Wednesday, February 27, 2019

இன்றைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள உலகம் ஏன் மார்க்சியத்தை நாடுகிறது?

ஒரு கோட்பாடு மூலதனம் நூலில் முன் வைக்கப்படும் மார்க்சின் மதிப்பு பற்றிய கோட்பாட்டுக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத இடைவெளியை நிரப்ப வேண்டும்.
ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010
 

7

ந்த ஆய்வறிக்கை மூன்றாம் உலக தொழிலாளர்கள் மீது தனது கவனத்தை செலுத்துகிறது. ‘உலகளாவிய உழைப்பு ஆதாயம்' ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்கள் மீது செலுத்தும் சிக்கலான, ஒன்றுக்கொன்று முரணான தாக்கங்கள் இந்த ஆய்வறிக்கையில் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. மாறாக, ஏகாதிபத்திய நாட்டு பொருளாதாரங்களில் ஏற்படும் சிக்கலான தாக்கங்களை துலக்கமாக வெளிப்படுத்தும் இரண்டு முக்கியமான பரிமாணங்கள் அடுத்த அத்தியாயத்தில் சுருக்கமாக மட்டும் பரிசீலிக்கப்படுகின்றன.

  • முதலாவதாக, பெருவீத அயலக பணி முறை ஏகாதிபத்திய நாட்டு முதலாளிகள் லாபத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு தொழிலாளர்களின் நிஜக் கூலியை நேரடியாக குறைப்பதற்கு மாற்றாக உள்ளதால், ஏகாதிபத்திய நாடுகளில் வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தை அது மட்டுப்படுத்துகிறது. நுகர்வு பொருட்களின் விலை மலிவாக்கப்பட்டு வாங்கும் திறன் அதிகமாவதன் மூலமாகவும் முதலாளிகளின் லாபத்தின் மீது அயலகப் பணி செலுத்தும் நேர்மறை தாக்கத்தினாலும் இது நிகழ்கிறது. முதலாளிகள் ஈட்டும் கூடுதல் லாபம் 'சமூக ஒப்பந்தத்துக்கு' அடிப்படையாக விளங்கும் அதிக செலவு பிடிக்கும் சலுகைகளுக்கு நிதி ஒதுக்குவதை சாத்தியமாக்குகிறது. இவற்றில் அடிப்படை மருத்துவம், கல்வி ஆகியவற்றை பெறுவதற்கான உரிமை, அடிப்படை சமூக பாதுகாப்பு (வேலையின்மை உதவித் தொகை முதலியன) ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதும் அடங்கும்.
  • இரண்டாவதாக, அயலக பணி முறை ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்களுக்கும், மூன்றாம் உலகத் தொழிலாளர்களுக்கும் இடையே மேலும் மேலும் அதிகரித்த அளவில் நேரடி போட்டியை உருவாக்குகிறது. அதே நேரம் உலகளாவிய உற்பத்தி நிகழ்முறைகளுக்குள் அவர்களுக்கிடையேயான பரஸ்பர சார்பு நிலையை அதிகரிக்கிறது. 
உலக அளவில் தொழிலாளர்களுக்கிடையேயான பரஸ்பர சார்புநிலை அதிகரித்து வருவது, தொழிலாளர்களின் கல்வி அறிவும் கலாச்சார வாய்ப்புகளும் அதிகரிப்பது, பெண்கள் பெருமளவில் கூலி உழைப்புக்குள் சேர்க்கப்படுவது, ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேலும் அதிக அளவில் ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு தொழிலாளர் படையில் இணைவது ஆகியவை தொழிலாளி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான புறநிலை மாற்றங்கள். அவை உலக வங்கித் துறை நெருக்கடியைத் தொடர்ந்து வரவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களில் தொழிலாளி வர்க்கம் வெற்றியடைவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி வர்க்கம் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்ற வகையில் அது புரட்சிகர சக்தியாக உள்ளது. சமூக ஜனநாயக தலைவர்கள் முன் வைக்கும் ‘பிரிட்டிஷ் வேலை வாய்ப்புகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே' என்பன போன்ற தேசியவாத தீர்வுகளும், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர் தலைவர்கள் முன் வைக்கும் தேசியவாத, காப்புவாத கருத்துக்களும் மேலும் மேலும் நம்பகத்தன்மை இழந்து வருகின்றன. தொழிலாளி வர்க்க இயக்கத்தை முடக்கி விடவும், இனவெறியை நியாயப்படுத்தவும், பாசிசத்தின் வளர்ச்சியை தூண்டி விடவும் மட்டும்தான் அவை பயன்படுகின்றன. அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அவர்களது சக மெக்சிகன் அல்லது சீன தொழிலாளர்களுடன் போட்டி போட விரும்பா விட்டால் அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆய்வறிக்கையின் நோக்கமும் ஆய்வு திட்டமும்

“மார்க்சின் படைப்புகளின் சிறப்புத் தன்மையும், சிரமும் இரண்டுமே என்னவென்றால், ஒவ்வொன்றும் மற்ற எல்லாவற்றோடும் இணைந்துள்ளது என்பதுதான். கோட்பாட்டின் அனைத்து பிற அம்சங்களையும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யாமல் ஒரு 'வெற்றிடத்தில்' மட்டும் ஆய்வு செய்வது சாத்தியமற்றதாக உள்ளது”32 என்கிறார் டேவிட் ஹார்வி. இந்தக் கருத்தில் பெருமளவு உண்மை இருக்கிறது. ஆனால், இந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கும் விதம் சமூக யதார்த்தத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஆய்வுக்கான முறையியலை வரையறுத்துக் கொள்வதற்கு உதவியாக இல்லை . முழுமையான கட்டமைவு பற்றிய ஒரு கோட்பாட்டு கருதுகோளின் அடிப்படையில் அதன் குறிப்பிட்ட பரிமாணங்கள் அல்லது வெளிப்பாடுகளில் ஏதாவது ஒன்றை ஆய்வு செய்ய முடியும் என்று அவரது கருத்தை புரிந்து கொள்ளலாம். மேலும், அத்தகைய ஒரு ஆய்வின் முடிவுகள் முழுமையான கட்டமைவு பற்றிய கோட்பாட்டில் இணைக்கப்பட்டு அதை மேலும் செழுமைப்படுத்தும் என்பதையும் சொல்ல வேண்டும். இது மார்க்சிய இயக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளுக்கு மட்டுமின்றி அனைத்து ஆய்வுகளுக்கும் பொருந்துகிறது.

தான் முன் முடிவுகள் இல்லாமல் திறந்த மனதுடன் தொடங்குவதாக நேர்மறைவாத சமூக அறிவியலாளர் எவ்வளவுதான் நம்பிக் கொண்டிருந்தாலும், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் நிகழ்வு பற்றிய ஆரம்ப புரிதல்கள், ஆய்வு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முறையியல் அணுகுமுறை, ஏன் மற்ற பிரச்சனைகளிலிருந்து இந்த பிரச்சனையை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தோம் என்பது அனைத்தும் ஆய்வாளரின் மனதில் உணர்வுரீதியாகவோ உள்உணர்வு ரீதியாகவோ ஏற்கனவே உருவாகியிருக்கும் கோட்பாட்டு கருத்துக்களால் தீர்மானிக்கப்படுகின்றன.33 மார்க்சிய அணுகுமுறை பிற அணுகுமுறைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்றால, பகுதிக்கும் முழுமைக்கும் இடையேயான இந்த தவிர்க்க இயலாத இணைப்பை மார்க்சியம் உணர்வு ரீதியாகவும் வெளிப்படையாகவும் அங்கீகரிக்கிறது.

இந்த வகையில் டேவிட் ஹார்வியின் கருத்தை விட இவால்ட் இல்யன்கோவின் அறிவுரை உதவியாக உள்ளது. “எடுத்துக் கொண்ட பருண்மையான விஷயம் [இங்கு, புதிய தாராளவாத உலகமயமாக்கல்][...] மிகவும் சிக்கலான, உள் இணைப்புகள் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான வளர்ச்சி நிகழ்முறைகளை கொண்டுள்ளது. அவை பரஸ்பரம் உறவாடி, தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.. நடைமுறையில் நம் முன் இருக்கும் ஒட்டு மொத்த வரலாற்று நிகழ்முறையில் இந்தக் […] குறிப்பிட்ட பருண்மையான உறவாடல் கட்டமைவு வளர்ந்து செல்வதில் அடங்கியிருக்கும்  மிக முக்கியமான அம்சங்களை அடையாளம் காண்பதில்தான் ஒட்டு மொத்த சிக்கலும் அடங்கியுள்ளது.” என்று அவர் கூறுகிறார். ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள பிரச்சனையுடன் தற்செயலான உறவு கொண்டவையாக இல்லாமல் பிரச்சனையின் சாராம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும் அம்சங்களை அடையாளம் காண வேண்டும்.

இந்த ஆய்வுரை தனது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டிருக்கும் கோட்பாட்டின்படி புதிய தாராளவாத உலகமயமாக்கல் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் ஒரு உயர் கட்டமாக உள்ளது. இது தொடர்பான தற்செயல் நிகழ்வுகளையும், இரண்டாம் நிலை அம்சங்களையும் ஒதுக்கி விட்டு எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கு சாராம்சமானதை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய பணி ஆகும். ஏகாதிபத்திய முதலாளிகள் ஒடுக்கப்படும் நாடுகளின் உழைப்பை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதை பெரும் அளவில் அதிகரிப்பதற்கான முயற்சிதான் இந்த சாராம்சமான விஷயம் என்று இந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது.

எடுத்துக் கொண்ட பிரச்சனையின் சாராம்சமான விஷயங்களை அடையாளம் கண்டு அவற்றின் மீது கவனத்தை குவிப்பது எந்த ஒரு அறிவியல் ஆய்வுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். எந்த அம்சத்தை சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய ஒன்றாக தேர்ந்தெடுப்பது என்பதற்கு இன்னொரு நிபந்தனையும் உள்ளது. ஏற்கனவே உள்ள கருத்துக்கள் பருண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்க தவறும் இடம் எது என்பதை பார்க்க வேண்டும். இன்றைய உலகப் பொருளாதாரம் பற்றிய இப்போதைய கருத்தாக்கங்களில், ஏகாதிபத்தியம் என்பது இருப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதையும் மறுக்கப்படுவதாக உள்ளது. இதுதான் அதன் மிகப்பெரிய குறைபாடு. எனவே, ஒரு எளிமையான, இன்னும் வரையறுக்கப்பட்ட ஒரு விஷயத்திலிருந்து தொடங்குவதை விட சிக்கலானதாக இருந்தாலும், இந்த மையப் புள்ளியில் இருந்து தொடங்கி ஆய்வை நடத்துவது என்று முடிவு செய்தேன்.

இல்யன்கோவ் தான் சுட்டிக் காட்டும் “வளர்ச்சிப் போக்கின் மையமான அம்சங்களை கண்டறிவதில்” இருக்கும் சிக்கல்களை கையாள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். நடைமுறை உண்மைகளையும், நிகழ்முறைகளையும் முந்தைய கோட்பாட்டு அடிப்படையில் ஆய்வு செய்வதன் மூலம் அவற்றை கண்டறியலாம். “கம்யூனிசம் என்பது ஒரு வறட்டு கோட்பாடு இல்லை, அது ஒரு இயக்கம்; அதன் ஆய்வுகள் முன்பே வரையறுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாடுகளிலிருந்து இல்லாமல் நடைமுறை யதார்த்தங்களில் உண்மைகளிலிருந்து தொடங்க வேண்டும்" என்று மார்க்சியம் பற்றி எங்கெல்ஸ் சொன்னதை இங்கு நினைவு கூரலாம்.35

இந்த நடைமுறை யதார்த்தத்தை பரிசீலித்ததன் விளைவாக, புதிய தாராளவாத உலகமயமாக்கலின் 'வளர்ச்சிப் பாதையின் முக்கியமான புள்ளிகள்' மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பாளர்களை விரிவாக 'பயன்படுத்துவதற்காக' ஏகாதிபத்திய முதலாளிகளின் அமல்படுத்தி வரும் உற்பத்தி உலமயமாதலும், முன்னணி ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆலை பொருட்களை உற்பத்தி செய்யும் மூன்றாம் உலக தொழில்துறை பாட்டாளிகளின் எண்ணிக்கை பெருமளவு விரிவடைவதும் என்ற முடிவுக்கு வருகிறோம்.36 எனவே, இந்த ஆய்வறிக்கை மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவு உலகமயமாவதன் புதிய கட்டத்தின் மீது தனது கவனத்தை குவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின் நோக்கம், மூலதன உறவுகளின் ஏகாதிபத்திய வடிவம் பற்றிய முழுமையான கோட்பாட்டுக்கு அடித்தளம் இடுவதற்கான ஒரு பகுதியை பங்களிப்பு செய்வதாகும். இதில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்துக்கிடையே சமத்துவம் இல்லாமல் இருப்பதும், வெவ்வேறு நாடுகளில் சுரண்டல் வீதம் பெருமளவு வேறுபடுவதும் அடங்கும். அத்தகைய ஒரு கோட்பாடு மூலதனம் நூலில் முன் வைக்கப்படும் மார்க்சின் மதிப்பு பற்றிய கோட்பாட்டுக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத இடைவெளியை நிரப்ப வேண்டும். இந்த இடைவெளி வரலாற்று ரீதியில் ஏன் தவிர்க்க இயலாதது என்றால், மேலே சொன்னது போல உற்பத்தி உலகமயமாதலுக்குப் பிறகுதான் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் இடையேயான உறவு மதிப்பு உறவின் வரம்புக்குள் உட்பட்டதாக மாறியுள்ளது.

இந்த மிகப்பெரிய கோட்பாட்டு இடைவெளியை முழுமையாக நிரப்புவதற்கு இந்த ஆய்வறிக்கை முயற்சிக்கவில்லை. அந்த பணி பல ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும் 

  6. வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

  7. சீனா, இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் இல்லாமல் உலக முதலாளித்துவம் இல்லை

No comments: