Sunday, February 8, 2009

கடமையும் தருமமும்

'தவறாமல் முதல் தேதி சம்பளம் கொடுத்து விட வேண்டும், எப்படியாவது கொடுத்து விட வேண்டும்'

3. அதற்கு இறுதிப் பொறுப்பு நிறுவனத் தலைவர்தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
2. மூத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வர கொண்டு வர வேண்டிய கடமை இருக்கிறது.
1. நிறுவனத்துக்கு வரும் பணத்தை சம்பளம் கொடுப்பதற்குத்தான் முதல் உரிமை தருகிறோம்.

'சம்பளம் கூட்டிக் கொடுப்பது குறித்துப் பேசிய போது ஏற்கனவே இருக்கும் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றும் முறைகளை வகுத்துக் கொள்ளச் சொன்னேன். நீ கேட்க வில்லை'

'நீ மட்டும் அதைச் சொல்லவில்லை. அதனால் ஆதாயம் அடைபவர்கள் கூட அதை குழப்பத்தோடுதான் பார்த்தார்கள். 10000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் இன்றைக்கு 25,000 சம்பளத்தில் இருக்கிறார். அதே நிறுவனத்தில் அவருக்கு 15000 என்று உயர்வு கிடைத்திருந்தால் கூட ஆண்டு முழுமைக்கும் 1.8 லட்சம் கிடைத்திருக்கும்.'

'குறைந்த சம்பளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தால், திறமை படைத்தவர்கள் வேலை கற்றுத் தேர்ந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு இரண்டு பேர் என்று விலகிப் போய் விடுகிறார்கள். அப்புறம் நாம் ஆரம்பத்திலிருந்து புதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்து எழுந்து நிற்க வேண்டியிருக்கிறது.'

'தொடக்கத்திலேயே பெரு முதலீடு கொண்டு வந்து திறமையானவர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு உயர் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் முறையில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி வரவுக்கு மேல் சம்பளம் கொடுப்பதும் ஒரு முதலீடு போலத்தான். நேரடியாக பணம் போட்டவர்கள், தமது உழைப்பை தந்தவர்கள் என்று பலரும் இதில் முதலீடு செய்திருக்கிறோம்.'

'வளர்ச்சிக்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஏணி மாதிரி அல்லது மாடிப்படி மாதிரி. ஏணி மாதிரியில் வளர்ச்சி ஒரே சாய்வுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும். வேகமாக வளரலாம், எப்போதும் அழுத்தத்துடனேயே இருக்க வேண்டி வரும், கீழே விழுந்தால் ஒரே அடியாக தரையில்தால் விழ வேண்டியிருக்கும்'

'மாடிப்படி முறைமையில் ஒரு படியில் ஏறியதும் கொஞ்ச தூரம் அதே தளத்தில் நடந்து விட்டு அடுத்த படியில் ஏற முயற்சிக்க வேண்டும். கிட்டத்தட்ட மலையேறும் படி போல் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் ஏறும் வீதம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு படியில் ஏற முயற்சிக்கும் போது தவறி விட்டால் ஏணியிலிருந்து விழுவதைப் போல தரைக்கு வந்து விடாமல், கீழ்ப் படியில்தான் போய் விழுவோம். இன்னொரு முறை முயற்சித்து ஏறிக் கொள்ளலாம்'

'நாம் மலைப்படி முறையைப் பின்பற்றாமல் ஏணி முறைமையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனங்களுக்கு நிவதி செய்து கொடுத்து சம்பாதிப்பது என்பது நமது குறிக்கோள் கிடையாது. நிறுவனங்களை இணைக்கும் மென்பொருள் சேவைதான் நமது நீண்ட கால குறிக்கோள். மலைப்படி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தால் படியிலேயே இளைப்பாற ஆரம்பித்து விடும் அபாயம் இருக்கிறது. நாம் ஏறிக் கொண்டேதான் இருக்க வேண்டும்'

'நிறுவனத் தலைவரின் வழிகாட்டலில்தான் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தமது நேரத்தைத் திறமையை தலைவரின் வழிகாட்டலில் செலவிடுகிறார்கள். அந்த வழிகாட்டல் சரியான திசையில் இருக்க வேண்டும், அதிலிருந்து சரியான பணபலன்கள் கிடைக்க வேண்டும் என்ற பொறுப்பு நிறுவனத் தலைவருக்குத்தான்.'

'நிறுவனத்தின் வருமானத்தை எடுத்துக் கொண்டு போய் பிற இடங்களில் சேமித்து வைத்திருப்பது இங்கு நடக்கவில்லை'

'பிற வழிகளில் சம்பாதித்து சேமித்து வைத்ததை எல்லாம் முதலீடாகப் போட்டிருக்கிறோம். நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி கடனாகவும், முதலீடாகவும் போட்டிருக்கிறோம். கடனட்டையில் கடன் வாங்கிக் கூட செலவழித்திருக்கிறோம்'

'எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து விட வேண்டும், எப்படியானாலும் ஆதாயம் அதிகப்படுத்தி விட வேண்டும் என்று சத்யமின் ராமலிங்க ராஜூ தனக்குத் தெரிந்த வழிகளில் தகிடுதத்தங்கள் செய்து கொண்டிருந்தார். எச் சி எல்லின் சிவ்நாடார் பணம் வாங்கி வர வேண்டிய விற்பனையாளர்கள் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவாராம், போட்டியாளர்களை விட தான் குறைந்து விடக் கூடாது என்று கொடுக்க வேண்டிய பணத்தை தாமதப்படுத்துகிறார்.'

'அதுதான் நமது தொழில் செய்யும் சூழல். அவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் பின்பற்றும் அதே வழிகளில் நாமும் பணம் ஈட்டுவது குறித்து நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.'

'தர வேண்டிய பணத்தைக் கொடுத்து விடும் விவாதம் வந்த போது நினைவுப் பிறளல் அல்லது வேறு ஏதோ காரணத்தினால், அதிகமான பணத்தைக் கொடுத்து விட இருந்தார். அதை சரி செய்ய வேண்டுமா என்று ஒரு கணம் தயங்கி குறைந்த பணம்தான் தர வேண்டும் என்று சொல்லி விட்டேன். அந்தக் கணத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?'

'நான் அவரது தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாகவோ, ஓரிரு நாட்களிலோ உண்மை வெளியில் வந்து உறவு பின்னப்பட்டிருக்கும் என்ற நடைமுறை ஒரு புறம் இருக்க, நம்முடைய தர்மப்படி எதிராளியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, உண்மையை பேச வேண்டும் என்பது நடைமுறை சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதுதானே!'

'பெரிய குழுமம், காலணி தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலை, கோடிக் கணக்கில் வருமானம், சொத்துக்கள், ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் என்ற நிறுவனங்களை விட 20 பேர் வேலை செய்யும் நமது நிறுவனத்தின் கடை கலகலப்பாக, வருபவர்களும் உள்ளிருப்பவர்களும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது'

'பொருள் ஈட்டுதல் என்றால் பணத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாறுவது மட்டும் இல்லை. உண்மையான வளத்தை உருவாக்குதல் என்ற பொருளில் பார்த்தால் நமது குழுவினருக்கு வாழ்வில் உண்மையான வளத்தை உருவாக்குகிறோம்.'

பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். மாதம் பெரும் தொகை சம்பளம் வாங்குகிறார். போன தடவை சென்னைக்கு வந்திருந்த போது 'நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்கிறார்கள். என் அருகில் வேலை பார்ப்பவருக்கு வேலை இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். ஒரு நாள் காலையில் அவருக்கு சொன்னார்கள். மதியத்துக்குள் கணக்கு எல்லாம் முடக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்'

'வேறு இடத்தில் வேலை கிடைக்காது என்று இல்லை, ஆனால் இது போல பேக்கேஜ் கிடைக்காது'

'இதைச் சொன்ன போது அவரது கண்ணில் தெரிந்த பயம், முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் எந்த மனிதருக்கும் வரக்கூடாத ஒன்று. மாதம் பெரும் தொகை வாங்கிச் செலவழிக்கும் நிலையை இழந்து விடுவோமோ என்ற பயம் மனிதரை இழிந்து போகச் செய்யும் பயம். முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அவலம் இது. அந்த அவலத்துக்குள் நாங்களும் போக மாட்டோம். '

No comments: