Wednesday, April 18, 2007

குட்டி போடும் பணம் (economics - 49)

ஆரம்ப காலங்களின் நாணயம் கிடையாது. பண்ட மாற்று முறைக்குப் பிறகு குறிப்பிட்ட பொருட்களை செலவாணியாகப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. தானியம், கால்நடைகள் போன்று பல பொருட்களைத் தாண்டி தங்கம் நாணயமாக பயனுக்கு வந்தது.

அந்தக் காலத்தில் பொற்கொல்லர்களிடம்தான் தங்கம் இருந்தது. யாரிடமாவது தேவைக்கதிகமாக தங்கம் கைவசம் இருந்தால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பொற்கொல்லர்களிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அந்தச் சேவைக்குக் கட்டணம் பெற்றுக் கொள்வார்கள் வங்கிகளாக செயற்பட்ட பொற்கொல்லர்கள்.

இப்போது வங்கிகளில் நகைகளைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பது போன்ற முறை அது. நாம் கொடுத்த நகை அப்படியே திரும்பிக் கிடைக்கும். நகை இல்லாமல், தங்க நாணயங்களைக் கொடுத்து வைக்கும் போது என்ன நடந்திருக்கும்?

ஒருவர் கொடுத்த நாணயத்துக்கும் மற்ற நாணயங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போனது. திருப்பிக் கொடுக்கும் போது மொத்தக் கலவையிலிருந்து சரியான எண்ணிக்கையைக் கொடுத்தால் போதுமாக இருந்தது. இப்படிப் பார்த்தால் எப்போது பார்த்தாலும் தங்க நாணயப் பெட்டியில் ஏராளமான நாணயங்கள் சேர்ந்திருந்தன.

ஒவ்வொரு நாளும் தமது வைப்பைத் திரும்பப் பெற வருபவர்கள், புதிதாக சேமிப்பு போட வருபவர்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் நாடும் வங்கியின் கைவசம் தேங்கியிருக்கும் பணத்தின் அளவு கணிசமாக இருக்கும்.

இது சும்மா பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவர்களுக்குக் கடனாகக் கொடுக்கலாமே என்று ஒரு புத்திசாலிக்குத் தோன்றியிருக்கும். இப்படி தமது பணத்தைக் கடனாகக் கொடுக்கிறார் என்று வாடிக்கையாளருக்கு சந்தேகம் வராத வரையில் பிரச்சனை இல்லை. யார் வந்து கேட்டாலும் பணத்தைக் கையிருப்பிலிருந்து கொடுக்க முடிந்து விட்டால் தொந்தரவே வராது. பணம் போட்டு வைத்த ஒவ்வொருவருக்கும் தான் போய்க் கேட்கும் போது போட்ட காசு உடனேயே கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தால் போதுமானது.

கைவசம் நூறு ரூபாய் வைப்புத் தொகை இருந்தால் அதில் 30 ரூபாயை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு மீதி 70 ரூபாயை வெளியில் கடனாகக் கொடுத்து விடலாம். எப்படியும் சும்மா தூங்கும் பணத்தை வெளியே விட்டு சம்பாதிக்க முடிவது ஆதாயம்தானே.

இப்படியே சுவை கண்ட பிறகு வைப்புத்தொகை அதிகமானால் கடன் கொடுப்பதையும் அதிகரிக்கலாம் என்று உணர்ந்து வைப்புத் தொகைக்கு சேவைக் கட்டணம் வசூலிக்காமல், தமக்குக் கிடைக்கும் வட்டித் தொகையில் ஒரு பகுதியை வைப்புதாரர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கவும் ஆரம்பித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் கட்டுப்பாடு இல்லாமல் கடன் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டு பல வங்கிகள் திவாலாகின. இருபதாம் நூற்றாண்டில் அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்த வேண்டும் என்று கண்டு கொள்ளப்பட்ட பிறகு வங்கிகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல) ஏற்படுத்தப்பட்டன.

அவை நூறு ரூபாய் வைப்புத் தொகை கிடைத்தால் எவ்வளவு சதவீதம் காசாக கைவசம் வைத்திருக்க வேண்டும் (cash reserve ratio) - ரொக்க இருப்பு வீதம், எவ்வளவு சதவீதம் பாதுகாப்பான அரசு கடன் பத்திரங்களாக வைத்திருக்க வேண்டும் (statutory liquidity ratio) - கட்டாய உடனடித் தேவை வீதம் என்று சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. 35% SLR என்று இருந்தால் வைப்புத் தொகையில் 35% அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கப்பட வேண்டும். திடீரென்று பல வாடிக்கையாளர்கள் காசை எடுக்க வந்து விட்டால் பத்திரத்தை விற்றுக் காசு கொடுத்து விட முடியும்.

இப்படி ஒதுக்கி வைத்தது போக மீதியிருக்கும் பணத்தை கடனாகக் கொடுக்கும் போது வங்கிகள் பணத்தை உருவாக்குகின்றன. எப்படி?

No comments: