Monday, February 19, 2007

பொருளாதாரச் சுழற்சி (economics 45)

இந்து வளர்ச்சி வீதம் என்று சொல்லப்பட்ட 3-4 % வளர்ச்சிதான் இந்தியாவுக்கு விதித்தது என்று 1990கள் வரை நினைத்து வந்தார்கள். உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, விலை வீக்கம் இரண்டும் பாதகமாக இருந்தது வங்கி வட்டி வீதம் 12%, ஐந்து ஆண்டுகளில் போட்ட பணம் இரட்டிப்பாகி விடும் என்று விளம்பரம் செய்வார்கள். அப்போது பணவீக்க வீதம் 10% த்துக்கு மேலும் வளர்ச்சி வீதம் 4% ஆகவும் இருந்தது.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆரம்பித்த பிறகு, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆரம்பித்த பிறகு, விலைவீக்க வீதம் 4% ஆகவும், வளர்ச்சி 7-8% ஆகவும் ஆனது. இப்போது வளர்ச்சி 9% மேல் போய் 10% வளர்ச்சிக்கும் திட்டம் போடுகிறார்கள்.

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்போதும் ஒரே அளவில் இருப்பதில்லை. குறிப்பிட்ட ஆண்டுகளில் அதிகமாகவும் குறிப்பிட்ட ஆண்டுகளில் குறைவாகவும் இருக்கலாம். பல ஆண்டுகள் தொடர்ந்து உயர் வளர்ச்சியும் அல்லது தொடர்ச்சியான குறைந்த வளர்ச்சியும் நிலவும். இதை பொருளாதாரச் சுழற்சி என்று சொல்கிறார்கள்.

பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் போது எல்லோருக்கும் நம்பிக்கை அதிகமாக இருப்பதால் புதிய முயற்சிகளில் முதலீடு செய்வார்கள். புதிய தொழில்கள் தொடங்கப்படும், ஏற்கனவே இருக்கும் தொழில்கள் புதிய கருவிகளை வாங்கிப் போடும், ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். இப்படிச் செலவாகும் பணம் எல்லாம் பணப்புழக்கத்தை அதிகமாக்கி மக்களின் கையில் செலவுக்கு பணம் கூடும். நுகர்பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். அதனால் வணிக நிறுவனங்களின் லாபம் கூடுகிறது.

அதைப் பார்த்து இன்னும் முதலீட்டை அதிகப்படுத்துவார்கள். இப்படியாக ஒவ்வொன்றும் அடுத்த நிலையைத் தூண்ட பொருளாதாரம் வளர்ந்து கொண்டே போகும். இப்படி எல்லோருமே புதிய முயற்சிகளில் செலவுகளில் ஈடுபடும் போது ஒரு பகுதி தவறான முடிவுகளால் வீணாவது தவிர்க்க முடியாதது. அப்படி வீணாகும் மதிப்புக்கு நிகரான பொருட்கள் உற்பத்தியாகாது. ஆனால், பணத்தின் அளவு அதிகரித்திருக்கும். அதிக பணம் குறைந்த பொருட்களை வாங்க சந்தைக்கு வரும் போது விலைவாசி உயரும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், செழிப்பான காலங்களில்
  • புதிய முதலீடுகள் அதிகரிக்கும்.
  • வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்
  • ஊழியர்களில் சம்பளம் அதிகரிக்கும்.
  • வணிக நிறுவனங்களின் விற்பனை/லாபம் அதிகரிக்கும்.
  • விலைவாசி அதிகரிக்கும்.
இப்படித் தவறுகள் அதிகமானால் வளர்ச்சி குன்றி விலைவாசி ஏற ஆரம்பிக்கும். வளர்ச்சி வீதம் குறைய ஆரம்பிக்கும் போது எதிர்மறை நிகழ்ச்சிகள் அரங்கேறும்.

மக்களின் வாங்கும் திறன் குறைவதால் விற்பனை குறையும். லாபம் குறையும், முதலீடு முயற்சிகள் நிறுத்தப்படும். வேலை வாய்ப்புகள் குறைந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். பொருட்களின் விலையும் குறைய ஆரம்பிக்க வேண்டும். இதுவும் ஒரு சுழற்சியாக பல ஆண்டுகள் தொடர்ந்து பொருளாதாரத்தை முடக்கிப் போட்டு விடலாம்.

No comments: