Tuesday, February 20, 2007

ஒன்று போட்டால் பத்தாவது எப்படி? (economics 46)

புதிய முதலீடு எப்படி நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது என்பதற்கு ஒரு சுவையான கணக்கு இருக்கிறது.

ஏற்கனவே பார்த்தது போல ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு உடனடிச் செலவுக்கும் மீதியிருப்பது சேமிப்புக்கும் போகிறது. புதிய முதலீடாக 50,000 ரூபாய்க்கு ஒருவர் வீட்டின் வெளியே மதில் சுவர் கட்டுகிறாரல என்று வைத்துக் கொள்வோம். அதில் வேலை பார்க்கும் கட்டிடத் தொழிலாளர்கள், செங்கல் சூளை பணியாளர்கள், மற்றும் பலரும் சேர்த்து நாட்டின் மொத்த வருமானம் 50,000 ரூபாய் உயரும்.

அத்தோடு நின்று விடுவதில்லை. கூடுதலாக வரும் வருமானத்தை இவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பகுதியை சேமிப்பார்கள், ஒரு பகுதியை செலவளிப்பார்கள். வருவாயில் 20% சேமிப்பு என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவருக்கும் இந்த வீதம் வேறாக இருந்தாலும் இந்தக் கணக்குக்காக ஒரே மாதிரியாக 20% என்று எடுத்துக் கொள்வோம்.

ஐம்பதாயிரத்தில் 10,000 முடங்கி விட 40,000 அடுத்தச் சுற்றில் செலவாகிறது. செலவு செய்த இடத்தைப் பொறுத்து அந்தச் செலவு, காய்கறி விற்றவர், பால் விற்றவர், துணி விற்றவர், பேருந்து நிறுவனம் எனப் பலருக்கு வருமானத்தை அதிகரிக்கச் செய்கிறது. இரண்டாவது சுற்றுக்குப் பிறகு மொத்த உற்பத்தி அதிகரிப்பு 90,000 ரூபாய்.

மூன்றாவது சுற்றிலும் அதே 80% செலவளிப்பு என்று வைத்துக் கொள்வோம். 32,000 ரூபாய்க்கு தேவை அதிகரித்து உற்பத்தி நடக்கும். மொத்தம் 1,22,000 ரூபாய்.

இப்படியே குறைந்து கொண்டே போய் மொத்த உற்பத்தி 2,50,000 ரூபாய் அதிகரிக்கும். 50,000 ரூபாய் உற்பத்தி முதலீடு தண்ணீரில் விழுந்த கல்லைப் போல வட்ட வட்டமாக பரவி 2,50,000 ரூபாயை உருவாக்கி விடும். கணக்குப் போடத் தெரிந்தவர்கள், இது எப்படி வந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இடையில் யாராவது செலவளிக்காமல் சேமித்து விட்டால் இந்த அளவு குறைந்து விடும். எல்லோருமே கையில் கிடைப்பதை எல்லாம் செலவளித்துக் கொண்டே இருந்தால் இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்படி புதிய முதலீடுகள் வருமானத்தை பல சுற்றுகளில் உயர்த்துவதன் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தி உயர உதவுகின்றன்.

அதே போல முதலீடு குறைந்தால், வருமானம் குறைவது பலசுற்றுகளில் கூடிக் கொண்டே போய் மொத்த உற்பத்தியைக் குறைத்து விடுகின்றன.

விலைவீக்கம் அதிகமானால் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தை வங்கிகள் உயர்த்தும் போது முதலீடுகள் தள்ளிப் போடப்படுகின்றன. அதனால், மொத்தத் தேவை குறைந்து விலைகளும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதில் அபாயம் என்னவென்றால் விலைகள் குறையும் போது, கூடவே வேலை வாய்ப்புகளும் குறைந்து விடும்.

நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமானால் வளர்ச்சி வீதம் குறைவாக இருந்தால் வளர்ச்சியைத் தூண்ட புதிய முதலீடுகள் தேவைப்படும். வட்டி வீதத்தைக் குறைத்தாலும் தனியார் நிறுவனங்களை முதலீடு செய்யத் தூண்டுவது நடக்காமல் போகலாம். அத்தகைய நேரங்களில் அரசு புதிய திட்டங்களில், பொதுப் பணிகளில் பணம் செலவளிக்கும்.

சென்னையிலிருந்து, பெங்களூர் வரை சாலை போட 200 கோடி ரூபாய் அரசு செலவளித்தால் அது எப்படி செலவாகிறது என்பதைப் பொறுத்து மொத்த உற்பத்தி 1000 கோடி வரை உயர முடியும்.

No comments: