Tuesday, September 25, 2007

கொடுக்கல் வாங்கல்

வாங்கல் விற்றலில் பணம் கைமாறும் முறைகள் பல வகைப்படும். வாங்குபவர், விற்பவர்களில் யாரின் கை ஓங்கி இருக்கிறது, யாரின் நம்பகத்தன்மை அதிகம் என்பதைப் பொறுத்து அவை மாறுபடும்.

பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு.
  • வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும். பொருளைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி.
  • பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து விடும் என்ற நிம்மதி விற்பவருக்கு.
ஊர் விட்டு ஊர் விற்கும் போது நாடு விட்டு நாடு போகும் ஏற்றுமதி வணிகத்தில் பொருளும் பணமும் எப்படி கைமாற வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.

  1. முழுத் தொகையும் முன்பணமாக அனுப்பிய பிறகு பொருள் அல்லது சேவை அனுப்பி வைக்கப்படும்
    பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சந்தைப் போட்டி அதிகம் இல்லாத பொருள் அல்லது சேவை வாங்க ஒரு புது வாடிக்கையாளர் அணுகினால் 'பணத்தைக் கட்டி விட்டுப் பொருளை எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி விடலாம்.
    இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் போது கடனட்டை மூலம் பணம் விற்கும் நிறுவனத்தின் கணக்குக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் பொருளை அனுப்பவே ஆரம்பிப்பார்கள்.
    முன்பணமாக வரைவோலை வாங்கி அனுப்பினால்தான் புத்தகங்கள் அனுப்பி வைப்பேன் என்று பதிப்பகங்கள் இருக்கின்றன.

  2. 'பொருளைத் தயாரித்து பொதிந்து வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன் (லாரியில், ரயிலில், கப்பலில், வானூர்தியில்). போக்குவரத்து நிறுவனம் கொடுத்த சீட்டைக் காண்பித்தால்தான் பொருளை விடுவிக்க முடியும். வங்கி மூலம் அந்தச் சீட்டை அனுப்புகிறோம், காசைக் கொடுத்து சீட்டை பெற்று பொருளை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்பது அடுத்த நிலை.
    இதில் வாங்குபவருக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். மூன்றாவது நிறுவனம் ஒன்றின் கையில் பொதியப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பணம் கை விட்டுப் போய் விட்டாலும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் போகிறது.
    தபால் மூலம் பொருளை அனுப்பி விட்டு தபால்காரரிடம் காசைக் கொடுத்து விடுமாறு நடக்கும் விபிபி முறையும் இது போலத்தான்.

  3. மேலே சொன்னதில் ஒரு பெரிய ஓட்டை, பொதியுள் என்ன இருக்கிறது என்று தெரிய முடியாமல் இருப்பது. விற்பனையாளர் டிரான்ஸிஸ்டர் வானொலி என்று சொல்லி அனுப்பியதைத் திறந்து பார்த்து உள்ளே செங்கற்கள் இருந்தால் வாங்கியவரின் பணம் போனது போனதாகி விடும்.

    அதனால் வாங்குபவர் தனது வங்கி மூலம் உத்தரவாதக் கடிதம் ஒன்றை அளித்துக் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விற்பவருக்கு நம்பிக்கை அளிக்கலாம். வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு கடன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா ஆவண ஆதாரங்களையும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் வாங்குபவரின் வங்கி பணத்தைக் கொடுத்து விடும்.

    • ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்,
    • பொதி விபரங்கள் விளக்கமாக தரப்பட வேண்டும்
    • கப்பலில் ஏற்றி விடப்பட்ட பொருள் தாம் எதிர்பார்ப்பது போன்ற தரம் மற்றும் அளவுடன் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளலாம்.
    • ஒரு ஆவணம் கப்பலில் அல்லது வானூர்தியில், அல்லது லாரியில் ஏற்றி அனுப்பிய ஆவணம்.

      இப்படி விற்பவர் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அவற்றுக்கான ஆவணங்களை காண்பித்து விட்டால் வங்கிப் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.

      'பொருளும் போய்ப் பணமும் வரா விட்டால் என்ன செய்வது? பொருளை அவ்வளவு செலவில் வெளி நாட்டுக்கு அனுப்பிய பிறகு வாங்குபவர் பணத்தைக் கொடுத்துப் பொருளை எடுத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வது' போன்ற விற்பவரின் கேள்விகளுக்கும் பொருத்தமான விடை கடன் கடிதங்கள்.

  4. நான்காவதாக கடன் கடிதத்தில் பொருளை எடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வங்கி பணம் கொடுப்பதாக உறுதி தரும் முறை. இதில் ஆவணங்களை நிபந்தனைப் படி தயாரித்து சமர்ப்பித்த 30 அல்லது 60 நாட்களுக்குப் பிறகு வாங்கியவரின் வங்கி பணத்தை விற்பனையாளருக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளிக்கிறது.

  5. அடுத்ததாக எந்த கடிதமும் இல்லாமல், போக்கு வரத்து நிறுவனத்திடமிருந்து பொருளை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணத்தை வாங்கியவரே செலுத்தி விடுதல். இதில் விற்பவருக்கு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகம். வாங்குவது பேர் பெற்ற நிறுவனமாக இருந்தாலோ, இரண்டு நிறுவனங்களுக்கிடையே நீண்ட நல்லுறவு நிலவும் போதோ இத்தகைய பணம் கொடுக்கும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
என்னதான் நிபந்தனைகள் விதித்தாலும் வாடிக்கையாளருடனான நல்லுறவுதான் பணத்தை வாங்க முடிகிற உறுதியான வழி. மற்ற வழிகள் எல்லாம் ஒரு பேருக்கு, திருப்தியளிக்கத்தான்.

10 comments:

Anonymous said...

இந்த வலைப்பூவை 'விகடன் வரவேற்பறை' பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வாழ்த்துக்கள் மா.சி.!!!

-விபின்

மா சிவகுமார் said...

மகிழ்ச்சியான தகவலுக்கு நன்றி விபின். ஓடிப் போய்க் கடையில் பார்த்தால் எங்க பகுதியில் இன்னும் இதழ் வந்திருக்கவில்லை.

அன்புடன்,
மா சிவகுமார்

முரளிகண்ணன் said...

கடைசி வரிகள் தான் சிறப்பு. ED CST பற்றி விளக்க முடியுமா?

மா சிவகுமார் said...

ED = Excise Duty, CST = Central Sales Tax பற்றித்தானே குறிப்பிடுகிறீர்கள் முரளி கண்ணன்.

கலால் வரி என்னும் ED உள்நாட்டு உற்பத்தித் துறையின் மீது அரசாங்கம் விதிக்கும் வரிவிதிப்பு. மத்திய அரசால் திரட்டப்படுகிறது. CST பொருள்கள் விற்பனை செய்யப்படும் போது வசூலிக்கப்படும் மத்திய விற்பனை வரி.

அன்புடன்,
மா சிவகுமார்

mvm said...
This comment has been removed by the author.
mvm said...

விகடனில் இந்த பதிவு பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
வாழ்த்துக்கள் மா.சி.
mvm

முரளிகண்ணன் said...

நன்றி மா.சி

Anonymous said...

வணக்கம், உங்கள் வலைப்பூவை பற்றி விகடனில் படித்தவுடன், ஆர்வமாக உங்கள் வலைப்பூவை படித்தேன் மிகவும் அருமை. பல பயனுள்ள தகவல்கள். ஒரு வேண்டுகோள், புதிய தொழில் தொடங்குவதற்கு எப்படி முதலீடு திரட்டுவது, Angel Investers, Venture Captital பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் .. மா.சிவக்குமார்.

மா சிவகுமார் said...

நன்றி mvm, அப்பாவி இந்தியன், முத்துலெட்சுமி!

//புதிய தொழில் தொடங்குவதற்கு எப்படி முதலீடு திரட்டுவது, Angel Investers, Venture Captital பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுத வேண்டும்.//

எழுத முயற்சிக்கிறேன் அப்பாவி இந்தியன். இது பற்றி எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதுகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்