Monday, April 9, 2012

ஒளிரும் இந்தியா - 2

திட்டமிட்டு அழிக்கப்படும் விவசாயம், திட்டமிடாமல் அலைக்கழிக்கப்படும் மக்கள்

அம்பானிகளும், டாடாக்களும், 'இன்போசிஸ்களும் இந்த ஆண்டு என்ன வருமானம் வர வேண்டும், எப்படி செலவழிக்க வேண்டும்
 என்று திட்டமிட்டுக் கொள்ள முடிகிறது. கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு அப்படி எந்த திட்டமிடலும் இல்லாமல் சந்தையில் நடக்கும் சூறாவளிகளில் சிக்குண்டு அலைக்கழிக்கப்படுவதே வாழ்க்கையாக மாறியிருக்கிறது.

ஆனால், விவசாய வளர்ச்சியைப் பற்றி ஒவ்வொரு நிதி அமைச்சரும் கவலைப்படுவார். 'பருவ மழை பொய்த்து போனால் விவசாய வளர்ச்சி குறைந்து விடுமே' என்று பதட்டமடைவார்கள் பொருளாதாரத்தின் மேலாளர்கள்.

விவசாய வளர்ச்சி எதற்கு தேவை? 'கிராமப் புற மக்களிடம் பணம் சேர்ந்தால் நுகர்வு பொருட்களை அவர்கள் அதிகம் வாங்குவார்கள், அதன் மூலம் பெரு நிறுவனங்களின் சந்தை விரிவடையும்' என்ற ஒரே நோக்கத்தில்தான் விவசாய வளர்ச்சி பார்க்கப்படுகிறது.
'விவசாயம் பொய்த்து போனால், விவசாயிகள் கையில் பணம் குறைந்து கிராம புறங்களில் சொகுசு பொருட்களின் (தொலைக்காட்சி, ரெப்ரிஜிரேட்டர் போன்றவை) விற்பனை குறைந்து விடுமே' என்பதுதான் கவலையின் அடிப்படை.

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்வார் அன்றைய நிதி அமைச்சர்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரி குறைப்பு, கார்பொரேட் வரிச் சலுகைகள் மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ 4,500 கோடி. அதில் பங்குச் சந்தை பரிமாற்ற வரிக் குறைப்பும் அடங்கும். அதாவது சுமார் 4,500 கோடி ரூபாய் கூடுதல் வரிச்சலுகை அரசாங்கம் கார்பொரேட்டுகளுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் வழங்கியிருக்கிறது.

இந்த ஆண்டு திட்டத்தில் விவசாயத்துக்கு அளிக்கப்படும் நிதி அதிகரிப்பு 3,100 கோடி ரூபாய் மட்டும்தான். அதாவது விவசாய கட்டுமானங்களுக்கு அரசாங்கம் 3,100 கோடி ரூபாய் அதிகம் செலவிடும் அதே நேரத்தில், கார்பொரேட்டுகள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு 4,500 கோடி ரூபாய் அதிக நிதி ஒதுக்குகிறது.

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் மக்களும், மோப்பக் குழையும் முதலாளிகளும்

"2011-12ல் வரி வருமானம் குறைந்திருக்கிறது, மானியங்கள் அதிகரித்திருக்கின்றன. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை $90 டாலர் என்று எடுத்துக் கொண்டிருந்ததற்கு மாறாக $115 ஆக இருக்கிறது. அதனால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து விட்டது."

இதைச் சரி செய்ய வரி விகிதத்தை அதிகரிப்பது, மானியங்களை குறைப்பது என்று இரண்டு இலக்குகளை அடையாளம் காண்கிறார் நிதி அமைச்சர்.

முதலில் வரி வருமான அதிகரிப்பு எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். மேலே பார்த்தது போல கார்பொரேட் மற்றும் தனிநபர் வருமான வரிகளில் புதிய சலுகைகளால் அரசுக்கு 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படப் போகிறது. 'மானியங்களால் அரசாங்கத்தின் நிதி நிலைமை சீர்குலைகிறதே' என்று கூக்குரலிடும் எந்த முதலாளித்துவ பத்திரிகையும் இந்த வள்ளல் தனத்தை கண்டு கொள்ளப் போவதில்லை.

வரி எங்கிருந்து அதிகமாக வரப் போகிறது? நேரடியாக மக்களின் பைகளிலிருந்து எடுக்கும் வகையில்தான்!

மறைமுக வரிகள் என்பவை (கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி, சேவை வரி), பொருளின் மொத்த விலையில் விதிக்கப்படுபவை. நிறுவனங்களின் லாபத்தை பாதிக்காமல் மக்களிடமிருந்து வாங்கி அரசாங்கத்துக்கு செலுத்தப்படுபவை.

மறைமுக வரிகள் குறைந்த வருமானம் உடையவர்கள் மீதும் நேர்முக வரிகள் அதிக வருமானம் உடையவர்கள் மீதும் அதிகம் சுமத்தப்படுகின்றன என்பது பொருளாதார விதி. ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.

முடி வெட்டுவது மீது 12% சேவை வரி விதித்தால், மாதம் 5000 ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளி ஒரு முடி வெட்டுக்கு 6 ரூபாய் வரி கட்டுவார், மாதம் 5 லட்சம் சம்பாதிக்கும் வங்கி ஊழியரும் அதே 6 ரூபாய்தான் வரி கட்டுவார். தொழிலாளி கட்டும் வரி அவரது வருமானத்தில் 0.1%, வங்கி ஊழியர் கட்டுவது அவரது வருமானத்தில் 0.001%. அதாவது வரியின் தாக்கம் தொழிலாளியின் மீது 100 மடங்கு அதிகம்.

இப்போது வரி வருமானத்தை அதிகமாக்க என்ன செய்திருக்கிறார்கள்?

இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் சேவை வரி பெருமளவு விரிவு படுத்தப்படுகிறது. 'எந்தெந்த சேவைகளுக்கு வரி விதிப்பு' என்ற பட்டியலை கைவிட்டு, 'எந்தெந்த சேவைகளுக்கு வரி விதிப்பு இல்லை' என்று வரையறுக்கும் பட்டியலின் அடிப்படையில் அந்த பட்டியலில் இல்லாத எல்லா சேவைகளுக்கும் வரி விதிக்கும் முறை அமலுக்கு வருகிறது. கூடவே சேவை வரி வீதத்தை 10%லிருந்து 12% ஆக உயர்த்தியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் மூலம் சுமார் 18,660 கோடி ரூபாய் அதிக வருமானம் ஈட்டப் போகிறது, அதில் பெரும்பகுதி உழைக்கும் மக்களிடமிருந்து எடுக்கப்படப் போகிறது என்பது தெளிவு. விவசாயிகளுக்கு கொடுக்கும் 3,200 கோடி முழுக்க முழுக்கவும் இப்படி அரசாங்கம் திரும்ப எடுத்துக் கொள்வதாகி விடும்.

மறைமுக வரிகள் மூலம் ரூ 45,940 கோடி அதிக வருமானம் வரப் போகிறது.

ஏன் இப்படி? கடுமையான நிதி பற்றாக்குறை காலத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, பணக்காரர்களுக்கு வரிக் குறைப்பு, பரந்து பட்ட மக்கள் மடியில் கை வைப்பு என்று அரசாங்கம் செயல்படுவது ஏன்?

ரிலையன்ஸ் செல்பேசி சேவை பயன்படுத்தும் ஒருவருக்கு 1000 ரூபாய் பில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் ரிலையன்சுக்கு 300 ரூபாய் லாபம் என்றால் ரிலையன்ஸ் கட்ட வேண்டிய வரித் தொகை 30% என்ற வருமான வரி வீதத்தில் அதிகபட்சம் 90 ரூபாய். அதே பில்லுக்கு சேவை வரி 10% விதிக்கப்பட்டால் வாடிக்கையாளர் கட்ட வேண்டிய கூடுதல் தொகை மூலம் அரசுக்கு வருமானமாக வருவது 100 ரூபாய்.

சேவை வரி 12% ஆக உயர்த்தப்பட்டால் வாடிக்கையாளர் 120 ரூபாய் வரி கட்ட வேண்டியிருக்கும் (20 ரூபாய் அதிகம்). ரிலையன்சின் லாபத்திலிருந்து 30 ரூபாய் கூடுதல் வரி வசூலிக்க வேண்டுமானால் வருமான வரி வீதத்தை 40%ஆக உயர்த்த வேண்டும். அப்போதுதான் 120 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

சேவை வரி உயர்த்தப்பட்டு 30 ரூபாய் அதிகம் செலவு ஆனாலும் தொழிலாளி தொலைபேசி பயன்படுத்துவதை நிறுத்தி விடப் போவதில்லை. 500 ரூபாய் கூலி பெறும் ஒருவர் சாப்பிடும் பொருட்கள் வாங்க வேண்டும், குழந்தைகளுக்கு துணி எடுக்க வேண்டும், கூலி வேலைக்கு கூப்பிடுபவர்களுடன் தொடர்பை பேண செல்பேசி வைத்திருக்க வேண்டும்.  அந்த செலவுகளின் மீது வரி கூட்டப்பட்டாலும் அவர் செலவு செய்வதை குறைத்துக் கொள்ளப் போவதில்லை. அதனால் அரசாங்கத்துக்கு வருமானம் அதிகமாவது தவறப் போவதில்லை.

ஆனால், வருமான வரியை உயர்த்தினால் 'இந்தியாவில் வரி வீதம் அதிகம், அதனால் தொழில் முனைவுக்கு ஊக்கம் இல்லை' என்று அதியமான் போன்ற பொருளியலாளர்கள் கூக்குரலிடுவார்கள், அம்பானியும், தான் குவித்து வைத்திருக்கும் மூலதனத்தை டிம்பக்டூவுக்கு கொண்டு போய் விடுவார்.

எனவே, தனியார் முதலாளிகள் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பணத்தை சுவிஸ் வங்கிக்கு மாற்றி விட்டு உலகச் சுற்றுலா போய் விடுவார்கள். இதைத்தான் இப்படி சொல்கிறார் நிதி அமைச்சர்,

"சென்ற ஆண்டின் வளர்ச்சி குறைவுக்கு முக்கிய காரணம் தனியார் முதலீட்டில் ஏற்பட்ட சுணக்கம்தான். கடன் வாங்குவதற்கான வட்டி அதிகரிப்பு, உள்நாட்டு தொழில் முனைவோர் உணர்வு பலவீனமாக இருப்பது இதற்கு காரணமாக இருந்தன."

அப்படிப்பட்டவர்களை தாஜா செய்து முதலீடு செய்ய வைப்பதற்காக வருமான வரி குறைப்பு, வரிச் சலுகைகள், குறைந்த விலையில் நிலம் என்று ஐஸ் வைக்க வேண்டியிருக்கிறது. நாட்டின் கனிம வளங்களை, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சேர்த்த பணத்தை முதலீடு செய்ய வைப்பதற்கு, முதலாளிகளுக்கு கேரட் காட்டி ஊக்குவிக்க வேண்டும். உழைத்து உழைத்து தேய்வதற்கு மக்களை கம்பால் குத்தி விரட்ட வேண்டும்.

இதுதான் இன்றைய 'ஜனநாயக' அரசின் கொள்கை.

கட்டுமானத்துறை பணிகளில் பொதுத்துறை-தனியார் துறை கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும்படி சாத்தியப்பாடு குறைபாடு நிதிஉதவி - Viability Gap Funding (VGF) திட்டம் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டம் இனிமேல் பாசனத் துறை (அணைகள், கால்வாய்கள், தடுப்பணைகள்), விவசாய சந்தைகளில் பொது வசதிகள், மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள், உரத் துறையில் முதலீடு போன்றவற்றுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

அதாவது இந்த துறைகளில் தனியார் துறையினர் 'வேண்டா வெறுப்பாக' முதலீடு செய்வதற்கு அரசாங்கம் நிதி (20% முதல் 40% வரை) உதவி செய்யுமாம். அந்த நிதி உதவியை பெற்று வங்கிகளில் கடன் வாங்கி தனியார் நிறுவனங்கள் திட்டங்களில் ஈடுபடுவார்களாம். வரும் லாபத்தை தமது சாதனையாக ஒதுக்கிக் கொள்வார்களாம்.


ஒளிரும் இந்தியா - 1

No comments: