Wednesday, March 27, 2019

இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி

“ஒரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் வெளியாகியிருந்தது. மணிந்தர் தபஸ் என்பவர் எழுதியிருந்தார்.

தேர்தலில் மோடி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாவதால் டாலர் முதலீடு அதிகரிக்கிறது என்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே புல்வாமாவுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்திருப்பதாலும் ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றும் இணைக்கப்பட்ட புளூம்பெர்க் செய்தியிலிருந்து காப்பி பேஸ்ட் செய்திருந்தார். மோடி ஆட்சியில் இருந்த போதே ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ந்தது என்று விளக்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கும் ரூபாய் மதிப்புக்கும் என்ன தொடர்பு என்றால் இந்தப் போர் பதற்றத்தின் காரணமாக மோடி ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம். அதாவது, ஒரே ஒரு காரணம்தான் அவரது கண்டுபிடிப்பு. மோடி தேர்தலில் ஜெயிக்கப் போகிறார், வெளிநாட்டுக் காரர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் டாலரை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். 5 வருஷமா எங்க போனாங்கன்னு கேட்க வேண்டும்!

இணைக்கப்பட்ட புளூம்பெர்க் செய்தி -  India's Rupee Just Went From Asia's Worst to Best Currency-ல் சில புள்ளிவிபரங்களைக் கொடுத்திருந்தனர். மார்ச் 18 அன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் $330 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியிருக்கின்றனர். ஒரே நாளில் உள்ள வந்த இந்த டாலர் அளவு அந்த தேதி வரையில் இந்த ஆண்டின் முதல் இரண்டரை மாதங்களில் வந்த டாலர் வரத்தக்கு இணையானது. அன்னிய முதலீட்டாளர்கள் தமது கடன் பத்திரங்களின் கையிருப்பை $140 கோடி டாலர் அளவுக்கு உயர்த்தியிருக்கின்றனர்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்திய ரூபாயின் மதிப்பை குறுகிய காலத்தில் ஏற்றுவதோ, இறக்குவதோ பங்குச் சந்தையிலும், கடன் பத்திரச் சந்தையிலும் அன்னிய நிதி நிறுவனங்களின் வரத்தும் போக்கும்தான்.

கடந்த ஒரு மாதமாக அதிகமாக டாலர் இந்தியச் சந்தைகளுக்குள் வருவதற்கு வேறு என்ன காரணம்?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதங்களை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு/கடன் சந்தைகளில் டாலர் வரத்தை அதிகரிக்கும் என்று சொல்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்தி. இது புளூம்பெர்க் குவிண்ட் செய்தியிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது கைவசம் இருக்கும் அரசு கடன் பத்திரங்களை விற்பதை செப்டம்பரில் முடித்துக் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து அமெரிக்க டாலருக்கான வட்டி வீதத்தை குறைத்திருக்கிறது. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக லாபத்தைத் தேடி பிற நாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள்.

இரண்டாவதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் டாலர் ஸ்வாப் வசதியை பயன்படுத்துவதற்காக வங்கிகள் டாலரை இங்கு கொண்டு வருகின்றன என்ற செய்தி. இந்த ஸ்வாப் முறையின் கீழ் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடமிருந்து டாலர்களை வாங்கி ரூபாயை விற்க முன் வந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டாலர்களை குறிப்பிட்ட ரூபாய் மதிப்பில் (இப்போதைய மதிப்பை விட அதிகமாக இருக்கும்) வங்கிகளுக்கு திருப்பித் தரும். எவ்வளவு கூடுதல் விலை வங்கிகள் கேட்கின்றன என்பது மார்ச் 26 அன்று ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்.

அதாவது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டாலருக்கு எத்தனை ரூபாய் என்று பந்தயம் கட்ட வேண்டும்.

இந்தத் திட்டத்தின்படி ரிசர்வ் வங்கி சுமார் $500 கோடி வங்கிகளிடமிருந்து வாங்கவிருக்கிறது. அதற்கு பதிலாக ரூ 35,000 கூடுதல் ரூபாய் வங்கிகளிடம் சேரும்.

இந்த டாலர் ஸ்வாப் முறையை ரிசர்வ் வங்கி முதல் முறையாக பயன்படுத்துகிறது.

வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு ரிசர்வ் வங்கி பின்பற்றும் வழக்கமான நடைமுறை, சந்தையில் (வங்கிகளிடமிருந்து) இருந்து அவை கைவசம் வைத்திருக்கும் அரசு கடன் பத்திரங்களை பணம் கொடுத்து வாங்குவது. அதன் மூலம் வங்கிகளின் பணக்கையிருப்பு அதிகரிக்கும்.

அதைச் செய்யாமல் இந்த புதிய உத்தியை ரிசர்வ் வங்கி ஏன் பயன்படுத்துகிறது, என்று கேள்வி.

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஏற்கனவே ரூ 2.9 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து வாங்கியிருக்கிறது.  இவ்வாறு கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அவற்றின் வட்டி வீதம் குறைகிறது. எனவே, அரசு புதிய கடன் பத்திரங்களை வெளியிடுவதை அது எளிதாக்குகிறது. இதை ஒரு வரம்புக்குள் வைக்க ரிசர்வ் வங்கி விரும்புவதால் மேலும் கடன் பத்திரங்களை வாங்க விரும்பாமல் இருக்கலாம்.

வங்கிகள் தமது வைப்புத் தொகைகளின் குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக் கடன் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளில் ஒன்று. இப்போது வங்கிகளின் வைப்புத் தொகையில் சராசரி 27.9% அரசு கடன் பத்திரங்களாக அவற்றிடம் உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும்  19.25%-ஐ விடக் கணிசமாக அதிகம்.

மேலும், எதிர்கால தேதியிட்டு பெரும் அளவிலான டாலர்களை விற்க முன்வருவதன் மூலம் எதிர்கால செலாவணியின் பிரீமியத்தை குறைக்க முயற்சிக்கிறது, ரிசர்வ் வங்கி. இதன் விளைவாக கடன் வாங்குபவர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த குறை பிரீமியத்தால் ஈர்க்கப்பட்டு அதிக அளவிலான டாலர் இந்தியச் சந்தைக்குள் பாயும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கலாம். இதிலும் வரும் டாலர் ஒரு கட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் போதோ, லாபமாகவோ திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். எனவே, இது ரூபாயின் மதிப்பை நீண்ட கால நோக்கில் அதிகரித்து விடப் போவதில்லை.

மூன்றாவதாக, குறுகிய கால நோக்கில் (மேலே சொன்ன காரணங்களால்) ரூபாய் மதிப்பு அதிகரிப்பதை ரிசர்வ் வங்கி விரும்பவில்லை. இவ்வாறு $500 கோடி மதிப்பிலான டாலரை வாங்குவதன் மூலம் ரூபாய் மதிப்பு அதிகரிப்பை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆதாரங்கள் எதுவும் இல்லாத ஒரு காரணி உள்ளது. இந்தியத் தேர்தலை ஒட்டி வெளிநாடுகளில் தமது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களது பினாமி நிறுவனங்களும் அதைச் செலவழிப்பதற்காக பங்குச் சந்தை வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவது நடந்து கொண்டிருக்கலாம்.

உண்மையில் நமது நாட்டுப் பணத்தின் மதிப்பு உயர வேண்டுமானால், நாம் அதிக மதிப்பிலான பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். அது சர்வதேச அளவில் நமது வர்த்தக வலிமையை அதிகரிக்க வேண்டும்.

அது வரை, இது போல கடன் வாங்கி கல்யாணம் செய்வது போல, மேலும் மேலும் கடன் சுழலில் சிக்கி தவிக்க வேண்டியதுதான்.

No comments: