Wednesday, February 20, 2008

பணம் என்னடா பணம் - 2

எல்லோருக்கும் தேவைப்படும், எந்த நேரத்திலும் எளிதில் வாங்கவோ விற்கவோ முடியும் ஒரு பொருளை இடைப் பொருளாக வைத்துக் கொண்டால், மேலே சொன்ன இரண்டு இக்கட்டுகளையும் களைந்து பரிமாற்றங்களை எளிதாக்கி விடலாமே என்று யாருக்கோ தோன்றியிருக்கும்.

எதை வைத்துக் கொள்ளலாம்? சீக்கிரம் கெட்டுப் போகாத பொருளாக இருக்க வேண்டும். அலகுகளாக எண்ணிப் பிரிக்கும் படி இருக்க வேண்டும். கையில் எடுத்துப் போகும் படி இருக்க வேண்டும்.

ஆடு மாடுகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட தோல், ஏன் கிளிஞ்சல்கள் கூட நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டனவாம்.

ஆடு பரிமாற்ற செலாவணியாக பயன்படுத்தப்பட்டால் என்ன நடந்திருக்கும்?

விளைச்சல் முடிந்து விவசாயியின் கையில் நெல் இருக்கிறது. நெல் தேவைப்படும் உணவு விடுதிக்கு நெல்லைக் கொடுத்து 50 ஆடுகளை வாங்கிக் கொள்கிறார்.

நெசவாளரிடம் போய் துணிகள் வாங்கிக் கொண்டு 10 ஆடுகளை விலையாகக் கொடுத்து விடுகிறார்.

நெசவாளர் குடும்பத்துக்குத் தேவையான தச்சு வேலை செய்பவருக்கு 1 ஆடு கிடைக்கிறது.
தச்சர் சாப்பிட போது அந்த ஆட்டைக் கொடுத்து சாப்பாடு பெறுகிறார்.

இதே போல் தானியங்கள், தோல்கள், கிளிஞ்சல்கள் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒவ்வொன்றிலும் குளறுபடிகள்.

தானியத்தை பயன்படுத்தினால் அளப்பதற்கு கொள்ளளவிகள் தேவை. அவற்றின் தரம் அளவு நிர்ணயிப்பதில் சிக்கல்கள் வரும்.

ஆடு செத்துப் போனால் என்ன ஆகும்? அதனால் வயதான ஆட்டை பணமாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.

இதற்கும் ஒரு தீர்வு வந்தது.

No comments: