Thursday, March 21, 2019

மைண்ட்-ட்ரீ மீது காதலாம், தூக்கிப் போகத் துடிக்கும் எல்&டி

மைண்ட்-ட்ரீ என்ற ஐ.டி சேவை நிறுவனத்தின் மீது கண் வைத்திருக்கிறது எல்&டி. ஏற்கனவே, ஒரு ஐ.டி சேவை நிறுவனத்தை நடத்திவரும் எல்&டிக்கு, இதையும் வாங்கிப் போடலாம் என்று நப்பாசை.  கைநிறைய பணம் இருக்கிறது, ஐ.டி சேவைத் துறையில் நல்ல லாபம் கிடைக்கிறது என்று கிடைக்கும் வாய்ப்பை தட்டிச் செல்லப் பார்க்கிறது.

முன்னாள் விப்ரோ துணை சேர்மன் அசோக் சூடா தலைமையில் ஐ.டி துறையில் வேலை அனுபவம் கொண்ட 10 ஊழியர்கள் 1990-களின் இறுதியில் மைண்ட்-ட்ரீ என்ற ஐ.டி சேவை நிறுவனத்தை ஆரம்பித்தனர். அதில் கபே காபி டே-வை தொடங்கியவரான சித்தார்த்தா 6.5% பங்குகளை பெற்றுக் கொண்டார், மைண்ட்-ட்ரீக்கு அலுவலக வசதியை செய்து கொடுத்தார்.

2007-ம் ஆண்டில் மைண்ட்-ட்ரீ $70 கோடி (சுமார் ரூ 3500 கோடி) விற்பனை வருவாயை எட்டியதும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2012-க்குள் $100 கோடி விற்பனையை எட்ட வேண்டும் என்று 2006-ல் இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்தது. காலக்கெடுவை இரண்டு முறை நீட்டித்தும் இந்த ஆண்டு வரை அந்த இலக்கு எட்டப்படவில்லை. 2019 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனையில் பாதியை டிஜிட்டல் சேவை வணிகத்தில் துறையில் ஈட்டியிருக்கிறது. நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி 2018-க்குப் பிறகு 52% உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான் சித்தார்த்தா தன் கைவசம் இருக்கும் மைண்ட்-ட்ரீ நிறுவனத்தின் 20% பங்குகளை விற்பதற்கு விரும்புகிறார். சென்ற ஆண்டே மைண்ட்-ட்ரீ இயக்குனர் குழுவில் இருந்து விலகி விட்டு, தான் பங்குகளை யாரிடமாவது விற்கப் போவதாக மைண்ட்-ட்ரீ உரிமையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பங்குகளை விற்கப் போவதாக பொதுவில் அறிவித்திருக்கிறார். சித்தார்த்தாவின் கபே காபி டே இயக்குனர் குழு இந்தப் பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கியிலிருந்து ரூ 3,000 கோடி கடன் பெற்று அந்தப் பங்குகளை அடகு வைத்திருந்த நிறுவனங்களிடமிருந்து அவற்றை மீட்டு விற்பதற்கு வசதியாக ஒரு எஸ்க்ரோ கணக்கில் போட்டு விட்டார், சித்தார்த்தா.

இப்போது எல்&டி நிறுவனம் சித்தார்த்தாவின் 20.3% பங்குகளை ரூ 3,269 கோடிக்கு வாங்கப் போவதாகவும் இன்னும் ரூ 7,464 கோடி வரை செலவழித்து சுமார் 46% (31%) பங்குகளை பிற பங்குதாரர்களிடமிருந்து வாங்க முன்வருவதாகவும் மார்ச் 18-ம் தேதி அறிவித்திருக்கிறது. இவ்வாறு மைண்ட்-ட்ரீயில் தனது பங்கு கையிருப்பை 66.32% ஆக உயர்த்துவதற்கு எல்&டி ரூ 11,000 கோடி செலவளிக்க திட்டமிட்டிருக்கிறது.

இடது புறம் எல்&டி தரப்பு, வலது புறம் மைண்ட்-ட்ரீ போராளிகள் (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)

இரண்டு நிறுவனங்களும் இணையும்போது ஒன்றையொன்று வலுப்படுத்துவதாக அமையும் என்கிறது எல்&டி. ஆனால், மைண்ட்-ட்ரீயின் உரிமையாளர்கள் கிருஷ்ணகுமார் நடராஜன், என்.எஸ் பார்த்தசாரதி, ரோஸ்தோவ் ராவணன், சுப்ரதோ பாக்சி அதை எல்&டியிடம் விற்க விரும்பவில்லை. எல்.&டியின் இந்தத் தாக்குதலை எதிர் கொள்ள ஒடிசா பணித்திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்த பாக்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு பெங்களூருவுக்கு திரும்பி மைண்ட்-ட்ரீயில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.

இந்த இரண்டு நிறுவனங்களின் நிதி நிலை எப்படி இருக்கிறது?

எல்&டி குழுமத்தின் மொத்த விற்பனையில் 75% பொறியியல், 5% உற்பத்தி, 15% ஐ.டி முதலாள சேவைத் துறையில் கிடைக்கிறது. ஐ.டி உள்ளிட்ட சேவைத் துறையில் கிடைக்கும் நிகர லாபம் 15-16% மற்ற துறைகளை விட அதிகம். எனவே, ஆண்டு தோறும் குவிக்கும் லாபத்தை புதிதாக முதலீடு செய்ய இந்தத் துறையில் வாய்ப்புகளை தேடுகிறது.

2019 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் (ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 வரை)

விற்பனை நிகர லாபம் பணக் கையிருப்பு
எல்&டி ஐ.டி 6,959.80 1,136.90 2,032.80
எல்&டி குழுமம் 95,323.20 4,878.80 23,900.00
மைண்ட்-ட்ரீ 5,182.10 555.70 973.60

மைண்ட்-ட்ரீ எல்&டி குழுமத்தின் முன்பு ஒரு சின்ன ஆளாக உள்ளது. தனது ரூ 23,900 கோடி பணக்கையிருப்பை எங்கு போட்டு லாபம் ஈட்டுவது என்று தேடி அலைகிறது. மைண்ட்-ட்ரீ பங்குகளை வாங்கி அதன் நிர்வாகத்தை கைப்பற்றி விட்டால் கணிசமாக லாபம் ஈட்ட முடியும் என்று நினைக்கிறது.

ஆனால், மைண்ட்-ட்ரீ முதலாளிகள் எல்&டியிடம் போய்ச் சிக்க விரும்பவில்லை. அவர்கள் சித்தார்த்தா தனது பங்குகளை ஏதாவது நிதி மூலதன நிறுவனத்திடம் விற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால்,  KKR, பேரிங் போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்களை அணுகிய போது, அவை தங்களுக்கு "இயக்குனர் குழுவில் இடம் வேண்டும், மாதாந்திர அறிக்கைகள் வர வேண்டும், உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் வேண்டும், செயலூக்கமான பங்களிப்பு வேண்டும்" என்று நிர்வாகத்தில் தலையிடும் வகையில் நிபந்தனை விதித்திருக்கின்றனர். அவர்கள் சித்தார்த்தாவை போல பணத்தை கொடுத்து விட்டு ஒதுங்கி இருக்க மாட்டார்கள். நிர்வாகத்துக்குள் நுழைந்து கையை முறுக்கத்தான் முயற்சிப்பார்கள்.

மைண்ட்-ட்ரீ அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பங்குகளை பங்குச் சந்தையிலோ அல்லது இயக்குனர் குழுவில் சேர வேண்டும் என்று நிபந்தனை விதிக்காத தனியார் முதலீட்டு நிறுவனங்களிடமோ விற்கும்படி சித்தார்த்தாவிடம் சொல்லியிருக்கிறார்கள். சந்தையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்கப்பட்டால் பங்கு விலை கணிசமாக சரியும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களோ கடும் நிபந்தனைகளை விதிக்கின்றன.

சித்தார்த்தாவின் பங்குகளை வாங்கும்படி கேட்டு ஜனவரி மாதம் வங்கிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளை அணுகினர். குடும்ப முதலீட்டு நிறுவனங்களான பிரேம்ஜி முதலீட்டு நிறுவனம், பட்னி ஆகியவையும் அணுகப்பட்டன. அவர்கள் அனைவரும் பேரிங் பங்குகளை வாங்க விரும்பும் போது அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கின்றனர்.

எல்&டி ஆரம்பத்தில் மைண்ட்-ட்ரீ நிர்வாகத்தின் ஒப்புதலுடன்தான் சித்தார்த்தாவின் பங்குகளை வாங்க விரும்ப நினைத்திருக்கிறது. ஆனால், எல்&டியிடம் நிர்வாகக் கட்டுப்பாடு போய் விட்டால் தங்களது நிறுவன கலாச்சாரம் மாறி விடும் என்று சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர் மைண்ட்-ட்ரீ முதலாளிகள். இறுதியில் எல்&டி அவர்களது சம்மதம் இல்லாமலேயே மைண்ட்-ட்ரீயை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி விட்டது.

பெண்ணின் அப்பாவின் சம்மதத்தோடு பெண் கேட்டு பார்த்து, அவர் மறுத்து விட்ட பிறகு இப்போது தனது பணபலம், படை பலம், ஆள் பலத்தை ஏவி தூக்கிக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறது எல்&டி.

சிறிய நிறுவனங்கள் பெரிய ஐ.டி நிறுவனங்களோடு இணைக்கப்படும் போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் நிறுவனம் எல்&டியோடு இணைக்கப்பட்டால் அது வணிக மதிப்பை குறைப்பதாகவும், நிர்வாக அறம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழி வகுப்பதாகவும் இருக்கும் என்று மைண்ட்-ட்ரீ முதலாளிகள் கருதுகின்றனர்.

எல்&டி "புல்டோசர்கள், கிரேன்கள் சகிதம் சொத்தை அள்ளிப் போவதற்கு வாசலில் வந்து நிற்கிறது" என்று பதறுகின்றனர். "இப்படி எல்லாம் நடந்தால் ஐ.டி துறையி்ல யாரும் புதிய நிறுவனம் தொடங்க மாட்டார்கள், நாடு முன்னேறாது" என்று தேசபக்த வேடம் பூண்டு பயமுறுத்துகின்றனர்.

"நாங்கள் மைண்ட்-ட்ரீயை காதலுடன் அணுகுகிறோம், எங்கள் உள்ளத்திலிருந்து இந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்" என்று அன்பாக பேசுகிறது எல்&டி. "முதலீட்டாளர்களாகத்தான் வருகிறோம், மைண்ட்-ட்ரீயை தனி நிறுவனமாக பராமரிப்போம்" என்கிறது. "எங்களிடம் புல்டோசர்களும், கிரேன்களும் மட்டும் இல்லை. நாங்கள் நாட்டுக்காக நீர்மூழ்கிக் கப்பல்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், துப்பாக்கிகள் உற்பத்தி செய்கிறோம். எங்களது ரேஞ்சே வேற. நாங்கள் நிர்வாக ஒழுங்கிலும், கொள்கைகளிலும் உயர் தரத்தை பின்பற்றுகிறோம்" என்று தன் பங்குக்கு தேச பக்த சான்றுகளை காட்டுகிறது

பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை வாங்க முன்வருவதாக சொல்லியிருக்கும் எல்&டியின் அறிவிப்பு பற்றி மைண்ட்-ட்ரீ இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு தங்கள் பரிந்துரையைச் சொல்ல வேண்டும். எல்&டியிடம் பங்குகளை விற்பது நல்லதா இல்லையா என்று அறிவிக்க வேண்டும். இதற்காக சுயேச்சையான இயக்குனர்கள் ஒரு கமிட்டி அமைத்து பரிசீலிக்க வேண்டும்.

இதில் எல்.ஐ.சி முதலான நிதி நிறுவனங்களின் முடிவு தீர்மானகரமானதாக அமையும். அவர்களது ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மைண்ட்-ட்ரீ நிர்வாக இயக்குனர்கள் சொல்கின்றனர்.  எல்&டியோ அவர்கள் எல்லாம் ஏற்கனவே எல்&டியில் பங்கு வைத்திருப்பவர்கள், எங்களுக்கு நல்ல தோஸ்துகள்தான் என்று நம்பிக்கையுடன் சொல்கிறது.

டுவிட்டரில் ஊழியர்கள் மைண்ட்-ட்ரீ நிர்வாகத்துக்கு ஆதரவாக பெருமளவு ட்வீட் செய்திருப்பதை போய்ப் பார்க்கும்படி மைண்ட்-ட்ரீ தரப்பு பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறது. பொதுவாக ஊழியர்கள் மைண்ட்-ட்ரீயில் வேலை செய்வதை விரும்புகிறார்கள் என்கிறார் எகனாமிக் டைம்ஸ் நிருபர்.



இதற்கிடையில் மைண்ட்-ட்ரீ பெங்களூரு அலுவலகத்தில் ஊழியர்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். வேலை வழக்கம் போல நடக்கிறது. எங்கு போனாலும் மாடாக உழைக்க வேண்டும், தேவை இல்லாத போது தூக்கி எறியப்படுவோம் என்பதுதான் விதியாக இருக்கும் என்ற போது யார் கம்பெனியை கைப்பற்றப் போகிறார்கள் என்பதில் அவர்களுக்கு பெரிய அக்கறை இருக்காதுதான்.

இதற்கிடையில் இந்திய பத்திரிகைகளுக்கு செல்லமான இன்னொரு நிறுவனம் கவிழும் நிலையில் இருக்கிறது. ஆம், நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு வாடகை கொடுக்க முடியாமல், விமானிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், டிக்கெட் கேன்சல் செய்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறி நிற்கிறது. முன்னதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ், நீரவ் மோடியின் வைர வியாபாரம், சகாரா குழுமத்தின் சீட்டுத் தொழில் சரிவு என்று திவால் வரிசையில் நிற்கின்றனர் இந்தியாவின் தொழில்துறை தலைவர்கள்.

பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்துக் கொண்டு இந்த முதலாளிகள் நடத்தும் சூதாட்டச் சண்டைகளால் யாருக்கு என்ன பலன்?

1 comment:

நன்மனம் said...

i feel this is to take the attention away from the bribery issue