Friday, February 15, 2019

முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும்

“அநியாயம் எங்கிருந்து தோன்றுகிறது? ஏற்றத் தாழ்வு எங்கிருந்து பிறக்கிறது? வறுமை எங்கிருந்து தோன்றுகிறது? குறை வளர்ச்சி எங்கிருந்து உருவாகிறது? நவ காலனியமும் ஏகாதிபத்தியமும் எங்கிருந்து வருகின்றன? முதலாளித்துவத்திலிருந்து இல்லாமல் வேறு எங்கிருந்து இவை அனைத்தும் தோன்றுகின்றன?

'வானத்தையும் பூமியையும் படைத்தவர்கள்தான் ஏழ்மைக்கு பொறுப்பு, இந்த சமூகக் கட்டமைவு அதற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை, முதலாளித்துவம் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை' என்று கூட பேச முடியும் என்பதை நம்ப முடியவில்லை!” - பிடல் காஸ்ட்ரோ

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010 5

ஐக்கிய நாடுகள் பல்கலைக் கழகம் நடத்திய குடும்பங்களின் சொத்துக் கணக்கெடுப்பு ஒன்றில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, “ஒருவரிடம் $2161 [இன்றைய மதிப்பில் ரூ 1.5 லட்சம்] மதிப்பிலான சொத்து இருந்தாலே அவர் உலகின்வசதியான 50%- பேரில் சேர்ந்து விடுவார்.” ஆனால், மேல்மட்ட 1% பணக்காரர்கள் பட்டியலில் சேர்வதற்கு உங்களிடம் $5 லட்சம் [இன்றைய மதிப்பில் ரூ 3.5 கோடி]  சொத்து இருக்க வேண்டும். உலக மக்கள் தொகையில் ஏழ்மையான 50% பேரை விட 40 மடங்கு அதிக சொத்து 3.7 கோடி பணக்காரர்களிடம் உள்ளது.11

ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்குமிடையே சொத்து வினியோக ஏற்றத் தாழ்வு இன்னும் மோசமாக ஆவதற்கு காரணம் மூன்றாம் உலக நாடுகளிலேயே உள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் முதலாளிகள் தமது சொத்துக்களில் பெரும்பகுதியை டாலராக மாற்றி அவற்றை தமது நாட்டுக்கு வெளியே ஏகாதிபத்திய மையங்களுக்கு (அல்லது ஏகாதிபத்தியங்களால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு மையங்களுக்கு) கடத்தி பதுக்குகின்றனர். இந்த மையங்கள் இந்த மூன்றாம் உலக நாட்டு அரசுகளின் வரி விதிப்புக்கு அப்பால் இருப்பதோடு ஜி-7 நாடுகளாலும், அவர்களால் கட்டுப்படுத்தப்படும் சர்வதேச நிதி நிறுவனங்களாலும் (எனவே, இறுதிக் கணக்கில் அவர்களது இராணுவ பலத்தாலும் ) பாதுகாக்கப்படுகின்றன. இதை கேப்ஜெமினி, “2003-ம் ஆண்டு ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் உள்ள அதி உயர் மதிப்பு கொண்ட தனிநபர்கள் [$10 லட்சம் - ரூ 7.5 கோடி அல்லது அதற்கு மேல் முதலீடு செய்வதற்கான சொத்து இருப்பவர்கள்] தமது சொத்துக்களில் பாதியை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். தென் அமெரிக்காவின் அதி உயர் மதிப்பு கொண்ட தனிநபர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் தமது நிதித்துறை சொத்துக்களை வெளிநாட்டு வரியில்லா சொர்க்கங்களில் வைத்திருக்கின்றனர். அவற்றிலிருந்து வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்."12 என்றது

காலனிய ஆட்சி முடிவுக்கு வந்து, இறையாண்மையை பெற்றது மூன்றாம் உலக நாட்டு தேசிய முதலாளிகளுக்கு அதிகாரபூர்வமாக சுதந்திரம் வழங்கினாலும், அந்த நாடுகளின் ஆகப் பெரும்பான்மையினர் தமது உழைப்பு சக்தியை தவிர விற்பதற்கு ஏதும் இல்லாதவர்களாக முதலாளித்துவத்தால் மாற்றப்பட்டுள்ளனர். சுருக்கமாக சொல்லப் போனால், இந்த நாடுகளின் மக்கள் இன்னும் தமது விடுதலைக்காக காத்திருக்கின்றனர். இதை இந்த ஆய்வறிக்கையில் பயன்படுத்தப்படும் 'ஒடுக்கப்படும் மற்றும் ஒடுக்கும் நாடுகள்' என்ற பதம் அங்கீகரிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் - மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத் தாழ்வு என்ற கருத்துருவில் நாடுகளுக்கு இடையேயும், நாடுகளுக்கு உள்ளேயும் பொருளாதார வளர்ச்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் காணப்படும் அதி தீவிர ஏற்றத் தாழ்வு அடங்கியுள்ளது. இது இயல்பானதோ, இறைவன் விதித்ததோ இல்லை. இது முதலாளித்துவ வளர்ச்சியின் விளைபொருள். முதலாளித்துவம் வளர வளர ஆழமாகிச் சென்றிருக்கிறது.

இந்த எளிமையான, மறுக்கமுடியாத உண்மை எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்படுகிறது என்ற பலரது ஆச்சரியத்தை பிடல் கேஸ்ட்ரோ வெளிப்படுத்தினார்.

“அநியாயம் எங்கிருந்து தோன்றுகிறது? ஏற்றத் தாழ்வு எங்கிருந்து பிறக்கிறது? வறுமை எங்கிருந்து தோன்றுகிறது? குறை வளர்ச்சி எங்கிருந்து உருவாகிறது? நவ காலனியமும் ஏகாதிபத்தியமும் எங்கிருந்து வருகின்றன? முதலாளித்துவத்திலிருந்து இல்லாமல் வேறு எங்கிருந்து இவை அனைத்தும் தோன்றுகின்றன? 'வானத்தையும் பூமியையும் படைத்தவர்கள்தான் ஏழ்மைக்கு பொறுப்பு, இந்த சமூகக் கட்டமைவு அதற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை, முதலாளித்துவம் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை' என்று கூட பேச முடியும் என்பதை நம்ப முடியவில்லை!” - .13

கடற்கொள்ளை, சூறையாடல், காலனிய நாடு பிடித்தல் ஆகியவை முதலாளித்துவத்தின் தோற்றத்தில் முக்கியமான பங்களிப்பு செய்தன. முதலாளித்துவம் முதலில் இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் வேர் பிடித்து வளர்வதற்கு ஐரோப்பாவின் உள்நாட்டு பரிணாம மாற்றங்களுக்கு நிகராக உலகளாவிய வேட்டையாடல்கள் அடிப்படையாக இருந்தன. இது மூலதனம் நூலில் ஒரு புகழ்பெற்ற பத்தியில் கார்ல் மார்க்சால் சுட்டிக் காட்டப்படுகிறது.

“ஐரோப்பாவில் கூலி உழைப்பாளர்களின் திரையிடப்பட்டு மூடப்பட்ட அடிமைத்தனத்துக்கு புதிய உலகத்தில் (அமெரிக்கா) நிலவிய ஒளிவு மறைவில்லாத அடிமைத்தனம் அடித்தளமாக இருந்தது. அமெரிக்காவில் தங்கமும், வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டது, அந்தக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களின் அடையாளத்தை அழித்து, அவர்களை அடிமைகளாக்கி, சுரங்கங்களில் சமாதி கட்டியது, இந்தியாவை கைப்பற்றவும் கொள்ளையிடவும் தொடங்கியது, ஆப்பிரிக்காவை கருப்பின மக்களை வணிக ரீதியாக வேட்டையாடுவதற்கான களமாக மாற்றியது இவைதான் முதலாளித்துவ சகாப்தத்தின் விடியலை சித்தரித்து காட்டுகின்றன […] ஒளிவு மறைவற்ற கொள்ளை, அடிமையாக்கல், படுகொலைகள் ஆகியவற்றின் மூலம் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு அவை மூலதனமாக மாற்றப்பட்டன." 14

முதலாளித்துவம் எவ்வாறு தொடங்கியதோ அவ்வாறே தொடர்கிறது. அதன் இரண்டு நூற்றாண்டு உலக ஆதிக்கத்தின் போது ஒரு சில முதலாளித்துவ நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை பொறுத்தவரையில் வேட்டையாடுபவையாகவும் ஏகாதிபத்தியத் தன்மை உடையனவாகவும் இருந்திருக்கின்றன. ‘மைய' நாடுகளின் இந்த சிறிய பட்டியல் "கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக மாறாமல் இருந்திருக்கிறது. இதற்கு ஒரே விதி விலக்கு ஜப்பான் மட்டுமே" என்று ஃபிரெட் ஹால்லிடே நமக்கு நினைவூட்டுகிறார்".15

இந்த ஆய்வறிக்கையில் இந்த நாடுகள் சில இடங்களில் - வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் அடங்கிய முக்கூட்டு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாடுகள் '2008 உலக வரைபடம்' என்று அத்தியாயத்தின் ஆரம்பத்தில் தரப்பட்டிருந்த பெரும் ஏற்றத் தாழ்வின் ஏற்றமான பக்கத்தில் உள்ளன. அவை உலகை இரண்டு முறை உலகப் போருக்குள் தள்ளின. தாம் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் மீதான உரிமை பாராட்டலில் ஏற்பட்ட போட்டியை தீர்த்துக் கொள்வதே இந்த போர்களின் முக்கிய காரணமாக இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், குறிப்பாக 1979அக்டோபர் மாதம் ‘வோல்கர் அதிர்ச்சி’ தொடங்கி வைத்த புதிய தாராளவாத உலகமயமாதலின் போது வட அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் மூன்றாம் உலக நாடுகள் மீதான தமது பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தின் வடிவங்களை மாற்றியமைத்திருக்கின்றனர். அந்நாடுகளின் மனித வளத்தையும், இயற்கை வளங்களையும் கொள்ளையிடுவதற்கு புதிய வழிகளை உருவாக்கியுள்ளன. முதல் பெரிய மாற்றமாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனிய சாம்ராஜ்யங்கள் உடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த நாடுகள் அதிகாரபூர்வமாக இறையாண்மை பெற்ற நாடுகளாக மாறின. இந்த முன்னேற்றம் தேசிய விடுதலைக்கான கடுமையான போராட்டங்களில் இணைந்து கொண்ட பெரும் திரளான மக்கள் மூலம் சாத்தியமானது. இந்த இயக்கங்கள் மேலும் மேலும் புரட்சிகர சோசலிச பாதையில் பயணிக்கும் போக்கை பார்த்த ஏகாதிபத்தியவாதிகளின் மிகப்பெரிய பயமும் இவற்றுக்கு காரணமாக இருந்தது. இந்த புதிய சக்திகளின் உறவுகள், தமது அடிமை நாடுகளில் தோன்றி வரும் முதலாளித்து மேட்டுக்குடியினருடனான தமது உறவை மாற்றியமைத்து அவர்களது சீடர்கள் ஆட்சி அதிகாரத்தில் உட்காருவதை நோக்கி மறு சீரமைத்துக் கொள்ளத் தூண்டின. அதே நேரம் ஏகாதிபத்திய நாடுகள் தமது அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவேயில்லை. இந்த புதிய ஏற்பாடு ஒரு விஷயத்தை திறமையுடன் சாதித்தது. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் ஏகாதிபத்திய, சுரண்டல் தன்மையை அது மூடுதிரை போட்டு மறைத்தது.

இருந்தாலும், அது மறைந்து விட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது. ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதற்கான வழிகளில் நிதித்துறை பரிவர்த்தனை தரவுகளில் பதிவாகின்றவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், குறிப்பாக அன்னிய நேரடி முதலீடுகளிலிருந்து அனுப்பப்படும் லாபமும் வெளிநாட்டுக் கடன்கள் மீதான வட்டியையும் மட்டும் எடுத்துக் கொண்டால் அவற்றின் மொத்தக் கூட்டுத் தொகை ஆண்டுக்கு ஏறக்குறைய $50,000 கோடி ஆகும். இது இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% அல்லது சுமார் 15,000 டன் தங்கத்துக்கு நிகராகும். இந்த அளவு பணம் ஒவ்வொரு ஆண்டும் மிக ஏழை நாடுகளிலிருந்து மிகப் பணக்கார நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இது கொலம்பஸ் பஹாமா தீவில் இறங்கியதற்கு பிந்தைய 350 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலிருந்தும் அமெரிக்கக் கண்டத்திலிருந்தும் தோண்டப்பட்ட தங்கத்தின் ஒட்டு மொத்த அளவை விட இரண்டு மடங்கு ஆகும்.16

'புதிய தாராளவாத உலகமயமாக்கல்' ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவது பெருமளவு விரிவடைவதையும் பண்புரீதியாக ஆழமாவதையும் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறது என்று இந்த ஆய்வறிக்கை வாதிடுகிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த மிகச் சமீபத்திய கட்டத்தில் எது புதியதாக உள்ளது என்றால் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளுக்கும் ஆளப்படும் நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் "முதலாளித்துவத்துக்கு உள்ளார்ந்ததாகவும், முதலாளித்துவ கட்டாயங்களால் ஆளப்படுபவையாகவும் உள்ளன" (எலன் வுட் - ன் மேற்கோள்).17

ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை ஒழுங்குபடுத்துவதில் முதன்மையானதாக ராணுவ வலிமை இல்லை. மாறாக, சந்தை வலிமை இதை ஒழுங்குபடுத்துகிறது. இது முதலாளித்துவம் ஏற்கனவே நிலவும், வரித்துக் கொண்ட ஆதிக்க வடிவங்களை தனக்குள் உள் வாங்கிக் கொள்வதில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. அதாவது, இது மதிப்பு விதியின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது.18

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

No comments: