Saturday, May 12, 2007

குப்பையில் மாணிக்கம் (தோலின் கதை - 20)

ஐரோப்பிய நாடுகளில் குப்பையில் எதுவும் எறியாத பொருளாதாரம் உருவாக வேண்டும் என்று வரையறுக்கிறார்கள். நம் நாட்டில் இயல்பாக நடைபெறும் ஒன்று அது.
  • பழைய செய்தித் தாளைப் பொட்டலம் கட்டப் பயன்படுத்துவோம்.
  • அப்பாவின் பேன்டு பழசாகி விட்டால், அதை வெட்டி பையனுக்கு அரை நிக்கர் அல்லது கடைக்குக் கொண்டு போக துணிப்பை தைத்துக் கொள்வோம்.
  • துணி கிழிந்து விட்டால் அடுப்புத் துணியாக, தரை துடைக்கும் துணியாகப் பயன்படுத்துவோம்.
இப்படி எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை வீணாக்காமல் கடைசி சொட்டு வரைப் பயன்படுத்தும் பழக்கம் பொருளாதார பண்பாட்டுக் காரணங்களால் நம்மிடையே இருந்தது. ஆயத்த உடைகள், பல்லாயிரக் கணக்கான ரூபாய் வருமானங்கள் வந்த பிறகு நம்மிடமும் தூக்கி எறியும் பழக்கம் பரவி விட்டது.

எந்தப் பொருளையும் இயற்கையிலிருந்து எடுத்துப் பயன்படுத்தினால் அதை முற்றிலும் பயன்படுத்தி, திரும்பவும் இயற்கையின் தனிமங்களாக மாறக் கூடிய வகையில் நமது வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதுதான் இந்த பூமியின் வளங்களை அழித்து விடாமல் வாழும் ஒரே வழி.

தோல் துறைக்குத் திரும்ப வருவோம்.

வேதிப் பொருள் மாசு படுத்தலை எப்படிக் கட்டுப்படுத்துவது. முதலில், பயன்படுத்தாமல் நீரில் வெளியேறும் வேதிப் பொருட்களின் அளவைக் குறைத்து, அப்படி தவறி வெளியேறுவதை மட்டும் கவனமாகப் பிரிக்கும் வேலை செய்ய வேண்டும். இரண்டாவதாக நீண்ட கால நோக்கில் இயற்கையாக செரிக்க முடியாத வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இந்த இரண்டிலுமே இன்றைய நிலையில் பெரும் தடைகள் இருக்கின்றன.

உலகின் எந்தப் பகுதிக்குப் போனாலும் தோல் தொழில் என்பது சிறு மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களில் நடைபெறுகின்றன. தொழிற் புரட்சிக்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளாக கிராமங்களில் குடியிருப்புகளில் ஒரு சில குடும்பங்கள் செய்து வந்த தோல் பதனிடும், காலணி தைக்கும் வேலை தொழிற்சாலை முறைக்கு மாறிய பிறகும் சின்ன அளவிலேயே நடை பெறுகின்றன.

தொழிலின் தன்மையால் பெரும் முதலீட்டில் பெரு நிறுனங்கள் நுழைவது நடக்கவில்லை. தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள், இந்தியாவில், இங்கிலாந்தில், அமெரிக்காவில் இருக்கும் சில சிறப்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகளைச் சார்ந்தே இருக்கின்றன. அந்த ஆராய்ச்சி முடிவுகளையும் நடைமுறைத் தொழில் நுட்பமாக மாற்றுவது, தோல் தொழிற்சாலைகளுக்கு வேதிப் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் கையில்தான் இருக்கிறது.

2 comments:

Sri Rangan said...

//ஐரோப்பிய நாடுகளில் குப்பையில் எதுவும் எறியாத பொருளாதாரம் உருவாக வேண்டும் என்று வரையறுக்கிறார்கள். //


சிவகுமார் உங்களின் இக் கூற்றை வாசித்ததும் எனக்குச் சிரிக்கத்தாம் தோன்றுகிறது.

இத்தகைய வரையறை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறைக்குச் சரியானதா? அன்றி இந்த ஐரோப்பிய நாடுகள் வருடமொன்றுக்கு எத்தனை மெற்றி தொன்கள் உணவுகளைத் தமது சந்தையைத் தக்க வைப்பதற்காகச் செயற்கையாக அழிக்கின்றன?இதில் அமெரிக்கா கடலினுள் கொட்டும் கோதுமைகள் எவ்வளவு மக்களுக்குப் பசி போக்கும்?ஏதோ சொல்லுங்கோ ஐரோப்பியர்கள் பெயரால்!ஆனால் நாம் படித்த பொருளாதாரம் அவர்களின் அழிவுப் பொருளாதாரப் பொறி முறையைப் புட்டுவைப்பவை...

மா சிவகுமார் said...

sri rangan,

//சிவகுமார் உங்களின் இக் கூற்றை வாசித்ததும் எனக்குச் சிரிக்கத்தாம் தோன்றுகிறது.//

நானும் சிரிக்கிறேன் :-). வரையறுப்பது வேறு, பின்பற்றுவது வேறு இல்லையா! இன்றைக்கும் நம்ம ஊரில் இருக்கும் மறுசுழற்சி வளர்ந்த சமூகங்களில் இல்லை என்றே நினைக்கிறேன்.

//ஆனால் நாம் படித்த பொருளாதாரம் அவர்களின் அழிவுப் பொருளாதாரப் பொறி முறையைப் புட்டுவைப்பவை...//

சரியான கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்