Sunday, February 8, 2009

அகில உலக தோல் கண்காட்சி

ஞாயிற்றுக் கிழமை கண்காட்சிக்குப் போக வேண்டும். 8 மணி வாக்கில் அலுவலகம். இட்லி சாப்பிட்டு விட்டு கண்காட்சியில் செய்ய வேண்டிய பணி விபரங்களைத் திட்டமிட்டு விட்டுப் புறப்பட்டோம்.

மூன்று நாட்களும் அலுவலகத்திலிருந்து கண்காட்சிக்குப் போய் வருவதற்காக வண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். சரியாக ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நுழைவாயிலில் ஆயுதங்கள் சோதனை செய்யும் ஆட்களும் கருவிகளும் வைத்திருந்தார்கள். நீண்ட காத்திருப்போர் வரிசை. அதிகம் நேரம் தாழ்த்தாமல் உள்ளே போய் விட்டோம்.

நமது அரங்கில் சுவரில் ஒட்டும் வண்டக் காட்சிகள் செய்து முடித்திருந்தார்கள். விளக்கக் காட்சிப் படம் காண்பிப்பதற்கான திரை கொண்டு வந்து பொருத்திக் கொண்டிருந்தார்கள். மேசைகளை மாற்றி அமைத்து இருக்கும் ஒன்பது சதுர மீட்டர் இடத்தில் எப்படி நாற்காலிகளையும், மேசைகளையும் பொருத்துவது என்று அமைத்து முடித்தோம். எனது மடிக்கணினியை இணைத்து இயக்கினால் திரையில் கணினி பணிமேசை தெரிய ஆரம்பித்து விட்டது.

வருபவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை பதிவு செய்ய இன்னொரு மடிக்கணினியை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அரங்க வரவேற்புப் பணியை ஒப்படைக்கத் திட்டமிட்டு செய்து கொண்டிருந்தார். போக்குவரத்து, உணவு ஏற்பாடு, அரங்க நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்டிருந்தார். காட்சிப் படங்களுக்கான கோப்புகள், நேரங்கள், பார்வையாளர்களை வர வைப்பது என்று பொறுப்பு ஏற்றிருந்தார். குளோவியூ, வணிக வாய்ப்புகள்.

காலையிலேயே வந்து அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். 11.30க்கு முதல் காட்சிப்படம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். நமது நல்ல நேரமும் முயற்சிகளும் சேர்ந்து முக்கியமான இடத்தில் கடைக்கு நேரெதிரில் நமக்கு வாய்த்திருந்தது. இதே பகுதியில் பெரிய நிறுவனங்களின் கடைகளும் அமைந்திருந்தன. எதிர் கடைக்கு வந்ததும், அவரை அழைத்து 11.30க்கு காட்சிப்படத்துக்கு உட்கார வைத்தோம்.

காலையில் போய் அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தவர்களும் சில நிமிடங்களுக்குப் பிறகு சேர்ந்து கொண்டார்கள்.

மென்பொருள் உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்கள், வாடிக்கையாளரின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு செயல்படும் முறை, அதில் இருக்கும் நுணுக்கங்கள், தொடர்ச்சியான முதலீட்டுத் தேவை என்று சொன்ன கருத்துக்கள் நன்கு ஈர்த்தன. குறிப்பாக படங்களும், சித்திர துணுக்குகளும் அவரது கவனத்தை கவர்ந்தன. அவருக்குக் காட்டும் அறிக்கைகளிலும் அப்படி விபரங்களைப் புகுத்த வேண்டும்.

அடுத்த நாள் சொன்னது போல அவர் மங்களகரமாக ஆரம்பித்து வைத்த நிகழ்வுகள் நன்கு போக ஆரம்பித்தன. கணினித் துறை மேலாளர் என்று ஒருவர் வந்தார். அவருக்கு நம்மிடம் இருக்கும் மென்பொருள் வசதிகளைக் காட்டி விட்டு காட்சிப்படத்தையும் விளக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் நாங்கள் சாப்பிட்டு விட்டுத் திரும்பி விட்டோம். அது வரை உட்கார்ந்திருந்து எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டு போனார்.

மதியத்துக்கு மேல் இன்னொரு நிறுவனத்திலிருந்து ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த மேலாளர்கள் வந்தார்கள். அவர்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். மதிய காட்சி விளக்கத்துக்கு இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து வந்தேன். அதைத் தொடர்ந்து கடைக்குப் போய் அழைத்து வந்தேன். பார்த்து கைகுலுக்கி விட்டு வந்தேன். அவருடன் இருக்கும் பிணக்கைக் குறித்துப் பேச முடியாமல் விட்டு விட்டேன். அப்போது பேசியிருந்தால் நல்ல பலனளித்திருக்கும்.

நிறைய நண்பர்களும் வந்தார்கள். நமது கடை எப்போதுமே கலகலவென்று ஆட்கள் கூட்டம் கூடியவாறு காட்சியளித்தது. எதிர் கடையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கும். இரண்டாவது நாள் வந்தவர், மூன்றாவது நாள் வந்தவர், இரண்டாவது நாள் எட்டிப் பார்த்தவர் என்று எல்லோருக்குமே நம்மைப் பற்றிய மதிப்பீடு அதிகரித்திருக்கும். இரண்டாவது நாள் மதியம் நான் யாருக்கோ விளக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கும் போது கடந்து போனாள். ஆர்வம் பொங்கும் கண்களால் கடையைத் துளாவி விட்டுப் போனாள்.

முதல் நாள் மாலையில் கடையை மூடி அலுவலகம் திரும்பும் போது நிறைவாக இருந்தது. சூட்டோடு சூட்டாக முதல் நாள் நிகழ்வுகளைக் குறித்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

இரண்டாவது நாள் திங்கள் கிழமை. அலுவலகத்துக்குப் போய் என்னென்ன வாடிக்கையாளரை எப்படி அணுகலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். நான் சொன்னது போல மின்னஞ்சல்களை அனுப்பி விட்டுப் போயிருந்திருக்கலாம். அந்த வாய்ப்பைத் தவற விட்டோம். மற்ற நிறுவனங்களை அவர்களது கடைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போய் யாரையும் உருப்படியாகச் சந்திக்க முடியவில்லை. 11.30க்கு நம்ம ஆட்களுக்கே ஆரம்பித்தோம்.

என்னுடைய விளக்கப்படத்தில் பெயர் போட்ட திரைக்காட்சி இருந்தது. காலையில் அதை மாற்றியிருந்தது சரியாக சேமிக்கப்படாமல் சொதப்பியிருந்தேன். அதிலேயே எனக்குப் பாதி உயிர் போய் விட்டது.

அதற்குள் மதிய உணவு வேளை வந்து விட்டது. சாப்பிட்டு விட்டு வந்த பிறகு மேலும் நிறைய பேர் வர ஆரம்பித்தார்கள். காலையில் அழைத்து வந்து காட்டியிருந்ததைத் தொடர்ந்து அவரது நிறுவனத்தின் ஒரு இளம்பெண் வந்தார். அவருக்கும் வேதிப் பொருள் வாங்கி விற்பது குறித்த மென்பொருள் காண்பித்தோம்.

மூத்த துறை வல்லுனர் ஒருவர் வந்து பார்த்து விட்டு விற்பனையில் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களித்து விட்டுப் போனார்.

மூன்றாவது நாள் அலுவலகத்துக்கு நடந்து போய்ச் சேரும் போது எட்டரை மணி. யாராவது ஒருவர் போனால் போதுமா என்று கேட்டால் மறுத்து இரண்டு பேரும் போக வேண்டும் என்று சொன்னார். நல்லதாகத்தான் போனது. அலுவலகத்தில் எல்லாவற்றையும் பணி இயல்புக்கு கொண்டு வந்து விட்டார். 10 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்தோம். பார்வையாளர்கள் யாருமே வரவில்லை. காலையில் நண்பன் வந்தான். அவனை அதட்டி மிரட்டி உதவி கேட்டேன். அவனா செய்வான்!

சாப்பிடப் போயிருக்கும் போது வந்திருந்தவரைப் பிடித்து காட்சிப் படத்தைக் காண்பித்தேன். அப்போதும் அதன் பிறகும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். முதல் நாளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒருவர் தோல் பொருட்கள் தொழில் செய்பவர் வந்தது போல, கிண்டியில் தோல் பொருட்கள் செய்யும் தொழில் செய்பவர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார். முகவர் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியினர் வரவும் அவர்களுக்கு பேசினேன். அத்தோடு கிட்டத்தட்ட நிகழ்ச்சிகள் முடிந்து போயின.

பக்கத்து கடைகளில் பொருட்களை நீக்கி பொதிந்து கொண்டிருந்தார்கள். ஆணி அடிக்கும் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. நாங்களும் கடையை ஒதுக்கி விட்டுப் புறப்பட்டோம். நான் முன்னிருக்கையில் உட்கார்ந்து அலுவலகம் வந்து சேர்ந்தோம்.

இப்போதைய வாடிக்கையாளர்களுக்கு 'இரண்டு மூன்று பேர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடும் வேலை இல்லை. பெரிய குழுவாக, நிறுவனமாக செயல்படுகிறார்கள்' என்பதைத் தெரிய வைத்தது. விட்டுச் சென்று விட்டவர்களுக்கும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவான துறை நண்பர்களுக்கு நாம் இருப்பதை உரக்க அறிய வைத்தது. 60க்கும் மேற்பட்ட வருகையாளர்களில் 20 வரை திடமான வாய்ப்புகளுக்கான கதவு திறந்திருக்கிறது.

அடுத்த 10 நாட்களில் எல்லா வாய்ப்புகளையும் பின்தொடர்ந்து போய் திட்டப் பணிகளாக உருவாக்க வேண்டும்.

No comments: