Tuesday, May 8, 2007

செருப்புன்ன சும்மாவா! (தோலின் கதை - 14)

காலணி செய்ய பெரும்பங்கு தேவைப்படும் மேல் தோல் தவிர, இன்னும் நூற்றுக் கணக்கான பொருட்கள் தேவைப்படும். குறிப்பிட்ட வடிவமைப்புடைய காலணியைச் செய்ய என்னென்ன பொருட்களை எவ்வளவு பயன்படுத்தினோம் என்று குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வடிவமைப்பைப் பொறுத்து காலணியில் பயன்படும் தோலின் அளவு மாறுபடும்.
  • காலணியைக் கட்டும் கயிறு
  • அந்தக் கயிறு நுழைந்து போகும் துளைகளின் பொருத்தும் உலோக வட்டுகள்
  • குதிகாலில் விறைப்பாக இருக்கப் புகுத்தப்படும் உலோகத் தகடு
  • முன் பக்கம் உறுதி அளிக்க வைக்கும் வளையம்
  • அடிப்பாதத்தைத் தொட்டுக் கொண்டிருக்க மென்மையான தகடு
  • அடிப்புறத்தில் பொருத்தப்படும் சோல் என்று காலணியின் பகுதிகளைத் தவிர்த்து,
  • தைக்க நூல், ஒட்டும் பசை, இணைக்க சின்ன ஆணிகள், அலங்கார வளையங்கள், விலைச் சீட்டு, நிறுவனத்தின் பெயர்ச் சீட்டு
    என்று பல பொருட்களைச் சேர்க்க வேண்டியிருக்கும்.
இந்தப் பொருட்களை யாரிடம் வாங்க வேண்டும், என்ன விலை என்றெல்லாம் திட்டமிட்டுக் கொண்டு, ஒரு காலணி செய்ய தேவைப்படும் பொருட்களின் மதிப்பை கணக்கிட வேண்டும்.

தோலை வெட்டும் இயந்திரம், இயந்திர இயக்குனரின் சம்பளம் இது வெட்டுவதற்கான செலவு, வெட்டிய துண்டுகளை இணைத்து மேற்புறத்தைச் செய்ய 20-30 தொழிலாளர்கள் வரிசையாக உட்கார்ந்து தைப்பது, ஒட்டுவது, பிரிப்பது என்று வரிசையாக வேலை செய்வார்கள். இந்த மேல்புறம் உருவாக என்ன செலவாகிறது என்று தெரிய வேண்டும்.

அடுத்ததாக அடிப்புறத்தை இணைக்கும் பிரிவில் என்ன செலவு என்றும் கணக்கிட்டு விட்டால் ஒரு காலணியின் உற்பத்திச் செலவு கிடைத்து விடும். இதனுடன், போக்குவரத்து செலவுகள், காப்பீட்டு தொகை, போக்குவரத்து செலவுகள், தரகுத் தொகை ஏதாவது கொடுக்க வேண்டியிருப்பது, பிற அலுவலகச் செலவினங்களைச் சேர்த்து விலையை நிர்ணயிப்பார்கள்,

பொதுவாக இந்தத்துறையில் இந்த விலைக் கணக்கீட்டை காலணி செய்யும் தொழிற்சாலை காலணி வாங்கும் நிறுவனத்துடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட மாதிரி காலணி செய்ய எவ்வளவு தோல் தேவைப்படுகிறது, அதன் விலை என்ன என்பது விலையின் பெரும்பகுதியைத் தீர்மானிக்கும். சில நேரங்களில் காலணி வாங்கும் வாடிக்கையாளர் தானே தோல் வாங்கித் தருவதாகக் கூடச் சொல்லி விடுவார்.

ஒரு காலணி மாதிரியின் கவர்ச்சி, செய்நேர்த்தி, செலவுக் கணக்கு எல்லோருக்கும் ஒத்து வந்தால், அதை அடிப்படையாகக் கொண்டு சில நூறு சோடி காலணிகள் செய்து கடைகளுக்கு ஒன்றொன்று அனுப்புவார்கள். கடைக்காரர்கள் தமக்குப் பிடித்த வடிவமைப்புகளில் எவ்வளவு விற்பனையாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமக்கு எத்தனை காலணிகள் என்ன நிறத்தில் அடுத்த பருவத்துக்கு தேவை என்று விபரம் அனுப்ப, அதை எல்லாம் ஒன்று சேர்த்து காலணி தொழிற்சாலைக்கு ஆர்டர் வரும்.

வரும் தேவையைப் பொறுத்து காலணித் தொழிற்சாலை தேவையான தோல் வாங்க வேண்டும். தோல் பதனிடும் ஆலை, தோலைச் செய்து கொடுக்க ஒரு மாதம் வரை ஆகலாம். தோலைத் தவிர்த்த பிற பொருட்களையும் வெவ்வேறு இடங்களிலிருந்து வாங்க ஏற்பாடு செய்து எல்லாம் கைக்கு வந்த பிறகுதான் காலணி உற்பத்தியைத் தொடங்க முடியும்.

5 comments:

வடுவூர் குமார் said...

பிலிபைன்ஸ் ஆக இருந்தால் முதலில் திருமதி மார்க்கோஸிடம் தான் போயிருக்கும்,1980 சமயத்தில்.

மா சிவகுமார் said...

//பிலிபைன்ஸ் ஆக இருந்தால் முதலில் திருமதி மார்க்கோஸிடம் தான் போயிருக்கும்,1980 சமயத்தில்.//

அது சரி :-))

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

அருமையான விளக்கம், சிவகுமார்!

ஒரு சந்தேகம்-ங்க...
தோல் செருப்பு தண்ணீர்-ல விழுந்தா இல்ல தண்ணீர் பட்டுச்சினா நீண்ட நாள் பயன் படுத்த முடியாதா? ஏங்க?

மோசமான தோல்-கிறதனாலேயா?

PS: நான் இப்பதான் 6,7ம் பகுதில இருக்கேன். நீங்க என்னடானா 18,19ம் பகுதி பட்டைய கிளப்புறீங்க... மெதுவா வரேன்...!

மா சிவகுமார் said...

தென்றல்,

பொதுவாக பதப்படுத்தல் தரம் குறைவாக இருந்தால் தண்ணீரில் விழுவதால் தோல் பொருள் கெட்டுப் போய் விடும்.

நல்ல தோலிலும், பூஞ்சைக் காளான் பிடித்து அரித்துப் போகும் வாய்ப்பு உண்டு. நீண்ட நேரம் தண்ணீரில் ஊறி விடாமல் உடனேயே எடுத்துத் துடைத்து விட்டால் காப்பாற்றி விடலாம்.

தண்ணீர் உள்புகாத சிறப்பு வகைத் தோல்கள் மேலாடைகளுக்கும், மழைக் காலணிகளுக்கும் தயாரிக்கப்படுகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

விளக்கத்திற்கு நன்றி, சிவகுமார்!