Friday, July 13, 2007

நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்

டாலரின் மதிப்பு 4 ரூபாய் வரை குறைந்ததால் ஏற்றுமதித் துறையில் பணப் புழக்கம் நெரிந்துள்ளது. மாதம் 10,000,000 டாலர் (நாலரைக் கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்து கொண்டுருக்கும் ஒரு நிறுவனத்தில் மாதத்துக்கு 40 லட்சம் ரூபாய் பண வரத்து குறைந்து விடும். பல இடங்களில் செலவைக் குறைப்பார்கள்.

இந்த நெரிசலில் பல நிறுவனங்கள் நொடித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. என்னதான் நல்ல பொருள்/சேவை வழங்கினாலும், எதிர்கால சாத்தியங்கள் இருந்தாலும் நிகழ்காலத்தில் பணப் புழக்கம் நின்று போனால் உயிர் நின்று விடும். உடலில் ரத்த ஓட்டம் போல அது. வர வேண்டிய பணம் என்று எவ்வளவு இருந்தாலும் கையில் இருக்கும் பணமாக மாறாத வரை பலனில்லை.

பெரிய நிறுவனங்கள் இந்த மாற்று வீதக் குறைவிலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததால் இப்போதைய விளைவுகளைத் தவிர்த்தாலும். அடுத்த பருவத்துக்கான கணக்கிடுதலில் உதைக்கப் போகிறது.

உற்பத்தித் துறையைப் பொறுத்த வரை வலுவான ரூபாய் ஆறு மாத நோக்கில் ஏற்றுமதி திறனை அதிகரிக்கத்தான் செய்யும்.
  • இறக்குமதி இடுபொருட்களின் விலை குறைதல்,
  • பொதுவான உள்நாட்டு விலை வாசி குறைதல்,
  • வாடிக்கையாளரிடம் விலை மாற்றம் கோருதல்
என்று நான்கைந்து மாதங்களில் திறமையான தொழில் முனைவோர், முன்பை விட வலிமையாகி விடுவார்கள். இடைப்பட்ட மாதங்களில் பல்லைக் கடித்துக் கொண்டு இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

1990களில் ரூபாயின் மதிப்பு குறையும் போது ஒவ்வொரு முறையும் இது ஏற்றுமதி வணிகத்துக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டாலும். அந்தத் தாக்கம் சில மாதங்களிலேயே சமன் படுத்தப்பட்டு ஏற்றுமதி வியாபாரமும் தத்தளிக்கத்தான் செய்தது. மலிவான விலை என்ற ஒரே வலிமையில் செய்யும் தொழில்கள் மறைந்தாலும், ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது என்றே படுகிறது.

6 comments:

Unknown said...

//ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது என்றே படுகிறது.//

நிரந்தரமான வளர்ச்சிக்கு ரூபாயின் வலிமை கூடுவதே நல்லது
என்று நினைக்கிறேன். 1 USD = 7.57 CNY (இன்றைய நிலவரப்படி) என்று உள்ள China ஏற்றுமதியில் நன்றாகத்தான் உள்ளது.

ஏற்றுமதியின் தரம் மற்றும் சரியான சேவை இருக்கும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் நியாயமான இலாபத்தை எதிர்பார்க்கலாம்.

நாஞ்சிலான் said...

\\ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது\\

கொஞ்ச நாளைக்கு.

அப்புறம் சந்தை போட்டி இந்த குறுங்கால இலாபங்களை சமன் செய்து விடும்.

வவ்வால் said...

மா.சி,

இறக்குமதி அளவு , ஏற்றுமதி அளவை விட அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு டாலர் மதிப்பு வீழ்ச்சி நன்மையே. அதே சமயத்தில் ஏற்றும்தியாளர்கள் பாதிக்கப்படுவது அவர்கள் செய்யும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்கும் . நீண்டகாலத்திற்கு ஒரு முன்கூட்டிய டாலர் மதிப்பில் ஒப்ப்ந்தம் போட்டால் பாதிப்பு இருக்கும் , அதே சமயம் சீன நிருவனங்கள் எல்லம் அவர்கள் நாட்டு கரன்சியான யுவான் மதிப்பில் தான் ஒப்பந்தம் போடுவதாக கெள்விப்பட்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னரும் டாலர் சரிந்த போது அமெரிக்கா சீனாவை வற்புறுத்தி சீன கரன்சியின் மதிப்பையும் குறைக்க வைத்தது இதனால் தான்! அவர்களுக்கு அவர்கள் நாணயத்தின் மீது நம்பிக்கை, நமக்கு இல்லை , இருந்திருந்தால் நாமும் எதிர்கால பணப்பரிவர்த்தனைகளை இந்திய ரூபாய் மதிப்பில் தான் தரவேண்டும் என்று போட்டு இருப்பார்கள்.

டாலர் சரிவால் இறக்குமதி செய்வதற்கு (பெட்ரோலியம் கச்சா,முதலிய இறக்குமதி பொருடுகளுக்கு)இந்தியா தர வேண்டி பணத்தின் அளவு குறையும், மேலும் நிகர கடன் அளவு குறையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு அதிகமாகும். பணவீக்கம் குறையும். ஆனால் ஏற்றுமதியாளர்கள் என்று தனிப்பட்ட முறையில் பாதிப்பு உண்டு.

தென்றல் said...

உண்மைதான்... இந்தியாவைப் போல வளர்ந்துவரும் நாடுகளில் (நம்)நாணயத்தின் வலிமை கூடுவதே நல்லது.

இன்னும் சில ஆண்டுகளுக்காவது(!) நம் நாணயம், 'வலிமை' உள்ளதாக இருக்கும் என்பது என் கணிப்பு! ம்ம்.. பார்க்கலாம்!

Santhosh said...

//ஏற்றுமதியின் தரம் மற்றும் சரியான சேவை இருக்கும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் நியாயமான இலாபத்தை எதிர்பார்க்கலாம்.//
இது மிகவும் சரி.. அதே மாதிரி ஏற்றுமதியாளர்கள் டாலரில் வர்த்தகம் செய்வதை குறைத்துக்கொண்டு,ஏற்றத்தாழ்வுகள் குறைவாக இருக்கும் யூரோ அல்லது பவுண்டில் வர்த்தகம் செய்தால் இந்த நிலையை போக்கலாம். நீண்டகாலத்தை கருத்தில் கொண்டால் ரூபாயில் வர்த்தகம் செய்வது நாட்டுக்கு நல்லது.

மா சிவகுமார் said...

வணக்கம் கல்வெட்டு,

//1 USD = 7.57 CNY (இன்றைய நிலவரப்படி) என்று உள்ள China ஏற்றுமதியில் நன்றாகத்தான் உள்ளது.//

நாணயத்தின் வாங்கும் திறனைப் (purchasing power parity) பொறுத்து ஏற்றுமதி ஆதாயம் இருக்கும். சந்தையில் மாற்று வீதம் (exchange rate) பன்னாட்டு பணப் புழக்கத்தை (international currency transactions) மட்டும்தானே சார்ந்திருக்கிறது.

//ஏற்றுமதியின் தரம் மற்றும் சரியான சேவை இருக்கும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் நியாயமான இலாபத்தை எதிர்பார்க்கலாம்.//

பல ஆண்டுகளாக மலிவான ரூபாயை ஊன்றுகோலாகப் பயன்படுத்திப் பழகி விட்ட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தொடக்கத்தில் சிரமமாகத்தான் இருக்கும். வெற்றிகரமாகத் தகவமைத்து கொள்ள முடியும் நிறுவனங்களுக்குத்தான் எதிர்காலம்.

வாங்க நாஞ்சிலான்,

//அப்புறம் சந்தை போட்டி இந்த குறுங்கால இலாபங்களை சமன் செய்து விடும்.//

பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது
வலிமையான நாணயம் நீண்ட கால நோக்கில் உதவும்தானே?

வவ்வால்,

சீனாவிலும் பெரும்பாலும் டாலரில்தான் ஒப்பந்தங்கள் போடுகிறார்கள். ரூபாய் (யுவான்) முழுமையாக மாற்றும்படியாக (capital account convertibility) ஆனால்தான் பன்னாட்டு வணிகம் அதில் செய்ய நம்பிக்கை வரும்.

தென்றல்,

//இன்னும் சில ஆண்டுகளுக்காவது(!) நம் நாணயம், 'வலிமை' உள்ளதாக இருக்கும் என்பது என் கணிப்பு!//

நம் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வந்தால், வளர்ச்சி கொடுத்துள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிவரக் கையாள முடிந்தால், ஊழல் கழுத்தை நெரிக்காமல் இருந்தால் நடக்கலாம் என்று நான் நினைக்கிறேன். :-)

//அதே மாதிரி ஏற்றுமதியாளர்கள் டாலரில் வர்த்தகம் செய்வதை குறைத்துக்கொண்டு,ஏற்றத்தாழ்வுகள் குறைவாக இருக்கும் யூரோ அல்லது பவுண்டில் வர்த்தகம் செய்தால் இந்த நிலையை போக்கலாம். நீண்டகாலத்தை கருத்தில் கொண்டால் ரூபாயில் வர்த்தகம் செய்வது நாட்டுக்கு நல்லது.//

எதிர்த்தரப்பும் ஏற்றுக் கொள்ளும் நாணயத்தில்தானே வர்த்தகம் செய்ய முடியும். மேலே சொன்னது போல ருபாய் முழுமையான செலவாணி நிலையை அடைந்தால் ஒழிய வெளி நாட்டு வங்கிகள் எப்படி ரூபாய் ஆவணங்களைக் கையாள முடியும்? அதற்கு இன்னும் நாம் தயாராக இல்லை.

அன்புடன்,

மா சிவகுமார்