Friday, October 31, 2008

பொருளாதாரச் சரிவு - யாருக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆட்டத்தின் விளைவுகளை முழு உலகமும் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் யாருக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படும்?

1. எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்தாலும், மக்கள் சாப்பிடத்தான் வேண்டும், உடுத்தத்தான் வேண்டும்.

உணவுப் பொருட்கள் மற்றும் ஆடை/அணிகலன்கள் துறையினருக்கு மற்ற சேவைத் துறைகளுடன் ஒப்பிடும் போது நல்ல தொழில் நடக்கும். விவசாயிகள், விவசாய இடுபொருட்கள் விற்பவர்கள், துணி உற்பத்தியாளர்கள், உடை தயாரிப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகள் பட்ட பாட்டுக்கு பரிகாரமாக நல்ல நிலைக்கு வருவார்கள்.

இந்தத் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கும் வங்கித் துறையில் ஏற்படும் சரிவால் தொழில் செய்ய கடன் தொகை கிடைக்காமல் போனால் மட்டும் சிக்கல் உண்டாகி விடும்.

2. மதிப்புக் கூடுதல் சேவையாக, உயர்தர உணவு விடுதிகள், விலை உயர்ந்த அணிகலன்கள் கொஞ்சம் இழுத்துப் பிடிக்க ஆரம்பிக்கும்.

3. தகவல் தொழில் நுட்பத் துறையில், திறமை வாய்ந்த ஊழியர்களை கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் (இன்போசிசு, டாடா, விப்ரோ) தமது தொழில் முறை, சந்தை அணுகல் உத்திகளை வெற்றிகரமாக மாற்றி அமைத்து ஏற்பட்டுள்ள நலிவை தாண்டி வர வாய்ப்புகள் அதிகம். ஆதாய வீதம், வளர்ச்சி வீதம் குறுகிய கால நோக்கில் வெகுவாக மட்டுப்பட்டு விடும்.

4. பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு அவர்களை விடக் குறைந்த விலை என்ற ஆதாயத்தின் மூலம் மட்டும் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் அவர்கள் செய்யும் அதே மாதிரியான பணிகளை பெற்று நடந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமக்கென்று தனிச் சிறப்பாக சேவை அல்லது பொருளை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

5. கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீட்டில் பளபளக்கும் அடுக்குமாடி கடைகள், உயர்தர தங்கும் விடுதிகள், துணிச்சலான புதிய முயற்சிகளுக்கு முதலீடு கிடைக்காமல் போய் விடும். கட்டிடத் துறையைச் சார்ந்து பங்குச் சந்தையில் தமது பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களுக்கு பெருத்த சரிவு ஏற்படும்.

மற்ற நிறுவனங்களைப் போல விலை உயர்வது வரை சும்மா இருப்போம் என்று இருந்து விடவும் முடியாது. ஒவ்வொரு காலாண்டும் வளர்ச்சியைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.

6. ஏற்றுமதித் துறை நிறுவனங்களுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிதி நிலைமை மோசமானால் வணிகம் நலிவடைவதை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படையில் உறுதியான உற்பத்தி திறன், உயர்ந்த தர நிர்ணயம் இருக்கும் நிறுவனங்கள் இந்த சிரமமான காலத்துக்குப் பிறகு இன்னும் சிறப்படைய முடியும். கொஞ்சம் நோஞ்சான்களான நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

5 comments:

Anonymous said...

The links for "Porulatharam" is not working. Please correct it.

Anonymous said...

I mean "Porulatharam 50" is not working.

இரா.சுகுமாரன் said...

தங்களின் பதிவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

sir, welcome back

மா சிவகுமார் said...

நன்றி சுகுமாரன், முரளி கண்ணன்.

அன்புடன்,
மா சிவகுமார்