Friday, April 20, 2007

பணம் பெருக்கும் வங்கிகள் (economics - 50)

பொதுவாக பணம் என்றால் நாணயங்களும் நோட்டுகளும்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். கொடுக்கல் வாங்கப் பயன்படும் எல்லா இடைப் பொருளும் பணம் என்று வைத்துக் கொண்டால் வங்கிக் காசோலைகளும், கடனட்டைகளும் கூட பணம்தான்.

நாணயங்களும் நோட்டும் மத்திய ரிசர்வ் வங்கியால் அச்சடித்து வெளியிடப்படுகின்றன. வங்கிக் கடன்கள் பணத்தை எப்படி அதிகரிக்கின்றன?

ஒரு வங்கிக்கு 100 ரூபாய் வைப்புத் தொகை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 35 ரூபாய் அரசுப் பத்திரங்களில் போய் விடுகிறது. மீதி இருக்கும் 65 ரூபாயை ஒரு தொழில் நிறுவனத்துக்குக் கடனாக அளிக்கிறது. இந்தக் கடன் பணமாக மாற்றப் படுவதில்லை. அந்த நிறுவனக் கணக்கில் 65 ரூபாய் வரவு வைத்து விடுவார்கள்.

வங்கியின் இருப்பில் 65 ரூபாய் இருக்கும் அதே நேரத்தில் 65 ரூபாய்க்கு காசோலை எழுதும் வசதி நிறுவனத்துக்குக் கிடைத்து விடுகிறது. நாட்டில் புழங்கும் பணத்தின் அளவில் 65 ரூபாய் சேர்ந்து கொள்கிறது.

இப்போது கடன் வாங்கிய நிறுவனம், அதை தனக்கு இயந்திரம் விற்ற நிறுவனத்துக்குக் காசோலையாக கொடுத்து விடுகிறது. இயந்திர நிறுவனம் அந்தக் காசோலையை தனது வங்கியில் போடுகிறது. இரண்டாவது வங்கியின் வைப்புத் தொகை 65 ரூபாய் அதிகரித்து விடுகிறது. அந்த 65ல் 35% சதவீதம் போக மீதி சுமார் 40 ரூபாய் அந்த வங்கி கடன் கொடுக்க முடியும்.

இப்படி நீண்டு கொண்டே போய் வங்கிகளின் அமைப்பிலிருந்து காசாக வெளியே எடுக்கப்படா விட்டால் ஒவ்வொரு சுற்றிலும் குறைந்து கொண்டே போனாலும் மொத்தத்தில் முதலில் போடப்பட்ட 100 ரூபாய் மூலம் வங்கிகள் 250 ரூபாய் உருவாக்கி விடும்.

இப்போது கடனட்டைகள் வந்து விட்டதால் இந்தப் பணி இன்னும் எளிதாகி விட்டது. காசோலை ஏற்றுக் கொள்ளாத இடங்களில் கூட கடனட்டை மூலம் பணப்பெருக்கம் ஜாம் ஜாமென்று நடைபெறுகிறது.

அரசின் கட்டுப்பாடு இல்லாமல் சொந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுத்துக் கொண்டிருந்தால் 100 ரூபாய் வைப்புத் தொகை முடிவே இல்லாமல் பணப் புழக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போய் விட முடியும். இதில்தான் ரிசர்வ் வங்கி என்ற மத்திய வங்கியின் பணி வருகிறது.

No comments: