Sunday, February 24, 2019

சீனா, இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் இல்லாமல் உலக முதலாளித்துவம் இல்லை

சர்வதேச ரீதியில் உழைப்பாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது இனவாதம், தேசிய ஒடுக்குமுறை, கலாச்சார ரீதியான இழிவுபடுத்துதல்கள், இராணுவவாதம், அரச வன்முறை இவற்றை உள்ளடங்கிய ஒரு பரந்து விரிந்த கட்டமைவின் முக்கியமான அடிப்படையாக உள்ளது

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010
 

7

தன் விளைவாக, முதலாளித்துவ வளர்ச்சியின் சமீபத்திய கட்டம் மூன்றாம் உலக நாடுகள் ‘முன்னேறிய’ நாடுகளின் நிலையை எட்டிப் பிடிப்பதாகவும், ஏகாதிபத்தியங்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைப்பதாகவும் இல்லை. மாறாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் அதீத சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்பாளர் சேமப் படைகளாக மூன்றாம் உலக நாடுகள் மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக நாடுகளுக்கிடையே ஒரு உலகளாவிய பிரிவினை உருவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் உழைப்பாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது  இனவாதம், தேசிய ஒடுக்குமுறை, கலாச்சார ரீதியான இழிவுபடுத்துதல்கள், இராணுவவாதம், அரச வன்முறை இவற்றை உள்ளடங்கிய ஒரு பரந்து விரிந்த கட்டமைவின் முக்கியமான அடிப்படையாக உள்ளது. ஏகாதிபத்தியம் இந்த ஒடுக்குமுறை கட்டமைவை பாட்டாளி மயமாக்கப்பட்ட உலக மக்கள் மீது சுமத்துகிறது. இது வர்க்கப் போர் தொடுப்பதற்கான ஒரு ஆயுதம். இதை பயன்படுத்தி ஆக சாத்தியமான உயர் வீத சுரண்டலை உறுதி செய்வதோடு மட்டுமின்றி அரசியல் ரீதியான எதிர்ப்புரட்சிகளையும், பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் கட்டவிழ்த்து விட்டு சர்வதேச தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயேச்சையான அரசியல் சக்தியாக மாறி தனது சொந்த மேலாதிக்கத்தை நிறுவுவதை ஏகாதிபத்திய நிறுவனங்கள் தடுத்து நிறுத்துகின்றன

இது முற்றிலும் முதலாளித்துவ அடிப்படையிலான ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியத்தின் மிக முன்னேறிய வளர்ச்சி கட்டத்தில், ஒட்டு மொத்த உலகமும் காலனிய அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பதை முதலாளித்துவமும் மதிப்பு விதியும் தமக்குள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டுள்ளன. முதலாளித்துவம் அதன் நோக்கத்துக்கு விரோதமான அனைத்தையும் உதளி விட்டு, தனது ஆதிக்கத்தை தொடருவதற்கு பலனளிப்பதாக இருப்பவை அனைத்தையும் பாதுகாத்து தன்னுடையதாக மாற்றிக் கொண்டுள்ளது. எனவே, இந்த மாற்றங்களோடு தொடர்புடையதாக கிடைக்கும் நடைமுறை தரவுகளின் பெரும் தொகுப்பை நாம் பகுத்தாய வேண்டியுள்ளது. உண்மைகளை கோட்பாட்டு ரீதியாக விமர்சித்தும், கோட்பாடுகளை உண்மைகளின் ஒளியில் விமர்சித்தும் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி கட்டத்தின் சாராம்சம் பண்புரீதியான பரிணாம மாற்றத்தை அடைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மதிப்பு உறவின் ஏகாதிபத்திய வடிவம் பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்குவது இன்றைய அவசிய தேவையாக உள்ளது.

இன்றைய புதிய தாராளவாத உலகமயமாக்கலில் ஏகாதிபத்திய நாட்டு அரசுகளின் பொதுநலன் அடங்கியுள்ளது. மூன்றாம் உலக நாடுகளை புதிய தாராளவாத உலகமயமாக்கல் பாதையில் செலுத்துவதற்கு ஏகாதிபத்திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வரும் ‘ஏற்றுமதி சார் தொழில் மயமாக்க' வளர்ச்சி பாணியின் முறையின் விளைவாக மூன்றாம் உலக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சிறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளன. அது மட்டுமில்லை, இந்த வளர்ச்சி பாணி ஏகாதிபத்திய நாடுகளில் கார்ப்பரேட் லாபத்தையும், தொழில் வளத்தையும், சமூக அமைதியையும் பாதுகாப்பதற்கு மேலும் மேலும் முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது. எனவே, இன்றைய முதலாளித்துவ உலகமயமாதலைப் பற்றி விளக்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் 'மைய நாடுகள்', ‘விளிம்பு நாடுகள்' என்ற கருத்தாக்கம் தவறான பொருள் தருபவதாக உள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கு 'மைய' முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது மூன்றாம் உலக குறை-கூலி தொழிலாளர்கள் மீதான அதீத சுரண்டல்.

எனவே, 'அதீத சுரண்டல்’ பற்றிய பருண்மையான ஒரு கோட்பாட்டை வளர்த்தெடுப்பது இந்த ஆய்வறிக்கை முழுவதும் ஊடாடி நிற்கும் ஒரு மையமான பணியாகும். இது பற்றிய ஒரு பொதுவான வரையறை இந்த அத்தியாயத்தின் அடுத்த பிரிவில் தரப்படுகிறது. இப்போதைக்கு சுரண்டல் என்பதை எளிமையாக வரையறுக்கலாம். ஒரு வேலை நாளில் தொழிலாளி தான் உயிர் வாழ்வதற்கு தேவையானபொருட்களின் மதிப்புக்கு சமமான மதிப்பை படைக்கும் அவசிய உழைப்பு நேரம், முதலாளிக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்காக உழைக்கும் உபரி உழைப்பு நேரம் என இரண்டு பகுதிகள் உள்ளன. இவற்றுக்கிடையேயான விகிதம் சுரண்டல் வீதமாகும்.

அதீத சுரண்டல் என்பது ஏகாதிபத்திய நாடுகளில் நிலவும் சராசரி சுரண்டல் வீதத்தை விட அதிக சுரண்டல் வீதத்தை குறிக்கிறது. நாடுகளுக்கிடையேயான கூலி ஏற்றத் தாழ்வுகள், சர்வதேச ரீதியில் சுரண்டல் வீதத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் பற்றிய ஒரு உருத்திரிந்த சித்திரத்தை தருகின்றன என்று இந்த ஆய்வறிக்கையில் பேசப்படுகிறது. இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத முறைகளை பயன்படுத்தி சராசரியை விட அதிக சுரண்டல் வீதத்தை கொண்ட, அதாவது உயிருள்ள உழைப்பை அதீத சுரண்டலுக்கு உட்படுத்தக் கூடிய நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுவதன் மூலம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரிக்க முடிவது பற்றி இந்த ஆய்வறிக்கை பரிசீலிக்கிறது.

எனவே, இந்த ஒட்டு மொத்த ஆய்வறிக்கையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கிறது : அதீத சுரண்டல் என்பதை பருண்மையாக எப்படி பொருள் கொள்கிறோம்? ஏகாதிபத்தியம் என்பதை பருண்மையாக எப்படி பொருள் கொள்கிறோம்? நடைமுறையில் நிலவும் சமூக உறவுகள் பற்றிய பருண்மையான கருதுகோள்களை கோட்பாடுகளிலிருந்து மட்டுமோ, தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமோ உருவாக்க முடியாது. இரண்டையும் சேர்த்து செய்ய வேண்டும்.27

ஏகாதிபத்திய நிறுவனங்கள் மூன்றாம் உலக குறைகூலி தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாயை சார்ந்திருப்பது மேலும் மேலும் அதிகரித்து வருவதை இந்த ஆய்வறிக்கையின் மையமான வாதம் சுட்டிக் காட்டுகிறது. இதை 'உலக உழைப்பு ஆதாயம்' என்று குறிப்பிடலாம். இதன்படி, தம் நாட்டில் ஒப்பீட்டளவில் அதிக கூலி பெறும் தொழிலாளர்களுக்கு பதிலாக மூன்றாம் உலக குறை கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.28 இது உற்பத்தியையே குறைகூலி நாடுகளுக்கு மாற்றுவதன் மூலமோ, குறை கூலி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்து அவர்களை தம்நாட்டில் தீவிரமான சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலமோ நிறைவேற்றப்படுகிறது.29 உற்பத்தியையே மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்வது மேலும் மேலும் "அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் வேகமாக விரிடைவதுமான வழிமுறையாக உள்ளது என்கிறது ஐ.எம்.எஃப். அதீத சுரண்டலுக்கான இன்னொரு வழிமுறையான மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கு தொழிலாளர்கள் குடியேறுவதற்கு பல நாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் தடையாக உள்ளன".30

வெளிநாட்டில் அயலக பணி முறையில் உற்பத்தி செய்வதற்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உள்நாட்டில் பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கும் இடையேயான உறவை காரல் மார்க்ஸ் 1867-லேயே குறிப்பிட்டிருக்கிறார்.  சர்வதேச தொழிலாளர் கழகத்தின் பொதுக்குழுவின் சார்பாக லசான்யே காங்கிரசுக்கு அவர் எழுதிய ஒரு உரையில் அதற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது: “இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களை ஆய்வு செய்யும் போது, தொழிலாளர்களை முறியடிப்பதற்காக முதலாளிகள் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வருகிறார்கள் அல்லது உற்பத்தியை மலிவான தொழிலாளர் உள்ள நாடுகளுக்கு மாற்றி விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்கும் போது வெற்றிக்கு சிறிதளவாவது வாய்ப்பு இருக்கும் வகையில் தனது போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் தொடர வேண்டுமானால், தேசிய சங்கங்கள் சர்வதேச சங்கமாக மாற வேண்டும்."31

நமது சம காலத்தில்தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும் உலகை மாற்றியமைப்பதாகவும் உருவெடுத்திருக்கும் ஒரு போக்கின் ஆரம்ப வடிவம் பற்றிய சித்திரத்தை மார்க்ஸ் இங்கு தருகிறார். இந்த மேற்கோளில் இருந்து முதலாளித்துவம் குறை கூலி தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதும் அது பாட்டாளி வர்க்க இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் மார்க்ஸ் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. ஆனால், பருண்மையான யதார்த்தத்தின் இந்த அம்சத்தை மார்க்ஸ் மூலதனம் நூலின் 3 பாகங்களில் 'பொதுவான மூலதனம்' பற்றிய பகுப்பாய்வில் சேர்த்துக் கொள்ளவில்லை. இது பற்றி இந்த அத்தியாயத்தின் பிற் பகுதியில் இதே விஷயங்களை நாம் மறுபடியும் பரிசீலிக்கும் போது நாம் பார்க்கப் போகிறோம்.

மார்க்சுக்குப் பிறகு இந்த பொருளாதாரவியல் ஆய்வாளர்களால் இந்த அம்சம் பெருமளவு புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. எனவே, இந்த ஆய்வறிக்கை அயலகப் பணி அல்லது "உற்பத்தியை மலிவான உழைப்பு சக்தி உடைய நாடுகளுக்கு இடம் மாற்றுவது" என்று மார்க்ஸ் குறிப்பிடுவதன் மீது கவனம் செலுத்துகிறது. ‘உலக கூலி ஆதாயத்தின்' இன்னொரு வடிவமான குறை கூலி உழைப்பாளர்களை இறக்குமதி செய்வது தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் அளவில் மட்டுமே (அத்தியாயங்கள் 2&3) கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மார்க்ஸ் லசான்யே காங்கிரசில் இந்த நடைமுறை பற்றி பேசிய 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், உலகெங்கிலும் சரக்கு போக்குவரத்தின் வேகம் பெருமளவு அதிகரித்திருப்பதும், அயலகப் பணியை அனைத்து வழிகளிலும் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏகாதிபத்திய முதலாளிகள் குறை கூலி தொழிலாளர்களை பயன்படுத்துவதை அதிகரிப்பதை சாத்தியமாக்கின. ஆனால், ஏகாதிபத்திய நாடுகளில் நிலவிய வர்க்க போராட்டங்கள்தான் இதை செய்தே தீர வேண்டிய அவசியத்தை ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு ஏற்படுத்தின என்பது இறுதி பகுப்பாய்வில் தெரிய வருகிறது. தம் நாடுகளில் லாபவீதம் குறைந்து செல்லும் போக்கை தடுத்து நிறுத்தி லாப வீதத்தை உயர்த்துவதற்கு செய்ய வேண்டியிருந்த காட்டுமிராண்டித்தனமான செலவு குறைப்பு நடவடிக்கைகள் அந்த நாடுகளின் 'சொந்த' தொழிலாளர்கள் மீதே சுமத்தப்பட்டிருந்தால் அது ஏகாதிபத்திய நாடுகளில் மிகப்பெரிய சமூக, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். உலகின் பிற பகுதி மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்களையும் அவர்களது ஆட்சியாளர்களையும் பிணைக்கும் 'சமூக ஒப்பந்தம்' உடைக்கப்பட்டிருக்கும்.
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும் 

  6. வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

No comments: