Tuesday, April 14, 2009

உலகப் பொருளாதார நெருக்கடி - 1

இப்போது நாமெல்லாம் சிக்கிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணி என்ன?

கதையை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் தெரியும்.

பணம் என்பது எப்படி ஆரம்பித்தது?

பண்ட மாற்று முறையில் 'நான் உழைத்து செய்த பொருளை உனக்குத் தருகிறேன், நீ உழைத்து செய்த பொருளை எனக்குத் தா' என்று பரிமாறிக் கொண்டார்கள்.

நான் நெசவு செய்து துணி வைத்திருக்கிறேன். நாளைய சாப்பாட்டுக்கு நெல் வாங்கி வர வேண்டும். விவசாயம் செய்யும் நண்பரின் வீட்டுக்குப் போய் துணியைக் கொடுத்து விட்டு தேவையான நெல்லை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அவருக்கு இப்போது துணி தேவையில்லை என்றால் எனக்கு நெல் கிடைக்காது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கண்டுபிடித்ததுதான் பணம். துணி விற்று செலாவணியாக பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருளை திரட்டிக் கொள்வேன். நெல் வாங்குவதற்கு அதைக் கொடுத்தால் போதும்.

பண்ட மாற்றும் பரிமாற்றங்களுக்காக பணம் பயன்படுதலும்

தங்கம் பணமாக புழங்க ஆரம்பிக்கிறது. தேவைக்கு மேல் தங்கம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொண்டு வைப்பது போல, ஊரின் பொற்கொல்லரிடம் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அவரிடம் கொண்டு தங்கத்தைக் கொடுத்து ஒரு சீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர் நாணயமானவர். எந்த நேரத்தில் போய் சீட்டைக் காட்டிக் கேட்டாலும் தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அப்படி பாதுகாப்பாக பணத்தை வைத்திருப்பதற்கு கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்கிறார்.

தங்க நகையாக இல்லாமல் நாணயமாக வரும் தங்கத்தை தனித்தனியாக வைத்திருக்கத் தேவையில்லை. எல்லா பணத்தையும் சேர்த்து வைத்து கணக்கை மட்டும் இன்னாருக்கு இவ்வளவு தர வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டால் போதும்.

இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பொற்கொல்லர் கொஞ்ச நாள் போக ஒன்றை கவனிக்கிறார்.

வங்கித் தொழிலின் அடிப்படை

நாட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு அச்சடித்து வெளியிடும் நோட்டுகள் மட்டும் காரணம் இல்லை. பெரும்பாலான பண உருவாக்கம் வர்த்தக வங்கிகள் வைப்புத் தொகை சேகரித்து கடன் கொடுப்பதால் உருவாகிறது.

வங்கிகள் இப்படித்தான் பணப் புழக்கத்தை அதிகரிக்கின்றன.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி. அங்கும் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை பாதுகாப்பான அரசாங்க பத்திரங்கள் வாங்கி வைக்க பயன்படுத்த வேண்டும். மீதிப் பகுதியை கடன் கொடுக்க பயன்படுத்தலாம். கடனட்டைகள் மூலமாக வழங்கப்படும் கடன்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வந்து விடும்.

இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கண்கட்டி விட்டு தமது ஆதாயத்தை உயர்த்த முற்படுபவர்கள் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

விளையாட்டுப் பார்வை அரங்கில் எல்லோரும் உட்கார்ந்திருந்தால் வசதியாக மறைக்காமல் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஒரே ஒருவர் எழுந்து நின்றார் அவருக்கு மட்டும் ஆதாயம். விளையாட்டு நன்றாக தெரியும். அவரைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், கடைசியில் எல்லோரும் நின்று கொண்டே பார்த்தும் எல்லோரும் இருந்து பார்க்கும் அளவுக்குத்தான் விளையாட்டுத் தெரியும். கூடவே கால் வலிதான் மிஞ்சும்.

அது போல கண்காணிப்பு நிறுவனங்களின் நெறிமுறைகளை ஒரு வங்கி தவிர்க்க முயன்று வெற்றி பெற்று விட்டால் அந்த வங்கியின் ஆதாய வீதம் மளமளவென்று ஏறும். அதில் வேலை பார்க்கும் மேலாளர்களுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அவர்களுடன் போட்டி போட்டு ஒவ்வொருவராக அந்த வழிகளை கண்டு கொண்டு தாமும் சுற்றிப் போக ஆரம்பிப்பார்கள். கடைசியில் மொத்த அமைப்பும் குலைந்து போவதுதான் நடக்கும்.

No comments: