Sunday, April 12, 2009

தொழில் முனைவு

எங்கள் கல்லூரி வகுப்புத் தோழன் படித்து முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தோல் பிரிவில் வேலைக்கு சேர்ந்தான். அவனது அப்பா ஒரு தொழிலதிபர். கட்டிடத் துறையில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

ஓரிரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு, 'எதுக்கு இன்னொருத்தருக்காக நாம இவ்வளவு உழைக்கணும். நாமே சொந்தமா தொழில் செய்யலாம்' என்று நண்பனுக்குத் தோன்றி விட்டது.

தோல் துறையில் பட்டம் பெற்ற எல்லோருக்குமே, 'ஒரு இடத்தில் ஆர்டர் வாங்கி, அதை வைத்து மூலப் பொருட்களை கடனுக்கு வாங்கி, தோல் செய்து கொடுத்து, வரும் பணத்திலிருந்து வாங்கியவற்றுக்குப் பணத்தை அடைத்து மீதியை நமது ஆதாயமாக வைத்துக் கொள்ளலாம்' என்ற அடிப்படையிலான ஜாப்வொர்க் எனப்படும் முறையின் மீது ஒரு நப்பாசை உண்டு.

அதற்கு பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை.
  • என்ன மாதிரியான தோல் செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு தேவை. அது இருக்கிறது.
  • 'எங்கு உள்ளீடு தோல் வாங்க வேண்டும், எங்கு வேதிப் பொருட்கள் வாங்க வேண்டும் எப்படி கடனுக்கு வாங்க வேண்டும்' என் அனுபவம் தேவை. அது ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்ததில் தெரிந்து போயிருக்கும்.
'அப்பா இவ்வளவு பணக்காரராக இருக்கும் போது நாம் எதற்கு அந்த வழியில் கஷ்டப்பட வேண்டும்' என்று நினைத்து பணித் திட்டம் ஒன்று தயாரித்து இத்தனை கோடி முதலீடு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டானாம்.

'இப்போ உனக்கு மாசச் சம்பளம் எவ்வளவு?'

'மாசம் 15,000 ரூபாய்'

'கையில் சேமிப்பு எவ்வளவு இருக்கு? இரண்டு வருஷம் சம்பளம் வாங்கியிருக்கிறாய் அல்லவா!'

'ஐம்பதாயிரம் ரூபாய்'

'அப்படியா!!!. சரி அதற்குக் கூட நான் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். அந்த 1 லட்ச ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு மாதா மாதம் 15,000 ரூபாய் ஆதாயம் சம்பாதித்துக் காட்டு. அதன் பிறகு கோடிக் கணக்கான முதலீட்டைப் பற்றி யோசிக்கலாம்'.

அப்படி ஆரம்பித்தது அவனது தொழில் முனைவு. இன்றைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை நடத்தி வருகிறான். அப்பாவின் காலத்துக்குப் பிறகும் அவர் கற்றுக் கொடுத்த ஆரம்ப பாடங்களை பின்பற்றி வளர்ந்து கொண்டிருக்கிறான்.

No comments: