Tuesday, April 10, 2012

ஒளிரும் இந்தியா - 3

மத்திய அரசின் கையில் நிதிக் குவிப்பு

நாடு முழுவதையும் ஒற்றை சந்தையாக மாற்றுவது வர்த்தகர்களுக்கு, கார்பொரேட் சந்தை வளர்ச்சிக்கு தேவையான ஒன்று. அதனால் உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுகள் கையில் இருக்கும் வரி விதிக்கும் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு மத்திய அரசுக்கு மாற்றப்படுகிறது. இப்போது வருமான வரி, சேவை வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவை மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு திரட்டப்படுகிறது. அதிலிருந்து மாநிலங்களுக்கு ஏதோ பிச்சை போடுவது போல நிதி ஒதுக்குவார்கள்.

மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 2012-13 நிதி ஆண்டில் ரூ 10,77,612 கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.4%) ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து மாநில அரசுகளுக்கு - ரூ 3,65,216 கோடி ஒதுக்கப்படுகிறது. அதாவது சுமார் 70%க்கு மேல் மத்திய அரசே நேரடியாக செலவிடுகிறது.

அதில் பெரும்பகுதி இராணுவத்துக்கு செலவாகிறது. ராணுவத்துக்கு ரூ 1,93,407 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இந்த செலவினங்கள் நாட்டு பாதுகாப்பு என்ற தலைப்பில் கேள்வி கேட்கப்படாமல் செலவிடப்படுகின்றன. மத்திய அரசின் வருவாயில் சுமார் 19% இராணுவத்துக்கு செலவாகிறது. சுமார் 50 லட்சம் பாதுகாப்பு படையினருக்கு தலைக்கு சுமார் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஒப்பீட்டளவில் சுமார் 60 கோடி விவசாயிகளுக்கு தலைக்கு சுமார் 350 ரூபாய் (திட்ட ஒதுக்கீடு) செலவிடப்படுகிறது.

இப்போதைய விற்பனை வரி (மாநிலங்களால் திரட்டப்படுவது) சேவை வரியுடன் இணைக்கப்பட்டு ஜிஎஸ்டி என்று பொருட்கள் சேவைகள் வரி அமலுக்கு வந்து விட்டால் மாநில அரசின் நிதி ஆதாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் கையில் போய் விடும்.

உலக மயம், தனியார் மயம், தாராள மயம்

இந்தியா பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு தடைசெய்யப்பட்டது. யார் தடை செய்தார்கள்? 'ஐரோப்பிய கடன் நெருக்கடி, மத்திய கிழக்கின் அரசியல் நிலைமை, எண்ணெய் விலை உயர்வு, ஜப்பானில் நிலநடுக்கம்' இவைதான் இந்திய பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணம் என்கிறார் நிதி அமைச்சர்.

இதற்கு என்ன செய்ய வேண்டும். உலகச் சந்தையை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்.

"இந்திய பண வீக்கத்துக்கான முக்கிய காரணங்கள் -  விவசாயத் துறையில் தட்டுப்பாடுகள் தொடர்வதும், உலக சந்தையில் விலைகள் அதிகரிப்பதும்தான்"

 என்கிறார் நிதி அமைச்சர்.

இதற்கு என்ன செய்ய வேண்டும். விவசாயத் துறையை ஊக்குவிக்க வேண்டும், உலகச் சந்தையை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்.

12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டு.

  • உள்நாட்டு தேவை அடிப்படையிலான வளர்ச்சி
  • தனியார் முதலீடு வளர்வதற்கான சூழலை உருவாக்குதல்
  • விவசாயம், எரிசக்தி, போக்குவரத்து துறைகளில் (நிலக்கரி, மின்சாரம், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான போக்குவரத்து) தட்டுப்பாடுகளை நீக்குவது
  • அதிக சுமை சுமக்கும் 200 மாவட்டங்களில் குறிப்பாக, ஊட்டச் சத்து குறைவு பிரச்சனையை சரி செய்ய கவனம் செலுத்துதல்
  • அரசு சேவைகளை வழங்குவது, நிர்வாகம், வெளிப்படைத் தன்மை இவற்றை மேம்படுத்துவது, கருப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிப்பது

என்பவற்றை இலக்குகளாக முன் வைக்கிறார் நிதி அமைச்சர்.

அதே நேரம், இவற்றுக்கு முற்றும் மாறான

"இந்தியாவுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகளாவிய பொறுப்புகள் இருக்கின்றன. உலகின் பொருளாதார கொள்கை உருவாக்குனர்களின் உயர் மேசையில் நமக்கும் இடம் கிடைத்திருப்பது நிறைவு தரக்கூடிய ஒன்று. ஆனால், அது நமது தோளில் புதிய பொறுப்புகளையும் ஏற்றியிருக்கிறது. இந்தியா தனது பொருளாதார வலிமைகளை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தால் அது உலக பொருளாதாரத்து திடத்தை கொடுப்பதாகவும், நிலையில்லாமல் அலை பாயும் பன்னாட்டு மூலதனத்துக்கு ஒரு இலக்காகவும் அமையும்"

என்று அரசின் உண்மை கொள்கையை தெளிவு படுத்தி விடுகிறார்.

யார் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அலைந்து கொண்டிருக்கும் பன்னாட்டு மூலதனத்துக்கு பாதுகாப்பான இலக்காக ஏன் இந்தியா தயாரிக்கப்பட வேண்டும்?

ஏப்ரல் 2011 முதல் ஜனவரி 2012 வரையிலான 9 மாதங்களில் இந்தியாவின் வர்த்தக் பற்றாக்குறை $ 148 பில்லியன் (சுமார் ரூ 7 லட்சம் கோடி).  ஏற்றுமதி - $ 243 பில்லியன், இறக்குமதி - $ 391 பில்லியன், பற்றாக்குறை - $ 148 பில்லியன். இந்த வர்த்தக பற்றாக்குறை வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் பணம் போன்ற வருமானங்களின் மூலம் ஈடு செய்யப்பட்ட பிறகான நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% ஆக (சுமார் ரூ 4 லட்சம் கோடி) இருக்கிறது. இந்த பற்றாக்குறைக்கு ஈடாக அன்னிய முதலீடு வர வேண்டும். வரா விட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.

இதற்கான பாதை வகுக்கும் கொள்கை முடிவுகளில் சில
  • மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அரசு பங்குகளை விற்கும் கொள்கை தொடரும். 51% பங்குகளும் நிர்வாக கட்டுப்பாடும் அரசு கையில் இருக்கும். (இதை எதிர்கால ஒரு புதிய அரசாங்கம் எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளலாம்)
  • ஒற்றை பிராண்ட் சில்லறை வணிகத்தில் 100% அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 51% முதலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிக்கும் முடிவு தள்ளி (மட்டும்தான்) வைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்திய கார்பொரேட் கடன் பத்திர சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிப்பது
  • ஓய்வூதியத் தொகை ஒழுங்குபடுத்தல் மற்றும் வளர்ச்சி மசோதா, வங்கி சட்ட திருத்த மசோதா, காப்பீட்டு சட்ட திருத்த மசோதா போன்றவை நிறைவேற்றப்பட இருப்பது
  • பொதுத்துறை வங்கிகளுக்குத் தேவையான மூலதனத்தை திரட்டும் ஒரு ஏஜென்சி நிறுவனத்தை உருவாக்குவது

இந்தியாவும் வளர்ச்சியும்

சிறுபான்மையான பெரு நிறுவனங்களின் கையில் செல்வ குவிப்பை ஊக்குவிப்பதுதான் நம்மை ஆளும் ஆட்சியாளர்களின் நோக்கம் என்பது இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் தெளிவாக தெரிகிறது.

120 கோடி மக்கள் வாழும் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ஒரு கோடி கோடி. அதாவது அலைக்கற்றை ஊழலினால் ஏற்பட்ட இழப்பை விட சுமார் 50 மடங்குதான் அதிகம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான பொருள் நாட்டு மக்கள் உழைத்து உருவாக்கும் மதிப்பு என்று இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கணக்கீடுகளில், நாட்டு மக்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பு அல்லது சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பு என்றுதான் அளவிடப்படுகிறது. ஒருவர் தனது தோட்டத்தில் பயிரிட்டு கத்தரிக்காய் சாப்பிட்டால் அது உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் சேராது. அதையே சந்தையில் வாங்கி வந்தால் சேரும்.

இதுதான் தனியார் மய, தாராள மய, உலக மயமாக்கலுக்குப் பிறகான வேகமான வளர்ச்சியின் ரகசியம். எல்லாவற்றையும் சந்தைக்கு இழுத்து வந்து விட்டால், குடிதண்ணீருக்கு தனியார் நிறுவனத்துக்கு விலை கொடுத்து, பள்ளிக் கல்விக்கு தனியார் பள்ளியில் கட்டணம் கட்டி, எஞ்சினியரிங் படிக்க தனியார் கல்லூரியில் பணம் இறைத்து, மக்கள் உழைத்து சேர்க்கும் பணத்தை சந்தையில் அழுவதன் மூலமும் தொலை தொடர்பு துறையில் அலைக்கற்றை ஊழல், சுரங்கத் துறையில் ஊழல் என்று நாட்டின் சொத்துக்களை கொள்ளை கொடுப்பதன் மூலமும்தான் வளர்ச்சி சாதிக்கப்படுகிறது.

அத்தகைய வளர்ச்சியின் மூலம் முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் பைகளில் நிரம்பி வழியும் பணம் அவர்கள் ஆன்டிலா போன்ற மாளிகைகள் கட்டும் போது ஒழுகி ஓடுவதன் மூலம் இந்தியாவில் வறுமை ஒழிந்து விடும் என்பதுதான் பொருளாதாரக் கொள்கை.

இந்த கொள்கைகளை செயல்படுத்தவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐந்தாண்டு திட்டங்கள் போடப்படுகின்றன. ஆண்டு தோறும் வரவு செலவு திட்டம் போடப்படுகிறது. ரிசர்வ் வங்கி மூலம் பணத்தை நெறிப்படுத்துகிறார்கள். ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் (எவ்வளவு பொருத்தமான தேதி!) நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை பிப்ரவரி கடைசி வாரத்தில் அல்லது மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஒளிரும் இந்தியா - 1
ஒளிரும் இந்தியா - 2

4 comments:

ஹரி நிவாஸ் said...

நான் உங்கள் வலைபதிவை இன்று தான் கண்டேன். நன்றாக இருக்கிறது இதை நான் ஈமெயில் முலம் என் நண்பருக்கு அனுப்பா நினைகிறேன் உங்கள் அனுமதி தேவை , மேலும் america oil money and free dollar trade என்ற ஒரு கட்டுரை படித்தேன் அது உங்கள் தல்திள்ள அல்லது வேற என்று நினைவில்லை எத தை பற்றி நீகள் எல்தலமே?

ஹரிநிவாஸ்

மா சிவகுமார் said...

நன்றி ஹரிநிவாஸ்,

உங்கள் நண்பருக்கு மின்னஞ்சலில் தாராளம் அனுப்பலாம்.

நீங்கள் சொல்லும் அமெரிக்கா எண்ணெய் பணமும் டாலர் வர்த்தகமும் பற்றிய கட்டுரையை படித்து விட்டு முடிந்தால் எழுதுகிறேன்.

நன்றி.

Unknown said...

I just read through the entire article of yours and it was quite good. This is a great article thanks for sharing this informative information. I will visit your blog regularly for some latest post.

Regards
MCX Calls

bhoomi said...

தேங்க்ஸ் போர் தி அர்டிச்லஸ் இ பிந்து திஸ் இச் ஓனே ஒப் தி வெரி இண்டேறேச்டிங் அர்டிச்லே டு ரேஅது , இ வில் விசிட் அகின் போர் மோர் அர்டிச்லே . Best NCDEX Tips