Saturday, May 16, 2009

நிறுவனத் தொழில் முனைவு

(Intrepreneurship)

பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அல்லது உரிமையாளர் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். மற்றவர்கள் எல்லோரும் அவர் சொல்வதை சிரம் மேல் ஏற்று செயல்படுவார்கள். அவர் எல்லா முடிவுகளையும் எடுப்பார், மற்றவர்கள் அவர் சொல்வதைப் பின்பற்றி நடந்தால் போதும்.

பெரிய நிறுவனங்களில் இது போன்ற வழிபாட்டு முறைகள் குறைவு என்றாலும், கணிசமான அளவில் இருக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் போதும் சரி, லெதர்லிங்க் ஆரம்பித்த பிறகும் சரி, உயர் பதவி இருப்பவர்களை வழிபட வேண்டும் என்று நினைத்ததில்லை. அவர்களுக்கு நம்மை விட அனுபவர் அதிகம், வயதில் மூத்தவர்கள் அதனால் மதிப்பு உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை.

அப்படி நடந்து கொள்பவர்களைப் பார்த்தால் எனக்கு இரக்கம்தான் வரும். அப்படி மனிதர்களை சிறுமைப்படுத்தும் முறை என்னால் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. லெதர்லிங்கில் முதலிலிருந்தே என்னால் அப்படி ஒரு பாகுபாடு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இனிமேலும் இருக்கக் கூடாது.

நிறுவனத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலாளர்தான். தனக்குத் தாமே திட்டம் வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட அனுபவம், திறமை வளர்ந்த பிறகு பெரிய பெரிய பெயர்களில் பதவிகளைக் கூட வகுத்துக் கொண்டோம். அதைப்பார்த்து கேள்விகள் கேட்டவர்களும் உண்டு. ஒவ்வொருவரும் முனைப்புடன் தனது பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஒருவர் பணி ஒன்றைச் செய்யும் போது மேலாளர் சொல்லி விட்டார் என்பதற்காகச் செய்யக் கூடாது. இதைச் செய்தால் வாடிக்கையாளருக்கு உண்மையான பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். 'எனக்கு எதுவும் தெரியாது, தினமும் காலையில் வந்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வேன், மாதா மாதம் சம்பளம் வந்தால் போதும்' என்று இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட பொறுப்பை யாரும் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

அரசு ஊழியர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கடமைகள், ஊதிய விகிதங்கள் இருக்கும். அவர்கள் என்ன சம்பள உயர்வு கிடைக்கும், எப்பொழுது ஊதியக் குழு அமைக்கப்படும், சேமிப்பிலிருந்து எவ்வளவு முன்பணம் பெறலாம் என்றுதான் திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வரவைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலையைப் பற்றி யோசிப்பதற்குத் தேவையே இல்லை. அது அட்டவணைப்படி நடந்து கொண்டிருக்கும்.

அதிலும் சிலர் முனைப்பெடுத்து பெரிய பதவிகளுக்கு உயர்வதை குறிக்கோளாக வைத்து செயல்படுவார்கள். ஒரே நேரத்தில் ஆசிரியராகச் சேர்ந்தவர்களில் ஒருவர் பள்ளிப் பணியிலேயே ஓய்வு பெற்று விடுவார். இன்னொருவர் கல்வித்துறையில் உயர் பதவிகளுக்குப் போய்ச் சேருவார்.

தலை சிறந்த மருத்துவர், தட்டச்சு செய்பவரை வேலைக்கு வைத்திருக்கலாம். 'அவர் முதலாளி, எனக்கு படி அளப்பவர் என்று அவர் சொல்வதை எல்லாம் தட்டச்சு செய்வது என் கடமை' ஒரு பாணி. 'நோயாளிகளுக்குச் சிறந்த சேவை அளிப்பது நமது கூட்டுக் குறிக்கோள். அவர் மருத்து நிபுணர், மருத்துவம் தொடர்பான எல்லாவற்றுக்கும் அவர் பொறுப்பு. ஆவணப்படுத்துவது எல்லாம் நம்முடைய பொறுப்பு' என்ற நோக்குடன் செயல்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்போசிஸ் நிறுவனத்தைப் பாருங்கள். நாராயண மூர்த்தி தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பிறகு நந்தன் நீலகேணி பொறுப்பேற்றார். அவரும் ஓய்வு பெற்று இப்போது கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். வேலைகளை பகிர்ந்து கொண்டு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் அணி அல்லது அமைச்சரவை இயங்கும் முறை அதை அடிப்படையாகக் கொண்டதுதான். அணித் தலைவர் அல்லது முதல் அமைச்சர் என்பவர் சமமான திறமை, பொறுப்பு இருக்கும் குழுவில் முதலில் இருப்பவர் (First among equals). ஒவ்வொருவரும் தமது பணித் துறையில் முழுமையாக செயல்படுவதுதான் நடைமுறை சாத்தியம், ஆரோக்கிய வளர்ச்சிக்குத் தேவை.

'நான் இது வரைதான் செய்வேன் அதற்குப் பிறகு எனக்குப் பொறுப்பு இல்லை' என்று சொல்வது சரிப்படாது

No comments: