Sunday, January 21, 2007

உள்ளூரா, வெளியூரா?

ஒரே வேலையை உள்ளூரில் செய்தால் பத்து ரூபாயும், வெளியூரில் நூறு ரூபாயும் கிடைக்கிறது. எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்?

தகவல் தொழில் நுட்பத்துறை தலையெடுக்கும் முன்பிருந்த பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி வியாபரத்திலேயே, ஒரு நிறுவனம், உள்ளூரில் சந்தையை தேடிக் கொண்டு தனது பொருளை திடப்படுத்திக் கொண்டு வெளிநாட்டுச் சந்தையில் காலெடுத்து வைப்பது சரியான அணுகுமுறை என்று கருதப்பட்டு வந்தது. ஏதாவது கோளாறுகள், கருத்து வேறுபாடுகள் வந்தால் தீர்த்துக் கொள்வது, வாடிக்கையாளரின் கருத்துக்களை நேரடியாக புரிந்து கொண்டு பொருளை மாற்றி தரத்தை உயர்த்துவது என்று நீண்ட கால வளர்ச்சிக்கு அருகில் இருக்கும் சந்தை ஆதரவாக இருக்கும்.

'உள்ளூர்ச் சரக்குதானே என்று விலையும் குறைவாகக் கொடுப்பார்கள்' என்பது ஒரு புறம். வெளி நாட்டுக்குப் போகும் போது செலவைத் தாங்கக் கூடிய நிறுவனங்களை மட்டும் அணுகுவதால் கூடுதல் விலை கிடைக்கும். பார்க்கப் போனால் நம்ம ஊர்ச் சந்தையும் வேறு நாட்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டுச் சந்தைதானே. நாமே அப்படி உருவகித்து சரியான உயர்ந்த விலை கொடுக்கும் வாடிக்கையாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இதுதான் ஆண்டுக்கு ஆண்டு ஏன், மாதா மாதம் உயிர் பிழைத்திருக்கும் வழி. நீண்ட காலத் திட்டங்கள், உலகை வெல்லும் வழிகள் தேடுபவர்களுக்கு இது போதாது. இன்றைக்கு சக்கைப் போடு போடும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் பெரும்பாலானவை முப்பது ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்டவை. இன்றைக்கு தொடக்க நிலையில் இருக்கும் பல நிறுவனங்கள் இன்னும் முப்பது ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களாக மாறப் போகின்றன. பெரிய நிறுவனங்களுடன் மட்டும்தான் வணிகம் செய்வோம் என்று இருந்து விட்டால் நீஈண்ட கால நோக்கில் சிக்கல் வரலாம்.

இன்றைக்கு சின்னதாக இருக்கும் ஆயிரக் கணக்கான நிறுவனங்களில் ஒரு சில நூறுதான் பெரிதாக வளரப் போகின்றன. மற்றவை அப்படியே மறைந்து போய் விடலாம். எப்படி நம் வாடிக்கையாளர் பிரிவைத் தேர்ந்தெடுப்பது?

5 comments:

மஞ்சூர் ராசா said...

நல்ல தொடர்

தொடருங்கள்.

நாமக்கல் சிபி said...

//ஒரே வேலையை உள்ளூரில் செய்தால் பத்து ரூபாயும், வெளியூரில் நூறு ரூபாயும் கிடைக்கிறது. எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்?
//

உங்களுடைய இந்தக் கேள்வியைத் தொடர்ந்து எனக்குள் எழுந்த சந்தேகம்!

வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியத் தகுதி பெற்றவர்களுக்கு இந்தியாவில் கிடைப்பதை விட வெளிநாடுகளில் அதிக வருவாய் கிடைக்கிறதே!

அவர்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்?

படித்ததெல்லாம் இங்கே (அதாவது இந்திய அரசாங்கத்தின் ரிசோர்ஸஸைப் பயன்படுத்திப் படித்து தகுதி உடையவனாக ஆக்கிக் கொண்டு) சேவை செய்வது அங்கே என்ற பேச்சுக்களைக் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்காமல் கவலையின்றி போய்க்கொண்டிருக்க வேண்டிருக்கலாமா?

அல்லது பிழைக்கத் தெரியாதவன்/ தகுதியற்றவனோ/தன்னம்பிக்கையற்றவனோ என்றெல்லாம் பலர் சொன்னாலும் பரவாயில்லை என்று இந்தியாவிலேயே குறைந்த சம்பளத்திலேயே பணியாற்றலாமா? (குடும்பச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளாது)

மா சிவகுமார் said...

//கவலையின்றி போய்க்கொண்டிருக்க வேண்டிருக்கலாமா?
இந்தியாவிலேயே குறைந்த சம்பளத்திலேயே பணியாற்றலாமா?//

சிக்கலான கேள்வி சிபி.

பெரும்பாலானோர் டாலர் காட்டும் வழியில் போக ஆரம்பித்துதான் 'தகவல் தொழில் நுட்பப் புரட்சி' என்று சொல்லப்படுவது இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது. இன்ஃபோசிசில் ஆரம்பித்து இந்த ஆண்டு பட்டம் பெற்று பெரு சம்பளத்தில் வேலையில் சேரும் இளைஞன் வரை உண்மையில் இந்தப் புரட்சியின் பலன்கள் மேற்கத்திய டாலர், யூரோ சமூகங்களுக்குப் பயன்படச் செய்யத்தான் உழைத்து வருகிறோம். அதே நேரம், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் நம் பொருளாதரத்துக்குக் கை கொடுத்துத் தூக்கி விட்டிருப்பது கண்கூடாகத் தெரியும் உண்மை.

உங்கள் கேள்விக்கு என்னுடைய விடை:

வெளிநாட்டு வேலையில் பொருள் ஈட்டிக் கொண்டே தினமும் சில மணி நேரங்களாவது, சொந்தப் பணியாக நம்ம ஊருக்கும் புரட்சியைக் கொண்டு வரும் திட்டப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே. பிந்தையதற்குத் தேவையான பொருள் ஆதரவு முந்தையதிலிருந்து கிடைக்கிறது. பிந்தைய முயற்சி பொருள் ஈட்ட ஆரம்பித்த பிறகு முழு நேரமாக இறங்கி விடலாம்.

மேனாட்டு நிறுவனங்களுக்காக பணி புரியும் ஒவ்வொரு இளைஞரும் தனது சொந்த நேரத்தில் ஒரு செல்லத் திட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டால் இனி வரும் காலம் நம் காலம்தான் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் said...

நன்றி மஞ்சூர் ராசா,

அப்படியே பொருளாதாரம் பற்றியக் கட்டுரைகளை இங்கே தொடரலாம் என்று எண்ணம் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

moorthy said...

thanxs