, மதிப்பு சேர்க்கும் நடவடிக்கைதான்.

அதனால்தான் சுமார் 40 ஆண்டுகள் உலகின் உற்பத்திக் களமாக செயல்பட்ட சீனாவின் யுவான் இப்போது பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படும் சர்வதேச நாணயமாக உருவெடுத்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு சவால் விட முயற்சிக்கிறது.

இது போல இந்திய ரூபாய் சர்வதேச அரங்கில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக மாற வேண்டுமானால், இந்தியாவின் பொருளாதாரம் மனித சக்தி ரீதியாகவும் சரி, தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, இயற்கை வளங்களை பயன்படுத்துவதிலும் சரி சுயேச்சையாக செயல்பட வேண்டும். நமது பொருளாதார செயல்பாடு நம் உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

மாறாக, வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற சார்பு நிலை முதன்மையாக இருந்தால் இந்திய நாணயம் பிற நாட்டு நாணயங்களுக்குக் கீழ்ப்பட்ட இரண்டாம் நிலையிலேயே இருந்து வரும்.

ஆங்கிலத்தில் இந்தக் கேள்விக்கு விடை

No comments: