Wednesday, May 9, 2007

தலைக்கு ஏழு சோடி (தோலின் கதை - 17)

ராணிப்பேட்டையில் தொழில் செய்யும் ஒரு சிறு வணிகர், நான்கைந்து நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருப்பது சாதாரணமான ஒரு நிகழ்வு.

உலகின் காலணி உற்பத்தியில் ஏறக் குறைய 40% சீனாவில் நடைபெறுகிறது. சீனாவின் காலணி உற்பத்தி ஆண்டுக்கு 400 கோடி சோடிகள். இவற்றில் 200 கோடி சீனாவிலேயே விற்பனை ஆகிறது. மீதி 200 கோடி ஏற்றுமதி ஆகின்றன.

ஏற்றுமதியில் பெரும்பகுதி அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் போய் சேருகின்றன. அமெரிக்காவில் கிடைக்கும் காலணிகளில் பெரும் பகுதி சீனாவில் இருந்து வந்ததாகவே இருக்கும். 120 கோடி மக்கள் தொகை உடைய சீனாவில் 200 கோடி காலணிகள் விற்பனையாகும் அதே நேரத்தில் 30 கோடி மக்கள் வசிக்கும் அமெரிக்காவின் கிட்டத்தட்ட அதே அளவு காலணிகள் விற்கின்றன. அமெரிக்காவில் தலைக்கு 7 சோடி காலணிகள் ஆண்டுக்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளிலும் கிட்டத்தட்ட இந்த நிலைதான். குளிர் காலத்தின் தேவைப்படும் தோல் மேலாடைகள் வட இந்தியா, சீனாவின் வடக்குப் பகுதிகள், வட ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற குளிர் பகுதிகளில் தேவைப்படுகின்றன.

காரில், வீட்டு சொகுசு இருக்கைகளில் போடப்படும் தோல்கள் காசு நிறைய இருந்து எப்படி அதை வெளியில் காட்டிக் கொள்வது என்று துடிக்கும் செல்வந்தர்கள் இருக்கும் எல்லா பகுதிகளிலும் தேவைப்படுகின்றன.

நம்ம ஊரில் ஒரு சோடி காலணி வாங்கினால் அது கிழியும் வரை போட்டு, 2 - 3 ஆண்டுகள் வேலை வாங்கிய பிறகுதான் தூக்கிப் போடுவோம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய பருவத்தில் நான்கைந்து சோடி வாங்கிப் பயன்படுத்தும் நாடுகளில் நல்ல நிலையில் இருக்கும் போதே காலணிகளைத் தூக்கி எறிய வேண்டி இருக்கும். எப்படி இருந்தாலும் தோல் பொருளின் பயன்பாட்டுக்குப் பிந்தைய குப்பையில் கையாளுதலிலும் சில சிக்கல்கள் உள்ளன,

இயற்கையாக சிதைந்து போகக் கூடிய விலங்குத் தோலை அழுகாமல் தடுத்து, வேதிப் பொருட்களை ஊட்டி தோல் தயாரிக்கிறார்கள் என்று பார்த்தோம். இப்போது தேவை முடிந்து விட்டது, தோல் பொருள் சிதைந்து போய் விட வேண்டும். அப்படி சிதையும் போது, குப்பை நிரப்பப்பட்ட நிலம் மாசு படக் கூடாது.

2 comments:

வடுவூர் குமார் said...

குப்பை நிரப்பப்பட்ட நிலம் மாசு படக் கூடாது.
அப்ப, இப்ப என்ன செய்கிறார்கள்?

மா சிவகுமார் said...

அதனால் விற்கப்படும் தோல் பொருட்களில் தோலில் இப்படிப்பட்ட வேதிப் பொருட்கள் இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். zero waste என்று முழுவதுமாக மறு சுழற்சி முறைகளை செயல்படுத்த வற்புறுத்துகிறார்கள். விற்ற நிறுவனமா தூக்கி எறியப்படும் பொருளை வாங்கி கையாள வேண்டும் என்று சட்டம் போடுகிறார்கள்.

இது எல்லாம் ஐரோப்பாவில்.

அன்புடன்,

மா சிவகுமார்